FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 13, 2025, 08:36:18 AM

Title: ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதான்.. 🚜🚜🚜
Post by: MysteRy on September 13, 2025, 08:36:18 AM
(https://i.ibb.co/NgBfSbk0/547571023-122251659626037466-1980443363749977016-n.jpg) (https://imgbb.com/)

ஜேசிபி இயந்திரங்களை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஜேசிபி இயந்திரங்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன. அதிலும் இந்திய சாலைகளை எடுத்து கொண்டால், உங்களால் ஜேசிபி இயந்திரங்களை சர்வ சாதாரணமாக காண முடியும். கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு இடத்தில் ஜேசிபி இயந்திரம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்றால், அதனை வேடிக்கை பார்க்க இன்றளவும் இந்தியாவில் பெரும் கூட்டமே இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் பயங்கரமாக ட்ரெண்ட் ஆனது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும்.

ஆம், அவ்வளவு எளிதில் மறக்க கூடிய சம்பவமா அது? காண்ட்ராக்டர் நேசமணிக்கு தலையில் பலத்த அடிபட்டு அவர் ட்ரெண்ட் ஆகி கொண்டிருந்த அதே சமயத்தில் #JCBKiKhudayi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது. #JCBKiKhudayi என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? ஜேசிபி இயந்திரம் தோண்டி கொண்டிருக்கிறது என்பதுதான் இதற்கு பொருள்.

ஜேசிபி இயந்திரத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அன்பால், இந்தியாவில் #JCBKiKhudayi ஹேஷ்டேக்கும் பயங்கரமாக டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, ஜேசிபி இயந்திரம் ஏன்? மஞ்சள் நிறத்தில் இருக்கிறது? வேறு நிறமே இல்லையா என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? வாருங்கள் இனி உங்களின் அந்த சந்தேகத்திற்கு விடை காண்போம்.


ஆனால் அதற்கு முன்பு ஜேசிபி இயந்திரம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஜே.சி. பாம்ஃபோர்டு எக்ஸ்காவேட்டர்ஸ் லிமிடெட் (J.C. Bamford Excavators Limited) என்ற நிறுவனம்தான் சர்வதேச அளவில் சுருக்கமாக ஜேசிபி என அறியப்படுகிறது. இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும்.

கட்டுமானம், விவசாயம் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. எக்ஸ்காவேட்டர்கள், டிராக்டர்கள் மற்றும் டீசல் இன்ஜின்கள் உள்பட சுமார் 300 வகையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் தயாரித்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசிபி நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா உள்பட 150க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என உலகின் 4 கண்டங்களில், இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த 4 கண்டங்களில் இந்நிறுவனத்திற்கு சொந்தமாக 22 தொழிற்சாலைகள் உள்ளன.

உலகில் இதுபோன்ற முதல் இயந்திரம் ஜேசிபிதான். பெயர் எதுவும் சூட்டப்படாமல், கடந்த 1945ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் நிறுவனர் நீண்ட காலமாக இதற்கு பெயரை யோசித்து கொண்டே இருந்தார். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. இறுதியாக இந்நிறுவனத்தின் நிறுவனரின் பெயரே சூட்டப்பட்டது. அவரது பெயர் ஜோசப் சிரில் பாம்ஃபோர்டு (Joseph Cyril Bamford).

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்த முதல் தனியார் பிரிட்டீஷ் கம்பெனி ஜேசிபிதான். கடந்த 1945ம் ஆண்டில், ஜோசப் சிரில் பாம்ஃபோர்டு முதல் இயந்திரத்தை வடிவமைத்தார். டிப்பிங் டிரெய்லரான (லக்கேஜ் டிரெய்லர்) இது, போர் உபரி பாகங்களில் இருந்து கட்டமைக்கப்பட்டது.

இது அந்த சமயத்தில் மார்க்கெட்டில் 45 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது தற்போதைய நிலையில் பார்த்தால் 4 ஆயிரம் ரூபாய். உலகின் முதல் மற்றும் வேகமான ஸ்பீடு டிராக்டரான பாஸ்ட்ரேக்கை (Fastrac), கடந்த 1991ம் ஆண்டு ஜேசிபி நிறுவனம்தான் உருவாக்கியது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்கள்.

ஜேசிபி நிறுவனத்தை பற்றிய இந்த விஷயமும் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். கடந்த 1948ம் ஆண்டில், ஜேசிபி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் ஆறுதான். ஆனால் இன்று அந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஜேசிபி இயந்திரங்கள் வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில்தான் இருந்தன. ஆனால் பின் நாட்களில் அவர்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறி விட்டனர். இந்த நிறம் காரணமாக பகல் அல்லது இரவு என எந்நேரம் என்றாலும் ஜேசிபி இயந்திரம் பார்வைக்கு எளிதாக புலப்படும். இதுவே இந்த நிறத்திற்கான காரணம். இதன் மூலமாக கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒருவரால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.