உன் விலாசம்
ஜாதியிலும் மதத்திலுமா இருக்கிறது
உன் ரத்தத்தை கிளறிப்பார்
நீயும் ஒரு சமுத்திரம்
என்பதை அறிவாய்
சமுத்திரத்தில் ஏது
நதிகளின் விலாசம்
நான் என்பதே இப்போது
பன்மை தான்
கைரேகைகளில்
சிக்கல் விழுந்துவிட்ட
இந்தக் காலதிலும்
குலம் என்கிறாய்
கோத்திரம் என்கிறாய்
உன் குலத்தொழிலை தான்
செய்துகொண்டிருக்கிறயா நீ
உச்ச விருத்தி செய்துதான்
உயிர் வாழ்கிறானா பிராமணன்
ஆட்சிப்பீடம் தவிர
வேறெங்கும் அமர்வதில்லையா சத்திரியன்
வைசியன் மட்டும் தான்
தராசு பிடிக்கிறானா
ஏர் ஓட்டுபவன் எல்லாம்
சூத்திரனா
வயிற்றுக்காக முந்தானை விரிக்க
தொடங்கி விட்ட பின்
பத்தினி வேசம் எதற்கு
ஞானிகள் செய்ய முடியாததை
விஞ்ஞானி செய்து விட்டான்
இதோ
நீயே மழித்துக்கொள்கிறாய்
நீயே துவைத்துக் கொள்கிறாய்
உன் கழிப்பறையை கூட
நீயே கழுவிக்கொள்கிறாய்
இனி யாரை பார்த்து
எட்டி நில் நீ
தாழ்ந்தஜாதி என்று சொல்லப்போகிறாய்
இல்லை
இன்னும் நீ
அந்த ஜாதிகாரன் நான் என்கிறாயா
பிரேதமே
உயிர் உள்ளவர்கள் மத்தியில்
உனக்கென்ன வேலை?