FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 21, 2025, 07:37:14 PM
-
மீண்டும்
குழந்தையாய்
ஒரு நாள் கிடைத்தால்
எல்லோரையும்
மகிழ்விக்கும்
குழந்தையின் சிரிப்பை
அணிந்து கொள்வேன்
வீட்டின் வாசலில்
அரைப்படல் அடித்து
ஆனந்தமாய்
மிதிவண்டி ஓட்டுவேன்
கடற்கரையில்
வெயிலில் பளபளக்கும் மண்ணில்,
தண்ணீர் ஊற்றி
நண்பர்களோடும் ,
சகோதர்களோடும்
இணைந்து
கோபுர வீடு கட்டுவேன்
நாய்க்குட்டியுடன்
புழுதியில் ஓடி ஓடி விளையாடி
சட்டையில் மண் நிறைத்து
அம்மாவிடம்
செல்ல திட்டு வாங்க வேண்டும்
மழை வந்தால்
வழியே ஓடும் கால்வாயில்
காகிதக் கப்பலைச் செலுத்தி,
“பெரிய கடலுக்கு போனது” எனச் சொல்லும்
அந்த விசுவாசமும், கற்பனையும்
மீண்டும் ஒருமுறை அனுபவிக்க ஆசை
புத்தகத்தில்
மட்டைப்பந்து
நண்பர்களோடு
விளையாட வேண்டும்
வெள்ளைக் காகிதத்தில்
வர்ணங்களை ஊற்றி,
வானவில்லில் பூக்கள் வரைந்து
பிக்காஸோ க்கு சவால் விட ஆசை
பாட்டியின் அருகில்
அமர்ந்து மீண்டுமொருமுறை
ஏழுகடல் அழு மலை தாண்டி
இருக்கும் ராட்சசனின்
கதை கேட்க வேண்டும்
அம்மாவின் மடியில்
அவளின் கைகள்
என் தலை கோத
துயரம் கூட
உறங்க சென்றுவிடுமே
அந்நிமிடம்
விதைத்த மரங்கள்
இன்று பெரிதாகி விட்டன,
ஆனால்
என் ஆசைகள் மட்டும்
இன்னும்
குழந்தையாய் இருக்கவே
ஆசை கொள்கின்றன
****JOKER****
-
குழந்தையாய் இருக்கும் போது சீக்கிரம் வளர்ந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.இன்று மீண்டும் குழந்தையாக ஆசைப்படுகின்றோம்... அனைவரின் எண்ணத்தின் வெளிப்பாடு. அருமை 👏👏👏
-
மச்சி குழந்தைப் பருவத்தின் இனிமையை அழகாக நினைவூட்டுகிறது !
“காகிதக் கப்பலைச் செலுத்தி, பெரிய கடலுக்கு போனது” என்ற வரி
மிகவும் அழகாக மனதைத் தொடுகின்றன.
“விதைத்த மரங்கள் பெரிதாகி விட்டன, ஆனால் ஆசைகள் குழந்தையாய் இருக்கவே ஆசை”
இந்த வரிகள் வாழ்க்கையின் தூய்மையை உணர்த்துகின்றன.
இனிய கவிதைக்கு நன்றி ஜோக்கர் மச்சி ! ;D
-
பாட்டியின் அருகில்
அமர்ந்து மீண்டுமொருமுறை
ஏழுகடல் அழு மலை தாண்டி
இருக்கும் ராட்சசனின்
கதை கேட்க வேண்டும்
அதேதான்... அந்த நாள் ஞாபகம் ..அருமையான பதிவு 🌻🦋