FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on August 25, 2019, 10:30:37 AM

Title: நான் நல்லவனா இல்லை கெட்டவனா
Post by: சிற்பி on August 25, 2019, 10:30:37 AM
அன்பில் சில மாற்றம்
அன்பால் சில மாற்றம்
ஒவ்வொரு நாளும்
இந்த வாழ்க்கை
எனக்குள்
அநுபவங்களாக
வந்து போகிறது

நான் யார்?
நல்லவனா நான்
இல்லை
கெட்டவனா நான்

நான் நான்
இலையுதிர் காலம்
முடிந்தவுடன்
வசந்தம் வீசும்
தென்றல் நான்
கவிதைகள் பேசும்
பெண்ணினத்தை
ஒரு காதலன் போல்
தழுவிடுவேன்
கடும் சினம் கொண்டு
புயலானால் நான்
கற்களை கூட
சிதைத்திடுவேன்

வான் மழை தூறல்
துளியாகி
மண்மேல் சேரும்
மழையாகி பின்
விண்வெளி போகும்
மேகம் நான்

எல்லைகள் இல்லா
வான்வெளியில்
இரு சிறகுகள் கொண்ட
பறவை நான்
சிறகுகள் அடித்து
நான் பறந்தால்
உயரம் தூரம்
எனக்கில்லை
இந்த உலகில்
என் போல்
எவரும் இல்லை

உலகெலாம்
துயில் கொள்ளும்
இரவெல்லாம்
ஆனாலும் உறங்காது
எனது விழிகள்
கண்ணீர் துளிகளில்
காதலில்
காதல் தரும் களவியலில்
புலரும் காலை பொழுதில்
மலரும் பூக்களில்
தென் சுவை போல
வான்வரைக்கும்
கற்பனைகள்
வடித்து வைக்கும்
கவிஞன் நான்

உயர் காதலிலே
திறை காமத்திலே
உன்னிலுமே
ஏன் என்னிலுமே
ஒரு உயிராய் உடலாய்
உறைபவன் நான்

பிறப்பால்
இறப்பால்
எதனாலும்
சொல்லமுடியாத
மாபெரும்
தத்துவம் நான்

      கவியரசு சிற்பி...