Author Topic: வைரமுத்து கவிதைகள் - படித்ததில் பிடித்தது  (Read 1488 times)

Offline SioNa


திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி

மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு
வைரக்கோடு

கோடு வளர்ந்து
வெளிச்சமானது

வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது:

''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது

ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்

இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்

உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''

* * * * *
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்

அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு

* * * * *
'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி

தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்

உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.

* * * * *
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்

அவர் கையில் மருந்து புட்டி

அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்

* * * * *

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்

ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை

* * * * *
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி

கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்

கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை

* * * * *
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்

* * * * *
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி

பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்

'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை

'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.

Offline SioNa

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

* * * * *
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை

பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

* * * * *

காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!

பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஜாதி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ�தி பிரிக்கலாம்

சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!

* * * * *

Offline SioNa

ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!

இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!

கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!

தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!

மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!


துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!

Offline SioNa

(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.)
அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்


பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"

Offline SioNa

ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா

உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?

உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.

Offline SioNa

"நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்

Offline SioNa

அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்

கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்

நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு

உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?

Offline SioNa

அலைகளே! நீர்மேல் ஆடுந் தண்ணீர்
மலைகளே! கடலின் மந்திரக் கைகளே!

வித்தை புரிந்து வீசுங் காற்று
நித்தந் திரிக்கும் நீர்க்கயி றுகளே!

காற்றெனுங் கயவன் கடலாம் கன்னியின்
மேற்புறம் உரியும் மெல்லிய துகில்களே!

கரையில் தற்கொலைக் காரியம் நடத்தல்
முறையா? சரியா? முடிவுரை என்ன?

கண்வழி புகுந்து கனவென மலர்ந்து
வெண்துகில் போர்த்து மேலே எழுந்து

விம்தித் தாழ்ந்த வெண்மார் புகளே!
தம்பலம் காட்டும் தண்ணீர் வெடிகளே!

கடல்நீர் விழாவில் கரக ஆட்டம்
நடத்தித் தோற்கும் நாடகக் கும்பலே!

கருப்புக் கடலுக் காசநோ யாலே
இருமித் துப்பும் எச்சில் மலைகளே!
கறுப்புக் கடற்றயிர் கடையப் படுகையில்
தெறித்த வெண்ணெய்த் திரைகளே! நீங்கள்

கரையில் கலையும் கடலின் கனவுகள்
கரைக்கன் னத்தில் கடல்முத் தங்கள்
நகர்ந்து விரைந்து நடந்து கரையில்
தகர்ந்து போகும் தண்ணீர்ச் சுவர்கள்

Offline SioNa

ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து
கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!

Offline CuFie

awesme poetrie dhee <3 loved it