FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 26, 2023, 08:42:42 PM

Title: ஒரு காத்திருப்பு !
Post by: joker on December 26, 2023, 08:42:42 PM
எங்கோ தூரத்தில்
ஜன்னல் கண்ணாடிக்குப் பின்னால்
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
பெண்ணின் இதயத்தில்
பாசி படர்ந்தது போல்

நிசப்தத்திற்கு
பயந்து வீசிய மெல்லிய காற்று
அவள் நெற்றியின்
வியர்வை துளிகளை
முத்தமிட்டது

இருட்டில்
யாரையோ தேடும்
பயந்த மான் போல
கண்கள் படபடக்க

வஞ்சம்,
துரோக
இழைகளை மறந்து
காதலின் துகள்களை
ஒன்றோடு ஒன்று
பிணைக்கிறாள்

வசந்த காலத்தின்
பிற்பகுதியை வரவேற்க
அவள் தயாரானபோது,
​​​​அவளுடைய கவனம்
எப்போதும் யாரோ
ஒருவரின்
காலடியில் இருந்தது.

இழந்த இளமையின்
எச்சங்களை
ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு
வயதானவளுக்கு வெளிச்சம்
கொட்டித் தீர்த்தது.

வழியும்
மூச்சுக்காற்றுகள்,
விழுந்த கண்ணீரைப்
சொந்தமாக்கி மறையும்போது
இருளில் பிறந்தவன்
ஏற்கனவே இருளில்
மறைந்திருந்தான்

வயது மூப்பினிலும்
ஆசை தீராதவளின்
ஆன்மா சொன்னது
துரோகத்தின் முடிவும்
ஒரு காத்திருப்பு தான்

***Joker***
Title: Re: ஒரு காத்திருப்பு !
Post by: joker on January 04, 2024, 04:06:10 PM
நதி
தன்னுடன் சேரும் வரை
கடல் காத்திருக்கிறது

ஒருபுறம்
கடலின்
கர்ஜனைக்காய்
காத்திருக்கிறது
நதி

இடையில்
எங்கிருந்தோ
இவையெல்லாம்
அறியாமல்
அலட்சியமாய் வரும்
காட்டாறு
கடலை
கலந்திட்டு
உரிமை கொண்டாடுகிறது

புன்னகையுடன்
துவங்கி
கண்ணீரில் முடியும்
எத்தனையோ
சினிமாக்களை
நினைவுபடுத்துகிறது
இவ் வாழ்வு

பல
துக்கங்கள்
மகிழ்வுகள்
புறக்கணிப்புகள்
எல்லாம்
கொடுத்ததற்கு
நன்றிகள்

எழுத்தால்
நான் அங்கீகரிக்க
பட்டிருக்கிறேன் எனில்
அதற்க்கு நம் காதலுக்கு
நன்றி

நாளைய
விடியல்
பிறக்கையில்
நன்மையே
பிறக்கட்டும்

***Joker***
Title: Re: ஒரு காத்திருப்பு !
Post by: joker on September 05, 2024, 09:08:05 PM
ஒரு முகம்
ஜெயகாந்தனையும்
பாலகுமாரனையும்
வாசிக்கையில்
மனதில் தோன்றிய
கதாநாயகியின் முகம்
எத்தனை ஒளிச்சித்திரங்கள்
பார்த்திடினும் கண்டிலேன் நான்

வாசிப்பு உங்களின்
கற்பனை திறனை
சிறகடித்து  பறந்திட
செய்துவிடும்

அப்படிதான் எனக்கு
அவள் முகம்

எத்தனை பேர்
என் வாழ்வில்
கடந்து சென்றிடினும்
அவளை காணா பொழுதுகள்
வெறுமையாகவே
உணர்கிறேன்

சொர்கத்தை பற்றி
படித்திருக்கிறேன்
கதைகளில் ஆனால்
வாழ்கிறேன்
நரகத்தில்

ஏங்குகிறேன்
மீண்டும்
உன் கொஞ்சல்களை கேட்க
உன் திட்டுக்களை வாங்க
உன் கையின் ஸ்பரிசத்தை உணர
உன் மடிமேல் தலை சாய்த்து ஆறுதல் தேட

காலம் 
அத்தனை முகங்களையும்
காலப்போக்கில்
வயதாக்கி
உரு மாற்றி
வைத்துவிடும்
ஆனால்
என் நினைவில்
இருக்கும் உன்
முகத்தை தவிர

மாற்றவியலா
இவ்வாழ்வின்
பாதிப்புகளிலிருந்து
மாற்ற முடியா
உன் நினைவுகளை
சுமந்த்திருக்கும் என் வாழ்வு
எத்தனை
பரிதாபத்திற்குரியது ?

கடல்தாண்டி
கண்டம் விட்டு
பறக்கும் பறவையின்
எதிர்பார்ப்பு
என்னவாக இருக்க கூடும் ?
ஓர் மரமோ ?
ஓர் பழமோ ?
ஓர் கூடோ ?
ஓர் துணையோ?

இல்லை இவ்வாழ்வை
எப்படி வாழ்ந்து தீர்ப்பது
என்ற கவலையோ ?

இப்படித்தான்
இவ்வாழ்வை
யாருக்காகவும்
சிலுவையில் ஏறவும்,
யாரையும்
சிலுவையில் ஏற்றவும்
செய்யாமல்
பலர் கேட்கும் கேள்விகளிலிருந்து
சிரித்து
கடக்கிறேன்

ஏனோ
காத்திருக்கிறேன்
முற்றுப்புள்ளிக்கு
காத்திருக்கும் வாக்கியம் போல


****JOKER****