Author Topic: ~ "நீதிக்கதை" ~  (Read 2242 times)

Offline MysteRy

~ "நீதிக்கதை" ~
« on: May 19, 2013, 08:01:35 PM »


ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #1 on: May 19, 2013, 08:05:09 PM »


ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது.அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும்,கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.

அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
அந்த கிராமத்தையே சுற்றி வந்தார் ஆனால் ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.

ஏன்னா அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிகிட்டு இருக்கார். அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியலையாம்.காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது ஆனால் இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.

நம்ம எல்லாருமே இவரைப் போலத்தான்.நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது ஆனால் நாம் யாரும் அதை பயண்படுத்தாமல் இருக்கிறோம்.தூங்கனது போதும் எந்திரிங்கப்பா...

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #2 on: May 19, 2013, 08:11:42 PM »


இன்றைய அரசியல்வாதிகளுக்கு........!!!
**************************************

ஒரு நாட்டின் மன்னர் ஒருவர், தன் அரச வாழ்வில் நிம்மதி அற்று இருந்தார். எதிலும் பிடிப்பு இல்லை, ஏதோ ஒரு ஏக்கம், சோகம் அவரை சூழ்ந்து இருந்தது.

நிம்மதி இல்லையே என்று இருந்தவர் ஒரு மகானிடம்(சூபி) சென்று தன் நிலையைக் கூறினார்.

'மன்னா! உனக்கென்று பல கடமைகள் இருக்கிறது, அவற்றையெல்லாம் செய்தாயா?' என அந்த மகான் கேட்டார்.

மகான்அவர்களே, இந்த நாட்டை நன்றாக செல்வா செழிப்புடன் வைத்துள்ளேன். அண்டை நாட்டுடன் நட்புறவு, மக்களுக்கு அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன. மக்களுக்கு வரிச்சுமை கூட இல்லை, என்றார் மன்னர்.

"சரி! இப்போதைக்கு ஒன்று செய்வோம், உனது நாட்டை என்னிடம் கொடுத்துவிடு!"

எடுத்துக்கொள்ளுங்கள்!

'அதன் பிறகு நீ என்ன செய்வாய்?'

'நான் வேறு எங்காவது சென்று வேறு வேலை செய்து வாழ்ந்துகொல்கிறேன்!'

"மன்னா! எங்காவது போய் தெரியாத வேலை செய்து கஷ்டப்படுவதை விட, நீ என்னிடமே வேலை செய் . உனக்கு தெரிந்தது அரசாட்சி புரியும் வேலைதான், ஏன் பிரதிநிதியாக சென்று நீயே நாட்டை ஆளு, அதற்க்கு நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நான் எப்போதாவது வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன் என்றார் மகான்.

மன்னர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார்.

ஓர் ஆண்டு சென்றது.

அந்த மகான் , அந்த அரசனின் அரண்மனைக்குச் சென்று மன்னரை சந்தித்தார்.

இப்போது மன்னர் சந்தோஷத்துடன் காணப்பட்டார். நல்ல சுறுசுறுப்பு, மகானை வரவேற்று உபசரித்தார். எல்லாம் முடிந்ததும் ஒரு வருடத்திற்கான வரவு, செலவு கணக்குப் புத்தகத்தை மகானிடம் காண்பித்தார்.

உடனே மகான், கணக்கு இருக்கட்டும், நீ இப்பொழுது எப்படி இருக்கிறாய்? என கேட்டார்.

மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன்!

நிம்மதி இல்லை என்றாயே?

'அதுவும் கிடைத்துவிட்டது '

உன் இந்த ஓராண்டு பணியில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தாயா?

நிச்சயமாக! முன்பு ஒரே மன அழுத்தத்துடன் நிம்மதி அற்று இருந்தேன், ஆனால் இப்போது முழு நிம்மதியுடன் இருக்கிறேன்!.

"இந்த நிம்மது உனக்கு எப்படி கிடைத்தது?"

'அது எப்படி என்று தெரியவில்லை பெருமானே?'

மகான் புன்னகைத்தார்.

"மன்னா! முன்பு இது என்னுடைய ஆட்சி என்று எண்ணினாய், அதனால் எல்லா பொறுப்புகளும் உன்னைச் சூழ்ந்தன. அதனால் பல குழப்பங்கள் உனக்கு இருந்தது. எனவே உனக்கு நிம்மதி போய்விட்டது.

இப்போது இந்த ஆட்சி உன்னுடயதல்ல, நீ இதில் பிரதிநிதியாக பணியாற்றுகிறாய். இப்போது "நான்" உன்னைவிட்டு போய்விட்டது அதனால் நிம்மதியும் வந்தது .தொடர்ந்து இதே மனநிலையுடன் செயல்படு. நிம்மதி உன்னுள் நிரந்தரமாய் இருக்கும். இது உன் நாடு, இதை உன்னிடமே ஒப்படைக்கிறேன். சிறப்பாக ஆட்சி செய் என்றார் மகான்.

எனவே "நான்" என்ற அகந்தை ஒழிந்தால் மனதில் நிம்மதி நிரந்தரமாய் இருக்கும்.

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #3 on: May 19, 2013, 08:21:51 PM »


நூறு தந்திரங்கள்
-----------------------
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #4 on: May 19, 2013, 09:03:33 PM »


ஒரு பார்வை இழந்த பிச்சைக்காரன் உணவுக்காக பிச்சை கேட்டபடி நடந்து கொண்டிருந்தான். அவன் சிறந்த புத்திசாலி ஆனால் அதை பயன்படுத்தி ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவன் மனதில் உண்டு. பசி மயக்கத்துடன் ஓரிடதில் அமர்ந்தான்.

அவன் மீது இரக்கம் கொண்ட ஒரு தேவதை அவன் முன்னால் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டது.

மகிழ்ச்சியோடு அவன் வாய் திறந்தபோது தேவதை சொன்னது. பொறு ! பொறு !. உனக்கு ஒரே ஒரு வரம் தான் தருவேன் அதையும் நீ ஒரு வாக்கியத்தில் தான் கேட்க வேண்டும்.

அவன் பதறவில்லை தடுமாறவில்லை. தேவதை பிரமித்து போகும்படி அந்த வரத்தை கேட்டான் அது…. !!

”என் வீட்டு மூன்றாவது மாடியிலிருந்து தோட்டத்தில் என் குழந்தை விளையாடுவதை பார்க்கும் வரம் வேண்டும்”

நீதி : புத்திசாலிகள் எந்த சூழ்நிலையிலும் சிறப்பையே அடைவார்கள்.

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #5 on: May 19, 2013, 09:09:44 PM »


ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம்
தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’
என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு
மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது.
மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.
அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி,

‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?
உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’
என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை
துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.........!!!

நீதி: தன்னம்பிக்கையும் முயற்சியும் மட்டுமே நம் வாழ்வை தீர்மானிக்கின்றன... முயன்றால் எதிலும் வெற்றியே..

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #6 on: May 19, 2013, 09:12:50 PM »


ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

நீதி: நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது...!

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #7 on: May 19, 2013, 09:27:24 PM »


ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது .

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

நீதி: இல்லாத ஒருவனுக்கு நீ செய்த உதவே, கடவுளுக்கு செய்த உதவி எனப்படும்...

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #8 on: May 19, 2013, 09:35:33 PM »


கோடாரியும் வாழ்க்கையும்...

ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான்,அவன் வேலை தேடி நாட்டாமை வீட்டுக்கு சென்றான்.விறகு வெட்டி நல்ல வாட்டசாட்டமாக இருப்பதை பார்த்து அவனுக்கு வேலையும் கொடுத்தார்.

அதோ தெரிகிறது பார் என் தோட்டம் அங்கே சென்று காய்ந்த மரங்களை எல்லாம் வெட்டி எடுத்துவா என்றார்.அவனும் கோடாரியுடன் கிளம்பினான்,காய்ந்த மரங்களை எல்லாம் வெட்ட ஆரம்பித்தான்.சாயந்திரம் ஆனது அவன் வெட்டிய 10 மரங்களை கொண்டு வந்து போட்டான்.

அடுத்தா நாளும் சென்றான் அவனால் 8 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது,மூன்றாவது நாள் அவனால் 6 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது.நாட்டாமையிடம் சென்றான் ஐயா எனக்கு உடலில் பலம் குறைந்து விட்டது போல் உள்ளது அதனால் தான் முன் போல் என்னால் அதிக மரம் வெட்டமுடியவில்லை என்றான்.

நாட்டாமை அவனிடம் கேட்டார் ’கடைசியாக எப்போது உன் கோடாரியை தீட்டினாய்...’

ஐயா இருக்கிற வேளையில் கோடரியயை தீட்ட மறந்து விட்டேன் என்றான்.

நீதி: நம்முடைய வாழ்க்கையும் இப்படிதான் வேலை வேலை என்று நம்மில் பலர் வாழ்கையை தொலைத்துவிட்டோம்.

நம்மை நம்பி இருக்கின்ற தாய், தந்தை,மனைவி மற்றும் குழந்தையுடனும் நேரத்தை செலவிடவேண்டும்.

’’கடினமாக வேலை செய்து சம்பாதிப்பதில் தவறில்லை, அதற்காக நிம்மதியாக வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைப்பதும் சரியில்லை’’.

Offline MysteRy

Re: ~ "நீதிக்கதை" ~
« Reply #9 on: May 19, 2013, 09:38:14 PM »


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்