நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சிறந்தது. இதுவரை அந்த வேர்க்கடலையை வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவோம். ஆனால் தற்போது அதனை குழம்பு போல் செய்தால், சூப்பராக இருக்கும். இப்போது அந்த வேர்க்கடலையை வைத்து எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - 1 கப்
தக்காளி சாறு - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வேர்க்கடலையை, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் தக்காளி சாற்றை விட்டு, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளற வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி!!!
இதன் மேல் கொத்தமல்லியை தூவி சாதம், சப்பாத்தி, பாவ் பாஜி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.