FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Gotham on September 20, 2012, 11:55:19 AM

Title: சொப்பனசுந்தரி
Post by: Gotham on September 20, 2012, 11:55:19 AM

வீட்டுக்குள் நுழைந்த போது குப்பென்று வியர்த்தது. மூன்று வாரமாய் பூட்டிக்கிடக்கிறது. எப்படி தான் நான்காம் மாடியில் இருக்கும் பூட்டிக்கிடக்கும் வீட்டுக்குள் குப்பை சேருகிறதோ? அவசர அவசரமாக ஜன்னல்களையும் கதவையும் திறந்து மூச்சுவிட்டேன். வெளியில் வைத்திருந்த பெட்டியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் வைத்தேன்.


உடம்பெல்லாம் அசதியாயிருந்தது. விமானத்தில் நன்றாக தூங்கினால் தூக்கம் கண்ணை கட்டியது. சுற்றிப் பார்த்தேன். வைத்தது வைத்த மாதிரியே இருந்தது. அம்மாவும் அப்பாவும் இரண்டு நாள் கழித்து தான் வருவார்கள். 'இப்போது சுத்தம் பண்ணலாமா? அப்புறம் பண்ணிக்கலாமா?'. சோம்பல் தான் வென்றது. படுக்கையறைக்குள் சென்று ஏசியை ஆன் செய்து படுத்தேன். அப்பாடா. என்ன ஒரு தூக்கம்.


மாலை எழுந்து வீட்டை ஏதாச்சும் இருக்குமா என்று பார்க்க சமையலறைக்குள் சென்றேன். அதிர்ந்தேன். ஏக களேபாரமாய் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் குச்சிகள் இறைந்து கிடந்தது. 'யார் வந்திருப்பார்கள்'. கிச்சுகிச்சென்று சத்தம் கேட்க மேலே பார்த்தேன். சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இருக்கும் இடத்தில் வசதியாய் ஒரு புறா கூடு கட்டியிருந்தது. 'என்னடா சமைக்கற இடத்துக்கு பக்கத்தில புறா கூடு கட்டிருக்கே.' விசனப்பட்டேன். நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நிறைய புறாக்கள் இருக்கும். மூன்று வாரம் ஆட்கள் இல்லையென்று தெரிந்து கூடு கட்டியிருக்கிறது.


சமையலறை மேடையில் ஏறி பார்த்தேன். இரண்டு முட்டைகள் இருந்தன. 'முட்டையிடும் காலம் போலும். அதான் இங்க கூடு கட்டியிருக்கு.' அம்மாவிற்கு தொலைப்பேசினேன்.


"அம்மா.."


"என்னப்பா. தூங்கி எந்திருச்சிட்டியா?"


"ஹ்ம். ஆச்சி. கிச்சன்ல புறா எக்ஸாஸ்ட் பேன் பக்கத்துல கூடு கட்டியிருக்கு."


"அடடா.. ஆளில்லேனு கூடு கட்டிருக்கா. என்ன ஒரே குப்பையா இருக்கோ?"


"ஆமா. கிச்சன்ல்லாம் குச்சியா இருக்கு."


"சரி. ரெண்டு நாளைக்கு வெளில சாப்டுக்கோ. நான் வந்து சுத்தம் பண்ணிக்கறேன்."


அன்று முதல் புறாக்கூடை பார்ப்பதே வேலையானது. 'இருக்கா போயிடுச்சா?. 'ஆமா.. புறா முட்டையிட்டு குஞ்சு பொறிச்சதும் எத்தினி நாள்ல பறக்க ஆரம்பிக்கும்?'. மனம் கவலையில் ஆழ்ந்தது. புறாவைப் பற்றி எதுவுமே தெரியாது. கூகிளில் தேடினேன். புறா குஞ்சு பொறிச்சு பறக்க ஆரம்பிக்க மூன்று வாரகாலமாகுமாம். 'சரி. எப்படியும் புறா இங்க தான் ஒரு மாதம் இருக்குமோ?'


இரண்டு நாளில் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அம்மா எல்லாவற்றையும் சுத்தம் செய்து சமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தெரியாத்தனமாக கூட ஃபேனை போட்டுவிடக்கூடாது என்று அதன் ஸ்விட்ச்சை மறைத்து ஒட்டினேன். இப்படியாக நாட்கள் நகர ஆரம்பித்தது. தினமும் கிச்சுகிச்சுவென்று புறாவின் கீச்சு சத்தத்தில் தான் அம்மாவின் சமையலே.


ஒருநாள் வீடு திரும்பும் போது அம்மா சந்தோசமாக சொன்னார்கள்.


"டேய்.. முட்டை குஞ்சு பொறிச்சிருக்கு. சின்ன குஞ்சு. ஒரு முட்ட வீணா போச்சு" கண்களில் சந்தோசம் தெரிந்தது. அதே சமயம் வருத்தமும் இருந்தது. சிரித்து வைத்தேன். அதிகமாக குப்பைகள் சமையலறைக்குள் விழ அப்பா தான் கேட்டார்.


"பேசாம கூட்டை தூக்கிட்டு போய் எங்கியாச்சும் மாடியில வச்சுடலாமா?"


அம்மா மௌனமாய் இருந்தார்.


"வேணாம்ப்பா. பறக்க ஆரம்பிச்சவுடனே போயிடபோகுது. எதுக்கு ஒரு கூட்ட அநியாயமா கலச்சிக்கிட்டு. நம்ம கூடுக்கு பாவம் சேர வேணாமே"


அப்பா பார்த்த பார்வைக்கு அர்த்தம் இன்றுவரை புரியவில்லை. அம்மா நிம்மதியாய் சமைக்க சென்றார். குஞ்சு சத்தம் போட ஆரம்பித்தவுடன் தான் கவனித்தேன்.


"சொப்பனசுந்தரி... சொப்னா.."


அம்மாவின் குரல் தான். சமையலறையிலிருந்து. யாருக்கிட்டேயாவது போன்ல பேசுறாங்களோ? சமையலறைக்குள் சென்றேன். போன் இல்லை. கூட்டைப்பார்த்து தான் பேசிக்கிட்டு இருந்தார்கள். சொப்பனசுந்தரின்னு ஒவ்வொருமுறை கூப்பிடும் போதும் பதிலுக்கு அங்கிருந்து கீச்சுக்குரல் கேட்கும். ஆச்சர்யமாய் அம்மாவைப் பார்த்தேன். என்னைப்பார்த்து புன்னகைத்தார்.


அடிக்கடி அம்மாவின் சொப்பனசுந்தரிங்கற குரலும் புறாக்குஞ்சின் பதிலும் வீட்டில் கேட்க ஆரம்பித்தது. வேறு சில பிரச்சனைகளால் கவலை கொண்டிருந்த அம்மாவின் முகத்திலும் கொஞ்சம் தெளிவு வந்தது. சொப்பனசுந்தரி அம்மாவிற்கு ஒரு தோழியானாள். ஒரு மாதமாயிற்று. இரண்டு மாதமாயிற்று. ஊருக்கு போய் இரண்டு நாள் கழித்து திரும்புகையில் அம்மா தான் பார்த்தார்.


"ஏய். சொப்பனசுந்தரி பறந்து போச்சு. இப்போ வேற ஒரு புறா முட்டை போட்டிருக்கு." அம்மாவின் குரலில் வருத்தம். 'பின்ன சொல்லாம கொள்ளாம சொப்பன சுந்தரி போனா வருத்தம் இருக்காதா என்ன?'


"சரி. விடும்மா. இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் குஞ்சு பொறிச்சிட போகுது." சமையறையில் குப்பைகள் மட்டும் குறையவே இல்லை. ஆனாலும் கவலைப்படாமல் அம்மா சுத்தம் செய்வார்கள். அந்த வாரம் ஒரு திருமணத்திற்கு அப்பாவும் அம்மாவும் சென்றுவிட நான் அலுவலகத்திற்கு சென்றேன். மாலையில் திரும்பினால் சமையலறையில் ஒரே களேபாரமாயிருந்தது.


கூடெல்லாம் கலைந்து முட்டை கீழே விழுந்து கிடந்தது. புறாக்களுக்குள் ஏதேனும் சண்டை வந்திருக்க வேண்டும். மொத்த கூடும் சின்னாபின்னாமாயிருந்தது. மறுபடியும் அம்மாவிற்கு தொலைபேசினேன். கேட்டதும் குரலில் பதட்டம்.


"என்ன முட்டையெல்லாம் உடஞ்சிடுச்சா.. சரி. நீ எதுவும் பண்ணாத. நான் வந்து பாத்துக்கறேன்."


மறுநாள் காலையில் வந்தார்கள். அலுவலகம் போய்விட்டு திரும்பினால் சமையறையே மொத்தமாய் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. எக்ஸாஸ்ட் ஃபேன் இருக்கும் இடத்தில் ஒரு பேப்பர் போட்டு மறைக்கப்பட்டிருந்தது. அம்மாவை பார்த்தேன்.


"பழக்கத்துல திரும்ப திரும்ப வரும்டா. பேப்பர் போட்டு மறைச்சி அடச்சிட்டா இனிமே வராதில்ல.. அதான்"


சொல்லியவர் முகத்தில் அதே அமைதி இருந்தது.
Title: Re: சொப்பனசுந்தரி
Post by: Anu on September 21, 2012, 11:53:49 AM

காதல் கதை மட்டும் தான் எழுத தெரியுமானு கேட்ட அனு அக்காவுக்காக இது :)
----------------------------------------------------------------------------------------------
"பழக்கத்துல திரும்ப திரும்ப வரும்டா. பேப்பர் போட்டு மறைச்சி அடச்சிட்டா இனிமே வராதில்ல.. அதான்"


சொல்லியவர் முகத்தில் அதே அமைதி இருந்தது.
haha gotham.
nice touching story. ammaavoda andha amaithiku artham
varuthama kooda irukalaam.
thirumba thirumba piriyaradhu kastama irundhu irukalam ...
aama thaane..
Title: Re: சொப்பனசுந்தரி
Post by: Gotham on September 21, 2012, 12:23:11 PM
Enna vena eduthukkalaam. enna thaan purakite paasamaarunthaalum veeta asingapaduthuthe. atha control panrathukaa kooda irukalaam. :)
Title: Re: சொப்பனசுந்தரி
Post by: Global Angel on September 21, 2012, 01:19:51 PM
எனகென்னமோ ... அம்மா அப்பாவுக்குள் புரியாத சில மனவேறுபாடுகள் இருக்கலாம் ..வீட்டு தலைவியின் சிறிய சந்தோசங்கள்  மன அழுத்தங்கள் .. ஏமாற்றங்கள் ... தனக்குள்ளே சமாதானம் ஆகிகொள்ளும் தனி திறமைகள்  இவற்றை காட்டும் ஒரு கதையாகவே அமைந்திருப்பதாக தோன்றுகின்றது .. சிறந்த கதை கோதம்
Title: Re: சொப்பனசுந்தரி
Post by: Gotham on September 21, 2012, 01:30:56 PM
இதுல எல்லாத்தையும் ஒபன் எண்ட்டாக தான் விட்டுருக்கேன். அம்மா அப்பானு இல்லே. புறாவுக்கு பேர் வச்ச அம்மா, அதை சுத்திய விஷயம். கதைன்னு பெரிசா கிடையாது. ஆனாலும் இதுல அவங்கவங்க மனநிலைக்கு தக்கமாதிரி நிறைய அர்த்தங்கள ஏற்படுத்திக்க முடியும். :)


அம்மா புறாவுக்கு பேர் வச்சது மட்டும் உண்மை. மத்ததெல்லாம் கற்பனை.


பின்னூட்டத்திற்கு நன்றி ஏஞ்சல்.
Title: Re: சொப்பனசுந்தரி
Post by: ஸ்ருதி on September 23, 2012, 09:26:20 AM
கௌதம்,
ரொம்ப நல்ல இருக்கு இந்த கதை..

எங்க வீட்டில் கட்டிய குருவி கூடு தான் நினைவுக்கு வருகிறது..எங்கள் வீடு சமையல் அறையின் பரணையில் குருவி கூடு அழகாய் கட்டி இருந்தது...முதலில் பார்த்த போது எனக்கு பயம்,. அம்மாவிடம் சொன்னதும் குருவி கூட்டை கலைப்பது பாவம் அப்டின்னு சொல்லி பயமுறுத்திட்டாங்க.. குருவி கொஞ்சு அழகா இருக்கும்...3  குருவிகள்...

காலையில் விடிந்ததும் எங்கள் வீடு ஜன்னல் எப்போது திறந்து விடுவோம் என்று சமையல் அறையை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கும்...ஜன்னல் திறந்ததும் கம்பிக்கு இடையே அழகாய் பறந்து செல்லும்...நான் உள்ள போனதும் கத்தும்,, இரு இரு ஜன்னலை திறக்கிறேனு சொல்லிட்டே திறப்பேன்...

உங்கள் கதையில் உங்க அம்மா சொப்பன சுந்தரின்னு சொல்லி அதனுடன் பேசினதை படிக்கும் போது எனக்கு என் நினைவு வந்திருச்சு..நம்மை அறியாமல் அதுங்க கூட பேச ஆரம்பிட்சிருவோம் அது நிஜமான உண்மை. நாங்க வீடு மாறுவதற்கு முன் எங்க குருவிகள் காணாம போச்சு...கடைசியாக பரணையில் பார்த்த போது வைக்கோல் மட்டும் தான் இருந்துச்சு... :'( :'(

நல்ல கதை..நன்றிகள்  :)
Title: Re: சொப்பனசுந்தரி
Post by: Gotham on September 23, 2012, 09:50:49 AM
Haha


Pazhaya ninaivugalai kilappi vittuduchaa? Pinnotathiruku nandri
Title: Re: சொப்பனசுந்தரி
Post by: பவித்ரா on October 28, 2012, 01:07:21 PM
naan title paarthutu padikama irunthuten go appurama paarthal kathai alaga iruku
Title: Re: சொப்பனசுந்தரி
Post by: Gotham on October 29, 2012, 09:12:19 AM
Haha  Thanx pavithra.


avlo thappana titleaa athu ?  8)