Author Topic: ~ இதயத்தை இதமாக்கும் டிரிங்க்! மூலிகை இல்லம்!! ~  (Read 490 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு, முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம். பிறப்பு முதல் இறப்பு வரை ஓயாமல் துடிக்கும் இதயத்தை, ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். நம் உடலுக்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதாலும் உடற்பயிற்சி செய்வதாலும் இதயநோய் உள்ளிட்ட எந்த ஒரு நோயையும் தடுக்க முடியும்.



சர்க்கரை நோய் வராமல் தடுக்க, வந்தாலும் ஆரோக்கியமாக வாழ மூன்று ‘இ’ (Exercise, Eating, Emotional) எப்படி முக்கியமோ, அதுபோல் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் இந்த ‘இ’-க்களை பின்பற்றுவது முக்கியம். ரத்தக்குழாயில் கொழுப்புப் படிவதன் மூலம், ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைப்படும். இதனால், அந்தப் பகுதியில் ரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பைச் சரிசெய்ய எத்தனையோ நவீன சிகிச்சைகள் வந்தாலும், தீவிர சிகிச்சை, அறுவைசிகிச்சை, வலி, அதன் பிறகு மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மருந்து என ஒருவர் சுமக்கும் துயரம் சாதாரணமானது அல்ல. வந்த பின் சரிசெய்வதைவிட, வரும் முன் பாதுகாத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
நாம் உண்ணும் சில வகை உணவுகள், உடலில் கெட்ட கொழுப்புப் படிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்து குறைந்த கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்ளுதல், உடல் உழைப்புக் குறைவு, உடற்பயிற்சி செய்யாமை, உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சோடியம் அளவு அதிகரித்தல், பொட்டாசியம் அளவு குறைதல், தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ் போன்றவை மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன. உணவு, உடற்பயிற்சி என அனைத்தும் நம் கைகளில் உள்ளன. இவற்றை முறையாகப் பராமரித்தால் இதயத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள். இதற்காகப் புதிது புதிதான உணவுப் பழக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டாம். நம்முடைய பாரம்பரிய உணவுகளே இதயத்தைக் காக்கும் திறன்கொண்டவை.

இஞ்சி: உணவுகளில் இஞ்சி, சுவைக்காகவோ, மணத்துக்கோ சேர்க்கப்படுவது இல்லை. செரிமானத்தைச் சீர்படுத்தி, உடலில் கொழுப்பைச் சேரவிடாமல் தவிர்க்கும் வேலையைச் செய்கிறது. அதனால்தான் அசைவ உணவுகளில் பெரும்பாலும் இஞ்சி சேர்த்துச் சமைக்கிறோம். இஞ்சி, உடல் எடையைக் குறைக்கும். செரிமானப் பிரச்னை, ரத்த உறைதல் பிரச்னையைச் சரிசெய்யும். இதயத்துக்குப் போதுமான வலு சேர்ப்பதும் ஆற்றலை அதிகப்படுத்தும் வேலைகளையும் இஞ்சி செய்கிறது.

பூண்டு:ரத்த குழாய்களில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது. ரத்தத்தைச் சுத்திகரித்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. நஞ்சாக உடலில் சேர்ந்திருக்கும் உப்புகளை அகற்றும் பணியைச் சிறப்பாகச் செய்கிறது. இதனுடன் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டி, இதய நோய்க்கு எதிராக உடலைச் செயல்பட ஆயத்தமாக்குகிறது.

எலுமிச்சை: உடல் பருமனைக் குறைத்து, கெட்ட கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருக்கிறது. இதயப் பிரச்னையை உண்டாக்கும் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயைச் சரிசெய்வதால், எலுமிச்சை நம் இதயத்தைக் காக்கும் நண்பன்.

தேன்: உடலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்கி, புத்துயிர் பெறச் செய்யும் பணியைத் தேன் செய்கிறது. கீரை, பழங்களிலிருந்து கிடைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தேனிலும் கிடைக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் சிறந்த ஊட்டச்சத்து பானம்.

ஆப்பிள் தோல்: இதிலிருந்து எடுக்கப்படும் ஆப்பிள் சிடர் வினிகர், நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கும். தூக்கமின்மை, மனக்கவலையைப் போக்கும்.



இதயத்தை இதமாக்கும் டிரிங்க்

தேவையானவை: இஞ்சி, பூண்டு - தலா அரை கிலோ, எலுமிச்சம் பழம் - 20, தேன் - 300 மி.லி, ஆப்பிள் சிடர் வினிகர் - 50 மி.லி

செய்முறை:இஞ்சி, பூண்டை சுத்தம் செய்து, சிறிதளவு நீர் விட்டு அரைத்து சாறாக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் இந்த சாறை ஊற்றி, அடுப்பை மிதமான நெருப்பில் வைத்து, அரை மணி நேரம் சூடாக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து 20 நிமிடங்கள் அடுப்பில் வைக்க வேண்டும். இஞ்சி, பூண்டுடன் எலுமிச்சை சாறு சேருவதால் திரிய வாய்ப்பு இல்லை. இந்தக் கலவை ஆறியதும், 300 மி.லி தேனும், 50 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
தினமும் 5 - 10 மி.லி கஷாயத்துடன் சிறிது நீர் கலந்து அருந்தலாம். மூன்று மாதங்கள் வரை இந்த கஷாயத்தைக் குடித்துவந்தால், உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இதயத்தின் ஆற்றல் அதிகரிக்கும். மாரடைப்புக்கான வாய்ப்பு பெருமளவு குறையும்