FTC Forum

தமிழ்ப் பூங்கா => காலக்கண்ணாடி => Topic started by: Global Angel on April 11, 2012, 12:48:46 AM

Title: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 12:48:46 AM
இலங்கையின் வரலாறு


இலங்கையை ஆண்ட மன்னர்கள்  

எல்லாளன்

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் ஆவான். அதற்கான ஆதாரங்கள் உண்டு. உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக்கூறியுள்ளார்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 12:49:51 AM
வரலாறு

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்கு முரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

 

ஈழசேனன்

கி.மு 177 ஆம் ஆண்டு ஈழசேனன் (சேனன்) ,நாககுத்தன் (குத்திகன்) ஆகிய ஈழத்தமிழ் மன்னர்களால் அனுராதபுர அரியணை சூரத்தீசன் எனப்படும் சிங்கள மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அரியணையை இழந்த சூரத்தீசன் தப்பி ஓடினான். அரியணையை கைப்பற்றிய ஈழசேனன் தான் சைவன் எனினும் எந்த மதத்திற்கும் எதிரானாவனோ அல்லன் எனவும் தனது ஆட்சியில் மொழி,மத வேறுபாடில்லை. சேர்ந்தே உழைப்போம்; சேர்ந்தே உண்போம், என்றான். பெளத்த பிக்குகளும் அவனை ஆதரித்திருந்தனர். 22 வருடங்களின் முடிவில் கி.மு 155 ஆம் ஆண்டு தைமாதத்து வைகறை சிங்கள இளவல் அசேலனின் சேனை அனுராதபுரத்தினை கைப்பற்றிக்கொண்டது. அசேலன் என்பவன் சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான். நீண்ட கால ஆட்சியும் அனுராதபுரத்தில் நிலவிய அமைதியும் மன்னனைத் தன் படைகளை தளர்த்த வைத்திருந்ததே தோல்வியை தளுவ காரணமாகியது. ஆட்சி மாற்றம் தேவைப்படாது என்றே மன்னன் எண்ணியிருந்தான். ஆனால் அசேலனின் படையெடுப்பின் போது அனுராதபுரத்து சிங்கள மக்களும் பிக்குகளும் காட்டிய ஆதரவும் படைநடவடிக்கை மீதான விருப்பும் மன்னனை நிலைகுலைய வைத்தது. இவை திடீர் மாற்றமல்ல என்பதும் நீண்டகால சதி என்பதையும் மன்னன் புரிந்துகொண்டபோது காலம் கடந்திருந்தது. நாககுத்தன் உத்தரதேசத்தில். ஈழவூருக்கு செய்தியனுப்ப கால அவகாசமில்லை. மன்னனின் படையிலிருந்த சிங்கள வீரர்களெல்லாம் அசேலனின் பக்கம். இருபத்தியிரண்டு வருடகால ஆட்சியின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதை மன்னன் புரிந்துகொண்டான். கலவரமடைந்த வேளக்கார வீரரிடம் மன்னன் 'ஆட்சியென்பது இவ்வாறானதுதான். அதற்காக எதிரிகளுக்கு அஞ்சி இரகசியத்தை தூக்கிக் கொடுத்துவிட்டுப் பேடி போல ஓடிவிட முடியாது. வாளேந்திய கடைசி வீரன் இருக்கும் வரை எதிரியை எதிர்த்தே சாவோம்.' வேளக்கார வீரர்களின் தலைவன் மறுத்தான். 'நாங்கள் சம்மதமே, ஆனால் அரச வம்சம் அழிந்து விடக்கூடாது. இளவரசரையும், இளவரசியையும், மகாராணியையும் உடனடியாக ஈழவூருக்கு அனுப்பவேண்டும்' மன்னன் சம்மத்தித்தான். அரச வம்சம் காப்பாற்றப்பட்டது. மன்னனும் வீரர்களும் வீரகாவியம் படைத்தனர். மன்னனின் சிரசை கொய்த அசேலன் மூங்கில் கழியில் குத்தி கோட்டை வாசலில் வைக்க உத்தரவிட்டான்.

 

ஈழராஜா-(வவுனிக்குளம்)

செய்தியறிந்த நாககுத்தன் தன் சேனையுடன் அநுராதபுரம் சென்று தானும் மன்னன் வழியை தொடர்ந்தான். ஈழவூர் வந்த மாகாராணி பொன்னம்மைதேவி இளவரசர் எல்லாளன் எனப்படும் ஈழராஜாவையும் நாககுத்தனின் மகன் திக்கஜனையும் போர்க்கலைகள் கற்று வருவதற்காக சோழ நாட்டிற்கு அனுப்பி வைத்தார். சோழதேசத்தில் பலகலைகளையும் கற்ற இவ்விளவல்கள் கி.மு 145 ஆம் ஆண்டு ஈழவூர் திரும்பினர். நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்த தன் கணவனைக்கொன்று தமிழர்களை ஈழவூருக்கு துரத்தி விட்டதால் கோபமுற்றிருந்த மகாராணி பொன்னம்மைதேவியார் உத்தரதேசத்தில் பெரும் சைனியத்தை தயார்ப்படுத்தி வைத்திருந்தார். காலம் கனிந்தது. அநுராதபுர இராச்சியம் மீண்டும் தமிழர் வசமானது.

 

எல்லாளன் பற்றி மகாவம்சம்

எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப்பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது.எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் சயன அறயில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

 * எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திஸ்ஸவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.
 * பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது.
 * ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது.

 

எல்லாளனின் நீதி வழுவாமையைக் கூறமுயலும் இக்கதைகள் நம்பகமானவையல்ல. அவனது செங்கோலாட்சியைப்புலப்படுத்த மகாவம்சம் எடுத்துக் கொண்ட ஐதீகக்கதைகள் எனலாம். ஏனெனில் எல்லாளனின் மகன் இறுதிப்போரிலேயே வீரகாவியமானான் என்பதை மகாவம்சமே கூறுகின்றது. அவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்ததா, இல்லையா என்பதில் மகாவம்சமே முரண்பட்டு நிற்கின்றது. எனினும் மகாவம்சத்தின் இக்கதைகள் மகாவம்சம் எவ்வாறெல்லாம் திரித்து சாதகமாக்கி எழுதப்பட்டது என்பதற்கும் இவை சான்றாகின்றன.

 

மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். 'தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்' என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான்.


எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக விகாரைமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரைமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் 'எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்' என கூறுவதாக கூறப்பட்டுள்ளது.

 

விகாரைமகாதேவியும் எல்லாளனும்

கல்யாணி இராசதானியின் மன்னன் களனிதீசனின் மகளே மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. பின்னாளில் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாகிறாள். எல்லாளனின் வலுவான கோட்டையொன்றிற்கு பொறுப்பாகவிருந்த தளகர்த்தன் ஒருவனுடன் தன் உடலழகை காட்டி தவறான உறவுக்கு அழைத்துச்சென்று துட்டகாமினியின் சேனைகள் அக்கோட்டையை தாக்குவதற்கு வழி சமைத்துக்கொடுக்கிறாள். இதை மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது. இவ்வாறு பெண்களின் ஆடவர்களுடனான தவறான உறவுகளும் மன்னர்கள் பல திருமணங்கள் செய்வதையும் நியாயப்படுத்தி கூறும் மகாவம்சம் பெளத்த மக்களை ஆரம்பகாலம் முதலே தவறாக வழிநடத்தியுள்ளதெனலாம்.

உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான். பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற தன் ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான். திருமணத்தின் பின் துட்டகாமினியைக்கருவில் கொண்டிருந்த போது தன் கணவனிடம் மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

 * பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை
 * எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும்
 * அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும்

இந்த மசக்கை ஆசைகள் நிறைவேற்றப்பட்டன.


துட்டகாமினி

காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு 'வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்' என்றான். இவ்வாறு கருவிலிருந்தே இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும்சேனயுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். நீண்ட நாள் தொடர்ந்த போர் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சலிப்படைந்த துட்டகாமினி இறுதியில் வயது முதிர்ந்த நிலையிலிருந்த 'கிழப்புலி' எல்லாளனை தனிச்சமருக்கு வரும்படி வஞ்சக அழைப்பை விடுத்தான். எல்லாளனின் அமைச்சர்களோ 'உங்களின் தனிப்பட்ட வீரம், வெற்றி என்பவற்றுடன், தமிழ்க்குடி மக்களின் வீரம், வெற்றி, நல்வாழ்வு என்பனவற்றைத் தொடர்புபடுத்துவதால், இத்தனிச்சமர் தமிழ்க்குடி மக்களின் தோல்வியாக மாறிவிடும், மன்னா. வரலாறு உங்களை சிலவேளை மன்னிக்காது'. என்றனர். மன்னன் முகத்தில் வியப்பும் கவலையும் படர்ந்து பரவின. 'மக்களின் எதிர்காலத்தை நினைத்து தனிச்சமரை மறுப்பதா? அல்லது தமிழர் வீரத்திற்கேற்ப எதிரியின் அழைப்பை ஏற்று தனிச்சமர் புரிவதா?' மறு கணமே தெளிந்தான். மறுப்பதற்கு நாம் ஒன்றும் பேடிகளல்லர். கோட்டை வாயில் திறக்கப்பட்டது. இரு சேனைகளும் சூழ கிழப்புலியும் இனவாத சிங்கமும் போரிட்டன. போர் நீண்டது. எல்லாளனின் போர் வலிமை விகாரைமகாதேவியை திகைப்படைய வைத்தது. நிலைமையை புரிந்த விகாரைமகாதேவி கூட்டத்திலிருந்து வெளியே வந்து 'மகாராஜா... எலாரா...' எனக் கூக்குரலிட்டாள். குரல் வந்த பக்கம் எல்லாளன் திரும்பினான். 'என் மகன்... மகாராஜா' கூப்பிய கரங்கள் கூறின. திகைத்து நின்ற துட்டகாமினி மறுகணமே தன் தாயின் 'யுத்த தந்திரத்தை' புரிந்து கொண்டான். எல்லாளனின் மார்பை வேல் துளைத்து நிலை கொண்டது. கி.மு. 101 ஆம் ஆண்டு, 44 ஆண்டுகால ஆட்சியின் அஸ்தமனத்துடன், எந்த மதத்தை போற்றிப்பாதுகாத்தானோ அம்மதத்தினாலேயே வெட்டி சாய்க்கப்பட்டான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 12:52:18 AM
பண்டுகாபய 437 BC

பண்டுகாபய (கி.மு. 437-367) இலங்கையின் விசய வம்ச அரச மரபின் நான்காவது அரசனாவான். இவன் இம் மரபின் இரண்டாவது அரசனான பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனும், மூன்றாவது அரசனான அபய மற்றும் அவனைப் பதவியிலிருந்து இறக்கிய பின் பகர ஆளுனராக இருந்த திஸ்ஸ ஆகியோரின் மருமகனும் ஆவான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 12:54:00 AM
அபய 474 BC


அபய (கி.மு 474-454) இலங்கையின் விசய வம்ச அரச மரபில் வந்த மூன்றாவது அரசனாவான். இவன், இவனுக்கு முன்னர் இலங்கையை அரசாண்ட பண்டுவாசுதேவனின் மூத்த மகனாவான். இவனுக்கு ஒன்பது சகோதரரும் உம்மத சித்தா என்னும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

 

சோதிடனின் எதிர்வு

இவர்களது தந்தை அரசனாக இருந்த காலத்தில் சோதிடன் ஒருவன், உம்மத சித்தாவுக்குப் பிறக்கும் மகன், அவன் மாமன்மார்களைக் கொல்லுவான் என்று கூறியிருந்தான். இதனால் உம்மத சித்தாவைக் கொல்லுவதென்று அபயவைத் தவிர்ந்த ஏனைய சகோதரர்கள் அவர்களுள் மூத்தவனான திஸ்ஸ என்பவன் தலைமையில் கூடி முடிவு செய்தனர். அபய அதற்கு இணங்காததால் அவளைத் தனிமைப்படுத்திக் காவலில் வைத்திருப்பதென முடிவு செய்யப்பட்டது.

 

சித்தாவின் திருமணம்

அவர்களது உறவினனான இளவரசன் தீககாமினி என்பவனைத் தற்செயலாகக் கண்ட சித்தா தனிமையில் அவனைச் சந்தித்தாள் இதன்மூலம் அவள் கர்ப்பமுற்றாள். இதனைக் கேள்வியுற்ற அபய, தந்தையான பண்டுவாசுதேவனை இணங்கச் செய்து சித்தாவை தீககாமினிக்கு மணம் முடித்து வைத்தான். இதனால் திஸ்ஸவும் ஏனைய சகோதரர்களும் கோபமுற்றிருந்தனர். சித்தாவுக்கு ஆண்பிள்ளை பிறந்தால் அவனைக் கொன்று விடுவதாக திஸ்ஸ சூளுரைத்தான். சித்தா ஒரு ஆண் குழந்தையையே பெற்றாள். ஆனாலும் அதனை மறைத்துவிட்டு அதற்குப் பதிலாக இன்னொரு பெண் குழந்தையை அதற்குப் பதிலாக வைத்தாள். மகனை நாட்டின் தென் பகுதிக்கு அனுப்பி அங்கே வளர்க்க ஏற்பாடு செய்திருந்தாள். அவனுக்குத் தனது தந்தையினதும், மூத்த தமையனதும் பெயர்களைச் சேர்த்து பண்டுகாபயன் எனப் பெயரும் வைத்தாள்.

 

அபய அரச பதவியிலிருந்து அகற்றப்படல்

அபய அரசனாகிச் சில காலத்தின் பின்னர் தமது சகோதரிக்கு ஆண் பிள்ளை பிறந்தது பற்றியும் அவன் நாட்டின் தென்பகுதியில் வளர்வது பற்றியும் திஸ்ஸவும் ஏனைய சகோதரரும் அறிந்து கொண்டனர். அவனைக் கொல்லுவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால், சித்தாவுக்கு உறுதுணையாக இருந்த அபயவைப் பதவியில் இருந்து அகற்றித் திஸ்ஸ அரசனானான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 12:56:04 AM
பண்டு வாசுதேவன் 504 BC,


பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) இலங்கையின் விசய வம்ச அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் விசய வம்ச அரச மரபைத் தோற்றுவித்தவனும் முதல் அரசனுமான கலிங்க இளவரசன் விஜயனின் உடன்பிறந்தான் மகனாவான். கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான்.


பண்டுவாசுதேவன் இலங்கை வரவு
சிறிது கால இடைவெளியின் பின்னர் கலிங்கநாட்டில் இருந்த பண்டுவாசுதேவன் அழைத்து வரப்பட்டு முடி சூட்டப்பட்டான். இளவரசன் பண்டுவாசுதேவன் பிரபுத்துவ குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களான உதவியாளர்களுடன் வந்ததாக இலங்கைச் சரித்திரம் கூறும் நூலான மகாவம்சம் கூறுகின்றது. கலிங்க நாட்டிலிருந்து வந்த இளவரசியான புத்தகாஞ்சனா என்பவளை பண்டுவாசுதேவன் மணம் செய்துகொண்டான். புத்தகாஞ்சனா பண்டைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவனும் புத்தரின் ஒன்றுவிட்ட சகோதரனுமான பாண்டா என்னும் அரசனுடைய மகளாவாள். இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:25:58 AM
யாழ்ப்பாண இராசதானி வம்சம்

கூழங்கைச் சக்கரவர்த்தி



யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான். வையாபாடல் இப் பெயரின் வடமொழியாக்கமான கோளுறு கரத்துக் குரிசில் என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால், "கூழங்கையன்" என அழைக்கப்பட்டுப் பின்னர் "கூழங்கைச் சக்கரவர்த்தி" அல்லது "கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி" எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

 

"மணற்றிடர்" என்று அன்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து, தசரதன் மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என வையாபாடல் கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும், யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் கலியுக ஆண்டு 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.

 

தமிழ்ப் படைகளின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து அப்போதைய தலைநகரமான பொலநறுவையைத் துவம்சம் செய்த கலிங்க மாகன் எனும் கலிங்கத்து இளவரசனே காலிங்கச் சக்கரவர்த்தி என்னும் பெயருடன் தனியரசு நடத்தினான் என்றும் இப்பெயரே திரிபடைந்து கூழங்கைச் சக்கரவர்த்தியானதென்பதும், சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் போன்றோருடைய கருத்து. தற்போது இதற்குப் போதிய ஆதரவு இல்லை.

கூழங்கைச் சக்கரவர்த்தியின் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பதே தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் காலக் கணக்கு ஆகும்.

 

இவ்வரசனே நல்லூர் நகரைக் கட்டியவன் என வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இன்னொரு இடத்திலிருந்தே ஆண்டான் என்றும், 15 ஆம் நூற்றாண்டிலேயே நல்லூர் கட்டப்பட்டது என்பதும் சிலருடைய கருத்து. எனினும் நல்லூர் மட்டுமே ஆரியச்சக்கரவர்த்திகளுடைய தலைநகராக அமைந்திருந்ததென்பதே இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும்
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:28:22 AM
செண்பகப் பெருமாள் 1450-1467

செண்பகப் பெருமாள்



(சிங்களம்: சப்புமல் குமாரயா), ஆறாம் புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசை ஆண்டவன்.

 

பிறப்பு
ஆறாம் பராக்கிரமபாகு இலங்கையின் கோட்டே இராச்சியத்தை ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரனொருவன் மலையாள நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தான். இவனைத் தன் கீழ் சேவைக்கு அமர்த்திக்கொண்ட பராக்கிரமபாகு, இவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனே சப்புமால் குமாரயா என்ற சிங்களப் பெயரால் வழங்கப்பட்ட செண்பகப் பெருமாள் ஆவான். இவனே பிற்காலத்தில் சிறி சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

 

இளவயது


ஆறாம் பரக்கிரமபாகுவுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாதிருந்ததால் செண்பகப் பெருமாளும், அவனது தம்பியும் அரசனுடைய வளர்ப்புப் பிள்ளைகளாகவே வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களும் அரச குலத்தாருக்குரிய பலவிதமான கலைகளையும் கற்றுத் தேறியிருந்தனர். எனினும் பிற்காலத்தில் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஆண் பிள்ளையொன்று பிறந்தபோது, அப்பிள்ளையின் அரசுரிமைக்கு செண்பகப் பெருமாள் தடையாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்டதால் அவனை கோட்டே அரசிலிருந்து வெளியேற்ற அரசன் முடிவு செய்ததாக வரலாற்றாய்வாளர் சிலர் நம்புகிறார்கள்.

 

சப்புமால் குமாரயாவின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள்

செண்பகப் பெருமாள் வெளியேற்றும் பணியைத் தந்திரமாக முடிக்க எண்ணி, யாழ்ப்பாண அரசின் கீழ் அமைந்திருந்த வன்னிச் சிற்றரசர்கள் மீது படையெடுக்குமாறு செண்பகப் பெருமாள்லை அரசன் பணித்ததாகக் கூறப்படுகின்றது. வீரனான செண்பகப் பெருமாள் வன்னியை வென்று மீண்டான். தொடர்ந்து யாழ்ப்பாண அரசனையும் வெல்லுமாறு அவன் பணிக்கப்பட, யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் சென்ற அவன், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண்டிருந்த கனகசூரிய சிங்கையாரியனை வென்று கோட்டே திரும்பினான். பராக்கிரமபாகு, யாழ்ப்பாணத்தை ஆளும்படி சப்புமால் குமாரயாவை அனுப்பிவைத்தான்.

 

யாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள்

1450 ஆம் ஆண்டில் செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை ஆளத் தொடங்கினான். நல்லூரில் தலைநகரைக் கட்டியவன் இவனே என்று சிலர் கருதுகிறார்கள். சைவ சமயத்தைச் சேர்ந்தவனான இவனே, நல்லூர்க் கந்தன் ஆலயத்தை அமைத்தவன் என்றும் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இவனது ஆட்சி 17 ஆண்டு காலம் நீடித்தது.

 

கோட்டேயைக் கைப்பற்றல்

1467ல், தனது பேரனான ஜெயவீரன் என்பவனுக்குக் கோட்டே அரசைக் கொடுத்துவிட்டுப் ஆறாம் பராக்கிரமபாகு காலமானான். இதனையறிந்த செண்பகப் பெருமாள் கோட்டேக்குச் சென்று ஜெயவீரனைத் தோற்கடித்து சிறி சங்கபோதி புவனேகபாகு என்னும் அரியணைப் பெயருடன் கோட்டே அரசனானான்.

கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.

 

செண்பகப் பெருமாளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:29:57 AM
கனகசூரிய சிங்கையாரியன் 1467-1478

கனகசூரிய சிங்கையாரியன்





கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.

 

சப்புமால் குமாரயாவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:31:52 AM
சங்கிலியன் 1519-1560

சங்கிலியன்



சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன் என்பதால் சங்கிலியனைப் பற்றி அவர்கள் நல்ல கருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதற்கு இல்லை. இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.


குடும்பம்

இவன் 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனின் மகனாவான். இவனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தபோதும், அரசை முறையற்ற விதத்தில் இவன் கைப்பற்றிக் கொண்டான்.

 

சங்கிலியனும் போத்துக்கேயரும்

சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள்.யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து சங்கிலியனைத் தண்டிக்க வேண்டுமென்று இவர்கள் கோவாவில் இருந்த போத்துக்கீசரின் தலைமையையும், போத்துக்கல் அரசனையும் பலவழிகளிலும் வற்புறுத்தி வந்தனர்.1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான்.

 

மன்னார் படுகொலைகள்

சங்கிலி கத்தலிக்க சமயத்துக்கு மாறி, போத்திக்கீசரால் மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட 600-700 வரையான பறையர் சமூகத்தைச் சேர்த தமிழர்களை படுகொலை செய்தாக கூறப்படுகிறது.

 

நல்லூர் வீழ்ச்சி


சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

 

சங்கிலியனின் தந்திரம்

இந் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்கிலியன் போர்த்துக்கேயப் பதிலாளுநனுக்குச் சமாதானத் தூது அனுப்பினான். சிக்கலான நிலைமையில் இருந்த ஆளுநன் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டான். போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட இந் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக, இளவரசன் ஒருவனையும், வேறொரு அதிகாரியையும் போத்துக்கேயர் பிணையாக வைத்திருப்பதற்கும் அரசன் இணங்கினான். சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். போத்துக்கேயர் அரசன் தருவதாக உடன்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். அதனைக் கொடாமல் போக்குக்காட்டிய சங்கிலி போத்துக்கேயரைத் தந்திரமாகத் துரத்திவிடுவதிலேயே கண்ணாக இருந்தான். ஒருநாள் ஒரே சமயத்தில் அங்கேயிருந்த போத்துக்கேயருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தனர். வெளியே சென்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கியிருந்த இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. போத்துக்கேயர் பெரும் சிரமத்தோடு தப்பியோடினர். எனினும், பிணையாகக் கொடுத்திருந்த இளவரசனையும், அதிகாரியையும் மீட்கும் சங்கிலியின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர்களைப் போத்துகேயர் கோவாவுக்குக் கொண்டு சென்றனர்.

 

சங்கிலியின் முடிவு

சங்கிலி மேலும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். தென்னிலங்கை அரசுகளில் ஒன்றான சீதாவாக்கை அரசனான மாயாதுன்னைக்கு 1564 ஆம் ஆண்டில் சங்கிலி படை உதவி செய்ததாகத் தெரிகிறது. சங்கிலியனின் ஆட்சி எவ்வாறு முடிவுற்றது என்பதில் தெளிவில்லை. இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:33:51 AM
புவிராஜ பண்டாரம் 1561-1565

புவிராஜ பண்டாரம்



புவிராஜ பண்டாரம் 1580 களின் தொடக்கத்திலிருந்து 1591 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனாவான். பெரிய பிள்ளை என்னும் அரசனுக்குப் பின் அரசு கட்டிலேறிய இவன், அக் காலத்தில் யாழ்ப்பாண அரசில் செல்வாக்குச் செலுத்திய போத்துக்கீசரினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

 

கண்டி இளவரசிக்கு அடைக்கலம்

கண்டி அரச மரபினரின் வரலாற்றோடு தொடர்புள்ள சில நிகழ்வுகள் மூலமே புவிராஜ பண்டாரம் முதன் முதலாக அறியப்படுகிறான். 1582 ஆம் ஆண்டையொட்டிய காலப்பகுதியில் சீதாவாக்கை அரசன், கண்டி மீது படையெடுக்கவே, கண்டி அரசன் குடும்பத்தோடு திருகோணமலைக்கு ஓடுகிறான். அங்கே அரசனும் அரசியும் இறக்க, அவர்களுடைய சிறுவயது மகளும், மருமகனான இளவரசன் யமசிங்கனும் யாழ்ப்பாணத்துக்கு வந்து புவிராஜ பண்டாரத்திடம் அடைக்கலம் புகுகின்றனர். இந்தச் சிறுமியே பிற்காலத்தில் கண்டியரசனான விமலதர்மசூரியனை மணந்து கண்டி அரசியான டோனா கத்தறீனா என்பவளாகும்.

 

மன்னாரில் போத்துக்கீசரோடு போர்

போத்துக்கீசர் கைப்பற்றி வைத்திருந்த யாழ்ப்பாணத்துக்குச் சொந்தமான மன்னார்த் தீவில் இருந்து அவர்களைத் துரத்தி அவ்விடத்தை விடுவிப்பதில் புவிராஜ பண்டாரம் தீவிரமாக இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டுவாக்கில் பெரும் படையுடனும், ஆயுத தளவாடங்களுடனும் மன்னாரைத் தாக்கினான். இருந்தும், அக்காலத்து நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் யாழ்ப்பாணத்துப் படைகளுக்குப் போதிய பயிற்சி இல்லாததாலோ என்னவோ இம் முயற்சியில் புவிராஜ பண்டாரத்துக்கு வெற்றி கிட்டவில்லை. 1591 ஆம் ஆண்டில் மீண்டும் தென்னிந்தியக் கப்பல் தலைவனான கொட்டி மூசா மரிக்கார் என்பவனோடு சேர்ந்து கொண்டு மன்னாரைத் தாக்க முயற்சித்தும் மீண்டும் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது.

 

போத்துக்கீசரின் யாழ்ப்பாணப் படையெடுப்பு

புவிராஜ பண்டாரத்தைத் தண்டிக்க எண்ணிய போத்துக்கீசர் 1591 ஆம் ஆண்டில் அந்தரே பூர்த்தாடு என்பவன் தலைமையில் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தனர். நிகழ்ந்த போரில் நல்லூருட் புகுந்த போத்துக்கீசர் படை அரசனைப் பிடித்தனர். அரசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட அவன் தலை கொய்யப்பட்டு இறந்தான்
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:35:12 AM
அரசகேசரி 1615-1617

அரசகேசரி




அரசகேசரி (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவர் ஆவார்.


வாழ்க்கை குறிப்பு

அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகனும், எதிர்மன்னசிங்கம் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591-1616) மாமனும் ஆவார். பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி பரராசசேகரச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் பெரியபிள்ளையின் மகன்தான் எதிர்மன்னசிங்கம் ஆவான். எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619.

 

இலக்கியப் பங்களிப்பு

தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் வல்லவர். காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார். காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது. இவரின் இருமொழி புலமைக்கும், மொழி பெயர்க்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டு ஒன்று காட்டுதும்:-..

 

ஸ்ராஜ்யம் குருணாதத்தம் பிரதிபத்யாதிகம் பபெள
 திநாந்தெ நிஹிதம் தேஜஸ் சவித்திரே வஹா

 

என்னும் வடமொழி இரகுவமிச சுலோகத்தை தமிழில்:-

 

கனைகழல் வீரனுங் காவ லான்றரு
 புனைமணி முடியொடும் பொலிந்து தோன்றினான்
 றினகரன் றிவாந்தகா லத்திற் சேர்த்திய
 வினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே

 

இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், நல்லூருக்குக் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள ஒரு தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் பொது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர். இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:-

 

கூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க
 ளூறு செய்திடத் தொடுத்தகூன் குயமொத்த வேனும்
 பாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த்
 தாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும்

 

இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, சங்க இலக்கியங்களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும். இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:-

 

பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்
 அரிமுக வம்பியு மருந்துறை யியக்கும்
 பெருந்துறை மருங்கில்

என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய அம்பி சிறப்புக்களை ( அம்பி = தோணி) ,

 அறிமுக மடுத்து வீழு மான்மத வளறு நாறிக்
 கரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு காப்பச்
 சுரிமுக நெற்றி துற்றிச் சுடர்மணி வர்க்கந் தொக்க
 பரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு போனார்

என்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர்.

மேலும் இவர் கம்பர் பாடிய கம்ப இராமாயணதை பின்பற்றி, காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சதை தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:37:04 AM
காசி நயினார் 1565-1570

காசி நயினார்



காசி நயினார் என்பவன் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆதிக்கம் தொடங்கிய 1560 களில் அந் நாட்டை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலி அரசனைத் தொடர்ந்து பட்டத்துக்கு வந்த புவிராஜ பண்டாரம் என்பவனை அகற்றிவிட்டு யாழ்ப்பாண அரசை இவன் கைப்பற்றிக் கொண்டான். இவன் யாழ்ப்பாணத்து அரச பதவிக்கு வாரிசு உரிமையற்றவன் என்பதனால், இவனை அகற்றுவதற்காக இவன் எதிராளிகள் சிலர், அக்காலத்தில் மன்னார்த் தீவைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த போத்துக்கீசரின் தளபதியான --- என்பவனிடம் முறையிட்டனர். யாழ்ப்பாண அரசியலில் தலையிடுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகக் கருதிய தளபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து காசி நயினாரை அகற்றிவிட்டு இன்னொருவனை அரசனாக்கித் திரும்பினான். காசி நயினார் சிறையில் அடைக்கப்பட்டான். போத்துக்கீசத் தளபதி மன்னாருக்குத் திரும்பியதும், காசி நயினாரின் ஆதரவாளர்கள் புதிய அரசனைக் கொன்று, காசி நயினாரைச் சிறைமீட்டதுடன் அவனை மீண்டும் பதவியில் அமர்த்தினர்.

இந் நிகழ்வைக் கேள்வியுற்ற போத்துக்கீசத் தளபதி சினம் கொண்டான். காசி நயினாரைச் சூழ்ச்சியால் கொல்ல எண்ணி, அவன் அரண்மனைப் பணியாள் ஒருவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அரசன் உண்ணும் உணவில் நஞ்சு கலந்து அவனைக் கொன்றான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:38:30 AM
பெரிய பிள்ளை 1570-1572

பெரியபிள்ளை




பெரிய பிள்ளை, செகராசசேகரன் என அரியணைப் பெயர் கொண்டவர்களில் எட்டாவது ஆரியச் சக்கரவர்த்தியுமாகிய, யாழ்ப்பாண அரசன் ஆவான். இவனைக் குறித்து மிகக் குறைவான தகவல்களே ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன. காசி நயினாரைக் சூழ்ச்சியால் கொன்றபின், மன்னாரில் இருந்த போர்த்துக்கீசத் தளபதியால் இவன் மன்னன் ஆக்கப்பட்டவன். ஜார்ஜ் தெமேலோ என்னும் அத் தளபதி 1570 ஆம் ஆண்டு வரையிலேயே பதவியில் இருந்தவன் என்பதால், பெரிய பிள்ளையின் ஆட்சி 1570 ஆம் ஆண்டுக்கு முன்னரே தொடங்கிவிட்டது என்பது உறுதி. 1582 ஆம் ஆண்டில் அரசுக்கு உரிமையற்றவனான புவிராஜ பண்டாரம் என்பான் யாழ்ப்பாணத்தை ஆண்டது பற்றிய குறிப்புக்கள் வேறு மூலங்களில் காணப்படுவதால், பெரிய பிள்ளையின் ஆட்சி 1572 ஆம் ஆண்டுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் தெரிகிறது.

 

இவை தவிர தற்காலத்தில் கிடைக்கும் போத்துக்கீசர் காலத் தகவல்களின்படி புவிராஜ பண்டாரத்தைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த எதிர்மன்ன சிங்கன் பெரிய பிள்ளையின் மகன் ஆவான் என்பதும் தெரியவந்துள்ளது
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:41:13 AM
குணவீர சிங்கையாரியன் 1417-1440

குணவீர சிங்கையாரியன்



குணவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன். இவன் தந்தையான செயவீர சிங்கையாரியனைத் தொடர்ந்து குணவீரன் பட்டத்துக்கு வந்தான். இவன் பட்டத்துக்கு வந்த ஆண்டு 1414 அல்லது 1417 ஆகும். குணவீரனது மகனே கனகசூரிய சிங்கையாரியன் ஆவான்.



Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:42:01 AM
குலசேகர சிங்கையாரியன் 1246-1256

குலசேகர சிங்கையாரியன்





குலசேகர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் முதல்வனான கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் மகனாகிய இவன் கி.பி 1246 தொடக்கம் 1256 ஆம் ஆண்டுவரை பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான்.

 

இவன் ஆட்சி முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும், நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன் வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்ததாகவும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. குலசேகர சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகனான குலோத்துங்க சிங்கையாரியன் அரசனானான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:43:34 AM
குலோத்துங்க சிங்கையாரியன் 1256-1279

குலோத்துங்க சிங்கையாரியன்



குலோத்துங்க சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச வம்சத்தின் மூன்றாவது அரசனாவான். இவன் கி.பி 1256 ஆம் ஆண்டு முதல் 1279 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகாலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான் என்று செ. இராசநாயகம் கணித்துள்ளார். இவன் குலசேகர சிங்கையாரியனின் மகனும், கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் பேரனும் ஆவான்.

 

இவனும் தன் முன்னோரைப் போலவே வேளாண்மை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. தரிசு நிலங்களைத் திருத்தி வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களாக இவன் மாற்றியதாக இந் நூல் கூறுகிறது. இவனுடைய 23 ஆண்டு ஆட்சிக் காலம் அமைதிக் காலமாக விளங்கியதாகவும் கூறப்படுகின்றது.

 

இவனைத் தொடர்ந்து இவனது மகனான விக்கிரம சிங்கையாரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.

Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:44:56 AM
விக்கிரம சிங்கையாரியன் 1279-1302

விக்கிரம சிங்கையாரியன்



விக்கிரம சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் நான்காவது அரசனான இவன் கி.பி 1279 ஆம் ஆண்டிலிருந்து 1302 ஆம் ஆண்டு வரையான 23 ஆண்டுகள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டதாக செ. இராசநாயகம் கணிப்பிட்டுள்ளார்.

 

இவன் காலம் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்த காலமாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரான சிங்களவருக்கும், இந்துத் தமிழருக்கும் கலகம் மூண்டது. இரண்டு தமிழர் சிங்களவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர் தலைவனுக்கும் வேறு 17 பேருக்கும் விக்கிரம சிங்கையாரியன் மரண தண்டனை விதித்ததாகவும் மேலும் பலரைச் சிறையில் அடைத்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறியக் கிடைக்கின்றது. இதனால் பெருமளவு சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினர். எனினும் விக்கிரம சிங்கையாரியன் இறக்கும் வரை அவனுக்குச் சிங்களவர்களால் தொல்லைகள் இருந்தே வந்தன.

 

விக்கிரம சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகன், வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண அரசனாக முடு சூட்டிக் கொண்டான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:45:48 AM
வரோதய சிங்கையாரியன் 1302-1325

வரோதய சிங்கையாரியன்





வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். புத்திக் கூர்மை உடையவனாயிருந்த இவன் கி.பி 1302 ஆம் ஆண்டுக்கும் 1325 ஆம் ஆண்டுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகின்றது. இவன் விக்கிரம சிங்கையாரியனின் மகனாவான். தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனக் கலவரங்களுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நாட்டில் அமைதியை இவன் நிலை நிறுத்தியதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.

 

இவனைத் தொடர்ந்து இவனது மகன் மார்த்தாண்ட சிங்கையாரியன் அரசனானான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:47:17 AM
மார்த்தாண்ட சிங்கையாரியன் 1325-1348

மார்த்தாண்ட சிங்கையாரியன்



யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவனான மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325 முதல் 1348 வரையான காலப்பகுதியை அண்டி யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் முடி சூட்டிக் கொண்டபோது நாட்டில் அமைதி நிலவியது எனினும் இடைக் காலத்தில், யாழ்ப்பாண அரசின் பெருநிலப் பகுதியின் பகுதிகளில் அதிகாரம் செலுத்திவந்த வன்னியர் கலகம் செய்யலாயினர். இக் கலகங்களை மார்த்தாண்டன் இலகுவாக அடக்கினான்.

 

நாட்டில் கல்வி, வேளாண்மை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவன் இரக்க குணம் கொண்டவனாக விளங்கினான். இவன் சுகவீனமுற்றுக் காலமானபோது நாட்டின் எல்லாத் தரப்பு மக்களும் இவனது இழப்புக்காக வர்ந்தினர்.

இவனை அடுத்து இவன் மகன் குணபூஷண சிங்கையாரியன் அரசனானான்
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:48:02 AM
குணபூஷண சிங்கையாரியன் 1348-1371

குணபூஷண சிங்கையாரியன்



குணபூஷண சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்ச அரசர்களுள் ஒருவன். இவன், நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று விளங்கிய மார்த்தாண்ட சிங்கையாரியனின் மகனாவான். நாட்டைக் கல்வி மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையச் செய்ததன் மூலம், தனது தந்தையிலும் அதிகமாக, இவன் மக்களுடைய ஆதரவைப் பெற்றிருந்தான். உறுதியுடனும் நடுநிலைமையாகவும் ஆட்சி செலுத்திய இவன் முதிர்ந்த வயது வரை ஆட்சியில் இருந்தான். முதுமையின் இயலாமை காரணமாக இறக்கும் முன்னரே ஆட்சிப் பொறுப்பைத் தனது மகனான வீரோதய சிங்கையாரியனிடம் ஒப்படைத்தான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:49:50 AM
வீரோதய சிங்கையாரியன் 1371-1394

வீரோதய சிங்கையாரியன்




வீரோதய சிங்கையாரியன் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசனாவான். இவன் ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி 1371 முதல் 1394 வரையாகும் என செ. இராசநாயகமும், 1344 முத 1380 வரையாகும் என சுவாமி ஞானப்பிரகாசரும் கருதுகின்றனர்.

 

இவன் காலத்தில் வன்னியர்கள் சிங்களவர்களைக் கலகம் செய்யுமாறு தூண்டி விட்டனர். சிங்களவரை அடக்கிய வீரோதயன், வன்னியர்மீது படையெடுத்து அவர்களைத் தண்டித்தான்.

 

பாண்டியனுக்கு உதவி

அக் காலத்தில் தமிழகத்தில், பாண்டிநாட்டை சந்திரசேகர பாண்டியன் என்பவன் ஆண்டுவந்ததாகவும், அப்போது அந்நாட்டை எதிரிகள் தாக்கி அதனைக் கைப்பற்றிக்கொள்ள, பாண்டியன் தப்பி யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. வீரோதய சிங்கையாரியன் நாட்டை இழந்த பாண்டியனுக்கு ஆதரவாகப் படைதிரட்டிச் சென்று அவனுக்குப் பாண்டிநாட்டை மீட்டுக் கொடுத்ததாகவும் அந்நூல் கூறுகிறது.

 

மேற்கூறிய நிகழ்வு தொடர்பாகத் தமிழகத்திலிருந்து சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், 13 ஆம் நூற்றாண்டுக் கடைசியிலும், 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், பாண்டிநாட்டை ஆண்ட முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மக்களான வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் இடையேயான பூசல்கள், இது தொடர்பில் மாலிக் கபூரின் பாண்டிநாட்டுப் படையெடுப்பு என்பவற்றுடன், வைபவமாலைக் கூற்றைத் தொடர்புபடுத்திய முதலியார் இராசநாயகம், சுந்தர பாண்டியனையே வைபவமாலை சந்திரசேகர பாண்டியன் எனக் குறிப்பிட்டிருக்கக்கூடும் எனக் கருதுகிறார்.

 

வீரோதயன் மரணம்

வீரோதய சிங்கையாரியன் இளம் வயதிலேயே மரணமானான். சாப்பிட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்ற இவன் இரவில் படுக்கையிலேயே மரணமானான். இதனைத் தொடர்ந்து இவன் மகனான செயவீர சிங்கையாரியன் மிக இளம் வயதிலேயே அரசனாக முடி சூட்டிக் கொண்டான்.


Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:51:06 AM
செயவீர சிங்கையாரியன் 1394-1417

செயவீர சிங்கையாரியன்






செயவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த ஒரு அரசனாவான். இவனது தந்தையான வீரோதய சிங்கையாரியன் எதிர்பாராமல் மரணமானதைத் தொடர்ந்து இளம் வயதிலேயே முடி சூட்டிக் கொண்டவன் இவன்.

 

கண்டியரசனுடன் போர்

செயவீரன், தன் காலத்தில் கண்டியை ஆண்ட புவனேகபாகு என்பவனுடன் போரிட்டு அவனை வென்றதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறும். பின்னர் பராக்கிரமபாகு என்பவன் பாண்டியன் முன்னிலையில் திறை தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு இழந்த நாட்டைப் பெற்று ஆட்சி செய்து வந்தான். இவனும் இவனுக்குப் பின் வந்தவர்களும் செயவீரன் காலம் வரையில் திறை செலுத்தி வந்தனர் என்பது வைபவமாலையின் கூற்று.

 

செயவீரன் மரணம்

நீண்டகாலம் வெற்றிகரமாக ஆட்சி புரிந்த செயவீரன், காலமானபின் இவன் மகனான குணவீர சிங்கையாரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:52:51 AM
சங்கிலி குமாரன் 1617-1620

சங்கிலி குமாரன்




யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன் எனப் பலராலும் குறிப்பிடப்படும் சங்கிலி குமாரன் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி அரசனின் சிறுவனான வரிசுக்காகப் பகர ஆளுநராக இருந்தவனாவான். தொடக்க காலங்களில் யாழ்ப்பாண வரலாறு எழுதியவர்கள் இவனையும், இவனுக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆண்ட சங்கிலி என்பவனையும் ஒருவர் எனக்கருதி மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் பெயரில் யாழ்ப்பாண வரலாறு எழுதிய மயில்வாகனப் புலவர் பெயர் ஒற்றுமையால் குழம்பிப் போலும், இடையில் ஆண்ட பல அரசர்களைப் பற்றிக் குறிப்பிடாமலே விட்டுவிட்டார்.

1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர். இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான். போத்துக்கீசரிடம் தாராளமாக நடந்துகொண்ட அரசன் எதிர்மன்னசிங்கம் தனது இறுதிக்காலத்தில் பாதிரிமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கிறிஸ்தவ மதத்தில் சேர உடன்பட்டதாகவும், எனினும் அவர்களின் முயற்சியைச் சங்கிலி குமாரனே தொடர்ந்து முறியடித்து வந்ததாகவும், குவைறோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

 

சங்கிலி குமாரனின் மறைவு

சங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தான். இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படையணிகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். சங்கிலி குமாரனை கைதுசெய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.

 

சங்கிலி குமாரனின் பிள்ளைகள்

சங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளையான போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ (Soror Maria da Vistaco) ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய (King of Jaffna apataao (Ceylon)) மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:55:34 AM
தம்பதனியா இராசதானி வம்சம்


மூன்றாம் விஜயபாகு

மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) தம்பதேனியாவைத் தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன்.தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஜந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மாகோன் இராஜரட்டையை ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையில் உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் "பூஜாவலிய" கூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என "சூளவம்சம்" கூறுகின்றது.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:57:27 AM
நான்காம் விஜயபாகு 1270

நான்காம் விஜயபாகு





போசத் விஜயபாகு (கி.பி. 1271 - 1273) என அழைக்கப்பெற்ற நான்காம் விஜயபாகு தம்பதெனியாவிலிருந்து ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் அனுராதபுரத்திற்குச் சென்றபோது,வன்னியர் இவனைச் சேவித்துத் திறை செலுத்தியதாகச் "சூளவம்சம்" கூறுகின்றது.மூன்று வருடங்கள் இவன் ஆட்சி புரிந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:58:12 AM
ஐந்தாம் விஜயபாகு 1335

ஐந்தாம் விஜயபாகு





சவுலு விஜயபாகு (கி.பி. 1335 - 1347) என்றழைக்கப்பட்ட ஜந்தாம் விஜயபாகு கம்பளையில் இருந்து ஆட்சி புரிந்தவனாவான். 13 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவனது ஆட்சிக்காலம் மாகோன் காலத்திற்குப் பின் தங்கியதாகும்.


Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 01:59:15 AM
பொலன்னறுவை இராசதானி வம்சம்  


முதலாம் விஜயபாகு

ஸ்ரீ சங்கபோதி (கி.பி.1055 - 1110 ஆட்சிக்காலம்) என்னும் பெயரைப்பெற்றிருந்த முதலாம் விஜயபாகு இலங்கை வரலாற்றில் நீண்டகால ஆட்சியைக் கொண்டிருந்தான்.தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் தமிழருக்கெதிராகப் போர் தொடுத்த இவனால் சோழ மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு சிங்களவர்களால் போற்றப்பட்டான்
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 02:00:08 AM
விஜயபாகு II 1186

இரண்டாம் விஜயபாகு




பண்டித விஜயபாகு (கி.பி. 1186 - 1187 ஆட்சிக் காலம்) எனப்பெயர் பெற்ற இரண்டாம் விஜயபாகு பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்தவன்.

Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 02:01:15 AM
கண்டி நாயக்கர் வம்சம்  


ஸ்ரீ விஜய ராஜசிங்கன்

ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்டவன். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி அரண்மனையிலேயே வளர்ந்தவன்.

 

1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான். அரசியின் தம்பி, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்னும் பெயருடன் சிம்மாசனம் ஏறினான்.இவன் ஒரு பண்பாடுள்ள அரசனாக விளங்கினான். சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும், கண்டியின் அரச மதமாக விளங்கிய புத்த சமயத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினான். ஆளுயரப் புத்தர் சிலைகளை படுத்த, நின்ற மற்றும் இருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மலைக் குகைகளில் செதுக்குவித்தான்.இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 02:02:54 AM
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 - 1815)

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்



ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவன் சிம்மாசனம் ஏறினான். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவன் சிறை பிடிக்கப்பட்டான்.

இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான். இவனது இயற்பெயர் கண்ணுசாமி. இவன், இவனுக்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவான். முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி முடி சூட்டப்பட்டான்.


அரசுரிமைப் போட்டி

எனினும், ராஜாதி ராஜசிங்கனின் வாரிசு உரிமைக்காக அவனது அரசியின் தம்பியும் போட்டியிட்டான். உண்மையில் அவனுக்கே கூடிய உரிமை இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், பிலிமத்தலாவை என்னும் கண்டியரசின் அதிகார் எனப்படும் முதலமைச்சன், கண்ணுச்சாமியை அரசனாக்கினான். கண்டியரசைத் தானே கவர்ந்து கொள்ளும் நோக்கிலேயே பிலிமத்தலாவை இவ்வாறு செய்ததாகவும் கருத்து நிலவுகிறது. பதவியேற்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பல சதி முயற்சிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவனது ஆட்சிக்காலம் இலங்கை வரலாற்றின் மிகவும் குழப்பமான காலங்களில் ஒன்றாகும்.


உள்முரண்பாடுகள்
பிலிமத்தலாவையின் சதி:


இவனது காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவையோ பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். இதனால் பிரித்தானியர் கண்டியரசைக் கைப்பற்றுவதற்கான காரணம் கிடைக்கும் என அவன் கருதினான். கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலா ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி அரசன் தப்பி ஓடினான். எனினும், அதிகார் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்துக் கண்டியரசனை மீண்டும் பதவியில் அமர்த்தினான். பிலிமத்தலாவை இரண்டு முறை அரசனுக்கு எதிராகச் சதிசெய்து நாட்டைக் கவர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் மன்னிக்கப்பட்டான். மூன்றாவது தடவையும் அவன் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான்.


எகலப்பொலையின் சதி

பிலிமத்தலாவைக்குப் பதிலாக அவனது மருமகனான எகலப்பொலை அதிகாராக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட்டுக் குழப்பங்களைத் தூண்டி விட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எகலப்பொலை தப்பிக் கொழும்புக்கு ஓடிப் பிரித்தானியருடன் சேர்ந்து கொண்டான்.


கண்டி கைப்பற்றப்படல்

இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். மார்ச் 2 ஆம் திகதி கண்டி ஒப்பந்தம் என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான் அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு மனைவியருடன் வாழும் நிலை ஏற்பட்டது. 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவன் காலமானான்
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 02:06:31 AM
இலங்கையை ஆண்ட ஆளுநர்கள்  


யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி


1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போத்துக்கீசரிடம் வீழ்ச்சியடைந்தபோது யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி உருவானது. இவ்வாண்டிலேயே போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தின் ஆட்சியைத் தங்கள் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்தபோதும், 1590 ஆம் ஆண்டிலிருந்தே போத்துக்கீசர் செல்வாக்குக்கு உட்பட்டே யாழ்ப்பாண அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர்.இவர்கள் யாழ்ப்பாண அரசின் தலைநகரை நல்லூரிலிருந்து இன்றைய யாழ்ப்பாண நகருக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டையையும் கட்டி அதற்கு வெளியே இன்று பறங்கித் தெரு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு நகரத்தையும் அமைத்தார்கள்.

 

யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்

போத்துக்கீசர் முதன்முதலாக இலங்கைக்கு வந்தது, 1505 ஆம் ஆண்டிலாகும். டொன் லொரென்சே டே அல்மெய்தா என்பவன் தலைமையிலான குழுவொன்று, கடற் கொந்தளிப்புக் காரணமாகக் காலிப் பகுதியில் தரை தட்டியபோது இது நிகழ்ந்தது. இதன் பின்னர் 1518 ஆம் ஆண்டில் இலங்கையின் கோட்டே இரச்சியத்தை ஆண்ட பராக்கிரமவாகுவின் அனுமதி பெற்று, மேற்குக் கடற்கரைப் பகுதியில் வர்த்தக சாலை ஒன்றைப் போத்துக்கீசர் கட்டினர். சில காலத்தின்பின் கோட்டேயைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அரசனிடம் திறையும் பெற்று வந்தனர். அதே சமயம், கத்தோலிக்க சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டு, பலரைக் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றியும் வந்தனர். அக்காலத்தில் தென்னிந்தியாவிலும் சில கரையோரப் பகுதிகளில் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்.

 

மன்னாரில் மதப் பிரசாரம்

யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இவ்வாறு அரசியல் மற்றும் சமயச் செல்வாக்கு விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போத்துக்கீசரின் கண் யாழ்ப்பாண அரசிலும் விழ ஆரம்பித்தது. இலங்கையின் தென்பகுதிகளைப்போல், யாழ்ப்பாணத்தில் வணிகம் தொடர்பான கவர்ச்சி போத்துக்கீசருக்கு அதிகம் இருக்கவில்லை. எனினும், கத்தோலிக்க மத விரிவாக்க முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் மதம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் பாதிரியார், கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த மன்னாருக்கு அனுப்பி 600க்கு மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கர் ஆக்கினார்.

 

யாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை

இதனைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண அரசன் சங்கிலி, மன்னாருக்குச் சென்று மதம் மாறிய அனைவருக்கும் மரணதண்டனை விதித்தான். 1544 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்தனர். இதனால் போத்துக்கீசப் பாதிரிமார் சங்கிலி அரசன்மீது கடுமையான பகைமை உணர்வு கொண்டிருந்தனர். சங்கிலியைத் தண்டிக்கும்படி அவர்கள், அக்காலத்தில் கோவாவில் இருந்த போத்துக்கீசப் பிரதிநிதிக்கும், போத்துக்கல் நாட்டு மன்னனுக்கும், நெருக்கடி கொடுத்துவந்தனர்.


யாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்புகள்

இதனைத் தொடர்ந்து சங்கிலியைத் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 1561 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். 1591ல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். இதன் பின்னர் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகளில் போத்துக்கீசர் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியதுடன், மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடையேதும் அற்ற வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசப் பாதிரிமார்கள், வசதியான இடங்களைத் தம்வசப்படுத்திக்கொண்டு, தேவாலயங்களை அமைத்ததோடு, போர்க் காலங்களில் பயன்படக்கூடிய வகையில் அவற்றை உறுதியாகவும், உரிய வசதிகளுடனும் அமைத்திருந்தனர்.

 

யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி


17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்து அரசில் பதவிப் போட்டிகள் உருவாகின. பராயமடையாதிருந்த பட்டத்து இளவரசன் ஒருவனுக்காகப், பகர ஆளுனராக முறையற்ற வகையில் சங்கிலி குமாரன் என்பவன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். மக்கள் இவனுக்கெதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடக்குவதற்காக சங்கிலி குமாரன் தஞ்சாவூர் அரசனிடம் படையுதவி பெற்றான். இதனை விரும்பாத போத்துக்கீசர், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தாக்கினார்கள். ஒலிவேரா என்பவன் தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. சங்கிலி குமாரனும் பிடிபட்டான். இம்முறை யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் தங்களுடைய நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 02:07:12 AM
இலங்கையின் ஒல்லாந்து ஆளுனர்கள்

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி







யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் பிரித்தானியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த போத்துக்கீசரிடமிருந்து கைப்பற்றினர். யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது.


இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் சதுர வடிவக் கோட்டையை இடித்துவிட்டு ஐங்கோண வடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர்.
Title: Re: இலங்கையின் வரலாறு
Post by: Global Angel on April 11, 2012, 02:08:17 AM
இலங்கையின் பிரித்தானிய ஆளுனர்கள்

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி



1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமானது. 1796 ஆம் ஆண்டிலிருந்து 1948 ல் யாழ்ப்பாணத்தையும் இலங்கையின் ஒரு பகுதியாக விட்டுச் செல்லும் வரை இவ்வாட்சி நீடித்தது.

 

இலங்கைத் தீவில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பம்

1782 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஒல்லாந்து நாட்டுக்கும் இடையில் போர் மூண்டது. இதனத் தொடர்ந்து சென்னையை நிர்வகித்துவந்த பிரித்தானியத் தேசாதிபதி இலங்கைத் தீவில் உள்ள ஒல்லாந்தர் பகுதிகளைக் கைப்பற்றப் படைகளை அனுப்பினான். அப்படை திருகோணமலையில் இறங்கி அதனைக் கைப்பற்றியது எனினும், அடுத்த ஆண்டில் இங்கிலாந்தும், ஒல்லாந்தும் சமாதானம் செய்து கொண்டமையால் திருகோணமலையைத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாயிற்று. 1795 ல் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே போர் வெடிக்கவே, சென்னையிலிருந்து சென்ற பிரித்தானியப் படைகள் மீண்டும் திருகோணமலையைக் கைப்பற்றியதுடன், பருத்தித்துறையில் இறங்கி எவ்வித எதிர்ப்புமின்றி யாழ்ப்பாணக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டன. இவ்வாறே நீர்கொழும்பு, கொழும்பு, காலி என ஒவ்வொரு நகரமாய் வீழ்ச்சியடைய இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும் 1776 பெப்ரவரியளவில் பிரித்தானியர் வசமாயின.ஆரம்பத்தில் இப்பகுதிகளை நேரடியாக இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டதாயினும், பல காரணங்களை முன்னிட்டு சென்னையுடன் சேர்த்து ஆட்சிசெய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஒழுங்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1798 ல் இலங்கையிலிருந்த பிரித்தானியர் ஆட்சிப் பகுதிகள் இங்கிலாந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக தேசாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் கொழும்பில் இருந்து நிர்வாகம் நடத்தினார்.

 

யாழ்ப்பாண நிர்வாகம்

தேசாதிபதிகளே யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்துக்கும் பொறுப்பாக இருந்துவந்தனர். இவர்கள் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்தையும் ஒரு அரசப் பிரதிநிதியின் (Government Agent) நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தார்கள். ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் பலமாக இருக்கவில்லையாதலால் சில அரசப் பிரதிநிதிகள் ஒரு அரசனைப் போலவே நிர்வாகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.