பொடுகுத் தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்:-

* 500 மி.லிட்டர் நல்லெண்ணையில் 50 கிராம் வேப்பம் பூ, 25 கிராம் வெல்லத்தை சேர்த்து முறியும் வரை காய்ச்சவும். வடிகட்டித் தலையில் தேய்த்து முழுகவும். பொடுகு போகும்.
* வேப்பம் பட்டை கொஞ்சம் எடுத்து, இடித்து, நீரில் கலந்து கஷயமாக தயாரித்துக் கொள்ளவும். ஆறியபின் சிலுப்பினால் நுரை வரும். இந்த நுரையை அரிப்புள்ள இடங்களில் தேய்க்கலாம்.
* ஏலரிசி, குங்கிலியம், மட்டிப்பால், சந்தனம், கிச்சிலிக் கிழங்கு பூலாங் கிழங்கு, குக்குலு, சாம்பிராணி, இவைகளில் கிடைக்கும் பொருளை எண்ணையில் காய்ச்சி உபயோகித்தால் பொடுகு நீங்கும்.
* ஒரு பாகம் சந்தன எண்ணையுடன் 3 பாகம் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தடவி சிறிது நேரம் கழித்து அலசவும். தேங்காய் எண்ணையையும் சந்தன எண்ணைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
* இரவில் இரண்டு மேஜைக் கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அப்படியே கூழாக அரைத்து, தலையில் தடவிக் கொள்ளவும். அரைமணி கழித்து சீயக்காய் தேய்த்து கழுவி விடவும். பொடுகு மட்டுமன்றி வெந்தயம் புழுவெட்டையும் தடுக்கும்.
* பெரிய நெல்லிக்காய், வெந்தயம், கறிவேப்பிலை இவற்றை காயவைக்கவும். உலர்ந்த பின், பொடித்து ஒரு துணி மூட்டையில் கட்டி, நீங்கள் உபயோகிக்கும் எண்ணையில் போட்டு வைக்கவும். இதே எண்ணையை தலைக்கு தேய்த்து வந்தால் தலைச்சூடு குறையும்.
எச்சரிக்கை
* வெந்தயத்தை கால் மணிக்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். அதிக குளிர்ச்சி ஏற்பட்டு ஜன்னி வரும்.
* பொடுதலை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் இலை, காய் இவற்றிலிருந்து சாறு எடுத்து, அதன் சமஅளவில் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, சாறு வற்றியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலைக்கு தடவி வர பொடுகு போகும். இதனாலேயே இதற்கு பொடுதலை என்ற பெயர் வந்தது.
* ஒரு ஸ்பூன் கற்பூரத்தை 1/2 கப் தேங்காய் எண்ணை அல்லது வேப்பம் எண்ணையுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணையை தலைக்கு தடவி குளிக்கலாம்.
* தேங்காய் எண்ணை, ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணை, இவை மூன்றில் ஏதாவது ஒன்றை சூடுபடுத்தி, கூந்தல் வேரில் நன்கு படுமாறு தேய்த்து, சூடான நீரில் நனைத்த டவலை தலையில் கட்டிக் கொண்டு 1 மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பூ போட்டு அலசவும்.
* செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.
* தயிர், முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு போகும். வாரம் இருமுறை, 4 வாரங்கள் இதை செய்ய, பொடுகிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
* வெள்ளை மிளகைப் பால் விட்டு அரைத்துத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறிக் குளிக்கவும்.
* வால் மிளகைப் பால் விட்டு, அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் பொடுகு மறையும்.
* வில்வக்காயைப் பொடியாக்கி, அத்துடன் சம அளவு சீயக்காய் பொடி கலந்து, தினம் தலையில் தேய்த்துக் குளித்து வரலாம்.
* நல்லெண்ணெயில் சிறிதளவு வேப்பம் பூவும், துளசியும் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தடவிக் குளித்து வரலாம்.
* தேங்காய்ப் பால் அரை கப் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு நான்கு டேபிள் ஸ்பூன் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வரலாம்.
* 250 மி.லி. தேங்காய் எண்ணெயுடன், 50 மி.லி. அருகம் புல் சாறு மற்றும் 50 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறு கலந்து காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும், அத்துடன் 250 மி.லி. தேங்காய்ப் பாலைக் கலந்து காய்ச்ச வேண்டும். நீர் வற்றி எண்ணெய் பிரியும் சமயம், 15 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து போட்டு சிவந்ததும் இறக்கி, வடிகட்டி தலையில், தேய்த்து வரலாம். இதே எண்ணெயைத் தலையில் தடவி, ஊறிக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.