FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: thamilan on June 06, 2012, 02:00:30 PM
-
ஒரு சிற்றூரில் ஓர் எளிய மனிதன் வாழ்ந்து வந்தான்.
அவன் ஒரு அப்பாவி. எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான்.
அந்த ஊரார் அவனை முட்டாள் என நினைத்தார்கள். அவன் பேச்சை யாரும் பொருட்படுத்துவது இல்லை.
அதனால் அவன் மனம் வருந்தினான்.
ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார்.
அவன் அந்த துறவியிடம் சென்றான்.
"ஐயா, இந்த ஊரில் எவரும் என்னை மதிப்பது இல்லை. எல்லோரும் என்னை முட்டாள் என்று நினைக்கிறார்கள். நான் எதை சொன்னாலும் சிரிக்கிறார்கள். சொல்லத் தொடங்குமுன்னே சிரிக்கிறார்கள். அதனால் என்னால் எதும் சொல்ல முடியவில்லை.இவர்களுடன் பழக முடிவதில்லை. நான் ஊரை விட்டு எப்படி தனித்திருப்பது? நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். என் பிரச்சனை தீர நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்" என வேண்டினான்.
துறவி "உன் பிரச்சனை தீர சுலபமான வழி இருக்கிறது. இனி யாரும் எது சொன்னாலும் மறு. எதிர்த்துப் பேசு. எதையும் ஏற்றுக் கொள்ளாதே. எவனாவது இன்று ஞாயிற்றுக் கிழமை என்று சொன்னால், யார் சொன்னது, உன்னால் நிரூபிக்க முடியுமா? என்று கேள். யாராவது மனிதன் நல்லவன் என்று சொன்னால், மனிதன் எவ்வளவு அயோக்கியத்தனம் பண்ணுகிறான். அவனா நல்லவன்? என்று கேள். கடவுள் இருக்கிறான் என்று சொன்னால் நீ இல்லை என்று சொல். இல்லை என்று சொன்னால் இருக்கிறான் என்று சொல். யார் எதை சொன்னாலும் மறுத்துப் பேசு. நிரூபிக்கச் சொல்." என்றார்.
அவன் "யாராவது நிரூபித்து விட்டால்" என்று கேட்டான்.
துறவி சிரித்தார். " யாரும் நிரூபிக்க முடியாது. பிரபஞ்சம் மர்மமானது. வாழ்க்கையும் மர்மமானது. இதில் யாரும் எதையும் நிரூபிக்க முடியாது. பயப்படாதே." என்று சொன்னார்.
அவன் துறவி சொன்னபடி நடக்கத் தொடங்கினான். யார் எதை சொன்னாலும் மறுத்தான். நிரூபிக்கச் சொல்லி வாதாடினான்.
யாரும் அவனிடம் பேச முடியவில்லை. ஊரார் " இவன் இவ்வலவு பெரிய அறிவாளி என்பதை நான் இத்தனை நாளாக அறியாமல் இருந்தோமே", என் பேசத் தொடங்கினர்.
ஊரில் அவனுக்கு மரியாதை கூடத் தொடங்கியது.
இது ஒரு ரஸ்ய எழுத்தாளர் எழுதிய கதை.
வெள்ளத்தோடு போபவன் கவனத்தை கவர்வதில்லை. எதிர் நீச்சல் அடிப்பவனே கவனத்தை கவர்கிறான்.
சிலர் மற்றவர் கவனத்தை கவர்வதற்காகவே அதை எடுத்தாலும் எதிர்த்து பேசுவார்கள்.
இன்னும் சிலர் தாங்கள் அறிவாளிகள் என்று காட்டிக் கொள்வதற்காகவே எல்லாவற்றையும் மறுத்து பேசுவார்கள்.
இன்னும் சிலர் தங்களுக்கு கீழே இருப்பவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால் அது தங்களுக்கு இழுக்கு என்று நினைத்து மறுப்பார்கள்.
அதனால் தொண்டன் உண்மை சொன்னாலும் மறுக்கும் தலைவர்கள் உண்டு.
மாணவர்கள் சரியாக சொன்னாலும் பிழை என மறுக்கும் ஆசிரியர்களும் உண்டு.
மனைவி சரியான கருத்தை சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாத கணவர்களும் உண்டு.
எந்தக் கருத்தாக இருந்தாலும் இரண்டு பக்கமும் பேச இடம் இருக்கும்.
மதம் மனிதனுக்குத் தேவையா இல்லையா என்றால் இல்லை என்றும் வாதாடலாம். தேவை என்றும் வாதாடலாம். இரண்டு பக்கமும் வாதங்கள் இருக்கும்.
பிரபஞ்சம் புதிரானது. அதில் வாழ்க்கை புதிரானது. எனவே இதில் எதையும் இதுதான், இப்படித்தான் என உறுதியாக சொல்ல முடியாது.
மேலும் பிரபஞ்சம் முரண்களால் ஆனது. எனவே அதற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும்.
எனவே எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்து கேள்வி கேட்பதில் நன்மையும் இருக்கிறது.
எதையும் அப்படியே ஏற்றுக் கொள்பவன் உண்மையை அறிய மாட்டான். உண்மையை அறிய எதையும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
அதற்காக எல்லாவற்றையும் எதிர்த்து கேட்பதே வேலையாக இருக்கக் கூடாது.
கேள்வி கேட்பதன் நோக்கமே விடையை அறிந்து கொள்ளத்தான்.
எவனாவது உண்மை என்ற பெயரில் பொய்யை நமக்கு கொடுத்து விட முடியும். சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டால் பொய்யை உண்மை என்றே நாம் ஏற்றுக் கொள்வேம்.
கருத்துக்கள் அழகாக இருக்கிறது என்பதற்காக எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் உண்மை அழகாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.
எதையும் ஏன் எதற்காக என்று கேளுங்கள். அப்படி கேட்டதால் தான் சிலை வடிக்கும் சிற்பியாக இருந்த சாக்கிரடீஸ் சிந்தனை சிற்பியாக மாறினான்.