எடுப்பாய் தோற்றமும்
எக்கச்சக்க பேரழகும்
ஏதுமே அவளிடத்தில்
இல்லை என்ற போதினிலும்
எனக்காய் பிறந்தவள்
என்றெண்ணித் தான் இருந்தேன்
எந்தன் காதலை
அவளிடத்தில் கொண்டிருந்தேன்
காலம் பின்னிய
சூழ்ச்சி வலை கண்டறிய
ஞானம் என்னிடம்
இல்லாத ஒரு நிலையில்
காத்திருந்த காதலும்
கைவிட்டு போனதே
நான் கொண்ட காதலும் - இன்று
கனவு போல தோணுதே
இப்படியாய் நாட்கள்
தொலைதூரம் நகர்ந்து
விதிப்படியாய் காதல்
மெதுவாக கலைந்து
மறதி எனும் மருந்து
எனை மெல்ல தேற்ற
மறுபடி அவள் வந்தாள்
விஷமதிலே ஊற்ற
நீண்ட நெடுங்காலம்
கடந்து நான் வந்திருக்க
ஓர் நாள் அவள் வந்தாள்
மீண்டும் என் எதிரில்
சட்டென அவள் முகத்தை
கண்டவுடன் மெய் சிலிர்க்க
பட்டஎன் காதலும்
மறுபடியும் துளிர்க்க
அவள் உருவம் கண்டதும்
ஏதோ ஓர் நடுக்கம்
பேச முயற்சித்தும்
முன்பு போல் ஒரு தயக்கம்
இருந்தும் என் உதடு
புன்முறுவல் பூக்க
அவளும் வாய் திறந்தாள்
என்னிடத்தில் கேட்க
அவளின் குரலினிலே
குழலென ஒரு கேள்வி
எந்தன் செவி நுழைய
ஆனதது வேள்வி
அவளின் கேள்வி
எனக்கெளிது என்றாலும்
அதற்கு பதிலேதும்
இல்லையடி எந்நாளும்
எப்படி இருக்கிறாய் என
அக்குரலும் எனை கேட்க
எப்படி சொல்வேன் நான்
இறந்து விட்டேன் என்று...