ஒவ்வொரு வருகையிலும்
உன்னை என் கண்களினூடாக
உயிர்க்குடுவை முழுதும்
வழிந்தோடும் வரை
வண்ணச்சொட்டுகளால்
நிரப்பிப் போகிறாய்
நிரப்ப மறந்த
தினங்களில்
சுற்ற மறுக்கும்
சுவர்க்கடிகார முட்கள்
இடம் பெயர்ந்து
ஒரு துக்கத்தின்
குறிப்புரையை
நாட்காட்டிக் காகிதத்தில்
செதுக்கிவிட்டுச்செல்கிறது
பிடிபடாமல் சட்டெனபிடிபட்ட
கவிதை வரிகளாய்
சூரியகதிர்கள் திருட மறந்த
இளம் பனித்துளியாய்
காற்றில் கலந்துவந்து
கட்டியணைக்கும் பூ வாசமாய்
ஒவ்வொரு நொடியும்
எனக்குள்
பூத்துக்கொண்டிருக்கிறாய்
எட்டிய தொலைவுக்கு
தட்டிக்கொடுக்கவும்
எட்டும் இலக்குக்கு
முடுக்கிவிடவும்
என் பாதையின் ஓரம்
மைல்கற்கள் மேல்
ஈர முத்தங்களோடு
காத்துக்கிடக்கிறாய்