FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 20, 2023, 09:03:12 PM

Title: கவலை..
Post by: Mr.BeaN on November 20, 2023, 09:03:12 PM
நேற்று போல் இன்று இல்லை
என்றுதான் நொந்து கொண்டு
காற்றையே பெரு மூச்சாக்கி
கவலையில் வாடுகின்றோம்

ஏற்ற இறக்கம் என்று
எல்லாமே மாறி மாறி
வாழ்விலே தோன்றும் ஆனால்
இறக்கததில் கவலை கொள்வோம்

தேற்றிட யாருமில்லை
என்று நாம் எண்ணிக்கொண்டே
மனதுமே ஆறிடாமல்
கவலையில் துவண்டு போவோம்

நாளையை எண்ணி நாமே
நமக்குள்ளே குழம்பிக்கொண்டு
இன்றைய நாளை நாமும்
கவலையில் கடத்திச் செல்வோம்

சொந்தமோ நட்போ நம்மை
சொற்களில் வாட்டினாலும்
நிந்தனை செய்வோர் பற்றி
எண்ணியே கவலை தோன்றும்

இப்படி நம்மில் என்றும்
எத்தனை கவலை உண்டு
எப்படி தீர்ப்போம் என்றே
சிந்தனை நம்மில் தோன்றும்

ஒன்றினை என்றும் நாமே
மனதிலே ஏற்றி கொள்வோம்
கவலையால் மட்டும் நம்மில்
எதுவுமே மாறிடாது

இடுக்கண் வருங்கால் நகுக
வள்ளுவன் வாக்கிற்க்கிணங்க
துன்பத்தை நாமும் கண்டே
என்றுமே துவளாதிருப்போம்

கலங்கிடும் கவலை நீக்க
பிறரிடம் வழிகள் தேடும்
மன நிலை நீக்கி நாமே
கவலையை நீக்குவோமே!!