FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on September 19, 2012, 08:13:30 AM

Title: ஒரு தற்கொலை
Post by: Anu on September 19, 2012, 08:13:30 AM
விதைக்கப்பட்டோ அல்லது
வேண்டாமென எறியப்பட்டோ...
தன்னையே விதையாக்கி
பூமித்தாயின் புழுக்கத்தை தாங்கி..

சுவாசிக்க காற்று தேடி
பூமி பிளந்து புதிதாய் முளைவிட்டு
சூரியனின் சூட்டிலே கண் விழித்து
பனித்துளியிலே பசியாறி...

எவர் காலிலும் மிதி படாமல்
எவை வாய்க்கும் உணவாகாமல்
வரப்போரம் வாழ்க்கைப் பட்டு
வேலிக்குள் சிறைப்பட்டு...

நீர் தேடி வேர்பாய்ச்சி
நிலத்திற்குள் நரம்புகள் இறுக்கி
காற்று ஆடிய நடனத்திற்கு
காதலோடு இசைந்தாடி...

வளர்ந்து வாலிபமாகி
வண்டுக்கடி தாங்கி
உதிர்ந்த பாளையை உரமாக்கி
எஞ்சிய பாளைக்கு உயிர் கொடுத்து

பிஞ்சாக பிரசவித்து
திருடிக்குடித்த நீரைக்கொண்டு
திரட்சியான இளநீர் ஆக்கி
சந்தைக்கனுப்பி காத்திருந்த தென்னையிடம்

மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனியழகில்
தங்கள் தாகம் தீர்க்கும்
தறிகெட்ட தலைமுறையால்...

நாகரீக நரகத்து வீதியோரம்
விலைபோகாத
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது...

மனம் ஒடிந்து மட்டைகளை இழந்து
குலை நடுங்க குரும்பைகளை உதிர்த்து
அடி வயிற்று வேர் அனைத்தையும் அறுத்து
ஆடிக் காற்றின் துணையோடு அமரராகிப் போனது...


எழுதியது ஈரோடு கதிர்
Title: Re: ஒரு தற்கொலை
Post by: Global Angel on September 21, 2012, 01:37:57 PM
கலாச்சாரத்தின் தற்கொலை அருமை அனுமா பகிர்வுக்கு நன்றிகள்
Title: Re: ஒரு தற்கொலை
Post by: Anu on September 21, 2012, 01:40:59 PM
கலாச்சாரத்தின் தற்கொலை அருமை அனுமா பகிர்வுக்கு நன்றிகள்
paaraattiyamaiku nandri rose dear