FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 03, 2018, 11:21:55 PM

Title: ○○○ தாய் என்பவள்○○○
Post by: Guest on November 03, 2018, 11:21:55 PM
மனம் விட்டுப்பேசும் ஒரு நாளில்
மனம் திறக்கிறாள் அம்மா.
அத்தனை சிக்கலொன்றும் இல்லாத
ஆளுமை தான் அவளுடையது.

அன்பென தான் அறிந்த,
தனக்கு மற்றவர்கள் அறியத்தந்த
செய்கைகளை பிசிறில்லாமல் செய்பவள் அவள் .

தன் செய்கைகளின் காரணிகளை
ஆராயுமளவு வாய்ப்புக்கள் அவளுக்கு இருந்ததில்லை..

உலகறியா இளம்பெண்ணாய்
புகுந்தவீடு நுழைந்த நாள் முதல்,
பேரக்குழந்தைகள் கொஞ்சும் இந்நாள் வரை
 'உலகம் தெரியாதவள்' என்ற பொருந்தாத
அதைரியப்படுத்துதலால் அவள் தேடல்
கொன்றே நாட்களை கடத்தியிருக்கிறது காலம்.

தனக்கு கிடைக்காமல் போன இறைவன்
அளித்த உரிமைகள் அவளை சஞ்சலப்படுத்தாமல்
இருக்க அவள் பிறந்தவீட்டார் மீது அப்பப்போதாய்
அப்பா காண்பித்த கரிசனமும்,
அவர்கள் சூழ அவள் இருக்கையில் வழக்கத்திற்கு
மாறாக அவர் கொடுத்த முக்கியத்துவமும்
 போதுமானதாக இருந்திருக்கும்.

நிறைகள் கூறியே ஞாபகப்படுத்துகிறாள்
அப்பாவோடான அவள் உறவை.

பிள்ளைகளுக்காக அவளிட்ட
ருத்ரதாண்டவ சண்டைகள் கொண்டே
அவளை ஞாபகப்படுத்திப் போற்றுகிறது
பிள்ளை மனம்.

அவளை புரியவேண்டுமெனில்
தன்னலமில்லா ஒரு தாயன்போடு
யோசித்தாலே ஒழிய சாத்தியமில்லை.

புதுமைகளையும் புதிய சிந்தனைகளையும்
புரிந்த பின் உதாசீனப்படுத்துவதில்லை அவள்.

அவளுக்கான முறைகளோடு புரியவைக்க
மனமும் பொறுமையுமில்லாமல் 'உலகம் தெரியாதவள்'
என குறைப்பட்டுக் கொள்கிறார்கள் பிள்ளைகள்.

அவளுக்கான உலகென்பது அவள்
பிள்ளைகளுக்கான அன்பாய்
அவள் அறிந்தவைகளும், அவளுக்கு
அறியத்தரப்பட்டவைகளும் மட்டுமே..

பேசஒன்றுமே இல்லாத நேரங்களில்
உரிமையோடு இடும் சண்டைகள் கூட
அவளை சோர்வடையச் செய்வதில்லை.

ஆனால் மௌனங்கள் தனித்துவிடும்
பொழுதுகளில் அம்மா உலகறியா ஆன்மாவாய்
சுருங்கிப்போகிறாள்.

அண்டம் கொள்ளா அன்போடு
அவள் காத்திருப்பது உயிர் உணரும்
ஒரு சம்பாஷணைக்காய்.

பேரக்குழந்தைகளின் அன்பைத்தாண்டி
அவள் எதிர்பார்ப்பது அவளுக்காய்
பிள்ளைகள் ஒதுக்கும் நேரப்பகிர்வுகளை மட்டுமே...

#கவிதைகள் வாசிக்காத
கவிதைகள் பிடிக்காத
இந்த கவிதையை படித்துப் பார்க்க வாய்ப்பே இல்லாத
அம்மாவிற்க்கு அர்ப்பணம்...
இது கவிதையல்ல... நானே!
Title: Re: ○○○ தாய் என்பவள்○○○
Post by: Guest 2k on November 04, 2018, 08:01:33 AM
அம்மா என்பவள் அதி அற்புதமானவள். அது போல அற்புதமான கவிதை நண்பா :)