Author Topic: ~ எது உயர்ந்தது? குட்டிக்கதை ~  (Read 1327 times)

Online MysteRy

எது உயர்ந்தது? குட்டிக்கதை




அந்த நாட்டு அரசனைப் பார்க்க, துறவி ஒருவர் வந்தார்.

அரசன் அவரிடம், தன் அருமை பெருமையை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த ராஜா துறவியிடம் ஒரு வைரக்கல்லைக் காட்டி, “சுவாமி, இந்தக் கல் அதிக மதிப்புடையது. இந்தக் கல் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இதற்குப் பல கோடி பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன். என் தங்கக் கிரீடத்தில் அனைவருக்கும் தெரியும்படியாக இந்தக் கல்லைப் பதிக்கப் போகிறேன். அதன் பின்னர், இந்த உலகத்திலேயே மிக உயர்ந்த வைரக்கல் பதித்த கிரீடம் என்னுடையதாகத்தான் இருக்கும்” என்றான்.

துறவி சிரித்தார்.

பின்னர், “அரசனே, இந்தக் கல்லை உன் தங்கக் கிரீடத்தில் பதிப்பதால் என்ன பயன்? என்று கேட்டார்.

அந்த அரசனும், “என்ன சுவாமி, உலகிலேயே விலை உயர்ந்த கல் என்னிடம் இருப்பது பெருமையில்லையா?” என்றான் பெருமையுடன்.

உடனே துறவி, “அரசனே, இதை விட உயர்ந்த கல் இதே ஊரில் இருக்கிறது. பார்க்க வருகிறாயா?” என்று கேட்டார்.

அரசனுக்கும் தன்னிடமுள்ள வைரக்கல்லைக் காட்டிலும் உயர்ந்த கல்லைப் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.

அந்தத் துறவியுடன் அரசன் கிளம்பினான்.

துறவி அந்த ஊரிலிருந்த ஒரு குடிசை வீட்டுக்கு அரசனை அழைத்துச் சென்றார்.

அங்கு ஒரு மாவு ஆட்டிக் கொண்டிருந்தாள்.

துறவி அரசனைப் பார்த்து, “அங்கு மாவாட்டிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்தாயா? அந்தப் பெண் அந்த மாவாட்டும் கல்லில்தான் மாவாட்டி விற்றுப் பிழைக்கிறாள். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில்தான் அவள் குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீ எந்தப் பயனுமில்லாமல் ஒரு கல்லை உன் கிரீடத்தில் பதித்து அணிவதால் உனக்கோ, உன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கோ எந்தப் பயனுமில்லை. அதைப் பாதுகாக்கவும் நீ பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்” என்றார்.

அரசனுக்கு அப்போதுதான் புரிந்தது.

அந்த வைரக்கல்லை விற்றுக் கிடைத்த பணத்தைப் பெற்று மக்களுக்கான நலத் திட்டங்களுக்காகச் செலவிட்டான்