தென்னிந்திய உணவுகள் என்றாலே தோவை, இட்லி, உப்புமா போன்றவை தான். அத்தகைய உணவுகளைத் தான் தென்னிந்திய மக்கள் விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக இத்தகைய மக்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், இத்தகைய உணவிற்கு ஈடு இணை எதுவும் இருக்காது என்று, வீட்டிலேயே செய்து சாப்பிடுவார்கள்.
அவ்வாறு வெளிநாட்டில் இருந்து, தென்னிந்திய உணவை சாப்பிட முடியவில்லை என்று வருந்துவோருக்கு, உப்புமாவில் ஒன்றான தக்காளி உப்புமாவின் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சமைத்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை ரவை - 1 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி - 1 இன்ச்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ரவையைப் போட்டு, பொன்னிறமாவதற்கு முன்பு வறுத்து இறக்க வேண்டும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிளறி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் வறுத்த ரவையைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, தண்ணீர் சுண்டும் வரை கிளறி, இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி உப்புமா ரெடி!!! இதனை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.