அழுக்கு உறைந்து
பருக்கைகளாய் நிமிர்ந்து நிற்க
மீண்டும் அதே இருக்கையில்
முதுகை சாய்த்து வைக்கப்படுகிறது
.
கடும் வெப்பமும் உஷ்ணக்காற்றின்
வெம்புதலும் ஒருசேர நெற்றி முதல்
உள்ளங்கால் வரை வியர்த்து
உடலோடு பெய்திறங்கும்....
.
ஈக்கள் எரிச்சலூட்டும் வேகத்தில்
முகத்தில் ஆடிச்செல்கிறது
கொசுக்கள் சாவகாசமாய்
இரு செவிகளிலும் ரீங்காரமிட்டு
மூக்கின் நுனியில் சாவகாசமாய்
அமர்ந்து இரத்தம் உறிஞ்சி
மயங்கி வீழ்கிறது....
.
வெற்றுத்தாள் போன்று ஏதோ
பக்கத்தில் இருக்க தலையில்
சுற்றிய துண்டால் அவ்வப்போது
அவ்வழியே செல்பவர்கள்
வாயினின்றும் ஒழுகும் எச்சிலை
துடைத்து மீண்டும் தலை சுற்றி
வைத்துச்செல்வதாய் வழக்கம்....
.
வெறித்த பார்வையொன்றுமில்லை
இமைகள் மூடாமலுமில்லை
எதற்காகவும் யாருக்காகவும்
மூடாத இமைகளும் சிந்தாத கண் ணீரும்
திடீரென சாய்ந்திறங்கும்
யாரும் கவனித்தாலும் அது
அப்படித்தான் எனும் முடிவு...
மூன்றாண்டாய்
வேறு புதிதாய் சாய்விருக்கை
வாங்கப்படவில்லை
புதிதாய் துப்பணிகளோ கால்வைக்கும்
மரத்தாலான இருக்கையோ
தேவைப்படவில்லை.
.
இன்றுவரை எதையும்
உடைத்ததாயோ சேதப்படுத்தியதாயோ
யாராலும் பொய் சொல்லவியலா
நிசப்தத்தின் நிஜம்...
.
உண்டு மகிழவும்
சிண்டு முடிக்கவும் இயலாதொரு
இருக்கைப்பிணம் என்றனர் சிலர்
இதை எதுக்கு இப்டியே வச்சிக்கிட்டு
என தேவையற்றவர்களின் அக்கரை
.
அண்ணக்கே செத்திருக்கணும்
அவளாவது நிம்மதி கொண்டிருப்பாள்
இன்னுமா போட்டு பாக்குறே நீ
உன் வாழ்க்கையே தொலைச்சிட்டியே
என உறவினரின்
எரிச்சலூட்டும் கனிவு....
.
ஒரு துளி கண்ணீர்
ஒரேயொரு பார்வை
ஒரே ஒரு புன்னகை
ஒரே ஒரு வார்த்தை முனகல்
என எதையும் தராமல்
அப்படியே சாய்ந்து வீழ்ந்து
மரணிக்கும் கோமா எனும்
நிலைத்துப்போன அறிவு நிலை....
.
மரணத்தினும் கொடிது.... :-(