FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on August 10, 2024, 03:36:55 PM
-
கட்டில் சுகம் கண்டு
கன்னியும் கழிந்த பின்னர்
தொட்டில் சொந்தமென்று
சொர்கமாய் எந்தன் கையில்
வந்தே அவதரிக்க
வலியதையும் மறந்த விட்டு
உள்ளங்கையில் ஏந்தி
அருந்தினேன் உன் அழகை
மாரில் பாலூட்டி
மடி மீதே தாலாட்டி
நேரம் காலமெதும்
நான் நோக்கி பார்க்காமல்
காலாய் உனக்கும் நான்
கை தூக்கி நடந்து கொண்டே
வேலாய் உன்னையுமே
நித்தமும் காத்தேனே
சற்றே வளர்ந்த பின்னே
சமுத்திரத்து முத்தெனவே
சிரிப்பை நீ உதிர்த்து
சிங்கார தமிழினிலே
உந்தன் மழலை மொழி
ஒரு பங்கும் மாறாமல்
அம்மா என்றழைக்க
அகமெல்லாம் குளிர்ந்ததடா
இன்னும் வளர்ந்துவிட்டே
எட்டு வைத்து நீ நடக்க
உந்தன் எதிர்காலம்
உன் கையில் தந்துவிட
நானும் பள்ளியிலே
கொண்டு உன்னை சேர்க்கையிலே
உள்ளமது வலிக்க
ஓங்கியே அழுதேனே
இன்றோ பதினைந்து
அகவையிலேயே இருக்கின்றாய்
எனினும் எனக்குமிங்கே
கை குழந்தை நீ என்றே
தோன்ற உன் கையை
இருக்கத்தான் பிடித்தபடி
செல்லும் என் வாழ்க்கை
முழுமைக்கும் செல்வேனே
கண்ணே கணியமுதே
எதற்கும் நீ அஞ்சாதே
தேனும் அமிர்தமுமே
உன்னையுமே மிஞ்சாதே
துன்பம் துயரமெல்லாம்
பறந்து விட பஞ்சாக
வாழ்வாய் வாழ்வாங்கு
நீயும் நந்நெஞ்சாக