Author Topic: ~ பூரி – கிழங்கு குருமா ~  (Read 334 times)

Online MysteRy

~ பூரி – கிழங்கு குருமா ~
« on: February 29, 2016, 09:10:56 PM »
பூரி – கிழங்கு குருமா



மைதா – 2 கப்
கோதுமை மாவு – அரை கப்
உப்பு – அரைத் தேக்கரண்டி
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
பூரிக்கிழங்கு செய்ய தேவையானவை
உருளைக்கிழங்கு – 3
பெரிய வெங்காயம் – 2
காரட் – 2
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
இஞ்சி – ஒரு அங்குல துண்டு
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
கடலைப் பருப்பு – ஒன்றரை மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கடலைமாவு – 2 தேக்கரண்டி
கல் உப்பு – ஒரு தேக்கரண்டி

மைதா, கோதுமை மாவு இரண்டையும் ஒன்றாய் சேர்த்து, சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் உப்பு, சோடா உப்பு இரண்டையும் கலந்து மாவில் ஊற்றி நன்கு பிசையவும். ஓரளவிற்கு பதமாக பிசைந்தவுடன் நல்லெண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு அவற்றை அப்பள வடிவில் தேய்த்துக் கொள்ளவும். மிகவும் தடிமனாகவும், மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல் சற்று நடுத்தர அளவில் தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாய் அதில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இருபுறமும் திருப்பிப் போட்டு சற்று பொன்னிறம் வந்தவுடன் எடுத்து விடவும். நீண்ட நேரம் வேக வைத்தால் சிவந்து போய்விடும். சற்று வெண்ணிறமாக இருக்கையிலேயே எடுத்து எண்ணெய் வடியவிட வேண்டும்.
உருளைக்கிழங்கினை துண்டுகளாக நறுக்கி வேகவைத்து எடுக்கவும். அதனை தோலுரித்து, கைகளால் மசித்து வைத்துக் கொள்ளவும். காரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு போட்டு சற்று சிவந்ததும், இஞ்சி, வெங்காயம், காரட், கறிவேப்பிலை, கீறின பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
விரும்புகின்றவர்கள் வெங்காயம் வதக்கும் போது கூடவே ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு வதக்கிக் கொள்ளலாம். இப்போது வாணலியில் ஒன்றரைக் கப் தண்ணீர் ஊற்றி சற்று நேரம் வேகவிடவும். காய்கள் சற்று வேக வேண்டும்.
பின்னர் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கினைச் சேர்த்து, மஞ்சள் தூளையும் போட்டுக் கிளறி வேகவிடவும். உப்பு சேர்க்கவும்.
கிழங்கு நன்கு வெந்தவுடன் குருமா சற்று சுண்டி இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் கடலை மாவினை நீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
குருமா நீர்த்து இருக்குமாயின் அரை கப் தண்ணீரில் கடலைமாவினை கரைத்து ஊற்றவும். மேலும் சிறிது நேரம் கொதிக்கவேண்டும்.
குருமா கொதித்து சற்று கெட்டியானதும் இறக்கவும்.
இந்த கிழங்கு குருமா பூரியுடன் சேர்த்து சாப்பிடச் சுவையானது. பூரி என்றாலே உருளைக்கிழங்கு குருமாதான் (பூரிக் குருமா) என்று சொல்லுகின்ற அளவிற்கு, காலம் காலமாக இரண்டும் இணைபிரியாத ஜோடிகள்.