ஈரைந்து மாதம் கருவறையில்
உன்னை அடைத்துவைத்தற்காகவா?
மார்பு கூடு சூற்றில்
உன்னை வியர்க்கவைத்ததற்காகவா?
முலை பாலை உரியவைத்து
உன் வாய் நோகவைத்ததற்காகவா?
தொட்டில் ஆட்டி
உன் தலை கிறங்கவைத்து தூங்கவைத்ததற்காகவா?
உன்னை நாலு கால்களால்
தவழவிட்டு கை கொட்டி ரசித்ததற்காகவா?
ஆட்காட்டி விரல் கொடுத்து இவ்வுலகத்திற்கு
உன்னை காட்டி கொடுத்ததற்காகவா?
சோறூட்ட நிலவை காட்டி
உன்னை ஏமாற்றியதற்காகவா?
பள்ளி கதவுகளுக்குள்
உன்னை அழவைத்து சிறைபிடித்து அனுப்பியதற்காகவா?
முன்பின் தெரியாத பழகாத பெண்ணிடம்
தெரிந்தே உன்னை ஒப்படைத்தற்காகவா?
தலையெங்கும் நரை பரவ
விழித்திரையை புரை மறைக்க
சுருங்கிய சதை மடிப்பில்
கருணை ஒளியாய் தாய்
தன் மகன் நலம் வேண்டி பிரார்த்தித்துகொண்டிருக்காள்
முதியோர் இல்லத்தில்
சாகும் வரை ஆயுள் கைதியாய்
அவள் பண்ணியது குற்றம் என்றால்
அதை விரும்பித்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள் தாய்மார்கள்
அவள் தன் மகன் திரும்பி வந்து அழைத்து போவான்
என்று காத்திருக்கவில்லை ஏங்கியதும் இல்லை
விடும் பொழுதில் அவன்
திரும்பிக்கூட பார்க்காமல் போய்விட்டானே
என்று தான் விசும்பினாள்
தூக்கு மரங்கள் முறிய வேண்டும் தான்
ஆனால் வேர்களை மறந்து பறந்து திரியும்
இந்த நவீன கால மனித மிருகங்களின்
எண்ணங்களை முறியடிக்க
தூக்கு தண்டனை தேவை தான்
முதியோர் இல்ல கல்வெட்டில் எழுதி வையுங்கள்
இங்கு உள்ளிருப்பவர்கள் நிரபராதிகள் என்றும்
இவர்களுக்குள்ளிருந்து வந்தவர்கள் எங்கிருந்தாலும்
ஒரு நாள் தூக்குக்கயிற்றுக்கு
பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்