Author Topic: ~ உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இயற்கை சாம்பார் இயற்கை உணவுகள் ~  (Read 547 times)

Online MysteRy

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இயற்கை சாம்பார் இயற்கை உணவுகள்



'காலையில எழுந்ததும் என்ன சமைக்கலாம்..? என்று யோசிப்பதே  குடும்பப் பெண்களின் ஜென் நிலை’ எனக் கூறலாம்.  'குழம்பைச் சுண்ட கொதிக்க வைத்தால்தான் தனிச்சுவை கிடைக்கும்’ என்று ஒருசாராரும், 'தாளித்து சிறிது நேரத்தில் இறக்கிவைத்தால்தான் நல்ல வாசனையுடன் ருசியாக இருக்கும்’ என்று ஒருசாராரும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை 'கொதிக்கவைக்காமல், அதாவது அடுப்பில் ஏற்றாமலேயே வைக்கும் சாம்பார், ரசம்தான் நல்ல சுவையாக, மணமாக... அதேநேரம் உடலுக்கு ஆரோக்கியமான உணவாகவும் இயற்கை முறையிலும் அமையும்.’ என்றபடி செய்முறை விளக்கங்களை அளிக்கிறார், இயற்கைப்பிரியன் இரத்தின சக்திவேல்

Online MysteRy

இயற்கை ரசம்



தேவையான பொருட்கள்:

தக்காளி - அரை கிலோ, அல்லது எலுமிச்சைப்பழங்கள் - 3, அல்லது புளி - 50 கிராம்
ரசப்பொடி - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 5 பல்
மிளகுத்தூள் - சிறிதளவு
பிளாக் சால்ட் - சிறிதளவு

செய்முறை:

தக்காளியைக் கழுவி சாறு எடுக்கவும். அத்துடன் தேவையான நீர் சேர்க்கவும். பூண்டுப் பல்லைத் தோல்நீக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை இவற்றைக் கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் பூண்டு சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையுடன் ரசப்பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பிளாக் சால்ட் எல்லாவற்றையும் தக்காளிரசத்துடன் கலந்தால், இயற்கை ரசம் ரெடி. அவலை இதில் ஊற வைத்து, ரசம் சாதம் போல் சாப்பிடலாம். இதே முறையில் எலுமிச்சை ரசம், புளி ரசம் செய்தும் சாப்பிடலாம்.  இயற்கையான நறுமணத்துடன் இருப்பதுடன் உடலுக்கு நன்மை தரக்கூடியது. இதில் கொஞ்சம் அதிகப்படியாக பூண்டு அரைத்துப்போடும்போது வாயுத்தொல்லை நீங்கி, வயிறு சுத்தமாக இருக்கும்.

Online MysteRy

இயற்கை சாம்பார்



தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்புப் பொடி - 100 கிராம்
துவரம்பருப்புப் பொடி - 100 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - 50 கிராம்
சாம்பார்தூள் - சிறிதளவு
தக்காளி - 200 கிராம்
எலுமிச்சைப்பழம் - 3
பெரியவெங்காயம் - ஒன்று
தேங்காய்த்துருவல் - மூன்று மூடிகளில் இருந்து எடுத்துக் கொள்ளவும்
முட்டைகோஸ் - 100 கிராம்
கேரட் - 200 கிராம்
வெண்பூசணி - 100 கிராம்
பிளாக் சால்ட் - சிறிதளவு
குடமிளகாய் - 2
சீரகத்தூள் - சிறிதளவு,
இஞ்சி-பூண்டு - சிறிதளவு
உப்பு -  சிறிதளவு

செய்முறை:

காய்கறிகளைக் கழுவி தோல் நீக்கி, கேரட் துருவல் போல் எல்லா காய்கறிகளையும் சிறியதாகத் துருவிக் கொள்ளவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சுத்தமாக தண்ணீரில் கழுவவும். இஞ்சி, பூண்டு இவற்றைத் தோல் நீக்கவும். எலுமிச்சை, தக்காளியைச் சாறு எடுத்துக் கொள்ளவும். கூடவே, பெரிய வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தேங்காயைச் சிறிது நீர்விட்டு அரைக்கவும்.  தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டு பாசிப்பருப்புப் பொடி, துவரம் பருப்புப் பொடி போட்டுக் கலக்கவும். துருவிய காய்கறிகள், தேங்காய் விழுது, சாம்பார் பொடி, கொத்தமல்லிதழை, இஞ்சி-பூண்டு அரைத்த விழுது, உப்பு, சீரகப்பொடி, தக்காளிச்சாறு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக்  கலக்கவும். இதுவே இயற்கை சாம்பார். இட்லிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.