தெம்பளிக்கும் கம்பு, சோளம், உளுந்து கூட்டணி!
இனி வரும் காலத்தில் 'பி.சி.ஓ.டி’ (கர்ப்பப்பை நீர்க்கட்டி சிக்கல்) இல்லாத பொண்ணுக்கு 'சர்க்கரை வியாதி இல்லாத’ வரன் தேவை என்பதுபோன்ற விளம்பரம் கல்யாணச் சந்தைகளில் இடம்பெறலாம். அந்த அளவுக்கு இந்த இரண்டு சிக்கல்களும் வயசுப் பிள்ளைகளை அடித்து ஆடுகிறது. பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டி நம் வீட்டுப் பெண் குழந்தைகளிடம் குடியேறாது இருக்க, கருப்பட்டி உளுந்து களி மிகவும் சிறந்தது. ஆனால், 'களியா... என்ன என்னன்னு நினைச்சே?’ எனப் பல வீட்டுப் பெண்களும் 'ஆங்ரி பேர்டு’ அவதாரம் எடுக்கிறார்கள். அப்படி ஆங்காரமாக மறுக்கும் பெண்களுக்கும் 'ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை’ வடிவில் 'நல்லது’ புகட்டலாம்.
இதற்கு மாவை வழக்கம்போல் தானியங்களை ஊறவைத்தும் தயாரிக்கலாம் அல்லது கீழ்க்காணும் திடீர் பொடியில் சாதாரண தோசை மாவைக் கலக்கியும் தோசை வார்க்கலாம். உளுந்து, கம்பு, சோளம் இந்த மூன்றில் கம்பு, சோளம் இவற்றின் மேலுறை நீக்கியும், உளுந்தை அதன் கறுத்தத் தொலியுடனேயே வைத்து மூன்றையும் வறுத்து, பொடி செய்துகொள்ளவும். கூடவே வெந்தயம், ஃப்ளேக்ஸ் விதை, பாசிப்பயறு மூன்றும் 2 டீஸ்பூன்கள் எடுத்து வறுத்துச் சேர்க்கவும். கம்பும் சோளமும் 70 சதவிகிதம் இருக்க, உளுந்து 25 சதவிகிதம், மற்றவை கூட்டாக 5 சதவிகிதம் இருந்தால் போதும். இந்த மாவை, கோதுமை தோசைக்குக் கரைப்பதுபோல் நீர் விட்டுப் பதமாகக் கரைத்து, புளிப்புக்கு எனக் கொஞ்சம் மோர் சேர்த்து 12 மணி நேரம் வைத்திருந்து, சூடாகத் தோசை சுட்டுக் கொடுக்கவும். தொட்டுக்கொள்ள எள் துவையல், நிலக்கடலை சட்னி என, மாதவிடாய்க்கு முந்தைய வாரத்தில் அவசியம் இரு முறை இதைக் கொடுக்கவும். கூடவே வெள்ளைச் சர்க்கரையையும் இனிப்பு பண்டங்களையும் ஒதுக்கிவிடப் பழக்கி, ஓடியாடி விளையாடி, வியர்க்கவும் செய்துவிட்டால் குறித்த நேரத்தில் மாதவிடாய் வந்து மாதர் நலம் காக்கும். கம்பில் இரும்பு, சோளத்தில் புரதம், உளுந்தில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன், வெந்தயத்தில் மாதவிடாய் வலி நீக்கி, ஃப்ளேக்ஸ் விதையில் ஒமேகா-3 எண்ணெய்... என எல்லாம் தரும் இந்த தோசை, சப்புக்கொட்ட வைக்கும் சுவையான மருந்து.