Author Topic: ~ நெல்லிக்காய் தக்காளி இஞ்சி ஜாம் ~  (Read 372 times)

Offline MysteRy

நெல்லிக்காய்  தக்காளி  இஞ்சி ஜாம்



தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - அரை கிலோ, தக்காளிப் பழம் - அரை கிலோ, இளம் இஞ்சி - 100 கிராம், சர்க்கரை - சுமார் முக்கால் கிலோ.

செய்முறை:

நெல்லிக்காய், தக்காளியை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை மண் போக கழுவி, தோல் சீவிக் கொள்ளவும். குக்கரில் இரண்டு பாத்திரங்கள் வைத்து ஒன்றில் நெல்லிக்காய்களையும், மற்றொன்றில் தக்காளி - இஞ்சி இரண்டையும் போட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வைத்து வேகவிடவும்  (நெல்லிக்காய், தக்காளி - இஞ்சியுடன் தண்ணீர் சேர்க்க வேண்டாம்). ஆறிய உடன் நெல்லிக்காய்களின் கொட்டையை நீக்கி சுளைகளை தனியாக வைக்கவும்.

வெந்த தக்காளி - இஞ்சியை நீர் சேர்க்காமல் மிக்ஸியில் மையாக அரைக்கவும். அரைத்த விழுதை, சற்றே பெரிய கண் உள்ள வடிகட்டியில் வடிகட்டி வைக்கவும் (தக்காளி சக்கை தங்கிவிடும்). சுளையாக எடுத்த நெல்லிக்காய்களையும் மையாக அரைக்கவும். பின்னர் இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். ஒரு பங்கு விழுதுக்கு ஒன்றேகால் பங்கு என்ற அளவில் சர்க்கரை சேர்த்து அடிகனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்கவிடவும். சர்க்கரை நன்கு கரைந்து ஜாம் பதம் வந்த உடன் அடுப்பை அணைத்துவிடவும். ஆறிய உடன் காற்றுப் புகாத பாத்திரம் அல்லது பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

இனிப்பு அதிகம் வேண்டுவோர், ஒரு பங்கு விழுதுக்கு ஒன்றரை பங்கு என்ற அளவில் சர்க்கரை சேர்க்கலாம். புளிப்புச்சுவை சிறிது தூக்கலாக இருக்க வேண்டும் என்றால், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். இந்த ஜாம்  சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் கலந்தால்...  சூப்பர் நெல்லிக்காய் ஜூஸ் தயார்.