Author Topic: மாலத்தீவு வெஜிடபிள் கறி  (Read 604 times)

Offline kanmani



    காய் கலவை:
    கேரட், பீன்ஸ், உருளை, காலிஃப்ளவர், ப்ராக்கலி
    சுக்கினி, கத்தரிக்காய், பூசணிக்காய் - ஒரு பெரிய கப்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    பட்டை - ஒரு துண்டு
    ஏலக்காய் - 3
    லவங்கம் - 3
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    பந்தன் / ரம்பை இலை - 2 துண்டுகள் (விரும்பினால்)
    இஞ்சி - ஒரு துண்டு
    பூண்டு - ஒரு பல்
    மிளகாய் துள் - கால் தேக்கரண்டி
    கறி தூள் - 2 தேக்கரண்டி
    சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிது
    தேங்காய் பால் - 250 மில்லி
    உப்பு
    எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

 

 
   

காய்களை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
   

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை அரைத்து வைக்கவும்.
   

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பந்தன் இலை சேர்த்து வதக்கவும்.
   

வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
   

தூள் வாசம் போனதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
   

இதில் 3 மேசைக்கரண்டி அளவு தேங்காய் பால் விட்டு மசாலா விழுது போலானதும், நறுக்கிய காய் கலவை சேர்த்து சில நிமிடம் பிரட்டவும்.
   

பின் மீதமுள்ள தேங்காய் பால், 250 மில்லி நீரும் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் சிறு தீயில் மூடி வைத்து வேக விடவும். இது 20 - 30 நிமிடங்கள் வரை இதே தீயில் கொதிக்க வேண்டும். காய் முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வெந்து விடும்.
   

சுவையான மாலத்தீவு வெஜிடபிள் கறி தயார்.

 

இது சப்பாத்தி, சாதம் இரண்டிற்குமே நன்றாக இருக்கும். இங்கே சில இடங்களில் ரோஷியுடனும், சில இடங்களில் ரைஸ் மற்றும் பப்படத்துடனும் தருவார்கள். செஃப் கொடுத்த ரெசிபி முறையில் முதலில் வெங்காயம் வதக்கி, பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, பின் தூள் வகைகள் சேர்க்கும் போது தான் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்க்க சொல்லி இருந்தது. நான் வழக்கமாக செய்வது போல் முதலில் தாளித்து இருக்கிறேன். இவர்கள் இதில் மாலத்தீவு வறுத்த கறி தூள் பயன்படுத்துவார்கள் (Meat Curry Powder). சிலர் தூள் இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் மட்டும் சேர்ப்பார்கள். ஆனால், எனக்கு என்னவோ செஃப் செய்திருந்த சுவை மிகவும் பிடித்திருந்தது. நான் சாதாரண கறி தூள் தான் பயன்படுத்தி இருக்கிறேன். இங்கே பயன்படுத்தும் காய் கலவையை தந்திருக்கிறேன். உங்கள் விருப்பமான காய்கள் சேர்த்தும் செய்யலாம்.