FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: RajKumar on October 30, 2025, 03:39:44 PM

Title: மருத்துவம் பாத எரிச்சல்
Post by: RajKumar on October 30, 2025, 03:39:44 PM
*பாத எரிச்சல்..*

 பாத எரிச்சல் எதனால் ஏற்படுகிறது? காரணமும், எளிய தீர்வும்!*


நமது கால்களில் வரும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று பாத எரிச்சல். பாதங்களில் உள்ள நரம்புகள் சேதம் அடைவதால் பாத எரிச்சல் வரும்.


இதன் காரணமாக பாதங்களின் தோலில் எரிவது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதன் முதல் அறிகுறி, கால் விரல்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது. பிறகு, அந்தப் பகுதிகளில் உணர்ச்சி மெல்ல மெல்ல குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவை பாத எரிச்சலாக மாறும்.

பாத எரிச்சல் யாருக்கு வரும்?

உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகத்தால், பாத எரிச்சல் ஏற்படும். ஆகையால் பாத எரிச்சல் என்றதும், சர்க்கரை நோய் இருக்கும் என்று பயப்பட வேண்டாம். இரசாயனங்களால் உண்டாகும் அலர்ஜி, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் சிகிச்சைக்காக கீமோதெரபி எடுப்பது, முடக்கு வாதம் போன்ற பல காரணங்களாலும் பாத எரிச்சல் வரலாம்.


மற்ற சில காரணங்கள்

ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுவதாலும் பாத எரிச்சல் உண்டாகும்.

வைட்டமின் குறைபாடு இருந்தாலும் பாத எரிச்சல் ஏற்படும்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான நபர்களுக்கு, கால் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டு பாத எரிச்சல் உருவாகும்.


'ஹைப்போ தைராய்டிசம்' உள்ளவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவை மட்டும் கட்டுக்குள் வைத்தால் இதைத் தவிர்த்து விடலாம்.

ஃபோலேட் குறைபாடு மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பவர்களுக்கு இப்பிரச்னை வரும்.

ஆர்த்ரரைட்டிஸ் பிரச்னைகளால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதன் காரணமாக பாத எரிச்சல் வரலாம்.

பாத எரிச்சலை எப்படி குணப்படுத்தலாம்?

மருதாணியில் எலுமிச்சை சாற்றை சேர்த்து, நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசிவிட்டு, 30 நிமிடங்கள் கழித்து பாதத்தை சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறைந்து விடும்.



மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் உண்டாகும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. 2 தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து, எரிச்சல் உள்ள பாதங்களில் தடவி, பிறகு சிறிது நேரம் உலர வைத்து கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழையின் உள்ளிருக்கும் சதைப் பகுதியை பாதத்தில் தடவி, 1 மணி நேரம் கழித்து கழுவினால் எரிச்சல் தணிந்து விடும்.

தூங்குவதற்கு முன்பாக, வெந்நீரில் சிறிதளவு உப்பு கலந்து, 10 நிமிடங்கள் பாதத்தில் வைத்து எடுக்க வேண்டும். பின்னர், சுத்தமான தேங்காய் எண்ணெயை பாதத்தில் தடவினால் எரிச்சல் குறைந்து விடும்.

வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலம் பெறும். எனவே முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை, பால், தயிர், மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பாதத்தில் எரிச்சல் உண்டாவதில், நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.