Author Topic: என் காவல் தூதன்!!  (Read 221 times)

Offline Shreya

என் காவல் தூதன்!!
« on: January 28, 2026, 04:33:51 AM »
                                           என் காவல் தூதன்!!

'நலமா?' என்று அவன் கேட்கும் போது
'ம்' எனும் என் ஒற்றை எழுத்து மௌனத்திற்குள்..
ஆயிரம் அழுகைகளும்..
ஏமாற்றங்களும் இருப்பதை
அவன் ஒருவன் மட்டுமே வாசிக்கிறான்!!!

​அவன் கண்ட மௌனம் தவம்..
நான் வாழும் வாழ்க்கை இயந்திரம்..
சத்தமில்லாமல் சிதைந்து கொண்டிருந்த என்னை,
அரணாய் வந்து தாங்கிக் கொண்டான்!
அவன் கண்ட மௌனம் தவம் என நினைத்தேன்..
ஆனால் எனை மீட்டெடுக்க அவன் தொடுத்த மௌன யுத்தம் அது!!

​என் துயரங்கள் தோற்கும் புகலிடமாய் அவன் மாறினான்,
காவல் தூதனாய் என் முன் நின்று...
என் கண்ணீர்த் துளியைப் புன்னகையாய் மாற்றினான்!!
'உன்னை நீ நேசி' என அவன் உணர்த்திய ஒவ்வொரு தருணமும்
என் இதயத்திற்கு இட்ட இரும்பு கவசம்!!!

​இனிமேல் நான் வீழ்வதற்கு வழி இல்லை,
வீழும் முன்னமே தாங்க அவன் இருக்கிறான்..
காலம் கடந்தாலும், துன்பங்கள் சூழும் நேரத்திலும்,
என் உயிரின் எல்லை வரை அவன் காவல் இருக்கும்..

இயந்திரமாய் சுழன்ற என் வாழ்வு இனி மாறும்,
மௌனத்தின் கண்ணீரை மொழிபெயர்த்தவன்—இன்று
என் மௌனத்திலேயே அமைதியை ஆழமாய் விதைத்தான்
அவன் தந்த துணிவால் என்னை நான் நேசிக்கத் தொடங்கிவிட்டேன்..
புரியாத புதிராய் இருந்த என் வாழ்க்கையில்
நான் கண்ட முழு அர்த்தம், அவன் காட்டிய 'தீரா அன்பு'!!!