FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 20, 2020, 11:44:02 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: Forum on June 20, 2020, 11:44:02 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 236
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F236.jpg&hash=d33074435b09fb38a5029206a80072cbeca4b440)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: Raju on June 21, 2020, 12:56:29 AM
அங்கு
என்ன இருந்துவிட கூடும்..

எதற்காக
முகத்திருப்பல்
எனக்காக
அலங்காரமிட்ட உன்னால்
என்
ஆங்காரத்தின் பின்னால்
அமிழ்ந்திருக்கும்
அன்பை
புரிந்து கொள்ள முடியவில்லையா..

உன்
செவிகளுக்கு
தெரிந்திருக்கும்
என் வருகை 
தலை கொண்ட
மலர்களுக்கு
மணந்திருக்கும்
என் சுவாசம்...

வலயல்களுக்கு
தெரிந்திருக்கும்
என் தேவை..
ஆனால்
உன் மனதுக்கு மட்டும்...

என்
அன்புக்கு இல்லையடி
அளவு கோல்
ஒரு முறை திரும்பு
உன் கண்களாவது
பேசட்டும்....
அதில்
என்
இருதயம்
இளைப்பாறட்டும்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: MoGiNi on June 21, 2020, 01:11:47 AM

எங்கோ தொலைவினில்
என் நினைவுகளின் படர்தல்
நிச்சயப் படுத்திக் கொள்கிறது
என்னுள் உன் இருப்பை

உறையும் பனிப் பாறை என
உன் நினைவுகளின் இருப்பும்
உன் நிஜங்களின்  இல்லாமையும்
இறுகி உறைகிறது இதயமெங்கும்

நீ வேண்டும்
என் ஆன்மாக்கு  உயிரூட்ட
உலர்ந்து உதிரும்
ஒற்றை ரோஜா இதழ் போல
என் எண்ணக் கனவுகள் அனைத்தும்
ஒவோன்றாய் உத்திர ஆரம்பித்து விட்டது
இன்னும் சில மணித் துளிகளில்
அவற்றின் சமாதி நிர்ணயிக்கப் பட்டுவிடும் .

ஓர் ஜாமத்தில்
ஒற்றையாய் காய்கின்ற இந்த நிலவு
என்னுள் உன் விம்பத்தை
வார்த்து மௌனிக்கின்றது
ஆசைகளும் ஆர்வங்களும்
எரிந்து கருகும் வேளையிலும்
ஒற்றை தலையணை
உன் பெயர் சொல்லி நனைகிறது .

ஒரு கணம் உன் அணைப்பை தேடும் உள்ளம்
மறு கணம் உன் இன்மையின் நிஜத்தில் எரிகின்றது
இந்த தவிப்புக்கள் எல்லாம்
எட்டி நின்று தன்  கூரிய நகங்களால்
என் இதயக் கூட்டை பிய்த்து
வடியும் உதிரத்தை உறிஞ்சும் பேய்கள் என
வதைத்து சிதைகின்றது ..

இந்த இரவை பற்றி பிடித்திருக்கும்
வெண் பணியை போல
என்னை பற்றி படரும் உன் நினைவுகள்
மெல்ல மெல்ல படந்து உறைகிறது உணர்வுகளில்

பாதைகள் அற்ற
என் இதய வீடுக்குள்
நீ வந்து போகும் ஒற்றையடி பாதை கூட
மெல்ல அடைபடும் ஓசை கேட்கிறது ..
தனிமைகளை விதைத்து செல்லும்
உன் பயணம் தொடங்கிவிட்டது
தடுமாறி தடம் மாறி என் பயணம்
அதை பற்றி படர்கிறது .


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: PowerStaR on June 21, 2020, 02:18:27 AM
என்னவளே என் இதயத்தின் தேவதையே
வண்ண ஒளியாய் மின்னல் இட்டாய் என் கண்களிலே
 வட்டமிடும் பௌர்ணமியாய் உன் முகத்தை பார்க்கின்றேன்
 உன் முகத்தைப் பார்த்தவுடன்
 சூழ்நிலை மறக்கின்றேன்

 காந்தக் கண்ணழகி என்னை ஈர்க்கும்  பெண்ணழகி
 உந்தன் ஓசை கேட்டாலே பூரிக்கும் உள்ளம் தன்னாலே

 பட்டு சேலையிலே என் மனசை கட்டி வைத்தவளே
 நித்தம் உன்னை சுற்றிவர சிரிப்பினால் சிறை வைத்தாயோ

 படைத்தவனின் அதிசயங்களை உன்னாலே உணர்ந்தேனே                         
 உன் அழகில்  மயங்கி  நான்
 உலகினை மறந்தேனே

 வண்ணக்குயில் உன் காதலால் என்னை முழு கடித்தாய்
 என் இதயத்தின்
 உயிர் துடிப்பாய் மாறிவிட்டாய்

 நீரின்றி அமையாது உலகம்
 நீ இல்லை என்றால் இயங்காது என் இதயம்
 என்னவளே என்னவளே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: thamilan on June 21, 2020, 07:15:00 AM
அழகோவியம் இவள்
பிரமன் படைத்திட்ட படைப்புகளின்
உச்சம் இவள்
சிற்பி வடித்திடா சிற்பம் இவள்
குளிர் நிலவு கொட்டும் அருவி
சிலிர்த்திடும் தென்றல் என
இயற்கை ஒன்றாகி உருவான
அழகுப் பதுமை இவள்

கருநாகம் போலே
நீண்ட கருங் கூந்தல்
காதோடு கதை பேசும்
அவள் சொல்லுவதை எல்லாம் ஆமோதிக்கும்
காது  ஜிமிக்கி
கலகலக்கும் கைவளையல்கள்
வானவில் போலே
வளைந்த புருவங்கள்
வா வந்து என்னை முத்தமிடு - என
சொல்லாமல் சொல்லும்
ஆரஞ்சு சுளை உதடுகள்
மொத்தத்தில் இவள்
அழகான அஜந்தா ஓவியம்

இவள் காத்திருக்கிறாள்
ஜன்னல் ஓரம் - தன்னை
கவர்ந்து சொல்லவரும்
பிரிதிவிராஜ் மன்னனுக்காக - அதுவும்
இன்றல்ல நேற்றல்ல
பல வருடங்களாக
ஜன்னல் கம்பிகளை போல இறுகிய மனதுடன்
முதிர் கன்னியாக

அழகை படைத்த இறைவன் - இவர்களை
ஏழைகளாக படைத்தது விட்டானே
பணத்துக்கு முன்னாள்
அழகு இரண்டாம் பட்சம்  தானே
பெண்களுக்கு மாலை சூடும்
ஆண்களை விட
பணத்துக்கு மாலை சூடும்
ஆண்கள் தானே அதிகம்

பெண்களே இந்த நிலை மாறவேண்டுமென்றால்
காதலியுங்கள் என்று சொல்ல நான்
கல்நெஞ்சன் அல்ல
காதலிலும் கடைசியில் பணம் தான்
கழுத்தைப் பிடிக்கும்

பெண்களே காத்திருந்தது போதும்
உங்கள் இந்த நிலை மாற வேண்டுமென்றால்
எடுங்கள் கையில் ஆயுதத்தை
கல்வி  ஒன்றே அந்த ஆயுதம்
கல்வி எல்லாவற்றையும் உங்கள்
காலடியில் மன்றியிடச் செய்யும்
நீங்கள்  காத்திருக்கும் மன்னனும்
உஙகள காலடியில் வந்து கிடைப்பான்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: Unique Heart on June 21, 2020, 12:57:27 PM
"இயற்க்கையும் நேசம் கொள்ளும் தேவதையின் காத்திருப்பு "

என் இனியவளே !  மலர்களும் பொறாமை கொள்ளும்  உன் அழகை  பார்த்து,

விண்மீன்களும்  வியந்து நிற்கும் ,
உன் ப்ராஹாசமான  மிளிரும் முக அழகை கண்டு,

கடல்  நீரும் காத்து கிடைக்கும் உன்  அழகிய பாதம் தொட.

பூங்காற்றும்  புன்னகைக்கும்  உன் பொன்னுடல் மேனியை  தீண்டியதினால்.

மரம்  செடிகளும் மயங்கி நின்றது  மங்கை அவள் மனம் கண்டு.

இறுதியில்  உன் நிழலும்  உன் மேல்  நேசம் கொண்டதடி  உன்னை பின்  தொடர்ந்ததினாலே.

தன்னை போன்ற அழகு இவ்வுலகில் இல்லை என்று கர்வம் கொண்டிருக்கும் ரோஜா மலரிடம், என் அவளை சென்று காண்பிக்க வேண்டும்,

 இவளைப்போன்ற அழகு என்னில் இல்லை என்று,  கர்வம் கொண்ட ரோஜா வெட்கி தலைகுனிவதை பார்க்க.

இயற்க்கை மொத்தமும் என் அவளின் அழகு தனை அலங்கரிக்க காத்து நிற்க..

என் நேசகி அவளின் காத்திருப்பு எனக்கானது என என்னும் பொழுது, என்னுள்ளம் காதல் எனும் கடலிலே மூழ்கி விட்டது..

என்றும் என் தேவதை உடனான தொடர் பயணத்தில்   -MNA...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: TiNu on June 21, 2020, 01:43:50 PM
பெண்ணே, ஏன் இந்த அமைதி...
நெற்றியில் பொட்டிட்டு...
கைகளில் வளையல்கள் பூட்டி...
தலை நிறைய பூச்சூட்டி...
பட்டாடைகள் உடுத்தி...
.அழகு பார்க்கும்
இவ்வுலகம் எண்ணியா?...

பெண்ணே,ஏன் இந்த  மௌனம்...
சாஸ்திரங்கள் பெயர் சொல்லி..
சமூக முறைகள் சொல்லி..
கல்வி இருந்தும் பயனின்றி..
பேச தெரிந்தும், பேசா ஊமையாய்.
வீட்டை அலங்கரிக்கும்
புதுமையாய்.. பார்க்கும்
இவ்வுலகம் நினைத்தா?...

பெண்ணே,ஏன் இந்த பார்வை...
ஆணின் தேவையாய்...
உயிர் வளர்க்கும் குடமாய்..
உற்றார் உறவினர் வேலையாளாய்..
மனையின் சுமை தாங்கியாய்  பார்க்கும் 
இவ்வுலகம் பார்த்தா? ...

பெண்ணே, அழகு பொம்மையாய்
உன்னை பார்க்கும் உலகை... தகர்த்தெறி!!!...
உருவம் தாண்டி.. உன் திறமையை காட்டு...
ஆளுமையை உன் அறிவுடன் பறைசாற்று..
அப்பொழுது மாறும் இந்த உலகின் பார்வை...

பெண்ணே, நீ குருடல்ல..
சாஸ்திரங்களும் சட்டங்களும்
உன் கைவிலங்கல்ல... அவற்றின் 
கருவை வில்லாக்கி.. அதன்
பொருள் அஸ்திரமாக்கி..
உலகுக்கு நிரூபி நீயும் ஊமையல்ல..

பெண்ணே, நீ ஆணுக்கு எதிரியும் அல்ல..
அவனுக்கு குறைத்தவளும் அல்ல...
பார்வையை ஏராக்கி...  சிந்தையை எருதாக்கி..
விவேகம் எனும் கயிற்றால்.. உலகை காக்கும் பாவையாவாய்..
பெண்ணே, உனை பாட பதினாறு அடிகள் போதாதடி..
என் சொற்களும் பொருளும்.. நீயே பெண்ணே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: இளஞ்செழியன் on June 21, 2020, 03:07:24 PM


அணியாகும் அசைவுகளினால்
அழகுக்கு தானே
அமரச் சிறகுகள் புனைகிறாள்

புன்னகைக்கும் விழிகளில்
புதுஒளி பாய்ச்சி
மதுமலரிதழ்கள் அவிழ்க்கிறாள்

விரல்களில் நிழலுருவங்கள்
விதவிதமாய் விரியச் செய்து
வியப்பின் விட்டம் கூட்டுகிறாள்

மென்தோள் குவித்தும்
மெல்லிடை சுழித்துமாடி
மேகநடனத்தில் மழையாகிறாள்

இதயம் உரைக்கும்
இன்முகம் தன்னில்
இன்னொரு இளமதி இயற்றுகிறாள்

கைபிடித்துக் கடக்கும்
நடைபாதைத் தடத்தில்
கவியும் நிழலாய் நீள்கிறாள்

அருகில்லா நாளில்
தனிமைச்சூடு தணிக்கும்
ஈரம் பகிரும் முத்தமாகிறாள்

நானென மீந்து
நாட்களைக் கடத்தும்
நாளைகளுக்கான நினைவாகிறாள்

கடைசியாக
காலம் கதைக்கும்
தேவதைக்கதைகளில் நாயகியாகிறாள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 236
Post by: யாழிசை on June 21, 2020, 03:08:12 PM
அன்பு Honey Bunny  ஏ....
ஆசை மொசக்குட்டியின் காதல் மடல்...
இல்லை இல்லை காதல் கவிதை........

திரை கடல் தாண்டி திரவியம் தேட
சிங்கப்பூர் சென்ற சீமானே......
சின்னமணி நானும் இங்கு
சிக்கிமுக்கி தவிக்கிறேன்.....


அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணமாக
கயல் விழிக்கு கண் மையிட்டு
காதில் குலுங்கும் ஜிமிக்கி கம்மலுடன்
கையில் கலகலக்கும் கண்ணாடி வளையல்
காலில் சலசலக்கும் கொலுசு களோடு
வஞ்சிமகன் வருகைக்காய் வழி மீது விழி வைத்துக்
கன்னிகை நானும்  காத்திருக்கிறேன்  கனவுகளோடு...
 
இனியவனின் இன்பமான
இம்சைகளில் இசைத்திடும் துடிப்போடு
உந்தன் காதலை நெஞ்சமெல்லாம்  நிரப்பி
நித்தம் நித்தம் தவித்து தனித்திருக்கும்
அன்பு துணைவி இங்கே

 வாராயோ வந்து என்னை சேராயோ