Author Topic: ~ முகத்திற்கு அழகைக் கொடுக்கும் கண்களை கவனமாக பராமரிக்க சில தகவல்கள்! ~  (Read 441 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226408
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முகத்திற்கு அழகைக் கொடுக்கும் கண்களை கவனமாக பராமரிக்க சில தகவல்கள்!




பொதுவாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. கண்களின் பார்வையில் பல அர்த்தங்களும் உண்டு. மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவையே. முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் எல்லோரும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.


இவ்வளவு முக்கியமான கண்களை அல்லது கண்பார்வையை இழப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவு, எமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சூழ்நிலை, நாம் செய்யும் தொழில், தூக்கமின்மை என்பனவற்றுடன் நாம் அவற்றை சரியாக பராமரிக்காது விடுவதுமே முக்கிய காரணிகளாகும்..கண் பார்வைக் குறை ஏற்படாதிருக்க அவற்றிக்கு வேண்டிய போசாக்கான உணவு அவசியம். விற்றமின் "ஏ" யும் "சீ" யும், இரும்புச் சத்தும் முக்கியமாக கண்களிற்கு தேவைப்படுகின்றன. அவை பழங்களிலும், மரக்கறிகளிலும், கீரைகளிலும் போதுமான அளவு கிடைக்கின்றன.

போதை வஸ்து, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கும் போது அவற்றில் உள்ள நஞ்சுப் பொருள்கள் இரத்தத்தில் சேர்ந்து மிகவும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட கண்களின் பார்வையை பாதிக்கின்றன.. எனவே அவற்றை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.நாம் வாழும் சூழ்நிலை மாசு பட்டதாகவும், தூசு நிறைந்ததாகவும், நச்சுப் புகையுள்ளதாகவும், பசுமையற்றதாகவும் இருக்கும் போது விழித்திருக்கும் கண்கள் அவற்றால் தாக்கமடைந்து பார்வை பாதிப்படைகின்றது.

நாம் செய்யும் தொழிலும் எமது கண்பார்வையை கெடுத்து விடுகின்றது. அதிக நேரம் கணினி பாவித்தல், தொழிற் சாலைகளில் தெறித்து வரும் உலோகத் துண்டுகளின் தாக்கங்களும், இரசாயன வாயுக்கள் கலந்த காற்றும் கண்பார்வையை கெடுத்து விடுகின்றன. அச்சந்தற்பங்களில் தவறாது பாதுகாப்பு கவசம் அணிதல் வேண்டும்.காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..

கண் எரிச்சலைப் போக்க

கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.

புத்துணர்ச்சி பெற

வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.

வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

கருவளையம் போக்க

வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.

கண்கள் குளிர்ச்சி பெற

உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

வசீகர கண்கள்

கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.

ப்ளீச் வேண்டாமே

முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.