Author Topic: வானவில்லை இரவில் காண முடியுமா?  (Read 1167 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
இயற்கை அளிக்கும் அற்புதமான காட்சி வானவில். வயல்வெளியாக இருக்கிற இடத்தில் வானவில் தெரியுமானால் அதை முழுதாகப் பார்க்க முடியும். வானவில்லின் பெயரை வைத்து வானில் உண்மையாக பல வண்ணங்களில் வில் போன்று ஏதோ உண்டாவதாக நினைத்தால் அது தவறு. நீங்கள் நிலைக் கண்ணாடி முன்பாக நின்றால் எதிரே உருவம் தெரிகிறது. ஆனால் அது வெறும் தோற்றமே. கிட்டத்தட்ட அது போன்றதுதான் வானவில்லும்.
இன்னொன்று. வானவில்லை நோக்கி நீங்கள் நடந்தால் ஒரு கட்டத்தில் அது உங்கள் தலைக்கு மேலே தெரியும் என்று நினைத்தால் அதுவும் தவறு. காலையில் வெயில் இருக்கும்போது உங்கள் கிராமத்துக்கும் அடுத்த கிராமத்துக்கும் நடுவே மழை பெய்கிறது. அப்போது நீங்கள் வானில் வானவில்லைக் காண்கிறீர்கள். மழை பெய்கிற இடத்துக்கு அப்பால் உள்ள பக்கத்து கிராமவாசிகளுக்கு இந்த வானவில் தெரியாது.
வானவில் என்பது குறிப்பிட்ட சூழ்நிலைகளில்தான் தென்படும். முதலாவதாக சூரியன் கிழக்கே (அல்லது மேற்கே) அடிவானில் அல்லது அடிவானத்துக்கு சற்று உயரே இருக்க வேண்டும். அந்த சமயத்தில் எதிர்த்திசையில் மழை பெய்ய வேண்டும். அப்போதுதான் வானவில் தெரியும். அதாவது நீங்கள் நடுவே இருக்க, ஒரு புறம் வெயிலும் மறுபுறம் மழையும் இருக்க வேண்டும். அப்படியான சமயத்தில் பெய்கின்ற திசையில் வானவில் தோன்றும். நீங்கள் இருக்கின்ற இடத்தில் சூரியனே தெரியாத வகையில் வானை மேகங்கள் சூழ்ந்திருந்தால் வானவில் தோன்றாது. எல்லாவற்றுக்கும் மேலாக சூரியன் நடுவானில் இருந்தால் வானில் வானவில் தோன்றாது.
முப்பட்டகம் (Prism) எனப்படும் முக்கோண வடிவிலான கண்ணாடித் துண்டு வழியே சூரிய ஒளிக்கற்றை பாய்ந்து செல்லும்படி செய்தால் சுவரில் 7 வண்ணங்கள் தெரியும். வெண்மையான சூரிய ஒளிக் கற்றையை முப்பட்டகம் இவ்விதம் 7 வண்ணங்களாகப் பிரிக்கிறது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகியவை அந்த 7 நிறங்களாகும். இதை நினைவில் வைத்துக்கொள்ள VIBGYOR என்று சொல்வது உண்டு.
மழை பெய்யும்போது ஒவ்வொரு மழைத் துளியும் கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும். எதிர்ப்புறத்தில் இருந்து வருகின்ற சூரிய ஒளிக் கற்றைகள் இந்த மழைத் துளிகள் வழியே பாய்ந்து செல்லும்போது ஒவ்வொரு துளியும் முப்பட்டகம் போல செயல்பட்டு சூரிய ஒளிக் கற்றையை 7 வண்ணங்களாகப் பிரிக்கிறது. இதன் விளைவாகவே வானவில் தெரிகிறது.
சில சமயங்களில் வானில் இரட்டை வானவில் தெரியும். அவ்வித நிலைமைகளில் பிரதான வானவில்லுக்கு மேற்புறத்தில் துணை வானவில் தெரியும். இந்த இரு வானவில்களுக்கும் இடையே சிறிது வேறுபாடு உண்டு. பிரதான வானவில்லின் நிறங்கள் அழுத்தமாகத் தெரியும். தவிர, வானவில்லின் வெளிப்புறத்தில் சிவப்பும் அடிப்புறத்தில் ஊதாவும் தென்படும். துணை வானவில்லில் இதற்கு நேர் மாறாக வெளிப்புறத்தில் ஊதாவும் அடிப்புறத்தில் சிவப்பும் தெரியும். பிரதான வானவில் அடி வானத்தில் இருந்து 40 முதல் 42 டிகிரி உயரத்திலும் துணை வானவில் 50 முதல் 52 டிகிரி உயரத்திலும் தெரியும்.
பௌர்ணமியாக இருந்தால் இரவிலும் வானவில் தென்படலாம். ஆனால் மேற்கூறியது போல சந்திரன் அடிவானத்துக்கு சற்று மேலே இருக்கிற சமயத்தில் எதிர்ப்புறத்தில் மழை பெய்தால் வானவில் தெரியும். சந்திரனின் ஒளியானது சூரியனிடமிருந்து பெறப்பட்ட பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்பதால் அந்த வானவில் மங்கலாகத் தெரியும். இரவில் வானவில்லைக் கண்டுள்ளதாக கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் எழுதி வைத்துள்ளார்.
பௌர்ணமி இரவில் அபூர்வமாகத் தெரிகிற வானவில்லை படம் பிடித்துள்ளவர்கள் பலர் உண்டு. சிலர் இதை Rainbow என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக Moonbow என்று குறிப்பிடுகின்றனர். சூரியன் மேற்கே அஸ்தமிக்க, பௌர்ணமி சந்திரன் கிழக்கே உதித்த சமயங்களில் (மேற்கு வானில்) இவ்விதம் இரவு நேர வானவில்லைக் கண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு வட்டத்தின் ஒரு பகுதியே வில் (Arc) எனப்படுகிறது. அந்த வகையில்தான் வானவில்லுக்கு அப்பெயர். நாம் வானவில்லாகக் காண்பது அரை வட்டமாகும். எனினும் முழுவட்ட வானில் என்பதும் இருக்கத்தான் செய்கிறது. விமான ஓட்டிகள் சிலர் தாங்கள் வானில் இருந்தபடி கீழே முழுவட்ட வானவில்லைக் கண்டுள்ளதாக கூறியுள்ளனர். அந்த வகையில் கீழே பூமியில் இருக்கிற யாரும் முழுவட்ட வானவில்லைக் கண்டிருக்க முடியாது.
எனினும் மலைப் பகுதியில் உயரமான இடத்தில் இருந்தபோது கீழே பள்ளத்தாக்குப் பகுதியில் -பகல் நேரத்தில் -முழுவட்ட வானவில்லைக் கண்டுள்ளதாக ஒரு நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இதை வளைய வானவில் என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Yousuf

நல்ல தகவல் சகோதரி வானவில்லை பற்றி! பயனுள்ளதாக அமைந்தது!

தொடரட்டும் உங்கள் பதிவுகள்!