Author Topic: பிசிபேளாபாத்  (Read 515 times)

Offline kanmani

பிசிபேளாபாத்
« on: November 20, 2013, 11:47:17 PM »


    அரிசி - ஒரு கப்
    துவரம் பருப்பு - அரை கப்
    காய் கலவை - ஒரு பெரிய கப் (கத்திரிக்காய் - 2, பீன்ஸ் - 10, முருங்கைக்காய், கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று)
    சின்ன வெங்காயம் - 15
    கறிவேப்பிலை - சிறிது
    தக்காளி - ஒன்று (சிறியது)
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    வெல்லம் - ஒரு மேசைக்கரண்டி
    வறுத்து பொடிக்க :
    தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
    கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
    உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
    மிளகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    வெந்தயம் - கால் தேக்கரண்டிக்கும் குறைவு
    மிளகாய் வற்றல் - 6
    கறிவேப்பிலை - சிறிது (விரும்பினால்)
    பட்டை, லவங்கம் - சிறிது
    தனியா (மல்லி விதை) - ஒரு மேசைக்கரண்டி
    தாளிக்க:
    கடுகு - கால் தேக்கரண்டி
    சீரகம் - கால் தேக்கரண்டி
    உளுந்து, கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
    பெருங்காயம் - சிறிது

 

 
   

முதலில் காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
   

அரிசியையும், பருப்பையும் களைந்து 3 கப் நீர் ஊற்றி குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
   

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை வறுத்து எடுக்கவும்.
   

பிறகு மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும். அதன் பிறகு தனியா (மல்லி விதை), உளுந்து மற்றும் கடலைப்பருப்பை வறுக்கவும்.
   

அதன் பிறகு மீதமுள்ள பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து கடைசியாக கறிவேப்பிலையை வறுத்து எடுத்து அனைத்தையும் சேர்த்து ஆறவிடவும்.
   

வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாகவோ அல்லது விழுதாகவோ அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
   

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை பிரட்டிவிட்டு காய் கலவையைச் சேர்க்கவும். (முருங்கைக்காயை இப்போது சேர்க்க வேண்டாம்).
   

காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
   

பிறகு துருவிய வெல்லம், புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
   

கொதி வந்ததும் வேக வைத்து எடுத்த அரிசி, பருப்பு மற்றும் பொடித்த மசாலா தூள் சேர்க்கவும்.
   

அதனுடன் மேலும் 3 - 4 கப் நீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடி 10 - 15 நிமிடங்கள் வரை மிதமான தீயிலோ அல்லது சிறு தீயிலோ வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும். (விரும்பினால் கடைசியாக ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு இறக்கவும்).
   

சுவையான கர்நாடகா ஸ்பெஷல் பிசிபேளாபாத் தயார். சூடான பிசிபேளாபாத்துடன் அப்பளம் சேர்த்து பரிமாறலாம்.

 

சாதம் பருப்பை வேக வைத்தும் சேர்க்கலாம். அல்லது புளி சேர்த்து ஒரு கொதி வந்தபின் தேவையான நீர் விட்டு காய் கலவையோடு சேர்த்தும் வேக வைக்கலாம். இன்னும் சுவை கூடும். தாளிக்கும் போதும் நெய், எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். நேரம் ஆக ஆக சாதம் கெட்டியாக ஆரம்பிக்கும். அதனால் சூடாகப் பரிமாறுவதே சிறந்தது. முருங்கைக்காயை எப்போதும் கடைசியில் சேர்க்க வேண்டும். இல்லையெனில் கசந்து போகும். குக்கரில் அனைத்தையும் சேர்த்து விசில் வைக்காமல் சிறு தீயில் நீண்ட நேரம் வைப்பதே சுவையைக் கூட்டும்.

இதன் பதம் சற்று நீர்க்கவே இருக்க வேண்டும், சாதமும் நன்றாக குழைந்து வரவேண்டும். சிலர் அரிசியையும் பருப்பையும் சமஅளவாக சேர்ப்பார்கள். பிசிபேளாபாத் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வறுத்தால் போதும், எண்ணெய் இல்லாமலும் வறுக்கலாம். முதலில் தாளிக்காமல் காய் கலவையை மட்டும் வதக்கி, அரிசி பருப்பு சேர்த்து வேக வைத்த பிறகு கடைசியாக நெய் எண்ணெய் கலவையில் தாளித்தும் சேர்க்கலாம். தேங்காய் துருவலை வறுக்காமல் வறுத்த மற்ற பொருட்களோடு கடைசியாக சேர்த்தும் அரைக்கலாம். கர்நாடகாவில் இது போல சிறு சிறு வேறுபாட்டுடன் பல விதமான பிசிபேளாபாத் முறைகள் உண்டு. எனக்கு பிடித்த முறையை கொடுத்திருக்கிறேன். புழுங்கல் அரிசிக்கு பதிலாக ப்ரவுன் ரைஸும் பயன்படுத்தலாம்.