FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 18, 2020, 07:09:07 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: Forum on October 18, 2020, 07:09:07 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 247
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F247.jpg&hash=292003d73e1d579edd8c1f874b6e30f8b8521dfb)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: AgNi on October 19, 2020, 12:11:32 PM

தனி மனித உரிமைகள் இங்கே ...
தீர்மானிப்பது சர்வாதிகார ஆட்சியே !
தனி உரிமை முதலாளித்துவம் ...
கை கொடுக்காத போது ....
சரணடையும் பாசிசத்தை....

அன்று..
இத்தாலியின் முசோலினியும்
ஜெர்மனியின் ஹிட்லரும் ..
கேள்வி கேட்பவர்களை ....
அதிகாரத்தின் ஆதிக்கத்தில் .
இரும்பு கரம்  கொண்டு   ...
சங்கிலியின் கனத்தால்..
மனிதர்களை பிணைத்தார்கள் ..
அம்மனிதர்களை... 
நாடு நலனுக்காக ..வல்லமைக்காக..
என்று மூளை சலவை செய்து ..
அப்பாவி மக்களை ...
அடக்குமுறையால் ஆட்டி படைத்தனர்..
 
இன்றோ ... 
மனிதர்களின் உயிருக்கே மதிப்புஇல்லை
எனும்போது உணர்வுகளுக்கு மதிப்பு  ஏது? .. ..
சர்வாதிகாரம் இங்கு ..
மனிதகுல சாபக்கேடு !
அடிமைகளின் ஆட்சியில் .... 
அகப்பட்டது  ஒன்றும் அறியா மக்களே !
அவர்களின் செந்நீரை பன்னீராய் ...
தெளிக்க ... நடுநிலை ஆட்சி என
நியாயப்படுத்தி ஏமாற்றுகிறது !   

நாடும் இங்கே நாசமாக போகட்டும் ..
பாடுபடும் மக்களும் மோசமாக அழியட்டும் ..
என்று ஆளும் கட்சிகளும் ...
ஆட்டிப்படைக்கும் ஆட்சிகளும்   ..
இருக்கும்வரை ....
அடிமை சங்கிலிகளின் அராஜகம் ..
ஓய போவதில்லை ..
மானுடம் தேடி மாயும் மனிதர்கள்
கண்ணீர் கரைகள் காய போவதுமில்லை ! 

உழைக்கும் மக்களின் உரிமைகளை
சூறையாடும் அதிகாரங்களால் ...
உத்தரவாதம் இல்லா உயிர்கள் !
உடையவனுக்கு உரியது  வெறும்  கைமுழம்
என்பது இருக்கும்வரை மடத்தனம்
மன்னிப்படுவதுமில்லை!   மறக்கப்படுவதுமில்லை

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: JsB on October 19, 2020, 04:21:47 PM
அடிமைகளோ  பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதமே
மனிதனின் நிறத்தின்
அடிப்படையில்
அமைந்திருக்கிறது
அடிமைகளின்
வரலாறு...
இன்று எனது
கண்ணோட்டத்தின்
கவிதையாய் கதறுகிறது...

மரணத்துக்கேதுவான
பாவத்துக்கானாலும்,
நீதிக்கேதுவான
கீழ்ப்படிதலுக்கானாலும்,
எதற்குக்  கீழ்ப்படியும்படி
உங்களை அடிமைகளாக
ஓப்புக்கொடுக்கிறீர்களோ,
அதற்கே கீழ்ப்படிகிற
அடிமைகளாயிருக்கிறீர்களென்று 
அறியீர்களா ?

அநேக அடிமைகளின்
முதலாளிகள்...
கருப்பு இன மக்களை
தாழ்ந்தவர்களென்று
விசுவாசித்தது ஏனோ?

அன்றும் ...இன்றும்...
மக்களை கேனையன்களாக்கி...
அடிமைகளிடம் இருந்து...
அதிக உழைப்பை கறந்து...
உடல் உழைப்பை சுரண்டி...
குளிர் காய்யும்
முதலாளிகளே ....
மக்களிடம் விற்றே
கொள்ளை லாபம் பார்க்கும்
உங்களுக்கு ஐயோ கேடு!
ரத்தம் கொதிக்கிறது...

முரடாட்டம் ஆடும்
மனிதர்களுக்கு அடிமையாய்
வாழ்ந்த தாசியின் மக்களே...
விலைக்கு வாங்கப்பட்டோரே...
கொடையாக வழங்கப்பட்டோரே...
பெற்றோரால் விற்கப்பட்டோரே...
வெள்ளத்தின்போது பாதுகாக்கப்பட்டோரே...
பிரமாணத்தின் மூலம் அடிமையானோரே...
கடன் காரணமாக அடிமையானோரே...
போரில் பிடிபட்டோரே...
சூதில் வெல்லப்பட்டோரே...
தாமே வழிய வந்து அடிமையானோரே...
வறுமையினால் அடிமையானோரே...
தன்னைத்தானே விற்றுக்கொண்டோரே...
அடிமைப் பெண்ணைத்
திருமணம் செய்து
அதன்வழி அடிமை ஆனோரே...
குறிப்பிட்ட கால அடிமைகளானவர்களே
கடுமையாக உழைக்கும் உங்களுக்கு
ஒரு வேலை உணவு கூட
காணும் கனவு போல் தான்

வண்ணம் பூசாத
ஓவியம் பேசும்
உங்களின்
இருண்டகால
அடிமைத்தனம்
இன்றுவரை
வாழையடி வாழையாக
தொடர்ந்துக் கொண்டிருப்பது ஏனோ?

ஒரு பயங்கரமான
அவல நிலை
உலகத்தில்
சாபமாய் மாறிபோனதன்
காரண கரனியர்களான
அதிகாரத்துவத்தில் இருக்கும்
காட்டுமீரான்டிகளே...
சிறுமைப் பட்டவர்களை
அடிமைத்துவம் படுத்தும்
கொடூரமானவர்களே...
மரண ஓலையின்
சத்தத்தை உலகமெங்கிலும்
கேட்க பண்ணும்
ஈவு இரக்கம் இல்லாத
கொலையாளிகளே...
வெறிபிடித்த நாய்கள்
போல கொள்கை
கொண்டவர்களே...

யாருக்கும் யாரும்
அடிமையும் இல்லை...
அடிமை தொழில் செய்வதற்கென்றே
பிறந்தவர்களும் இல்லை...
பல அடிமைகள்
கொடுமைகள் அனுபவித்தாலும்...
எந்த அடிமையும்
தூக்குத் தண்டனை பெறமாட்டானே...
அவனுக்குச் சிறைவாசம்
உணவும் உடையும் அன்றி
ஊதியம் பெறுபவரல்லரே என்பதை
எப்படி மறுப்பது?
எப்படி மறைப்பது...?
எப்படி மன்னிப்பது?

இப்படிப் பட்ட
இரும்பு இதயம் கொண்ட
முதலாளிகளுக்கு வேலை
செய்வதை  விட
ஞானம் நிறைந்த மக்களாய்
செயல் பட்டு வாழ்வதே மேல்
விடுதலையில்லாதபடி
வாழ்க்கையிலே
கலங்கி வாழ்கிற மக்களே...
நீதியின் வெளிச்சம்
உங்கள் மேல் உதிக்கும்...
காலமோ சமீபித்து விட்டது...

விடுதலை! விடுதலை! விடுதலையே!
விழித்திருங்கள்...
விழிதெலுங்கள்...
உங்கள் கண்ணீருக்கு
பதில் கிடைக்கப் பெற்று...
சத்தியத்தையும் அறிவீர்கள்,
சத்தியம் உங்களை
விடுதலையாக்கும்
இனி மனிதர்களுக்கு
அடிமையாயிராமல்...
இறைவனுக்கு
அடிமையாய்யிருங்கள்...
விசுவாசமாயிருங்கள்...
தாழ்த்தப்பட்டவர்களே...
என்று சொன்ன உங்களையும்
ஒருவர் உயர்த்த வல்லவராய்
இருக்கிறார் என்பதை
மறந்து விடாதீர்கள்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: அனோத் on October 19, 2020, 04:28:52 PM
அடக்க அடக்க
ஒடுங்கி ஓடும்
மிடுக்கர் கதை
இனி மாறும்.......

உரத்து உரத்து
கனத்த நெஞ்சம்
அடங்கி வாழும்
நிலை மாறும்.....

மனிதம் கொன்று
வணிகம் வென்ற
நுணுக்கம் இனி
தோற்று ஓடும்.........

நசுங்கி நசுங்கி
நடுங்கிப்போன
குரல்கள் நாதம்
இனி ஓங்கும்.............

அடிமைச்  சங்கிலி
உடைத்தெறிந்தும்
மிடிமை வாழ்வை
கொடுத்தாளும்
வீணர் யுத்தி
இனி வீழும்........

மனித நலனை
கழற்றி  வைத்து
அதட்டிப் பார்க்கும்
மானிய கொள்ளைகள்
சாமானிய சொத்துக்களாய்
இனி ஆகும்.........

இனமெனும் சங்கிலியால்
அடக்கினீர்
மதமெனும் போர்வையால்
அடக்கினீர்
சாதியெனும் போதையால்
அடக்கினீர்

இவையாவும் அறுத்தெறிந்து
உரத்துக் கொடுக்கும் குரல்களால்
இனி உணர்வீர் !

அடக்க நினைத்தால்
முடங்க மாட்டோம் !
நசுக்க நினைத்தால்
பொசுங்க மாட்டோம் !
அதட்ட நினைத்தால்
இனி  விரட்டி அடிப்போம் !

போராடுவோம் !
போராடுவோம் !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: thamilan on October 19, 2020, 05:44:10 PM
உலகில் பலப்பல போராட்டங்கள் நிகழ்ந்தன
ஆயுத போராட்டங்கள்
அறவழிப் போராட்டங்கள்
என பலவகைப் போராட்டங்கள் நடந்தன

வெள்ளையனை எதிர்த்து
அகிம்சா வழியில் போராடினார் காந்தி
ஆயுதம் ஏந்தி போராடினார்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
ஆயுதத்துக்கு  இல்லாத பலம்
அகிம்சாவாதத்துக்கு இருந்தது
அகிம்சயே வென்றது
மக்களின் மனதில் மகாத்மாவாக
குடியேறினார் காந்தி

தணலில் வார்த்த  இரும்பை
சம்மட்டி கொண்டு அடித்தாலும்
அதன் உருவம் தான் மாறுமே தவிர
அதன் தன்மை மாறாது
போராட்டமும் அப்படி தான்
எத்தனை இரும்புக்கரங்கள் கொண்டு அடக்கினாலும்
போராட்டத்தின் தன்மை தான் மாறுமே அன்றி
போராட்டம் மாறாது

சர்வாதிகாரம் தலைதூக்கும்போதெல்லாம்
சமத்துவம் வேண்டி
போராட்டம் தலைதூக்கும்
அடக்கியாள நினைக்கும் போதெல்லாம்
அடிமைத்தளையை அறுத்தெறிய
போராட்டம் வெடிக்கும்

போராடியதால் தான் பல
தன்னிகரற்ற தலைவர்கள் உருவானார்கள்
போராடியதன் பலனாகத் தான்
பல நாடுகள் உருவாகின

போராடும் போதெல்லாம்
அரக்க குணம் கொண்டு
இரும்புக் கரம் கொண்டு
அடக்கியாள நினைத்தனர் சர்வாதிகாரர்கள் 
சர்வாதிகாரம் எனும் சப்பாத்துக்கால்களால்
மிதித்துக் கொன்றனர்
அடங்கியதா போராட்டம்
அடையும் வரை அடங்காது
உண்மையான போராட்டங்கள்

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: இளஞ்செழியன் on October 20, 2020, 12:37:07 AM
மனம்நிறை வன்மமும்
குருதியில் வெறுப்புமென   
நியாயம் பேசுவதாக
போலியானதோர் அவதாரத்தோடு  சுற்றிவருகிறார்கள் விஷம் கலந்த புன்னகைக்கு சொந்தக்காரர்கள்...

தேசபக்தர்கள் என்றும்,
நடுநிலைகள் என்றும்,
மதம் சார்ந்து யோசிக்கவே முடியாதபடி பிழைப்பிற்க்கே நேரமில்லாத பரப்பானவர் போன்றும்,
அண்டை நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களின் மீது அனுதாபம் கொண்டவர் போன்றும்...
பல முகமூடிகளுடன்
சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும்   உலா வருகின்றன
"எங்களை பார்த்து பயப்பட தேவையில்லை"
என சொல்லிக்கொண்டே குரல்வளைகளை குறிவைக்கும்
குருதி வெறிகொண்ட ஓநாய்கள்.

ஆட்சியதிகாரத்தின் சாய்வு நாற்காலிகளில் குரூர பார்வையோடு இவர்கள் ஒய்யாரமாய் சாய்ந்தாடுகையில்
துரோகத்தின் இருள் சூழ்ந்துக்கொள்கிறது எம்மை..

முன்தேதியிட்ட கொலைவாள்கள் தலைகளுக்கு மேலாக
தொங்கத் துவங்குகையில்
'வாழ்தல் எனும் பண்பு கட்டுக்கதையோ??. '
எனும் ஐயம் சூழ்ந்துக்கொள்கிறது..

விரலுயர்த்தி குரலெழுப்பி
வாழ்தலின் சத்தியக் கூறுகளுக்காய்
சமர் செய்கிறாய்..

உன் ஒற்றை விரலின் உறுதியில்
முளைத்து துளிர்க்கிறது
நம்பிக்கையெனும் விருட்சம்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: MoGiNi on October 20, 2020, 02:32:16 AM
உழைக்கின்ற மக்கட்க்கு
உணவுக்கு வழியில்லை
பிழைப்பென்று
வந்தவர்க்கு
உவந்தளிக்க
மனதில்லை
வாழ்கின்ற போதே
மனிதம்
சாகின்றதையோ ...

ஊன் உருகி
உயிர் கருகி
உனக்கும் எனக்குமாய்
உழைத்தவர் இன்று
உயர்
குரலுக்கு அடிமையாகி
உதைக்கின்ற
வீணரிடம்
உணர்விழந்து
உயிர் துறந்து கிடக்கிறார் ..

அடக்குவது
அவர்கள் பலம்
எதிர்த்து
அழிந்து போவது
எங்கள் வரம்
படைத்திடட இறைவனே
உன் பார பட்ஷத்தில்
பலியாகி போவது
உழைக்கின்ற வர்க்கமன்றோ ...

மானிடத்தின்
பிறழ்வுதனில்
மதிப்பிழந்து கிடப்பதெங்கள்
மாமனிதம்..
சா வரினும்
எங்களினம்
சாதத்தில் கைவைக்க
வாழ்வுருகி
வருந்தி உழைத்தோர்
தோள் தடவி
துணை நிற்க
தூய உள்ளம் ஏதுமில்லை ...

அடிமைகளாய் வாழ்ந்தவர்
கையில் அதிகாரம் அமைந்துவிட்டால்
அதன் கீழ் வாழ்பவரும்
அடிமைகள் தானென்பார்..
வாழ்வதட்கே போராடடம்
எனும் பொழுது
வீழ்ந்ததட்கு
போராடி ஜெயிப்பதெங்கே ..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: SweeTie on October 20, 2020, 08:53:27 AM
இரும்பு   சங்கிலிகள் 
இங்கிதம  இல்லாத ஈனர்கள் 
இறுக்கும்   குரல்வளைகள்
ஈட்டும்   அவலக்  குரலோசைகள்
கேட்டு அதிரவில்லையா அகிலம்?. 

விண்ணை பிளக்கும்  கூக்குரல்
சுதந்திர  தாகத்தின்  மந்திரம்
நசுக்கப்படும்   ஜனநாயகம் 
நகைக்கிறது   சர்வாதிகாரம்
கண்டும் காணாமல்  சர்வதேசம

 உரிமைகள்   மறுக்கப்பட்டு
உடைமைகள்   பறிக்கப்பட்டு 
 சுயமரியாதைகள்  முடக்கப்பட்டு,
முகவரி இழந்து  நிர்வாணமாய்   
முடங்கி கிடக்கிறது  மானுடம். 

இனவாதம் மொழிவாதம் 
இரண்டையும்  தூண்டிவிட்டு
வேடிக்கை பார்க்கின்றன
மதம் பிடித்த   கூட்டங்கள் 
இறப்பது என்னமோ  ஏழைகள் மட்டுமே!   


கோடிகள்  தேடும்  மனிதர்கள்   அவர்கள் 
கொஞ்சமும்  இரக்கம்  காட்டார்
கேவலம்....
சேற்றினில்  புரண்டு  சோறிடும் உழவரை
சாட்டையால்   அடித்து  சங்கடப்படுத்தும்
,இவர்க;ளா  மக்களின்  தலைவர்??

மூலைக்கு  மூலை  தேடுகிறோம்
நாடுகள்  எங்கும் தேடுகிறோம்
எங்கள்   சுதந்திர  தலைவர்கள்    மறைந்ததுபோல்
ஜன நாயகம்  எங்கே  புதைந்ததுவோ 
அராஜகம் அண்டத்தை ஆண்டதுவோ
அன்பும்  அமைதியும் போனதுவோ   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: TiNu on October 20, 2020, 02:44:50 PM
இயற்கையின் வயிற்றில் பிறந்தோம்...
அவள் அணைப்பிலே வளர்ந்தோம்..
அவளின் நிழலிலே நாம் வாழ்கின்றோம்..
தாயின் மடியில் குழந்தைகள் போல..

ஓரறிவு கொண்ட தாவரங்களில் தொடங்கி
ஆறறிவு படைத்த மனித இனம் வரை..
இயற்கையையே சமாதியாக்கும் சில கயவர்களின்
மரபணு மாற்ற செயலில் சிக்கி சிதைகிறது உயிரினங்கள்

நாளைய சந்ததியரை சிறிதும்
மனதில்  நற்சிந்தனைகள்  கொள்ளாது...
கயவர்களின் விசுவாச கைக்கூலியாக
இடுகாடு  கழிநடமிடும் சில தலைமைகள்...

தன் உற்பத்தியை காசாக்கும் கொள்ளையனின் 
வசீகர பேச்சில் மதிமயங்காதே.. மனிதா! நீ அவனிடம்
விலை போகாதே.. சந்தை பொருளெல்லாம்
வாங்கி குவிக்க குப்பை கூடையல்ல உன் வீடு..

மனிதா! நீ சுதந்திரமானவன்... உனை அடக்கும்
கைக்கூலியே பேராசையின் அடிமை....
உன் சிந்தனையை விசாலமாக்கி இயற்கையை  கைப்பிடி..
செயற்கை இல்லா  வாழ்வு நம் உரிமை..

பூமியின் செல்வம் தன் சொத்தென 
சுரண்ட நினைக்கும் சோம்பேறிகளை
மனிதா!  நீ ஒன்றினைந்து ஓட ஓட விரட்டு
சிறு தீக்குச்சியும் ஒன்றிணைந்தால் தீப்பந்தம் ஆகும்

வலியவர் முன்னே எளியவர் குரல் கேட்காது என்பர்...
சில மூடர்கள்.. கேட்கும் கண்டிப்பாக கேட்கும்...
மனிதா!  சிறுதுளி பெரு வெள்ளம்... 
அவர்களிடம் வீழாதே.. எழுந்து நில்... எதிர்த்து நில்...   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 247
Post by: joker on October 20, 2020, 04:09:04 PM
விசித்திரம் நிறைந்த
இவ்வுலகத்தில்
விசித்திரமான
மக்கள் சிலர்

வறுமை கோட்டுக்கு
கீழ் உள்ள மக்கள் என்று
சொல்லி கோடு கிழித்து
கோடு தாண்டாமல்
பார்த்து கொள்கிறார்கள்
சிலர்

பணம்,ஜாதி , இனம்
என மனிதனை பிரித்து
ஒதுக்கி  விடுகிறார்கள்
சிலர்

ஆள் பலம் , பண பலம்
என்று அதிகாரத்தை
கையில் எடுத்துக்கொள்கிறார்கள்
சிலர்

அதிகாரம் எப்படி
செயல்பட வேண்டும் என
தேர்தல் நெருங்கும் நேரம் மட்டும்
மக்களுக்கு உணர்த்தும்
சிலர்

அறிவிக்க படும்
நலத்திட்டங்களெல்லாம்
ஊடகத்தில் மட்டும் பரவுவதை
கொண்டாடும்
சிலர்

5 நொடிகள்
உங்கள் கால்களில் விழுந்தும்
கைகூப்பயும் ஒட்டு கேட்டு
5 வருடங்கள்
உங்களை ஊனத்தோடு
உலவ விடும் அரசியல்வாதிகள் என்று
சிலர்

ஈன செயலுடன்
தவறு செய்பவன்
எந்த நடிகனின் ரசிகன் என்றும்
எந்த கட்சியின் தொண்டன் என்றும்
ஊடகத்தில் விவாதமாக்கி
அவன் மனிதனல்ல
என்ற ஒன்றை மறந்து,மறைத்து
அடுத்த பிரச்சனைக்கு தாவும்
நடுநிலையை நிலை நாட்ட
போராடும் ஊடக துரோகிகள்
சிலர்

இது ஏதும் அறியாமல்
ராமன் ஆண்டாளும்
இராவணன் ஆண்டாளும்
எனக்கு கவலையில்லை
என் கவலையே எனக்கு போதும்
என முக்காடு இட்டுக்கொள்ளும்
சிலர்


அடக்குமுறை கண்டு
காந்தியும், காமராசரும், பெரியாரும்
அவ்வப்போது உருவாகிறார்கள்
நம்மிலிருந்து
சிலர்

நாடு முன்னேற
நமக்கு இன்னும்
வேண்டும் இவர்களை போல
சிலர்