FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Oonjal on July 01, 2026, 12:20:43 PM
-
(https://i.postimg.cc/Hk4T2YCT/2ec1eb08-626e-4609-a9c2-50db3d2a42a2.png)
Oh Butterfly 🦋
காலையில் கண் விழிக்கும்போதே இன்று விடுமுறை நாள் மெதுவாக வேலைகளை தொடங்கலாம் என்று மனதில் ஓடியது. கையில் காபியுடன் கதவைத் திறந்து வெளியே வந்தால் மழையின் வாசம் மனதை குளிர செய்தது. ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலை இல்லை என்று நினைத்துக் கொண்டே தோட்டத்தை நோக்கி நடை போட்டன கால்கள்.
மழைத்துளிகள் ரோஜாக்களின் இதழில் முத்தமிட்டு நிற்பதை கண்டு ரசிக்கும் போதே ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து பறப்பதை கண்டேன். கண்களில் ரசனையுடன் உன்னை கண்டால் மட்டும் என் கண்களில் ஒரு மின்னல் வருவது ஏனோ என்று பட்டாம்பூச்சியை பார்த்து கேட்டேன். நான் சொன்னதை புரிந்து என்னை பார்த்து சிரிப்பதைப் போல் வீர்ர்ர்ர்னு அங்கும் எங்கும் வேகமாக பறந்தது.
வானவில்லின் அனைத்து நிறங்களையும் உனக்குள் கொண்டு அழகிய சிறு குழந்தையாய் என் கண் முன்னால் மிதந்து கொண்டிருந்தாய்.
தோட்டத்தின் அமைதியில் காற்றின் திசைக்கேப்ப பறந்து திரியும் அழகைக் காணவே கண் கொள்ளா கட்சியாக இருந்தது. உன்னை பார்க்கும் போது நானும் ஒரு பட்டாம்பூச்சியாக மாறிவிட வேண்டும் என்று என் மனம் ஆசையில் துடிக்கிறது.
என் மனத் தோட்டத்தில் நீ ஒரு பூச்சி அல்ல. இயற்கையின் மௌன கவிதை. பட்டாம்பூச்சியே உன்னை ரசிக்கும் ஒவ்வொரு முறையும் வார்த்தைகளில் வடிக்க இயலா மகிழ்ச்சியை எனக்கு தருகிறாய். என் தோட்ட ரோஜாக்கள் ஒவ்வொன்றும் உன்னை கண்டு புன்னகைப்பதை கண்டாயா சிறு பட்டாம்பூச்சியே. ஒரு ரோஜாவிலிருந்து மற்றொரு ரோஜாவுக்கு தேன் எடுக்க பறக்கும் உன்னைக் கண்டபோது என் மனதிலும் சிறகுகள் முளைத்தது போல் உணர்ந்தேன். நீ சுதந்திரமாய் பறப்பதை ரசித்தப்படியே நிற்கத்தான் என் மனம் விரும்பியது.
இன்று என் தோட்டம் மிக அழகாக தெரிய காரணம் பல வர்ண ரோஜாக்கள் மட்டுமல்ல ரோஜாக்களின் மீது வந்து அமர்ந்த நீயே. என் ரோஜா தோட்டத்தில் பட்டாம்பூச்சி மட்டும் பறக்கவில்லை என் மனமும் கூட சேர்ந்து பறந்தது. நீ எந்த ரோஜாவையும் காயப்படுத்த வில்லை. ரோஜா இதழ்களையும் உதிர்க்கவில்லை. மென்மையாக ரோஜாக்களை முத்தமிடுவது போல் தொட்டு தொட்டு பறந்தாய்.
சிறிது நேரத்தில் என் மனதை தொட்டு அழகிய நினைவுகளை தந்து விட்டு வானத்தை நோக்கி பறந்தது அந்த பட்டாம்பூச்சி. நானும் எனது வேலைகளை தொடங்க வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.
-
பட்டாம்பூச்சி கவிதை அருமை
தொடர்ந்து எழுதுங்கள் சகோ
உங்கள் கவிதை படித்ததும் எனக்கு
என் கிறுக்கல் நியாபகம் வந்தது
அழகான மாலை வேளையில்
பள்ளி முடிந்து வந்து வீட்டின்
முற்றத்தில் அமர்ந்த வேளையில்
என் மடியில் வந்தமர்ந்த
அழகான உயிர் நீ
வண்ணம் பல கொண்டிருக்கிறாய்
நீ பல மனங்கள்
கொள்ளை கொண்டிருக்கிறாய்
சிறகு விரித்து நீ பறக்கையில்
உன் பின்னே பறக்குமே என்
இரு கண்கள்
தொட்டாலே ஒட்டிக்கொள்ளும்
என் கைகளில் உன் வண்ணங்கள்
பேசாமலே என் மனதில்
ஒட்டிக்கொண்ட சிறு கள்ளி நீ
பட்டம் போல் என் மனது உன் பின்னால்
பறப்பதால் தானோ
உன் பெயர்
பட்டாம்பூச்சி