FTC Forum

Friends Tamil Chat FM => நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் => Topic started by: Forum on April 01, 2026, 02:01:13 PM

Title: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Forum on April 01, 2026, 02:01:13 PM
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-006

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“ மறக்க முடியாத ஆசிரியர்  ”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Oonjal on April 02, 2026, 10:16:25 PM
பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஆசிரியர்கள் என்றாலே வெறுப்பு தான் என் மனதில். சிறு வயதில் திட்டுவதும் அடிப்பதும் சேட்டை பண்ணினால் வெளியே அனுப்புவதும் தான் என் நினைவில் இருக்கு.

அந்த வயதில் நானும் ஆசிரியர்களை புரிந்து கொண்டது இல்லை. அவர்கள் எப்படி என்னை அடிக்கலாம் நான் அங்கே போகமாட்டேன் வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறேன்.

 என்னோட அப்பா தான் ஆசிரியர்கள் உன்னோட எதிரி இல்லை உன்னை நல்வழியில் நடத்ததான் நினைப்பர். அப்பாவை யாராவது இப்படி திட்டினால் உன் மனது கஷ்டபடாதா அதுபோல தானே ஆசிரியர்களும் என்று புரிய வைத்தார்.

 பள்ளி படிப்பை முடித்தேன். இனி படி படி என்று தொல்லை பண்ண மாட்டார்கள் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தே கல்லூரியில் காலெடுத்து வைத்தேன்.

 முதல் நாளே HOD mam என் அப்பா பெயரை சொல்லி அவங்க பொண்ணு யாரு என்று கேட்கும்போது நான் எழும்பி நின்றேன். உன்னோட அப்பா எனக்கு friend தான் நல்லா படிச்சி அவர் பெயரை காப்பாற்று என்று சொன்னார். கடுப்போடு வீட்டிற்கு சென்று அப்பாவிடம் சண்டை போட்டேன். நீ அரியர் இல்லாமல் பாஸ்சானாலே போதுமென்றார்.

 சீனியர்ஸ் என்னை பார்த்தால் பக்கத்து காலேஜ் HOD sir மகள் என்று பேச வருவர். நான் போகும் போதும் வரும் போதும் கைகாட்டி அவர்களுக்குள் பேசுவர். அப்பாவினால் எனக்கு கிடைத்த மதிப்பை அன்றுதான் முதல் முறை பார்த்தேன். சீனியர்ஸ் நிறைய பேர் அவரிடம் tution படிப்பவர்களே. சார் நடத்தும் போது பாடங்கள் ஈசியா புரியும் என்று பலர் சொல்லி கேட்டிருக்கேன். நான் ஒரு நாள் கூட அவரிடம் பாடங்களில் சந்தேகம் கேட்டது இல்லை.

1st செமஸ்டரில் அவர் பாடத்தில் மட்டும் மார்க் கம்மியாக எடுத்தேன். நான் சொல்லி தருகிறேன்  என்றவரிடம் கஷ்டமான பாடத்தில் பாஸானதே பெரிது வீட்டிலும் படி என்று தொல்லை பண்ணாதிங்க என்று ஓடி விட்டேன். வீட்டில் பேசும் நேரங்களில் எனக்கே தெரியாமல் அவர் subjectஐ என் மனதில் ஏற்றினார். கஷ்டமான subject என்று நான் ஒதுக்கி வைத்ததை நல்ல மார்க் எடுத்து பாஸ்சாக வைத்தார்.

 ஆசிரியர் தினத்தில் கை நிறைய பேனா சாக்லேட் புத்தகம் என்றுதான் வீட்டுக்கு வருவார். அந்த
சாக்லேட்களை சாப்பிடும்போது அதன் மதிப்பு தெரியவில்லை.  அழகிய பேனாக்களை எல்லாம் நான் எடுத்து கொள்வேன். அன்று அதனை ஒரு பரிசு பொருளாக மட்டுமே பார்த்தேன். இன்று இதை எழுதும்போது என் தந்தையின் திறமை மீது மாணவர்கள் கொண்ட மதிப்பை உணர்கிறேன்.

 என் வாழ்க்கையில் எத்தனையோ ஆசிரியர்கள் வந்து சென்றாலும் இந்த  தலைப்பை பார்த்ததும் என் மனதில் வந்தது என் அப்பா மட்டுமே.

தன் மகள் முதலிடத்தில் வர வேண்டும் என்று ஒருநாளும் கட்டாயபடுத்தியது இல்லை. ஒரு தோழனாக தட்டி கொடுத்தே என்னை காலேஜ் முடிக்க வைத்தார்.

எங்க கிராமத்தில் எங்கள் வீட்டை காலேஜ் வாத்தியார் வீடு என்றுதான் சொல்லுவார்கள். அவரிடம் ஒரு வார்த்தை கேட்டால் சரியாக இருக்கும் என்று சொல்லுவர். ஆசிரியராக இருந்த அவர் சரியான முடிவு சொல்லுவார் என்ற அவர்களின் நம்பிக்கையை இன்று புரிந்து கொண்டேன்.

 ஆசிரியர் பணியில் ஓய்வு பெற்றாலும் இன்னும் அவர் subject ல் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்.

அப்பாவாக என் மனதில் இருந்தவரை ஒரு ஆசிரியராக அவர் நினைவுகளை மீட்டி பார்க்க வாய்ப்பு கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' program கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Title: Re: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Sadham on April 02, 2026, 10:19:09 PM


எனது சொந்த ஊரில்  நான் படித்த நியாபகங்கள்

 6th stz படிக்கும் போது புதிய ஆசிரியை வருகை

இப்போது போல அப்போதும் சேட்டை செய்யும் மாணவன்
நான்..

அருண்னும் நானும்  கிளோஸ் நண்பர்கள்

அருண் என்னிடம் டேய் ரஹ்மத்துல்லா  இன்னைக்கு புது, டீச்சர் வராங்களாம் சொல்ல..
 நான் அப்படியா!

ஹ்ம்ம்... பார்போம் யாரு நமக்கு டீச்சர் ஆ  வராங்கனு சொன்னேன்..

Good morning சொன்னபடி டீச்சர் கிளாஸ் ரூம்க்கு வந்தாங்க...
 
உடனே எல்லா  ஸ்டுடென்ட்ஸ்ம்
எழுந்து good morning teacher சொன்னோம்..
 எனக்கு ஆச்சர்யம்,,!!

இந்த அக்கா நம்ம வீட்டு   பக்கத்துல பார்த்த மாதிரி இருக்கு என்று நான் யோசித்தேன்..
 
என்  நண்பனிடம் டேய் அருண் என் வீட்டு பக்கத்துல  4வீடு தள்ளி இருக்காங்க இந்த அக்கா சொன்னேன்...

நண்பன் அருண்  வேகமா எழுந்து  டீச்சர் நீங்க இவன் வீட்டு பக்கத்துல இருக்கீங்களாம்னு சொல்லிட்டான்..

நான் அவன் சொன்ன உடனேயே study table la தலைய வச்சு மறைந்த மாதிரி இருந்தேன் ..

டேய் என்ன டா இப்டி உடனே டீச்சர் ட்ட  போட்டு குடுத்துட்ட கேட்டேன்..

அவன் உன்னை தான் டீச்சர் பார்க்குறாங்க அங்க பதில் சொல்லுனு சிரிப்போட உக்காந்து விழுந்து விழுந்து சிரிக்கிறன்...

எனக்கும் ஒன்னும் புரியல அப்படியே எழுந்தேன்..

டீச்சரின் பெயர் தன லட்சுமி..

தனம் அக்கா உங்களை எனக்கும் தெரியும் சொல்ல..

டீச்சர்.. அப்படியா இங்க வா சொல்ல..

நான் டீச்சர் table கிட்ட போனேன்

டீச்சர்..
எப்படி தெரியும் கேட்க..

உடனே எல்லா மாணவர்களும் சிரிக்கிறாங்க...

டீச்சர்.. Silent silent னு  sonna சில நிமிடம் கழித்து எல்லா மாணவர்களும் அமைதியா இருந்தாங்க....

டீச்சர்...
நீ சொல்லு எப்படி தெரியும்

நான் தனம் அக்கா என்ன தெரியலையா...

 டீச்சர் தெரியல சொல்லிட்டாங்க..

டீச்சர் யாரும் சும்மா சும்மா அவனை பார்த்து சிரிக்க கூடாது சொன்னாங்க...

எனக்கு ஒருபுறம் அழுகை வேற வர ஆரபிச்சுருச்சு..

அப்படியே study table la. தலையை மறச்சு  கண்ணை துடைத்தேன்..

டீச்சர் எல்லா மாணவர்கள் பெயரையும் கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க..

என்னை தவிர மற்ற எல்லாரும்  தன் பெயர்களை சொன்னார்கள் மாணவர்கள்...
 
டீச்சர்..
 அருண்னை பார்த்து உன் நண்பன் பேரை சொல்ல சொல்லு. சொன்னாங்க..

எனக்கு மனசு கஷ்டமா இருக்கு..
மனசுக்குள்ள நானே பேசுறேன்..
 என்ன டா ரஹ்மத்துல்லா வ. தெரியலனு சொல்லிட்டாங்க
அருண் டேய் எழுந்து பேரை சொல்லுனு சொன்னான்...

நானும் எழுந்தேன்
அக்கா மை நேம் இஸ் ரஹ்மத்துல்லா  சொன்னேன்...

டீச்சர்.. உனக்கு கொழுப்பா திரும்ப திரும்ப அக்கா சொல்லற சொன்னாங்க...

நான் வேகமா இல்லை டீச்சர்..மை நேம் இஸ் ரஹ்மத்துல்லா  சொன்னேன்..

டீச்சர்...
 இப்போ நீ குட் பாய் னு சொன்னாங்க...

அப்போ தான் எனக்கு தெரிந்தது  பொது இடத்தில்...

யாரையும் அப்படி கூப்பிட கூடாது என்று தெரிந்து கொண்டேன்..

டீச்சர் தமிழ் பாடம் மற்றும் 6th std எங்க கிளாஸ் டீச்சர்
எங்களுக்கு..

டீச்சர்.. கிளாஸ் முடிந்து போகும் போது

மாணவர்களிடம்..
ரஹ்மத்துல்லா என் வீட்டு பக்கத்துல தான் இருக்கான்..
சொன்ன உடனே எனக்கு எண்ணற்ட்ற மகிழ்ச்சி..

அந்த தனம் டீச்சர்ரை இன்று அல்ல எப்பொழுதும் மறக்க மாட்டேன்..

எழுத்தும் & கல்வி அறிவித்தவன் இறைவனுக்கு சமம்..
 என்று பெரியோர்கள் சொல்வது போல்

தனம் டீச்சர் எல்லா மாணவர்களுக்கும்..

நல்ல கல்வியை சொல்லி தந்தாங்க..

இன்றும் எனது சொந்த ஊரான
திண்டுக்கல் (dindugal)
 நான் எப்போதெல்லாம் போறேண்ணோ அப்போதெல்லாம்..
தனம் அக்கா மற்றும்  அவங்க குடும்பத்தினரை
சந்தித்து பேசிட்டு தான் வருவோம்....

நானும் என் குடும்பதிணறும்..
Title: Re: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Yazhini on April 02, 2026, 10:22:00 PM
எனக்கு சின்ன வயசுல இருந்தே maths ரொம்ப பிடிக்கும்.... காரணம் class ல கவனிச்சாலே போதும் தனியா நிறைய படிக்க வேண்டியது இல்ல... அதனாலேயே எல்லா maths டீச்சரும் ரொம்ப பிடிக்கும்...

     இந்த வரிசையில சேராமா ... என் பேச்சு, எண்ணம், செயல்ல பல மாற்றத்த ஏற்படுத்துனது என் தமிழ் ஐயா தான்...

     9 ஆம் வகுப்பு படிக்கும் போது தான் ரமணன் ஐயா எனக்கு தமிழ் ஆசிரியராக வந்தார். முறுக்கு மீசை, கம்பீர நடை, தெளிவான பேச்சு, எப்போதும் வேட்டி சட்டை, மாணவர்களை கையாளுவதில் அலாதி நேர்த்தி. பேசவே தெரியாத மாணவனையும் தெள்ள தெளிவாக பேச செய்யும் ஞான செருக்கு...

      பொதுவாக பாடத்தை மட்டும் எடுக்கும் ஆசியர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர். வாரத்திற்கு இரு தொடர்ச்சியான பாடவேளைகளில் தமிழ் இலக்கிய மன்றம்... அதில் பட்டிமன்றம், கவிதை படைப்பு, பொது தலைப்பில் பேசுவது என்று தமிழின் சுவையை மாணவர்களை ருசிக்க வைத்தவர்... என்னை முதல் கவிதை எழுத வைத்ததும் என் தமிழ் ஆசானே...

       வகுப்பில் அனைவர் முன்னிலையில் பேச வைத்தவர். தமிழ் உச்சரிப்பை நெறி படுத்தியவர். எண்ணங்களை எழுத்துகளாய் மாற்ற கற்று கொடுத்தவர். பாட புத்தகங்களைத் தவிர்த்து பிற புத்தகங்களை வாசிக்க பழக்கியவர். தமிழ் இலக்கணத்தைப் புரிந்து கற்க செய்தவர். தமிழுக்கே உரித்தான கம்பீரத்தை போதித்தவர்

       தமிழ் வகுப்பு என்றால் நாங்க ஆங்கிலம் கலவாத தமிழ்ல தான் பேசியே ஆகணும்.... மீறி பேசிட்டா ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் 100 திருக்குறள் எழுதனும்... நா 500 திருக்குறள் வரை ஒரு தடவ எழுதியிருக்கேன்... பாடம் எடுக்கும் போது கொஞ்சம் கவனம் சிதறுதல் வந்தா கூட அவ்வளவு தான்.... திருக்குறள் எழுதனும்... இந்த கடினமான பயிற்சியின் பலனை இன்று பெறும் போதுதான் அருமை புரிகிறது.

        ஒவ்வொரு தமிழ் வகுப்பு ஆரம்பிக்கும் போதும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு மூன்று செயல்பாடுகள் உண்டு.

1.  செய்தி வாசிப்பு- இது பார்த்து படிக்கிறது இல்ல.... காலையில செய்தி பார்த்து எழுதிட்டு, அத பார்க்காம வாசிக்கணும் .... அப்போ தெரியாது உண்மையாக செய்தி வாசிக்குறவங்க பார்த்து வாசிக்குறாங்கன்னு.

2. திருக்குறள் - கண்டிப்பா பாட புத்தகத்துல இருக்குற  திருக்குறள் சொல்ல கூடாது. முதல் திருக்குறள் புத்தகம் வாங்கியது அப்போது தான்.

3. இன்று ஒரு தகவல் - fm அ முதல் முறையா என்னை கேட்க வைத்தது... தினமும் காலையில 7 மணிக்கு வெறும் 5 நிமிடம் தான் அந்த நிகழ்ச்சி. அதுக்கு 6.30 கே (நடு ராத்திரி) எழுந்து குறிப்பு எடுக்க தயாராகிடனும்..

    கடின பயிற்சி தான் ஆனாலும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை. தமிழை  நகைச்சுவயோடும் கற்பிக்கும் சிறந்த ஆசான் எங்கள் தமிழ் ஐயா.... ஒரே ஒரு ஆண்டு மட்டும் தான் ரமணன் ஐயாவிடம் பயிலும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது... ஆனால் அந்த ஒரு வருடத்துலேயே பல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.

       தமிழைக் கொண்டு எங்களை செதுக்கிய சிற்பி ரமணன் ஐயா... என்றும் என்னால் மறக்க முடியாத, மறக்க கூடாத அரும்பெரும் ஆசான்...
Title: Re: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Thenmozhi on April 02, 2026, 10:23:24 PM
    என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆசிரியர் என்று சொன்னால் அது என் அன்பான அம்மா தான்.அம்மா  என் முதல் குரு.குழந்தைப்பருவத்தில் "அம்மா சொல்லு" "அப்பா சொல்லு " "அண்ணா சொல்லு" என   எனக்கு தாய்மொழி தமிழ் சொல்லித்தர ஆரம்பித்தாங்க.நான் மழலைமொழியில் தமிழ் பேசுவதை முதன்முறையாக கேட்டு இரசித்து புன்னகை பூத்திட்ட குரு அம்மாதான்.

  எங்கள் பாடசாலையில் ஆங்கில மொழிக்கல்வியே.இருந்தும் இடைவிடாது அம்மா கூறுவார் "தமிழ் மொழியை மதிக்கனும் மறக்ககூடாதுன்னு".குழந்தைப்பருவத்தில் தமிழ்மொழியில் தாலாட்டுப்பாடி என்னை தூங்கவைப்பார்.தமிழ் இலக்கியக் கதைகள், புராணக் கதைகள் என்று கூறிக்கிட்டே இருப்பாங்க.

    அம்மா ஸ்ரீலங்காவில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்திருந்தாங்க.எனக்கு தமிழ் எழுத்துக்கள் கற்றுத் தரும் போது நான் சொன்னது "அம்மா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது எங்க டீச்சருக்குத்தான் எல்லாம் தெரியும்".அப்போது அம்மா கூறுவாங்க "நான் எவ்வளவு பிள்ளைகளுக்கு படிப்பித்தேன்.என் பிள்ளை என்னைக்கேட்டு படிக்கவில்லை என்று ".அப்போ "ஹாஹா ஹாஹா"ன்னு சிரிப்பேன் அம்மா டீச்சரா இருந்தாங்களாம் என்று.

  "என்கிட்ட கேட்டு படிக்கிறாள் இல்லை" என்று சொல்லி அம்மா என்னை தமிழ் பாடசாலையில் சேர்த்துவிட்டார்.ஒவ்வொரு சனிக்கிழமை தவறாது பாடசாலைக்கு செல்வேன்.அங்கே தமிழ்ஆசிரியர் தமிழ் எழுத்துக்களை எழுதவைத்தார்.நான் அழகாக எழுதுவதைப் பார்த்து "யார் உனக்கு சொல்லிக் கொடுத்தாங்க "அப்படின்னு கேட்டாங்க.நானும் பெருமிதத்துடன் எங்க அம்மா என்று சொன்னேன்.தமிழ் ஆசிரியர் என்னைப் பாராட்டினார்.

   அம்மா என்னை அழைத்துச்செல்ல பாட சாலைக்கு வரும் போது, தமிழ் ஆசிரியர் கூறினார் "உங்கமகள் நல்லா எழுதுறாங்க" என்று.அம்மா பதிலளிப்பதற்கு முன்னதாக நானே முந்திக்கிட்டு சொன்னேன் "எங்க அம்மா தமிழ் டீச்சர்தான் என்று".அப்படியா என்று ஆசிரியர் கேட்க அம்மா கண்கள் ஆனந்தக் கண்ணீரில் மிதந்தன.

    ஒருநாள் தமிழ் பாடசாலையில் கவிதை போட்டி இடம்பெற்றது.அம்மாவிடம் கேட்டு எதுவும் கற்றுக்கிட்டு போகவில்லை.என்னோட நண்பர்கள் எல்லாரும் மனனம் செய்துவிட்டு வந்திருந்தாங்க.அதைக் கேட்டு என்மனதில் ஒரு பதற்றம்.நானும் அம்மாவைக் கேட்டு ரெடி பண்ணிட்டு வந்திருக்கலாம்.. என் மனதில் எண்ணஅலைகள்..
கவிதைக்கு வழங்கப்பட்ட தலைப்பு "அன்பு".
எனக்குத் தெரிந்த கவிவரிகளில் எழுதினேன்.தயக்கத்தில் அம்மாவிடம் எதுவும் கூறவில்லை.அக்கவிதைக்கு எனக்கு முதலிடம் கிடைத்தது.அப்போது தான் புரிந்து கொண்டேன் அம்மா சொன்ன தமிழ்மொழியின் பெருமை.

   என் அண்ணாவுக்கு தமிழ் கற்பதில் ஆர்வம் குறைவு.அம்மா புத்தகம் முழுவதும் வாசித்து தமிழ் சொல்லிக் கொடுத்துட்டு இருப்பாங்க.அண்ணா டிவி பார்த்துகிட்டு இருப்பாங்க .அம்மா நடுவுல கேள்வி கேட்பாங்க அண்ணா கிரகிக்கிறானா? என்று பார்ப்பதற்காக.அண்ணா பதில் கூற மாட்டான். அதற்கான பதிலை நான் உடனே கூறுவேன்.அண்ணாக்கு அடியும் எனக்கு பாராட்டும் கிடைக்கும்.இதைப் பார்த்து அப்பா சொல்லுவாங்க "என்னோட  பொண்ணு படிக்குது உன்பையன் படிக்கிறான் இல்லன்னு".அம்மாக்கு இது வேற கோபத்தை கொண்டு வரும்.எனக்கு இதெல்லாம் பார்க்க சந்தோசமாக இருக்கும்.

   அம்மா கொடுத்த தமிழ் அறிவும், ஊக்கமும் தான் என்னை தமிழ் மொழியில் டிப்ளோமோ கற்று முடிக்க வைத்தது.தமிழில் நன்றாக பேச வைத்தது.தமிழ் நிகழ்வுகளில் பங்குபெற வைத்தது.அம்மா தன் சிரமம் பார்க்காமல் தமிழ் மொழிப் போட்டிகளில் என்னை கலந்து கொள்ள வைப்பாங்க.இப்படி ஒரு தமிழ் குரு எனக்கு அமைந்தது பெருமையே..

   அம்மா எனக்கு சமய விழுமியங்கள்,தமிழ் கலாச்சாரம்,வாழ்க்கைத் தத்துவங்கள் சொல்லிக் கொடுத்த அன்பான ஆசான்.அம்மா சொல்லிக் கொடுத்த தமிழ்தான் இன்று என்னை ftcயில் இவ்வளவு தமிழ் பேச உத்வேகமாக இருக்கின்றது.அன்னையும் நீயே!அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளியைத் தந்த என் ஆசானும் நீயே!

   உன்னை என் வாழ்க்கையில் "மறக்க முடியாத ஆசிரியர்" என்று நினைவு கூறுவதில் பெருமை கொள்கின்றாள் உங்கள் "அன்பு மகள்" "சிறந்த தமிழ்மாணவி" தேன்மொழி..

Title: Re: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Different on April 02, 2026, 10:29:03 PM
பிடித்த ஆசிரியர் பற்றி சொல்லனும்னா...

 எனக்கு அப்போ 8 வயசு இருக்கும். அவங்க மத்தவங்கள மாதிரி வெறும் பாடம் நடத்த மாட்டாங்க. அவங்க நாடகமும் சொல்லி கொடுப்பாங்க. எனக்கு இந்த ஆசிரியர முதல பிடிக்கவே பிடிக்காது ஏன்னா எல்லோர் முன்னாடியும் பேச பயம், யார்கிட்டேயும் பேசவும் மாட்டேன். ரொம்ப silent பொண்ணு நா..ஆனா விதி எனக்கு அந்த ஆசிரியர் கிடைக்கணும் ன்னு இருந்திருக்கு. அவங்க காலைல பாடமும் மதியம் நாடகமும் கத்து தந்தாங்க.  ஒரு 6 கதை கொடுத்தாங்க. ஒவ்வொரு கதை வரும் போதும் யாரு என்ன character வேணும் ன்னு கேட்டாங்க. ஒவ்வொரு student ம் இது வேணும் அது வேணும் ன்னு கேட்பாங்க. நாலாவது கதைல நா எதுவும் எடுக்கலையான்னு கேட்டு ஒரு கேரக்டர் கொடுத்தாங்க.

கொஞ்ச நாள் பிறகு ஒரு மதியம் எல்லா கதையும் படிச்சுட்டு இருந்தோம்.  நா இருந்த கதையில நிறைய கெட்ட வார்த்த இருந்துச்சு ன்னு ஆசிரியர் கவனிசாங்க. படிக்க படிக்க சரியா வரலான்னு அந்த கதைய வேணாம்னு எடுத்துட்டாங்க. எல்லோரும் சம்மதிசுடாங்க. என்னால வாய திறக்க முடியல.அவங்க சாதாரணமாக பேசுனாலே சத்தமா பேசுவாங்க, அதனாலேயே ஆசிரியர் திட்டுவாங்களோ ன்னு ஒன்னுமே சொல்லல. நா எந்த கதையிலும் இல்லன்னு யாரும் கவனிக்கல நானும் சொல்லல. யார்கிட்டையும் அதிகம் நா பேச மாட்டேன் அதனால என் மேல யாருக்கும் சந்தேகமும் வரல.

ஆனா ஒரு நாள் break time ல ரெண்டு பேரு எந்த கதையில நா இருக்கேன்னு கேட்டாங்க. தெரிஞ்சுட்டே தான் கேட்டாங்களா ன்னு தெரியல. நா பதில் சொல்ல முடியாம இருக்க break உம் முடிஞ்சு class க்கு போய்டோம். திடீர்னு class ல அவங்க ரெண்டு பேரும் நா பொத்தி பொத்தி வச்ச ரகசியத்த சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, நடுங்கிருச்சி.
அவளவு தான் என் கதை முடிஞ்சுடுச்சு ன்னு நினைச்சேன். ஆனா என்ன teacher திட்டவே இல்ல. அது எனக்கு பெரிய அதிர்ச்சி எப்பவுமே திட்டுறவங்க திட்டலன்னு. வந்து சொல்லிருக்கலாமல.... அப்படின்னு அன்போடு தான் சொன்னாங்க. அப்போதுல இருந்து தான் எனக்கு அந்த டீச்சர பிடிச்சுது.

எனக்கு புதுசா ஒன்னுக்கு ரெண்டு கதைல நடிக்கிற போல character கொடுத்தாங்க. எடுத்த உடனே நா தான் முதல பேசணும்... எனக்கு அது ஒரு சந்தோஷம். பிடிக்காத ஒரு விஷயத்த பிடிச்சு பண்ணேன்.

இதுல நா ரெண்டு பாடம் கத்துக்கிட்டேன்.
ஒண்ணு யாருமே கெட்டவங்க இல்லன்னு புரிஞ்சுது. Teacher கிட்ட சொன்னவங்க எனக்கு friends ஆகிட்டாங்க.

இன்னொன்னு எனக்கு இருந்த பயம் போச்சு. என்ன இருந்தாலும் இப்போ எல்லோர் முன்னாடியும் பேசுனா அடுத்த நிமிஷம் எல்லோரும் கடந்து போயிடுவாங்க. அதுக்கு ஏன் பயப்படனும் ன்னு ஒரு தைரியம். அந்த வயசுக்கு அந்த புரிதல கத்து தந்த என் ஆசிரியருக்கு நன்றி சொல்லிக்கிறேன்...
Title: Re: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Sethu on April 02, 2026, 10:50:54 PM
ஹாய் எஃப் டி சி நண்பர்களே இன்றைக்கு பார்த்தீங்கன்னா நம்ம நெஞ்சம் மறப்பதில்லை தலைப்புல எனக்கு பிடித்த ஆசிரியர் யார் என்று கேட்டால் நான் என்னோட மனைவி என்று தான் சொல்லுவேன். ஒரு மனிதனுக்கு கடவுள் என்று பார்த்தால் "மாதா பிதா குரு தெய்வம்மென்று சொல்லுவாங்க" அந்த அடிப்படையில் பார்த்தால் மனிதனின் வாழ்க்கையில் ஆசிரியர் ஒரு முக்கிய பங்காக இருக்காங்க.

    அந்த வகையில என்னோட மனைவியும் ஆசிரியர் என்பதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. அவங்க பள்ளிக்கூடத்தில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. என் மனைவி சொல்வது என்னவென்றால் "ஆசிரியர் என்பவர் கல்வியை கற்றுக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல ஒவ்வொரு மாணவருக்கும் ஒழுக்கம் என்பது அடிப்படை தேவை .அதன் பின்பு தான் கல்வி " என்பதை தெளிவாக சொல்லுவாங்க.

    அடுத்தபடியாக அவங்க சொல்வது என்னவென்றால் "நேரம் தவறாமை "என்பது நம் வாழ்க்கையில் ஒரு முக்கிபங்கு என நான் உணர்த்துவேன் மாணவர்களுக்கு. இதன் மூலம் மாணவர்களுக்கு பிற்காலத்தில் அலுவலகத்தில் குறித்த நேரத்தில் மணிக்குச் சென்று பணியை முடிக்க இந்த பழக்கம் உதவுகிறது என்று என்னிடம் கூறுவார் .இதையே எனக்கும் என் குழந்தைக்கும் எடுத்துக் கூறுவார் .

   பிறகு மாணவர்களிடம் ரொம்ப அன்பாகவும், மரியாதையாகவும் பழக வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். பிறகு ஆசிரியர்கள் கல்வி மற்றும் கற்றுக் கொடுக்காமல் ,வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து வாழ்வியல் பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவேன்என கூறுவார் .

   வகுப்பில் பலவீனமான மாணவர்களை படிக்க வைப்பதற்காக தெளிவான நோட்ஸ்களை இரவு ,பகல் பாராமல் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று பலவீனமான மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவார் .அது மட்டுமா எனது குழந்தைக்கு தெளிவாக பாடங்களை கற்றுக் கொடுப்பார் .

   வரலாறு பாடம் யாருக்கு கடினமாக உள்ளது என்பதை அறிந்து அவர்களுக்கு மிகச் சிறப்பாக தெளிவு படுத்துவார். பள்ளியில் நடக்கும் பாட்டு போட்டி ,பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகிய போட்டியில் கலந்து கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துவார். ஏதாவது ஒரு மாணவர் பங்கேற்கவில்லை என்றால் அவர்களை ஊக்கப்படுத்தி அவரை போட்டிகளில் பங்கேற்க வைப்பது எனது மனைவியின் சிறப்பம்சம் .

   இதுபோல பள்ளிகளிலும் சரி வீட்டிலும் சரி இத்தகைய அறிவையும் ஒழுக்கத்தையும் கொடுத்த "எனது மனைவியே எனக்கு பிடித்த ஆசிரியர்" .இப்படி ஒரு வாய்ப்பு அளித்த எப் டி சி team kum நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராம்க்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி🙏🙏🙏
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Madhurangi on April 03, 2026, 12:23:31 AM
Grade 6-ல நான் படிச்ச girls school-ல இருந்து திடீர்னு mixed school-க்கு எங்க அப்பா transfer வாங்கி கூட்டிட்டு போனார். மனசு முழுக்க பயத்தோடவும் ஏகப்பட்ட கலக்கத்தோடவும் புது கிளாஸ்க்குள்ள போன எனக்கு, அப்பா கையை பிடிச்சு கூட்டிட்டு போய் அறிமுகப்படுத்துன அந்த முதல் முகம் தான் - என் அன்பரசி டீச்சர்.

அழுத்தமான குரல், அழகான நேர்த்தியான சேலை, நீண்ட கூந்தல், அமைதியான முகம்னு எங்க அம்மாவோட 'cloning' மாதிரி இருந்த டீச்சரை பார்த்ததுமே எனக்கு 'பச்சக்குனு' பிடிச்சுருச்சு.

இயல்பாவே எனக்கு கதை, நாடகம்னா ரொம்ப பிடிக்கும். அதனால தானோ என்னவோ பாடங்களை கூட கதை மாதிரி சுவாரசியமா சொல்ற டீச்சர், என் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டாங்க. அவங்க சொல்லிக்கொடுத்த விதம் எங்க மனசுல தமிழை மட்டும் விதைக்கல; பெண்ணியம், நம்ம மண்ணோட வரலாறு, புராணங்கள்னு எல்லாத்தையும் சேர்த்து தான் விதைச்சது. இப்ப நினைச்சாலும், அன்னைக்கு ரெட்டை பின்னல் போட்டுக்கிட்டு, கிளாஸ் ரூம்ல back bench-ல உட்கார்ந்து கண் இமைக்காம அவங்க சொல்ற சீறாப்புராணம், பாஞ்சாலி சபதம், ஷாஹினா கிழவி கதைகளை கேட்ட அந்த காலங்கள் அப்படியே மனக்கண் முன்னாடி வருது.

பாட நேரத்துல மட்டும் இல்லாம இலக்கண போட்டி, பேச்சு போட்டி, விபுலாநந்தர் தினம், தமிழ் தினம்னு ஏதாவது ஒரு சாக்குல ஸ்கூல் முடிஞ்ச அப்புறம் கூட டீச்சரோட நிறைய டைம் spend பண்ணுவேன். Weekend-ல டியூஷன் கிளாஸ்னு அவங்க வீட்ல தான் நானும் என் Friends  துவாரகா, யாதவனும் 'டேரா' போடுவோம். அவங்களோட மகன்களான ரெண்டு அன்பான தம்பிகள், அப்புறம் தமிழ்ல பெரிய ஆளுமையான அவங்க கணவர் (Sir), இவங்களோட நாங்க செலவழிச்ச அந்த தருணங்கள் ரொம்பவே நெருக்கமானது.

அவங்க என்கிட்டயும் என் நண்பர்கள்கிட்டயும் வெறும் ஆசிரியரா மட்டும் பழகல. எங்க திறமைகளை கண்டுபிடிச்சு அதை encourage பண்ற வழிகாட்டியா, என்ன பிரச்சனைனாலும் தயங்காம பேசக்கூடிய ஒரு தோழியா, வாழ்க்கையில சில இழப்புகள்ல நான் உடைஞ்சு நின்னப்போ அம்மாவோட இடத்துல இருந்து என்னை தாங்குன அரணா அவங்க இருந்திருக்காங்க. இன்னைக்கு நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா கூடி அரட்டை அடிச்சாலும், அதுல ஒரு தடவையாவது டீச்சரை பத்தின பேச்சு கண்டிப்பா வந்துடும்.

சொந்த பிள்ளைங்க மாதிரி எங்களோட வெற்றிகளை கொண்டாடுறதுலயும், எங்க ஆக்கங்களை பாராட்டுறதுலயும் அவங்களுக்கு நிகர் அவங்க தான். ஒரு தடவை நான் எழுதின 'சிவாஜி' பட விமர்சனத்தை, ஜூனியர் கிளாஸ் பசங்களுக்கெல்லாம் காட்டி பாராட்டுனாங்கனு பிற்காலத்துல அந்த பசங்க சொல்ல கேள்விப்பட்டப்போ எனக்கு ரொம்பவே ஆச்சரியமா, நெகிழ்ச்சியா இருந்தது.

வேலை காரணமா அவங்க வெளிநாட்டுக்கு போயிருந்தாலும், இன்னைக்கு அவங்ககிட்ட போன்ல பேசும்போதும் அதே "செல்லம்", "குட்டி"னு தான் கூப்பிடுவாங்க. அவங்ககிட்ட பேசும்போது தான் புரியுது, எனக்குள்ள இன்னும் அந்த ஸ்கூல் பொண்ணு அப்படியே வாழ்ந்துட்டு இருக்கான்னு!

மொத்தத்துல, பக்கத்துல இல்லனாலும் எங்க நினைவுகள்ல நீங்க வாழ்ந்துட்டு தான் இருக்கீங்க. என் டீச்சர் அன்புக்கு மட்டும் இல்ல, அறிவுக்கும் அழகுக்கும் கூட அரசி தான். எப்ப "உங்களுக்கு பிடிச்ச teacher யாரு?"னு கேட்டாலும், யோசிக்காம நான் சொல்ற ஒரே பேரு - அன்பரசி டீச்சர் .



Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Luminous on April 03, 2026, 10:31:34 AM
மறக்க முடியாத teacherனா அது என் LKG tuition காலத்து கலா மிஸ் தான். LKG ல இருந்து 9th வரை நான் almost lifeல பாதி tuitionல தான் இருந்தேன்.

Schoolக்கு ஒரு tuition, வீட்டுக்கிட்ட இன்னொரு tuition, இப்படி rendu place. Reason பெரியதா எதுவும் இல்ல, நான் கொஞ்சம் vaalu nu, “engayachum adachi vachikanum” nu mummy, paati plan 😄

அந்த tuition lifeல கலா மிஸ் ரொம்ப special. Avanga graduate இல்ல, ஆனா LKG இருந்து 12th வரைக்கும் students எல்லாரையும் super ah handle பண்ணுவாங்க. Strict ஆ இருப்பாங்க… ஆனா அதுக்குள்ளே romba careவும் இருக்கும்.

Fridayனா class இல்ல, handwriting practice மட்டும். என் handwriting decentஆ இருக்கு என்றா, அது mostly கலா மிஸ் credit தான். தவறு பண்ணா கண்டிப்பாங்க, ஆனா  எப்படி correct பண்ணணும் nu calmஆ சொல்லி குடுப்பாங்க.

நான் பேசுறதுல first rank 😅… அதனால sema adi vaangi இருக்கேன். ஆனாலும் பேசுறது குறையல 😂. அதுக்குத்தான் என்ன leader ஆ வைச்சாங்க. யாரு பேசுறாங்கனு note பண்ணி சொல்லணும்… ஆனா நான் “deal” பண்ணுவேன் 🤭 pen, chocolate, sticker குடுத்தா name எழுத மாட்டேன். Periya class pasanga கூட என்ன பார்த்தா bayapaduvanga… எனக்கு romba jolly 😄

Lateஆ போனா கூட scold பண்ணாம, “saptiya?” nu கேட்டு tiffin குடுப்பாங்க. அந்த care… இன்னும் மறக்க முடியல. Avanga veetu coffee 😍 இன்னும் taste நினைவுல இருக்கு.

Sundayல கூட tuition இருக்கும்… literally என் childhood பாதி அங்கே தான் போச்சு. Ayudha poojai வந்தா snacks, birthdayனா notebooks, pen, chocolates, gifts—எப்பவும் something special.

Avanga oru teacher மட்டும் இல்ல… konjam strict amma, konjam akka மாதிரி. Small kids கிட்ட romba softஆ பேசுவாங்க… பெரியவங்களையும் handle பண்ணுவாங்க.

Honestly சொல்லணும்னா, நான் இப்ப teaching professionல இருக்கேனா அதுக்கு main reason கலா மிஸ் தான். “Teacherனா இப்படித்தான் இருக்கணும்” nu எனக்கு first idea குடுத்தது அவங்க தான்.

இப்பவும் ரொம்ப miss பண்ணுறேன்… 💜
Avanga strictness, care, love… எல்லாமே இன்னும் mindல freshஆ இருக்கு.love youuuu💙🧡💜 KALA  akkaaaaaa🌹🌹🌹🌹
Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: NiYa on April 03, 2026, 01:49:11 PM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
தொகுப்பாளருக்கும் என் வணக்கம்
நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் இது என் முதல் பதிவு. அருமையான நிகழ்ச்சி .. தொகுப்பாளர்கள் திறமை அருமை .....
 
மறக்க முடியாத ஆசிரியர் என் வாழ்க்கையில் இந்த தலைப்பை வாசிக்கும் போது என் மனதுக்குள் வந்த முகம் நான் என் வாழ்வில் பார்த்த இரண்டாம் ஆண் தேவதை. அது என் பள்ளிக்காலத்தின் 6 ஆம் தரம் முதல் முதல் ஆண் ஆசிரியர் என் வாழ்க்கையில் புது அனுபவம் அது . அதுவும் அறிவியல் பாட ஆசிரியர் அவர்.

கடும் கோவக்கார் போல உருவம் , முறுக்கு மீசை , நரைத்த முடி , பருத்த உருவம் தான் ஆனாலும் யாரும் காண கனிவான இதயம் அவருக்கு . அது மட்டுமா அவருடைய மேற்சட்டை கசங்கி நான் பார்த்ததில்லை அவ்வளவு நேர்த்தியான மனுஷன் .

படிப்பில் எல்லாம் சரியாக இருக்கவேண்டும் . எழுதும் புத்தகங்கள் கூட நேர்த்தியாக இருக்கவேண்டும் ஒரு மடிப்பு இருந்தாலும் அதுக்கு அடி தான் விழும். உன்னால் என்ன முடியுமோ அதை நீ செய்ய வேணும் எப்போதும் நீ 100 மதிப்பெண்கள் பெறவேண்டும் எண்டு சொல்லவே மாட்டார். உன்னுடைய முழு முயற்சி செய் என்பது தான் அவர் வார்த்தை.

அவரது கையொப்பம் அழகான தமிழில் இருக்கும் இன்னும் எங்கள நினைவிருக்குறது அவரை பார்த்து தான் இன்றும் என் கையொப்பம் தமிழில் இருக்கிறது. நிறைய அடிகள் வாங்கி இருக்கான் ஆனாலும் அவர் மேல் ஒரு துளி கோவம் இல்லை .

இன்னும் நினைவிருக்கு ஒரு சம்பவம் ஒரு தடவை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் அதுவும் மதிப்பெண்கள் சம்மந்தமாக எப்பவும் என்னோட அம்மா வந்த என்னோட குறும்புத்தனம் தான் , மதிப்பெண்கள் தான் ஒரு குறையாக என்னோட ஆசிரியர் சொல்லுவாங்க . அம்மா உடனே அழுத்துடுவா அது அவங்களோட இயல்பு ஒரு தடவை சரியான குறைவான மதிப்பெண்கள் எனக்கு அப்போ அம்மா அழுத அப்போ சார் வந்து அழவேண்டும் அம்மா அவள் நல்ல வருவாள் நீக்க யோசிக்கவேண்டும் அவள் படிப்பாள் பாருங்க எண்டு சொன்னார். யாரும் அப்படி சொல்லி என்ன ஊக்கம் குடுத்தது  இல்லை. அந்த நாள் இன்னும் என் வாழ்க்கையில மறக்க முடியாது.

இப்படி அழகாக இருந்த நாட்கள் அது பிறகு 7 ஆம்  தரம் மாறும் போது சார் இல்லை. நிறைய வெறுமை அப்போ அப்போ அவர் போய்பார்த்துட்டு வருவான். அது எனக்கு ஒரு வழக்கம் ஆகிட்டு . சரியாக 6 மாதத்துக்கு பிறகு ஒரு செய்தி பாடசாலையில சார் எதோ ஆகிடும் வைத்தியசாலையில அனுமதிக்க பட்டதாக அறிந்தேன் . அடுத்த நாள் அந்த துக்க செய்தி . என் வாழ் நாள்ல நான் அழுத முதல் இறுதிசடங்கு அது . இன்னும் நினைவிருக்கு எங்க பாடசாலை அரங்கு ல அவரோட உடலை வைச்சிருந்தாக தாங்க  முடிய வேதனை ..

அவர் என்ன விட்டு போனாலும் அவர் சொல்லிக்கொடுத்த  எல்லாம் இன்னும் இருக்கு மனசுல .
 திரு . பிரான்சிஸ் சீவரத்தினம் இது தான் அவர் பேர்  சொல்லும் போதே ஒரு மன நெகிழ்ச்சி எனக்கு .
அவர் மாணவி நான் எண்றதுல எனக்கு நிறைய பெருமை

உங்களோட நல்ல மனதுக்கு நீங்க சொர்க்கத்துல தான் இருப்பிங்க sir அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ..

Title: Re: நெஞ்சம் மறப்பதில்லை-006 (மறக்க முடியாத ஆசிரியர் )
Post by: Ninja on April 04, 2026, 12:26:44 AM
எனக்கு பிடித்த ஆசிரியர்னு குறிப்பிட்ட ஒருத்தரை சொல்லவே முடியல என்னால, என் வாழ்க்கைல நான் கத்துக்கிட்ட பல வாழ்க்கை பாடங்களுக்கும், இப்போ நான் இருக்கிற நல்ல நிலைமைக்கும் காரணமான ஆசிரியர்கள் பல பேர் இருக்காங்க. எங்க ஸ்கூல் அக்மார்க் கேத்தலிக் கிரிஸ்டியன் ஸ்கூல். Father, Brother நிறைய பேர் இருப்பாங்க, அவங்களை சார்னுலாம் கூப்பிட கூடாது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பிரதர், சகாயராஜ் பிரதர் எனக்கு அறவே பிடிக்காத இயற்பியல் பாடத்தை ரொம்பவும் பிடிச்சு போற அளவுக்கு மாத்தினவர். நான் ஸ்கூல்லயும் இப்போ மாதிரி தான் ரொம்ப செல்லம் நிறைய டீச்சர்ஸ்கு (ஓவரா போறோமோ, போவோம் என்னா பண்ணிட போறாய்ங்க).

நானும் சகாயராஜ் பிரதர சுத்தி சுத்தி வருவேன் பிரதர் பிரதர்னு, இதென்ன, அதென்னா, இதெப்படி வேலை செய்யுது, இந்த பெண்டுலம்ம எனக்கு கொடுத்துருங்கன்னு நான் செய்யாத சேட்டைகள் கிடையாது. எங்களுக்கு அவர் தான் கிளாஸ் டீச்சர் வேற.

ஒரு ஆசிரியர் கிட்ட ஒருத்தர் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக்க முடியுமான்னு இப்போ யோசிச்சா ஆச்சரியமா இருக்கு, ஆனா அப்போ எனக்கு அந்த spaceஅ கொடுத்திருந்த ஆசிரியர் அவர். ஸ்கூல் டூர் போனப்போலாம் நாங்க நாலஞ்சு பேரு பஸ்ல அவர் மடியில படுத்து தூங்கிட்டு போனோம், அந்த அளவுக்கு எங்க எல்லார் கூடவும், ஆசிரியர் மாதிரி ரொம்ப கண்டிப்போட இல்லாம நண்பனை போல பழகினவர். அப்புறம் எங்க chain of schoolsயோட வேற ப்ராஞ்சுக்கு மாறிட்டாரு. இப்போ வரைக்கும் நான் பார்க்கனும் ஏக்கப்படுற ஆசிரியர் அவர்.

அடுத்ததா எங்க க்ளோரி மிஸ். தேவதை சார். ஒரு ஸ்டூடண்ட் நல்லா படிக்கலன்னா அதுக்கான உண்மையான காரணம் என்னனு ஆராய்ஞ்சு அதுக்கான தீர்வ கரக்ட்டா கண்டுபிடிச்சு சரி செய்ய கூடிய ஆசிரியர் அவங்க. லேட்டா வரோமா திட்டவே மாட்டாங்க. தனியா கூப்பிட்டு கேப்பாங்க வீட்ல எல்லாமே ஓகேவா ஒன்னும் பிரச்சனை இல்லை தானேன்னு. அந்த அக்கறை, கனிவு எல்லாம் நான் பார்த்து வியந்தது. எத்தனை டீச்சர்ஸ் கிட்ட, ஸ்ஸ்ஸ்ஸூ ஸ்ஸ்ஸூன்னு கைல மாத்தி மாத்தி அடிவாங்கிட்டு, திட்டு வாங்கிட்டு, கொட்டு வாங்கிட்டு இருந்திருப்போம். ஆனா ஸ்கேல்லோ குச்சியோ இல்லாம வர்ர ஒரே ஒரு மிஸ், க்ளோரி மிஸ் தான். ஆனா, ஒரு உண்மைய சொல்றேன், இப்போ வரைக்கும் கூட எனக்கெல்லாம் டீச்சர் வேலைக்கு போகனும்னு உள்ளுக்குள்ள ஓரமா ஒரு ஆசை இருக்கு, அதுக்கான அடித்தளம் இவங்களை மாதிரி ஒரு சில ஆசிரியர்கள் தான். அந்த அளவுக்கு நல்லவிதமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்காங்க.

அடுத்ததா, எங்க தமிழ் ஐயா அய்யப்பன். எங்க ஸ்கூல ஒரு விநோதமான ஸ்கூல், தமிழ் பீரியட் தவிர வேற எந்த பீரியட்ல ஒரு வார்த்தை தமிழ் வந்தாலும் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபா fine. ஆனா தமிழ் பீரியட்ல ஒரு வார்த்தை இங்கிலிஷ் வந்தாலும் 25 பைசா fine (அப்போ 25 பைசா புழக்கத்துல இருந்த காலத்துல ஸ்கூல் படிச்சேனான்னு ஆராய்ச்சி பண்ணாதீங்க). ஒரு ரூபாய்க்கு 25 பைசா தேவலாம் தான்னு அப்போ தான் பென்சில கொடு, நோட்ட கொடுன்னு வேணும்னே பேசி fineஅ வாங்கி கட்டிப்போம். ஆனா எங்க ஐயா இருக்காரே, இன்னைக்கு நான் தமிழ்ல இந்த அளவுக்காச்சும் கொஞ்சம் ஆர்வத்தோட இருக்கிறதுக்கு அடித்தளமே அவர் தான். இவ்வளவு புத்தகங்களை இன்னைக்கு நான் படிக்கிறேன்னா அன்னைக்கு அவர் எனக்கு உரைக்கிற மாதிரி சொல்லிக் கொடுத்த சங்க இலக்கியங்கள் தான் மிகப்பெரிய காரணம். தமிழ் மேல எனக்கு இருந்த ஆர்வத்தை எப்படி அவர் கண்டுபிடிச்சார்னே தெரியல. ஏன்னா எனக்குமே அப்போ தெரியாது எனக்கு இவ்வளவு ஆர்வம் இருக்குன்னு. ‘முத்தை தரு பத்தித் திரு’ பாட்டை மூணே மூணு முறை தான் எனக்கு பாடி காட்டினார். இன்னைக்கு வரைக்கும் அவர் குரலும், தமிழும், அந்த இனிமையும் ஒலிச்சிக்கிட்டே இருக்கு, அந்த பாடலையும் இப்ப வரைக்கும் நான் மறக்கல.

ஒவ்வொரு காலகட்டத்தில ஒவ்வொரு ஆசிரியர்கள் என்னோட வாழ்க்கைய சீர் படுத்தியிருக்காங்க, செம்மையாக்கி இருக்காங்க. நான் வாங்காத திட்டு, அடியெல்லாம் இல்ல ஆனா இன்னைக்கு வாழ்க்கைங்கிற ஆசான் கத்துக்கொடுக்கிற பாடங்களை பணிவோட, என் இடம் அறிஞ்சு கத்துகிட்டு, கடந்து போக உறுதுணையா இருக்கிறது இந்த ஆசிரியர்களோட அன்பும், கண்டிப்பும், வாழ்க்கையை கனிவோடு அணுக கத்துக் கொடுத்ததும் தான். இந்த தருணத்துல அத்தனை ஆசிரியர்களுக்கும் அன்பான நன்றிகளை தெரிவிச்சிக்கிறேன், இந்த பதிவை எழுத வாய்ப்பை கொடுத்த FTC எனும் ஆசானுக்கும் அன்பும் நன்றியும்.