என்னென்ன தேவை?
கொள்ளு - 100 கிராம்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பெருங்காயம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
எலுமிச்சைப் பழம் -1,
கடுகு, சீரகம், உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
ரசப்பொடி - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கொள்ளை வெறும் கடாயில் வறுத்து, 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதில் 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்து, தண்ணீரை இறுத்து வைக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், உளுந்து தாளிக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கி, கொள்ளு வேக வைத்த தண்ணீரை சேர்த்து, தேவைப்பட்டால் இன்னும் அரை டம்ளர் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்கத் துவங்கியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, உப்பு, ரசப்பொடி சேர்த்து நுரைத்து வரும் போது, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.