இந்தியர்களிடம் வெளிநாட்டு வேலை மோகம் குறைந்து வருகிறது: வயலார் ரவி
கடந்த 3 ஆண்டுகளாக, இந்திய இளைஞர்களிடம் வெளிநாட்டு வேலை மோகம் குறைந்து வருவதாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நலத்துறை மத்திய அமைச்சர் வயலார் ரவி குறிப்பிட்டார்.
தேசிய அளவிலான இளைஞர்கள் மற்றும் இடம் பெயர்தல் குறித்த 2 நாட்கள் கருத்தரங்கம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான மத்திய மந்திரி வயலார் ரவி கலந்து கொண்டு பேசுகையில்:
கடந்த 3 ஆண்டுகளாக இந்திய இளைஞர்களிடம் வெளிநாட்டு வேலை மோகம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் ஏஜென்டுகளால்தான்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் வேலை சம்பந்தமாக சென்று பிரச்னையில்லாமல் திரும்புகின்றனர். இவர்களால் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன மருத்துவ முறைகளும், செயல்திட்டங்களும் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் இந்தியாவில் உள்ளவர்களும் பயனடைந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதற்கு முக்கிய காரணமே விசா பிரச்னைதான். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் அசாம், பிகார், குஜராத், கேரளம், கர்நாடகம், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன.
வளைகுடா நாடுகளில் அதிக அளவிலான இந்தியர்கள் சிறைகளில் உள்ளனர். இவர்கள் அங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் சிறையில் உள்ளனர். அவர்கள் தண்டனை காலம் முடிந்து தாயகம் திரும்ப மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிரச்சனைகளில் சிக்கி உள்ள இந்திய பெண்களுக்கு நீதிமன்றம் செலவுக்காக 1500 டாலர்கள் வரை மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது என்றார்.