FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: Dharshini on July 31, 2011, 08:24:37 PM

Title: :பருப்பு ரசம்
Post by: Dharshini on July 31, 2011, 08:24:37 PM
சுடச்சுட மணக்கும் ரசத்தை உள்ளங்கையில் ஊற்றிக் குடிக்கையிலோ, சாதத்துடன் கலந்து சாப்பிடுகையிலோ கிடைக்கும் சுகானுபவம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். நம் தென்னிந்தியாவின் பிரசித்திக்குப் பேர் பெற்ற பல காரணங்களில் ரசமும் ஒன்று அல்லவா! ஜுரம் வருவதுபோல இருந்தாலும் சரி, ஜுரம் வந்து மீண்டு எழுகையிலும் சரி, ஜலதோஷம் பிடித்தாலும், தொண்டை கமறினாலும் சுடச்சுட ரசத்தை சேர்த்து பரிமாறி, ரசம் எல்லாவற்றையும் சரியாக்கும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்து விட்டிருப்பதை தென்னிந்தியர் பலரும் மறுக்க மாட்டார்கள் தானே......

தேவையான பொருட்கள்:

புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம் - 3
ரசப்பொடி - 1 டீ ஸ்பூன்
துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1/4 டீ ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்துமல்லித் தழை - தேவையான அளவு

செய்முறை:

* புளியை சிறிது தண்ணீ­ருடன் கொதிக்க விட்டு சற்று ஆறியதும் கையால் நன்கு கசக்கி ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறை எடுத்துக்கொள்ளவும்.

* புளிச்சாறுடன் சிறிது தண்ணீ­ர், ரசப்பொடி, உப்பு சேர்த்து புளி நெடி மற்றும் ரசப்பொடி நெடி அடங்க அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* பிறகு பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து மேலும் ஒரு கொதி விடவும்.

* நல்ல பழமாக உள்ள தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் புளி நீருடன் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

* துவரம் பருப்பை மஞ்சள்தூள், தண்­ணீர் சேர்த்து குக்கரில் வைத்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

* பிறகு துவரம் பருப்பு மற்றும் நீரை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து நடுநடுவே கரண்டியால் கலந்து விடவும்.

* ரசம் நுரைத்துப் பொங்கி வருகையில் அடுப்பை அணைத்து தாளித்து விட்டால் பருப்பு ரசம் தயார்.

* பரிமாறுகையில் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: புதுப்புளி மற்றும் நாட்டுத் தக்காளி உபயோகித்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.