என்னென்ன தேவை?
கொழுப்பு நீக்காத பசும்பால் - அரை லிட்டர்
வினிகர் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 150 கிராம்
தண்ணீர் - 250 மி.லி.
அலங்கரிக்க- செர்ரி,
சில்வர் பேப்பர்.
எப்படிச் செய்வது?
கனமான பாத்திரத்தில் பாலைக் கொதிக்க விடவும். கொதி வரும் போது, வினிகர் சேர்த்து, அடுப்பை அணைக்கவும். பால் தனியே, தண்ணீர் தனியே பிரியும். அதை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி எடுக்கவும். அதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, மிருதுவாக வரும் வரை நன்கு தேய்க்கவும். பிறகு அதிலிருந்து சிறு உருண்டையை எடுத்து, அழுத்தி, விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.
250 மி.லி. தண்ணீரில் 150 கிராம் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும். பாகு பதத்துக்கு வர வேண்டும் என்கிற அவசியமில்லை. சர்க்கரை கரைந்தால் போதும். அதில் தயாராக உள்ள பேடாக்களைச் சேர்த்து, குறைந்த தணலில் 10 நிமிடங்கள் வைத்திருந்து, அடுப்பை அணைக்கவும். 2-3 மணி நேரம் ஊறவிட்டு எடுத்து, குளிர வைக்கவும். ஃப்ரெஷ் செர்ரி பழங்கள் மற்றும் சில்வர் பேப்பரால் அலங்கரித்து ஜில்லென பரிமாறவும்.
இதையே இன்னும் சற்று ஆடம்பரமாக மாற்ற நினைப்போர், குளிர வைப்பதற்கு முன், பேடாவை மத்தியில் இரண்டாகப் பிளந்து, ஸ்டஃபிங் செய்து, இன்னொரு பாதியால் மூடி, குளிர வைத்து, மேலே செர்ரி வைத்தோ, கோவாவை வைத்தே ஐசிங் செய்தோ பரிமாறலாம். விருப்பப்பட்டால் ஸ்டஃபிங் செய்ய... இனிப்பு சேர்த்த கோவா, உடைத்த நட்ஸ், பேரீச்சம் பழம், சீஸ் துருவல்.