நவராத்திரி
ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற zபணத்தை பாதுகாக்க வீரம் வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்னளிற்கு பயன் படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம். இப்படியாக காரண காரியங்களுடன் இந்த விரத முறை அமைந்துள்ளது. நவ என்ற சொல்லிற்கு ஒன்பது, புதியது என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இங்கு ஒன்பது ராத்திரிகள் என்பதே நவராத்திரி எனபபபடுகிறது. ஒன்பது ராத்திரிகள் சக்தியை நோன்பு நோற்று வழிபட்டு 10ம் நாள் நோன்பை நிறைவு செய்ய வேண்டும். உத்தராயண காலமான தை முதல் ஆனி வரையிலான காலத்தின் நடுவில் வருவது வசந்த ருது -- சித்திரை, தட்சிணாயண காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தின் நடுப்பகுதியான சரத் ருது -- புரட்டாசி. இவ்விரு பருவ காலங்களும் எமனின் கோரைப்பற்களைக் குறிக்கின்றன. இக்காலங்கள் பொதுவாக மனிதரிற்கு தீமை விளைவிக்கும் காலங்களாகும். இதனால் தான் இக் காலங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான மலைமகள் (துர்க்கை), அலைமகள் (மகாலட்சுமி), கலைமகள் (சரசுவதி) ஆகியோரிற்கு மும்மூன்று நாடகளாக வழிபடும் ஒரு முறையும் உள்ளது. மற்றும் ஒன்பது சக்தியிரை ஒன்பது நாட்கள் வழிபடும் முறையம் உள்ளது. ஈழம் போன்ற நாடுகளில் முதல் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் மற்றும் படைவீரர்கள் ஒன்பது நாட்களும் தங்கள் ஆயுதங்களை (போர்க் கருவிகளை) பூசையில் வைத்து பத்தாம் நாள் விஜய தசமியன்று விழா எடுத்து தமது வெற்றிக்கு தமது ஆயுதங்களிற்கு சிறப்பு சக்தி கிடைக்க வேண்டும் என வழிபட்டு வந்தனர். இதற்கு சான்று கிருஷ்ண அவதாரத்தில் கம்சனின் படலத்தில் காணப்படுகிறது. நவராத்திரி கொலு வைக்கும் முறையையும், நவராத்திரி என்பது பெண் தெய்வங்களிற்கு மட்டுமே உரிய ஒரு வழிபாட்டு முறை போலவும், அது பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் ஒரு விரத வழிபாட்டு முறை போலவும் ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நவராத்திரி விரதம் குறிப்பாக வெற்றிக்கனியை பறிக்க விரும்பும் ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும். ஆண்கள் இந்த விரதத்தினை அனுஸ்டிப்பதிற்கு சான்றாக ஏற்கனவே கூறியது போல கம்சன் சிறப்பாக ஆயுத பூசை செய்ததையும் தற்காலத்தில் தொழிலாளரகள் தங்கள் ஆயுதங்னளிற்கு ஆயுத பூசை அன்று சிறப்பு வழிபாடு செய்வதையும் காணலாம். மற்றும் விஜயதசமி அன்று பிள்ளைகளிற்கு ஏடு தொடங்கல் என்ற கல்வியின் ஆரம்ப நாளாக கடைப்பிடிப்பதையும் நாம் காணலாம்.
ஒன்பது தேவியரின் வழிபாட்டு முறையையும் இனிப்பார்ப்போம் நவராத்திரி கொலு
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.
1. முதலாம் படி :-
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள்.
2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
இந்த வருடம் நவராத்திரி விரதம் 27 – 09 – 2011 செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமாகிறது. அதற்கு முதல் நாளான திங்கட்கிழமை மாலை 06 – 00 மணியிலிருந்து 07 – 00 மணிக்குள்ளான நேரத்தில் கொலு வைக்க சிறந்த நேரமாகும். பின்னர் விஜயதசமியன்று 06 – 10 – 2011 பூசை முடித்த பின்னர் கொலு பொம்மைகளை படுக்க வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் அதாவது 07 – 10 – 2011 அன்று காலையில் கொலுவை எடுத்து விடலாம்.
நவராத்திரி விரதம் பரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்தநாள் அதாவது பிரதமை திதியில் அன்று ஆரம்பித்து தசமி திதியில் நிறைவடையும். இந்த கரவருடத்தில் புரட்டாசி அமாவசை 27 – 09 – 2011 அன்று மாலை இந்திய நேரப்படி 05 மணி 39 நிமிடத்திற்கு முடிவடைந்து அதன் பின்னர் பிரதமை திதி ஆரம்பிக்கிறது. திதிகள் பொதுவாக இரவு 06 மணியிலிருந்து இரவு 08 மணிவரை எந்த திதியுள்ளதோ அதே திதி கணக்காக எடுத்துக் கொள்ளப்படுவது ஒருமுறை ஆகும். மற்றொரு முறையில் எந்த நாளில் குறிப்பிட்ட திதி அதிக நாழிகை உள்ளதோ அந்த நாளில் அந்த திதியே அன்றய திதியாக கொள்ளப்படுகிறது. இவ்விரண்டு அடிப்படையில் பார்த்தாலும் 27ம் திதியே பிரதமை திதி ஆகிறது எனவே 27 – 09 – 2011 அன்றே நவராத்திரி விரதம் ஆரம்பிக்கலாம்.
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிபடுத்தவே ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள் :-
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்ற விறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தினை வலியுறுத்துவதாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.
இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
4. நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சியளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
5. ஐந்தாம் நாள் :-
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிப்பார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
6. ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங்காரத்தில் அருள்புரிவார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம்,
தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவசக்தி கோலத்தில் மக்களிற்கு அருள்பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள் :-
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அருளாட்சி புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.