FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Anu on March 20, 2012, 09:18:24 AM

Title: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 09:18:24 AM
விநாயகர் புராணம் பகுதி-1

 
குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று உன் தாய் வீட்டுக்கு தாரை வார்த்து விட்டாயா? உடனே அவற்றை என்னிடம் கொடு. இல்லாவிட்டால், உன்னை அடித்தே கொன்றுவிடுவேன், என்று மிரட்டினான் காமந்தன். இவன் குடும்பினியின் கணவன். உலகத்திலுள்ள அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் சொந்தக்காரன். குறிப்பாக வேசியர் சுகத்தில் திளைத்துக் கிடந்தவன். குடும்பினி அழுதாள். அடி உக்கிரமாக விழவே, வேறு வழியின்றி, பானைக்குள் ஒளித்து வைத்திருந்த நகைகளைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். என்ன தைரியமிருந்தால், வீட்டுக்குள்ளேயே ஒளித்து வைத்து விட்டு இவ்வளவு நேரம் காக்க வைத்திருப்பாய். அங்கே, என் காதலி அல்லிராணி என் வரவுக்காக காத்துக் கிடப்பாள். அவள் உன்னைப் போல அழுமூஞ்சியல்ல. அழகே, வடிவானவள். சோகத்திலும் புன்னகை சிந்துபவள். என் இதயராணியான அவளுக்கே இந்த நகைகள் இனி சொந்தம், என்றவன், தன்னை காக்க வைத்ததற்காக மீண்டும் அவளை தன் கோபம் தீர உதைத்து விட்டு கிளம்பி விட்டான். குடும்பினிக்கு துயரம் தாங்க முடியவில்லை. இனியும் இந்த பாவியுடன் வாழ்ந்தால், கட்டிய தாலியையும் பறித்து விடுவான். இவன் நமக்கு இனி பொட்டு வைக்க மட்டுமே பயன்படும் ஒரு கணவன். இன்னும் கொஞ்ச நாளில் நம் குழந்தைகளையும் இம்சை செய்ய ஆரம்பித்து விடுவான். ஆண்டவன் எனக்கு ஏழு மகன்களையும், ஐந்து பெண்களையும் தந்திருக்கிறான். கடைசிகாலத்தில், இவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியத்தில் வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறி, தாய் வீட்டில் போய் அடைக்கலமாகி விட்டாள். தாய் வீட்டில் நல்ல வசதியுண்டு. தன் பேரன், பேத்திகள் சகிதமாக குடும்பினியின் பெற்றோர் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொண்டனர். கணவனைப் பிரிந்து வந்தது அவர்களுக்கு வருத்தத்தைத் தந்தாலும், தன் மகளின் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மேலிட அங்கேயே அவள் தங்கிவிட்டாள்.

அல்லிராணியின் வீட்டுக்குச் சென்ற காமந்தன், அவளோடு ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருந்தான். நீ கொண்டு வந்த குறைந்த நகைக்கு, இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது. மேலும், ஏதாவது கொண்டு வா, எனச் சொல்லி விரட்டி விட்டாள் அல்லி. வீட்டில் இன்னும் ஏதாவது கிடைக்குமென நம்பி வந்த காமந்தனுக்கு அதிர்ச்சி. வீடு பூட்டிக்கிடந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தான். ஒரு செம்பு கூட இல்லை. பக்கத்தில் விசாரித்தான். நீ செய்த கொடுமைக்கு எவள் தான் உன்னோடு வாழ்க்கை நடத்துவாள். அவள் பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள், என்றனர். காமந்தன் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.உழைத்து பொருள் சேர்க்க தன்னால் முடியாது. ஆனால், கொள்ளையடித்தால் என்ன என்று தோன்றியது. பெரிய கடாமீசை ஒன்றை வளர்த்தான். இடுப்பில் பிச்சுவா கத்தியை செருகிக் கொண்டான். இரவு நேரங்களில், சாலைகளில் போவோர் வருவோரை மிரட்டி கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டான்.  தர மறுத்தோரை கொலையும் செய்தான். காலப்போக்கில், பணத்தை தந்தவர்களையும் கொலை செய்வதை பொழுது போக்காக கொண்டு விட்டான். பணம் மிக அதிகமாக கொட்டவே, அல்லியை மட்டுமின்றி, இன்னும் பல பெண்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, எந்நேரமும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தான். பணம் கிடைக்காத நாட்களில், காட்டு வழியே செல்லும் தம்பதிகளை மறித்து, கணவனைக் கொன்று விட்டு, அவனுடைய மனைவியைக் கெடுத்து கொன்று விடுவான். அவன் செய்யாத பாவமே இல்லை. ஒருநாள், உச்சகட்டமாக ஒரு பாவம் செய்தான். ஒரு பிராமண இளைஞன் அவனிடம் சிக்கினான். அவனிடம் இருந்த பொருளைக் கேட்டதும் பயந்து போன இளைஞன் கொடுத்து விட்டான். கத்தியை எடுத்து அவனைக் கொல்லப் பாய்ந்த போது, அந்த இளைஞன் கதறினான்.திருடனே! என்னைக் கொன்று விடாதே. எனக்கு இரண்டு மனைவிகள், மூத்தவளுக்கு குழந்தை இல்லை. இரண்டாம் மனைவியோ இன்னும் வயதுக்கு வராதவள். அவள் வயதுக்கு வந்த பின்னர், பித்ருகடன் செய்ய ஒரு ஆண்பிள்ளையை பெற்ற பின்பே மடிய வேண்டும் என நினைப்பவன் நான். ஆண் குழந்தை இல்லாதவனுக்கு நற்கதி கிடைக்காது என்பதை நீ அறிவாய். பொருளைத் தான் கொடுத்து விட்டேனே. என்னை விட்டுவிடு, என கெஞ்சினான். ஆனால், எதையும் காதில் கேட்காமல் அவனைக் கொன்று விட்டான் காமந்தன்.

பிராமணனைக் கொல்வது பெரும் பாவம். இறந்து போன பிராமணன், பிரம்மஹத்தி என்ற பூதமாக மாறி அவனைப் பீடித்தான். அன்றுமுதல், காமந்தனுக்கு எதுவுமே சரிவர நடக்கவில்லை. உடலுக்கு முடியாமல் போனது. பலமிழந்து தவித்தான். தன் நிலையை தன் சகா ஒருவனிடம் சொல்லி, தன் மனைவியை அழைத்து வரும்படி கூறினான். அவன், அங்கே போய் அதனைச் சொல்ல, பாவம் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். நான், அவனோடு  வாழ முடியாது என சொல்லிவிடு, என குடும்பினி சொல்லிட்டாள். சகா இதை காமந்தனிடம் சொன்னதும், நொந்து போன அவனது வாழ்விலும் திருப்பம் வந்தது. சில பிராமணர்கள் ஒருநாள் காட்டு வழியே வந்தனர். நோயின் வேதனை தாளாமல் முனகிக் கொண்டே, அவர்களை அவன் அணுகினான். அவர்களை வணங்கி, தன்னிடமிருந்த பொருட்களை தானம் செய்தான். ஊருக்குள் இருக்கும் மற்ற பிராமணர்களையும் அனுப்பி வைக்க கூறினான். விஷயமறியாத அந்த வெளியூர் பிராமணர்கள், காமந்தனின் ஊரைச் சேர்ந்தவர்களிடம் இது பற்றி கூறினர். உள்ளூர் பிராமணர்களும் தர்மம் பெறுவதற்காக வந்தபோது தான், தர்மம் செய்தவன் கொள்ளைக்காரன் காமந்தன் என்பது புரிய வந்தது. உன்னிடம் தர்மம் பெற்றால் பாவம். தானத்தைச் செய்ய தகுதியுள்ளவர்களிடம் தான் தானம் பெற வேண்டும். உனக்கேது அந்தத்தகுதி, நீ கொலைகாரன், கொள்ளைக்காரன், பெண்பித்தன், எனச் சொல்லிவிட்டு போய்விட்டனர். இந்த சம்பவம் காமந்தனை மிகவும் பாதித்தது. அப்போது, காட்டில் ஒரு தபஸ்வியை அவன் சந்தித்து தன் கதையைச் சொல்லி அழுதான். மகனே! ஊழ்வினையின் படியே இவையெல்லாம் நிகழ்ந்தன. உன் பாவத்திற்கு பரிகாரம் சொல்கிறேன் கேள்! இந்த காட்டில் பாழடைந்து போன விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அதைப் புதுப்பித்து கட்டு. உன் பாவத்தின் பெரும்பகுதி குறைந்து விடும், என்றார். தன்னிடமிருந்த பொருளைக் கொண்டு தபஸ்வி சொன்னதைப் போலவே கோயிலைக் கட்டி முடித்தான் காமந்தன். சில ஆண்டுகளுக்கு பிறகு அவன் இறந்து போனான்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 09:20:03 AM
விநாயகர் புராணம் பகுதி-2

எமகிங்கரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ராஜாதி ராஜா! இந்த மனிதன், பூலோகத்தில் செய்யாத அட்டூழியமே இல்லை. பல பெண்களின் கற்பை சூறையாடிய கயவன் இவன். இவனுக்கு என்ன தண்டனை வேண்டுமானா<<லும் கொடுக்கலாம். எனக்குத் தெரிந்து இவனால் பாதிக்கப்பட்டு இங்கே வந்து சேர்ந்த பெண்களைக் கொண்டே எண்ணெய் பானைக்குள் தூக்கிப் போட்டு கொதிக்க வைக்கலாம், என்றான் கிங்கரர் தளபதி. எமதர்மன் சிரித்தான். தளபதி! உயிர்கள் செய்யும் கொடுமைகளை மட்டுமல்ல! நன்மையையும் கருத்தில் கொண்டே தண்டனை நிர்ணயிக்கப்பட வேண்டும். இவன் தன் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லையா? என்றதும், காமந்தன் எமதர்மனின் கால்களில் விழுந்து பணிந்தான். ஐயனே! நான் கொடும்பாவி. நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்கிறேன். ஆனால், கடைசி நேரத்தில் மனம் திருந்தி, அந்தணர்களுக்கு தானதர்மம் செய்ய எண்ணினேன். ஆனால், கொடியவனான என்னிடம் தானம் பெற்றாலே பாவம் என அந்தணர்கள் சொல்லிவிட்டனர். எனவே, ஒரு தபஸ்வியின் அறிவுரைப்படி, விநாயகப்பெருமானுக்கு கோயில் எழுப்பினேன். இது மட்டுமே, நான் பூலோகத்தில் செய்த நல்ல காரியம், என்றான். காமந்தா! தவறுகளை ஒப்புக்கொள்பவனாயினும், திருந்துபவனாயினும், தெய்வத்திற்குரிய அன்றாடக் கடமைகளை செய்தவனாயினும், வேறு ஏதோ தவறு செய்திருந்தால் மன்னிப்பு உண்டு. ஆனால், பெண்களைக் கொடுமை செய்பவனுக்கு மன்னிப்பும் கிடையாது. விமோசனமும் கிடையாது. இப்போது முடிவை உன் பொறுப்பிலேயே விடுகிறேன். நீ கடைசி நேரத்தில் மனம் திருந்தி, கையிலுள்ள பொருளை விநாயகருக்காக செலவிட்டாய். இங்கே தண்டனை முடிந்த பிறகு, நீ பூலோகத்தில் மீண்டும் பிறப்பாய். அங்கு சென்றதும், விநாயகர்கோயிலை கட்டியதற்குரிய நற்பலனை அனுபவிப்பாய். அந்த பலனை இளமையில் அனுபவிக்கிறாயா அல்லது முதுமையில் அனுபவிக்கப் போகிறாயா? என்றான்.

காமந்தன் எமதர்மனிடம், மகாபிரபு! இளமையில் இன்பங்களை ஏற்கிறேன், என்றான். சரி.. உன் இஷ்டப்படியே ஆகட்டும். ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவம், நரகத்தில் துன்பங்களை அனுபவித்த பிறகும், பூலோகத்திலும் மீண்டும் தொடரும். நீ செய்த பாவங்களின் பலனை முதுமையில் அனுபவித்தாக வேண்டும், என்ற எமதர்மன், இவனை எந்தளவுக்கு கொடுமைப் படுத்த முடியுமோ அந்தளவுக்கு செய்யுங்கள், என உத்தரவிட்டு சென்றான். எமகிங்கரர்கள் அவனை வாட்டியெடுத்தனர். தண்டனை காலம் முடிந்ததும், பூலோகத்தில் சவுராஷ்டிரம் என்ற நாட்டில் பிறந்தான். செழிப்பு மிக்க அந்த நாட்டின் மன்னர் மகனாக பிறந்த அவனுக்கு சோமகாந்தன் என பெயரிட்டனர். அவன் பல இன்பங்களை அனுபவித்தான். சுதைமை என்ற அழகுமிக்க மனைவி வாய்த்தாள்.  ஏமகண்டன் என்னும் மகனைப் பெற்றான். செல்வம் கொழித்தது அவனது நாட்டில். பெற்றோருக்கு பிறகு நாடாண்டான். பல போகங்களை அனுபவித்தான். வயதும் ஏறியது. முற்பிறவி வினைகள் தாக்கும் காலம் நெருங்கியது. அவனை தொழுநோய் பற்றியது. கலங்கி அழுதான். தன் அமைச்சர்களை அழைத்து, நான் என் மகன் ஏமகண்டனுக்கு முடிசூட்டி விட்டு கானகம் சென்று தவவாழ்வில் ஈடுபடப்போகிறேன். தொழுநோய் வந்தவனை கட்டியவள் கூட ஏற்கமாட்டாள். புறப்படுகிறேன், என்றான். அமைச்சர்கள் வருந்தினர். அவனுக்கு வாய்த்த மனைவி மாதரசியான சுதைமை, இதனினும் கொடிய நோய் வந்தாலும் உங்களைப் பிரியேன், எனச்சொல்லி, ராமனைப் பின் தொடர்ந்த சீதையைப் போல உங்களுடன் வருவேன் எனச்சொல்லி கிளம்பினாள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்ட ஏமகண்டன், தானும் அவர்களுடன் வருவதாகவும், அரசை அமைச்சர்களிடம் ஒப்படைக்கும்படியும் சொன்னான். அமைச்சர்களும் மன்னர் மீது கொண்ட பாசத்தால் உடன் வருவதாகக் கூறினர். முற்பிறப்பில், ஒரு விநாயகர் கோயில் கட்டியதன் பலன் இது என்பதை சோமகாந்தன் உணரமாட்டான்.

நன்றாக வாழும் காலத்தில் காட்டும் பாசத்தை விட, கஷ்டப்படும் காலத்தில் ஒருவனுக்கு செய்யும் உதவியே மகத்தானது. கணபதியின் வரலாற்றை படிக்கும் வாசகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது பெற்றோர் நம்மை வளர்த்து ஆளாக்க எவ்வளவோ சிரமப்பட்டிருப்பார்கள். ஆனால், வயதான காலத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்காமல், முதியோர் இல்லம் என்ற சிறைகளுக்குள் அவர்களை பூட்டி விடுகிறோம். இந்த நன்றி கெட்ட செய்கையை இத்தொடரை வாசிக்கும் எவரும் செய்யக்கூடாது. ஆன்மிகம் நன்மையை மட்டுமே போதிக்கவல்லது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகனை அருகில் அழைத்த சோமகாந்தன், அவனை தழுவக்கூட முடியாமல், வருத்தத்தில், ஏமகண்டா ! என்ன கொடிய பாவம் செய்தேனோ புரியவில்லை. <உன்னைத் தழுவக்கூட இயலவில்லை. என் இதயம் வெடித்துக் கிடக்கிறது. நாடாளும் மன்னனுக்கு சில கடமைகள் உண்டு. அதில், தன்னை அடுத்து வரும் மன்னனும், தன்னைப் போலவே செங்கோல் ஆட்சி நடத்த வேண்டும் என்பது முக்கிய கடமை. அதற்கு தகுதியானவன் நீ மட்டுமே! நானும், உன் அன்னையும் கிளம்புகிறோம். நீ நாடாள வேண்டும். ஒன்றை மட்டுமே மறந்து விடாதே. எல்லாருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். ஆனால், உலகத்திற்கே குலதெய்வம் விநாயகர். அவரை தினமும் வழிபடு. உன்னை எந்தக் கஷ்டமும் அணுகாது, என புத்திமதி சொல்லி புறப்பட்டான். காட்டிற்கு சென்ற அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். ஆடம்பர உடைகளையும், வகை வகையான உணவுகளையும் அனுபவித்த அவர்கள், இங்கே மரவுரிகளைத் தரித்தும், பச்சை காய்கறி, கிழங்குகளை சாப்பிட்டும் உயிர் வாழ வேண்டிய தாயிற்று. ஒன்றை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் கிளம்பியவுடனேயே மனைவியும் உடன் கிளம்பி விட்டாள். தம்பதியர் என்றும் பிரியக்கூடாது என்பது இங்கே சொல்லப்படும் தத்துவம். ஒரு பிறவியில் மனிதன் செய்யும் தவறு, மறுமையிலும் பின் தொடர்ந்து, அவனை மட்டுமின்றி, அவனைச் சார்ந்திருக்கும் எந்தப் பாவமும் செய்யாத அவனது மனைவி மக்களையும் தொடரும் என்பது இன்னொரு தத்துவம். இங்கே சுதைமை சோமகாந்தனுடன் கஷ்டப்பட்டாள். பெற்றவர்களைப் பிரிந்து அவன் வேறிடத்தில் வாழ வேண்டியதாயிற்று. இதற்காகத்தான் ஆன்மிகம், பாவம் செய்யாதே, பாவம் செய்யாதே என தலையில் அடித்து அடித்து சொல்கிறது. காட்டில் கஷ்டப்பட்ட இந்த தம்பதிகளை நோக்கி, ஒரு இளைய தபஸ்வி வந்து கொண்டிருந்தார்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 09:21:27 AM
விநாயகர் புராணம் பகுதி-3

அந்த தபஸ்வியின் பெயர் சிவனன். பிருகு மகரிஷிக்கும் புலோமைக்கும் பிறந்த செல்வ புத்திரர். அவர், காட்டில் வேதனையுடன் திரிந்த அரச தம்பதியரை பார்த்தார். அழகில் ஊர்வசியையும், ரம்பையையும் கலந்து வடித்தது போன்ற சுதைமையையும், அவளுடன் குரூர வடிவில் இருந்த சோமகாந்தனையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். பரிதாப நிலையில் இருந்த அவர்களை நோக்கி வந்த அந்த இளைஞரிடம், மகனே! நீ யாரப்பா? அழகுத் திருவுருவே! உன்னைப் பெற்றவள் நிச்சயம் புண்ணியவதியாகத் தான் இருக்க வேண்டும். உன் கண்களில் அன்பு பொழிகிறது. இளமை சுகங்களை சுவாசிக்க வேண்டிய இந்த பருவத்தில், தபசு கோலம் பூணக் காரணம் என்ன? என பரிவுடன் கேட்டாள் சுதைமை. அவளது பேச்சில் இருந்த தாய்மை கனிவை உணர்ந்த சிவனன், அம்மா! நான் பிருகு புத்திரன். அருகிலுள்ள என் தந்தையின் ஆஸ்ரமத்தில் பெற்றோருக்கு பணிவிடை செய்து வருகிறேன். தாங்கள் யார்? ஏன் இந்த மனிதருடன் இருக்கிறீர்கள்? என தொழுநோய் பிடித்த சோமகாந்தனை நோக்கி கையை நீட்டினான். அவள் நடந்த கதையை கண்ணீருடன் சொன்னாள். சிவனன் அவர்களுக்கு ஆறுதல் மொழி சொல்லி விட்டு புறப்பட்டார். தந்தை பிருகுவிடம் இதுபற்றி சொன்னார். மகனே! ஆதரவற்றவர்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமையல்லவா? அவர்களை உடனே அழைத்து வா! வேண்டியதைச் செய்வோம், என்று பிருகு கூறவும், சிவனன் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் ஆஸ்ரமத்துக்கு சென்றார். அந்த ஆஸ்ரமத்தில் எதிரும் எதிருமான மிருகங்களும், பறவைகளும், பூச்சி, புழுக்களும் கூட ஒன்றுபட்டு இருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தார்.  புலியும் மானும் ஒன்றாக விளையாடின. சிங்க குட்டிகளுக்கு பசுக்கள் பால் கொடுத்தன. பாம்புகளும், மயில்களும் ஒட்டி உ<றவாடின. இந்த அதிசயங்களை எல்லாம் ரசித்தபடியே, அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்தனர். பிருகு முனிவரின் தேஜஸான வடிவைப் பார்த்தவுடனேயே, சோமகாந்தன் தன் வியாதியே தீர்ந்து விட்டது போல் உணர்ந்தான்.

ஐயனே! இந்த நோய் வந்ததற்காக நான் வருந்தியது என்னவோ உண்மை தான். ஆனால், இது மட்டும் வராதிருந்தால், என் வாழ்வில் உங்களைப் போன்ற மகரிஷியைச் சந்திக்கும் பாக்கியத்தை இழந்திருப்பேன், என் உள்ளத்தில் இருந்து எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளாகக் கொட்டினான். சுதைமை இன்னும் உணர்ச்சி வசப்பட்டாள். மாமுனிவரே! உங்களைப் பார்த்ததுமே இவரது வியாதி தீர்வதற்கான நேரம் வந்துவிட்டதை உறுதியாக நம்புகிறேன். எனக்கு மாங்கல்ய பிச்சை தர வேண்டும். இவர் மீண்டும் தன்னிலை பெற வேண்டும், என்று அழுதாள். பிருகு முனிவர் அவளை ஆசிர்வதித்தார். மகளே! நல்ல நேரம் வரும் போது, ஒவ்வொரு மனிதனும், வர வேண்டிய இடத்திற்கு வந்து விடுகிறான். உனக்கும் நல்ல நேரம், அதனால் தான் இங்கு வந்தாய். கவலை கொள்ளாதே. உன் பர்த்தாவின் முகத்தைப் பார்த்ததுமே, அவனுக்கு பூர்வஜென்ம கருமத்தால் ஏற்பட்டுள்ள இந்த வியாதியைப் புரிந்து கொண்டேன். இதைக் குணப்படுத்துவது எளிது. நீங்கள் இங்கேயே தங்குங்கள். நான் விநாயகரின் சரிதத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த சரிதத்தைக் கேட்பவர்களுக்கு எல்லா நலமும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும். இழந்த செல்வம், ஆட்சி, அதிகாரம் அத்தனையும் திரும்பக் கிடைக்கும், என்றார். பின்னர் அவர்களை ஆஸ்ரமத்தில் தங்க வைத்து, உணவு, உடை முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்தார்.  அன்றிரவில், சோமகாந்தனின் மனம் பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தது. இந்த முனிவர் எனக்கு நோய் குணமாகி விடும் என்கிறார். இவரிடம் மூலிகையோ மருந்துகளோ இல்லை. விநாயகரின் சரிதம் கேட்டாலே நோய் நீங்கும் என்கிறார். அதெப்படி சாத்தியமாகும்? நோயாளிகளுக்கு மருந்து வேண்டாமா? இப்படி சந்தேகித்தபடியே தூங்கிப் போனான். மறுநாள் காலையில் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வந்ததும், எங்கிருந்தோ பல பறவைகள் பறந்து வந்தன. சோமகாந்தனை அவை பிடுங்கி எடுத்தன. ஏற்கனவே தொழுநோயால் நைந்து தொங்கிய அவனது உடலில் இருந்து ரத்தமும் சீழும் கொட்டியது. வலி தாளாமல் அவன் அலறினான். மாமுனிவரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே, பிருகுவின் காலில் விழுந்தான்.

மகனே! நீ என்னை நம்பாமல் இருக்கலாம். ஆனால், முழு முதற்கடவுளான விநாயகரையே நேற்றிரவு சந்தேகித்தாயே! அதனால் தான் இப்படி நிகழ்கிறது, என்று முனிவர் சொன்னதும், தன் மனதில் நினைத்தது இவருக்கு தெரிகிறது என்றால், இவரின் தவசக்திக்கு அழிவேது என நினைத்தவன். மகா தபஸ்வி! இந்த அறிவிலியை மன்னியுங்கள். அறியாமல் செய்த பிழைக்காக வருந்துகிறேன். இந்த பறவைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள். வலி உயிர் போகிறது, என்றான். அவன் கதறுவதைக் கேட்டு, சுதைமை ஓடி வந்தாள். முனிவரே! தங்களையே அடைக்கலமென நாடி வந்த எங்களுக்கு உங்கள் இல்லத்தில் ஒரு சோதனை என்றால், நீங்கள் தானே காக்க வேண்டும். என் பர்த்தாவுக்கு ஏதாவது ஆகுமென்றால், அவரது உயிர் பிரியும் முன்பே என் உயிர் தானாக போய் விடும், என முனிவரின் காலைப் பிடித்து கெஞ்சினாள். அறியாமல் தவறு செய்த மன்னனை மன்னிக்க வேண்டும் என சீடர்களும் கெஞ்சினர். அனைவரது கோரிக்கையையும் ஏற்ற பிருகு முனிவர், அந்த பறவைகளை தனது ஒரே சப்தத்தில் விரட்டினார். தனது கமண்டலத்தில் இருந்த புனித நீரை சோமகாந்தன் மீது தெளித்தார். அப்போது பேரரவம் எழுந்தது. அதிபயங்கர சிரிப்பொலிவுடன், சோமகாந்தனின் உடலில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. பிருகுவைத் தவிர எல்லாரும் நடுங்கினர்.யார் நீ? என அதட்டலுடன் கேட்டார் பிருகு.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 09:22:53 AM
விநாயகர் புராணம் பகுதி-4

பிருகுவின் தவவலிமைக்கு அந்த பூதம் மதிப்பளித்து, முனிவரே! நான் ஒரு அந்தணன். முற்பிறவியில், இந்த சோமகாந்தனால் கொலை செய்யப்பட்டேன். கொடூர மரணமடைந்தவர்களுக்கு சொர்க்கம் இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே, பிரம்மஹத்தியாக வடிவெடுத்து, இவனைப் பழிக்குப் பழி வாங்க இவனது உடலிலேயே வசித்தேன். தாங்கள், புனித நீரை இவன் உடல் மீது தெளித்ததால் வெளிப்பட்டேன். இவன் ஒரு காலத்தில் சக்தியற்ற என்னைக் கொன்றான். இப்போது, என்னை எதிர்க்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். பாவம் செய்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும். தாங்களும் இதற்கு உடன்பட வேண்டும். இவனை இப்போதே கொன்று தின்ன வேண்டும். இவனது மனைவியும் எனக்கு இரையாக வேண்டும், என பணிவுடன் கேட்டது. பிருகுமுனிவர் அந்த பூதத்திடம், நான் சொல்வதைக் கேள். அதோ தெரிகிறதே, மரம். அதிலுள்ள புதருக்குள் மறைந்திரு. நான் சற்று நேரம் கழித்து உன்னை அழைப்பேன். வெளியே வந்து இவர்களை உணவாக எடுத்துக் கொள், என்றார். பூதமும் தலை வணங்கி மரப்பொந்தில் நுழைந்தது. உடனே முனிவர் சக்தி வாய்ந்த தன் கமண்டல நீரை மரத்தை நோக்கி தெளித்தார். அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. அதனுள் புகுந்த பூதம், மீண்டும் முந்தைய அந்தணன் போல் சுயரூபம் பெற்று வெளிவந்தது. முனிவரின் பாதத்தில் அந்த அந்தணர் விழுந்தார். நன்றிப்பெருக்குடன் கண்ணீர் சிந்தினார். அப்போது விநாயகப்பெருமான் ஒரு வான ஊர்தியை அனுப்பி வைத்தார். புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஊர்தியில் சில தேவர்கள் இருந்தனர். அவர்கள் அந்தணரை அழைத்துக் கொண்டு சொர்க்கம் சென்றனர். சோமகாந்தனுக்கு ஏதோ ஒரு புத்துணர்வு ஏற்பட்டது. ஆனால் தொழுநோய் மட்டும் அப்படியே இருந்தது. பிருகு முனிவர் சோமகாந்தனிடம், மன்னா! உன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. அந்தணர்களைக் கொல்பவர்கள், பசுக்களை வதைப்பார்கள் இந்த கொடிய தோஷத்தை அடைவர். தோஷம் நீங்கிய கையோடு, உனக்கு விநாயகர் சரிதம் சொல்கிறேன். அதைக் கேட்டால், இந்த நோயும் நீங்கிவிடும். நீ மீண்டும் உன் ராஜ்யத்துக்கு செல்லலாம், என்றார்.

சோமகாந்தனுக்கு பிருகுமுனிவர் அருளிய அந்த அருள் தெய்வத்தின் கதையைப் படிக்கும் நாமும் நிச்சயமாக துன்பங்கள் நீங்கி இன்பம் அடைவோம். கைலாயத்தில், பார்வதி சமேதராக சிவபெருமான் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கலை மண்டபத்தில், ஒரு ஆண் யானையும், பெண் யானையும் மகிழ்ச்சியாக கூடியிருக்கும் ஓவியம் ஒன்றைக் கண்ட பார்வதி, அதுபற்றி சிவனிடம் விளக்கம் கேட்டாள். பார்வதி! யானைகள் கூடிக்களித்தால் ஒரு குட்டி யானை பிறக்கும். அதுபோல், நமக்கும் ஒரு மகன் பிறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது, என்றதும், பார்வதிதேவி, என்ன அந்தச்சூழ்நிலை? என ஆர்வமாய் கேட்டாள். அவளது குரலில் இருந்த அவசரத்தை ரசித்த சிவபெருமான், தேவி! இன்று உலகில் என்ன நடக்கிறது என்பதை லோகநாயகியான நீயும் அறியாமல் இருக்க மாட்டாய். தேவர்கள் சிரமப்படுகின்றனர். வேதங்களை மறந்து, மக்கள் ஆடம்பரங்களில் மூழ்கி கிடக்கின்றனர். செல்வம் நிலையானதென்றும், ஆண், பெண் உறவு நிரந்தர இன்பம் தரக்கூடியதென்றும் கருதி, அவர்கள் அதனை அடைவதற்காக செய்யும் பாவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பாவம் செய்தவர்கள் அசுரர்களுக்கு சமமானவர்கள். அசுரத்தனத்தை அசுரத்தனத்தாலேயே கையை இப்போது ஓங்கச் செய்திருக்கிறேன்... என அவர் சொல்லவும், இடைமறித்த பார்வதி, சுவாமி! இதென்ன விந்தை. அபாயத்தை ஒழிக்க அபாயத்தையே பயன்படுத்துவதா? தாங்கள் அவர்களுக்கு அபயமளித்து நற்கதியல்லவா அருளியிருக்க வேண்டும், என்றதும், பார்வதி! நீ சொல்வதும் சரியே. இருப்பினும், தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நடந்ததை முழுமையாக கேட்டால், உனக்கு எல்லா விபரமும் புரியும், என்ற சிவன் கதையைத் தொடர்ந்தார்.

அரக்கர் தலைவனான அசுரேந்திரன், தேவர் தலைவனான தேவேந்திரனிடம் பலமுறை அவமானப்பட்டான். தேவர்களுக்கு துன்பம் தந்து அவர்களின் ராஜ்யத்தைக் கவர அவன் நினைத்த போது, இந்திரன் பெரும் படையுடன் சென்று அசுரேந்திரனை தோற்கடித்தான். அவமானமடைந்த அசுரேந்திரன் தன் குருவான சுக்ராச்சாரியாரிடம் ஓடினான். அவர் அவனிடம், அசுரேந்திரா! நீயும் உன் படைகளும் தேவர்களை எதுவுமே செய்ய முடியாது. யாக தியானங்களால் அவர்கள் சிவபெருமானை அன்றாடம் வணங்கி பெரும் பலம் பெற்றுள்ளனர். அவர்களைப் போல, நீயும் சிவனை தியானித்தால், தேவர்களையும் விட உயர்ந்த பலம் பெறலாம். உன்னை ஒடுக்க யாராலும் முடியாது என்றார். அசுரேந்திரனும் குரு சொல் ஏற்று, நாலாயிரம் ஆண்டுகள் காட்டில் தவமிருந்தான். சிவபெருமான் மகிழ்ந்தார். வரம் கொடுக்க வந்தார். திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தெய்வத்தாலும், பிற தேவர்களாலும் அழிவு வரக்கூடாது, என்ற வரத்தை கேட்டான். சிவபெருமான் வரம் தர ஒப்புக்கொண்டாலும், அசுரேந்திரா! உலகில் பிறந்தவர்கள் யாராயினும் அழிவைச் சந்திக்க வேண்டும். நீயும் மரணம் அடைவாய், என்றதும், அப்படியானால், வரம் கொடுத்த உமது சக்தியைத் தவிர வேறு  எதனாலும் அழிவு வரக்கூடாது, என்ற உறுதிமொழியை கேட்டுப் பெற்றான். இதையறிந்த சுக்ராச்சாரியார் மகிழ்ந்தார். அசுரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமானால் ஏராளமான அசுரப்பிள்ளைகளை உருவாக்க திட்டமிட்டார். இந்த திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் மரகத முனிவரால் மட்டுமே செய்ய முடியும் என்று கணக்கிட்டார். தனது திட்டத்தை அசுரேந்திரனிடம் சொன்னார். யார் அந்த மரகதமுனிவர்? என அசுரேந்திரன் கேட்கவே, அவர் வசிஷ்டரின் வழித்தோன்றல் என்ற சுக்ராச்சாரியார், காட்டில் கண்ணே திறக்காமல் பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருக்கும் அவருக்கு திருமண ஆசையைத் தூண்டினால் அசுரகுலத்தை வாழ வைக்க ஒரு வீரமகன் வருவான், என்றார்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 09:24:14 AM
விநாயகர் புராணம் பகுதி-5

அசுரேந்திரனின் மனதில் சற்றே நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன், குருவே! மரகதரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அவர் எப்படிப்பட்டவர்? ஒரு பெண்ணால் அவரை மயக்கி விட முடியுமா? முனிவர்கள் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் ஆயிற்றே! மரகதர் எப்படி...? என இழுத்தவனிடம், அசுரேந்திரா! சந்தேகம், தயக்கம், காலதாமதம் இம்மூன்றும் வாழ்வின் எதிரிகள். பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதில் நிச்சயம் அர்த்தமிருக்கும். என் பேச்சை நீ நம்புபவனாக இருந்தால், இதற்குள் ஒரு பேரழகியை, மரகதரிடம் அனுப்பியிருக்க வேண்டும். நீயோ, அரைகுறை நம்பிக்கையுடன் பேசினாய். நம்பிக்கை இல்லாதவனுக்கு கூட ஒருவேளை வெற்றி கிடைத்து விடும். ஏனெனில், அவன் அந்த நம்பிக்கையின்மையிலாவது உறுதியுடன் இருக்கிறான். அரைகுறை நம்பிக்கை ஆபத்தானது, என்றதும், சுக்ராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்ட அசுரேந்திரன், மரகத முனிவரிடம் ஒரு அழகியை அனுப்புவதாக கூறி விட்டு வெளியேறினான்.அசுர குலத்திலேயே பேரழகி ஒருத்தியை தேடும் படலம் ஆரம்பித்தது. அப்போது அமைச்சர் ஒருவர், அரசே! நம் தேசத்தில் எனக்கு தெரிந்து மாபெரும் பேரழகி ஒருத்தி இருக்கிறாள். இரும்பை மட்டுமே காந்தம் ஈர்க்கும். ஆனால், அந்த காந்தத்தையே ஈர்த்து விடும் அவளது கண்கள். உதடுகளைக் கண்டால் வெட்டிய சிவந்த கொய்யாக்கனிகள் வெட்கத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்ளும். ரோஜாமலர்கள் அவளது கன்னத்தின் சிவப்பழகு காண பிடிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொள்ளும். இப்படி... அவளது அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம். விஸ்வாமித்திரரை தன் பிடிக்குள் ஈர்த்த மேனகையை விட ஐநூறு மடங்கு அழகில் உயர்ந்தவள் இவள். அவளை மட்டும்  மரகத முனிவரிடம் அனுப்பி விட்டால், இவ்வுலகில் அசுரர்களின் ஆட்சி முடிவற்றதாக இருக்கும், என்றார். அசுரேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.

யார் அவள்? பெயர் என்ன? எங்கிருக்கிறாள்? அவளை உடனே என் முன் நிறுத்துங்கள், என்றதும், அரசே! எள் என்று நீங்கள் சொன்னால், எண்ணெயுடன் வந்து நிற்பவர்கள் உங்கள் சேவகர்களான நாங்கள். இதோ! அந்த மாணிக்கம், என்று திரைமறைவில் நின்ற ஒரு பெண்ணை அழைத்து வந்தார் அமைச்சர். அவள் வெட்கம் ததும்ப அசுரேந்திரன் முன்னால் நின்றான். அசுரேந்திரனே ஒரு கணம் திகைத்து விட்டான். தன் மனதுக்குள், ஆஹா... இவளை மட்டும் மரகதரிடம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்திருந்தால், இவள் என் பட்டத்தரசிகளில் முதன்மையானவளாக இருந்திருப்பாள், என சொல்லிக்கொண்டான். அழகு மங்கையை! உன் பெயர் என்ன? என்றதும், பேசியது குயிலா, சிட்டுக்குருவியா என்று வித்தியாசம் தெரியாதபடி, மிக மெதுவாக விபுதா என்றாள். விபு! உன்னிடம் அமைச்சர் எல்லாம் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். நம் குலம் தழைக்க வேண்டும். அதற்கு நீ இந்த தியாகத்தை செய்தே தீர வேண்டும். இதை செய்து விட்டால், அசுரலோகத்தில் எங்கும் சுற்றி வர உனக்கு அனுமதியும், பல பிறவிகள் உன்னைத் தொடர்ந்தாலும், எப்பிறவியிலும் நீ அனுபவிக்கும்படியான செல்வத்தையும் தருவேன், என்ற அசுரேந்திரன், அவளை காட்டில் கொண்டு பாதுகாப்பாக விடும்படி அமைச்சருக்கு உத்தரவிட்டான். பெரிய தேர் ஒன்றில் ஏறிய விபுதா, மரகத முனிவர் தவம் செய்யும் இடத்தருகே இறக்கி விடப்பட்டாள். ஏவலர்களை அவள் அனுப்பிவிட்டு, மரகதரின் அருகில் சென்றார். பெயருக்கு ஏற்றார்போல், அவர் மிகுந்த தேஜசுடன் இருந்தார். அவரது தவத்தின் ஆழத்தைப் பார்த்தால், அவர் அப்போதைக்கு எழுவதாக பெரியவில்லை. விபுதாவுக்கு அவர் அருகில் செல்ல பயம்.

மிகப்பெரிய தபஸ்வியாக இருக்கிறார். இவர் அருகில் சென்று, தவத்தைக் கலைத்தால் கோபத்தில் நம்மை எரித்து விட்டால் என்னாவது? நான் இறந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட தபஸ்விகளால் மரணித்தால் முக்தியே கிடைக்கும். ஆனால், என் எஜமான் சொல்லியனுப்பிய பணி என்னாவது? ஒருவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட பணியை எப்பாடுபட்டேனும் முடித்துக் கொடுத்து விட வேண்டும். இல்லா விட்டால், அது நம்பிக்கை துரோகத்திற்குரிய பாவத்தின் பலனை நமக்குத் தந்துவிடும். சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். இவர் தபஸ்வி என்றால், நான் தபஸ்வினியாக வேடம் தரித்து விட்டு போகிறேன்! என்றவள், மறைவிடத்திற்குச் சென்று, தபஸ்வினி போல் வேடமிட்டுக் கொண்டு வந்தாள். முனிவரே! நான் கொண்ட கடமையில் தவறாதவள் என்பது உ<ண்மையானால், நிச்சயம் உம்மை அடைந்தே தீருவேன், என்றவள், முனிவரின் அருகில் அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்தாள். ஒரு கட்டத்தில், அவளது தியானம் தவமாக மாறி விட, மரகத முனிவரை அடைய வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடமே சமர்ப்பித்து, அவரையே மனதில் <உறுதியாக எண்ணி தவத்தை வலுப்படுத்தினாள். பல ஆண்டுகள் உருண்டோடின. அவளது தேகம் மெலிந்து விட்டது. தவத்தின் காரணமாக, ஒருமுறை, அவளது உடலில் இருந்து எழுந்த வெப்பம் மரகதரின் தவத்தைக் கலைத்தது. அவர் தவம் கலைந்து எழுந்தார். அருகில் இருக்கும் பெண்ணை அவர் கவனிக்கவில்லை. அதற்கு பதிலாக, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் சற்று தூரத்தில் குதூகலமாக இருப்பதைப் பார்த்தார். இதைப் பார்த்தவுடனேயே விதிப்பயன் அவரைத் துரத்தியது. ஆண்டவன் நம் தலையில் எழுதியதை மாற்ற முடியாது. எந்த நேரத்தில் என்ன நடக்க வேண்டுமென எழுதியிருக்கிறானோ அது நடந்தே தீரும். இந்த எழுத்தெல்லாம், முன்வினைப் பயனின் காரணமாக எழுதப்படுபவை. அந்த காட்சியைப் பார்த்த அவரது உள்ளத்தில் மோக உணர்வு ஆக்கிரமித்தது. அந்த உணர்வு ஏற்பட்டதுமே, அதுவரை செய்த தவத்தின் சக்தி குறைந்தது. தன் <உணர்வுகளுக்கு வடிகாலை எப்படி தேடுவது என சுற்றுமுற்றும் நோட்டமிட்ட போது, தன்னருகே ஒரு அழகுப் பெட்டகம் அமர்ந்திருப்பதைப் பார்த்தார் மரகதர். பெருமூச்சுடன் அவளை அவர் நெருங்கினார்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 09:25:39 AM
விநாயகர் புராணம் பகுதி-6

கண்மூடியிருப்பது போல் நடித்த விபுதா, மரகதர் தன்னை நெருங்கட்டுமே என காத்திருந்தாள். மரகதர் அருகில் வந்ததும், மூச்சுக்காற்றின் வெப்பம் அவள் மீது பட, அப்போது தான் விழித்தவள் போல் நடித்த அவள், அவரது பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். அவரது எண்ணம் அவளுக்கு முழுமையாக விளங்கி விட்டதால், பாதங்களில் இருந்து எழுந்த அவள், அவரருகே, நெருங்கி நின்று, சுவாமி! நான் தவம் செய்வதற்காக இங்கு வந்தேன். தங்களைக் கண்டதும், இது எனக்கு பாதுகாப்பான இடமாக இருக்குமென கருதி, இங்கேயே அமர்ந்து விட்டேன். நான் தவமிருக்க துவங்கிய போது, உங்களையே என் மணாளனாக அடைய வேண்டும் என்ற கோரிக்கையை தான் கடவுளிடம் வைத்தேன். முனி பத்தினியாகும் பேறு பெற்றாள், என்னிலும் கொடுத்து வைத்தவள் யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது, என்று ஆசை வார்த்தைகளைப் பேசினாள். மரகதமுனிவர், எதற்காக அவளை நெருங்கினாரோ, அது தானாகவே கனிந்து போனது கண்டு, அவள் மீது மேலும் மோகம் கொண்டார். அவளை அன்புடன் அணைத்துக் கொண்ட அவர், அவளைப் பற்றிய விபரங்களை விசாரித்தார். அவள், தன்னை அசுர குலத்துப் பெண்ணாக காட்டிக் கொள்ளாமல், யாரோ ராஜகுலத்தவள் போல சொல்லி வைத்தாள். மரகதர் அவளிடம், நீ யாராயினும் அழகு உன்னிடம் கொட்டிக் கிடக்கிறது. அது என்னை உன் மீது மோகம் கொள்ளச் செய்து விட்டது. இருப்பினும், தபஸ்விகளான நாம் மனித வடிவில் உறவு கொள்வது நியாயமல்ல. பிறர் பரிகசிப்புக்கு அது வகை செய்யும். அதோ பார்! தூரத்தில் இரண்டு யானைகள் மகிழ்ந்திருக்கின்றன அல்லவா! அதே போல், நாமும் யானைகளாக மாறி மோகிப்போம், என்றவர், தன் கமண்டல நீரை அவள் மீது தெளித்தார். அவள் பெண் யானையாக மாறினாள்.

மரகதரும் தன்னை ஆண் யானையாக மாற்றிக் கொண்டு, இருவரும் கூடி மகிழ்ந்தனர். அப்படி மகிழ்ந்திருந்த சில நிமிடங்களிலேயே யானையாக மாறிய விபுதாவின் கால்களில் இருந்து, ஆயிரக்கணக்கான அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்களில் ஒருவன் யானை முகத்துடன் இருந்தான். பிறக்கும் போதே வாளை வீசிக்கொண்டு பிறந்த அவன், ஆங்காரமாக ஓசை எழுப்பினான். அதிபயங்கரமான அந்த சப்தம் கேட்டு, மோகத்தில் மூழ்கியிருந்த மரகதர் சுதாரித்தார். தன் சுயரூபத்துக்கு திரும்பினார். விபுதாவும் அவ்வாறே மாறினாள். இப்போது அவள், சுவாமி! நான் அசுரகுலத்தைச் சேர்ந்தவள். எங்கள் இனம் விருத்தியடைந்து, நீடித்த புகழுடன் விளங்க வேண்டுமானால், தவசீலரான தங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளால் தான் முடியும் என எங்கள் குலகுரு சுக்ராச்சாரியார் தெரிவித்தார். அதன்படியும், எங்கள் மாமன்னர் அசுரேந்திரனின் ஆணைப்படியும், தங்களைக் கவர்ந்தது, குழந்தைகளைப் பெற நினைத்து வந்தேன். வந்த வேலையை தாங்களே இனிதாக முடித்து விட்டீர்கள். பாருங்கள், நம் செல்வங்களை! பிறக்கும் போதே வாளுடன் பிறந்து, வீர கர்ஜனை செய்கின்றனர். தங்கள் பிள்ளைகள் வித்தைகளில் கை தேர்ந்தவர்களாக இருந்தால், எந்த பெற்றவர்கள் தான் மகிழ மாட்டார்கள்! நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். தாங்களும் அப்படியே இருப்பீர்கள் என்று தான் நம்புகிறேன், என்றதும், பிறந்த அசுரவீரர்கள் எல்லாரும், வாள்களை சுழற்றிக்கொண்டு, மரகதரை வலம் வந்தனர். அவர் நடுங்கினார். அப்போது யானை முகத்துடன் பிறந்த வீர மைந்தன் அவர் முன்னால் வந்தான்.

தந்தையே! ஏனிந்த கலக்கம்! இத்தனை வீர மைந்தர்களைப் பெற்ற தாங்கள் மகிழ்ச்சியுடன் அல்லவா இருக்க வேண்டும், உங்கள் பிள்ளையான எனக்கு உங்கள் வாயாலேயே பெயர் வையுங்கள், என்றதும், பயந்து நடுங்கிக் கொண்டிருந்த மரகதர் வாயேதும் திறக்கவில்லை. விபுதா தன் மகனை அருகில் அழைத்து, மகனே! நீ யானை முகத்துடன் பிறந்தவன் என்பதால், கஜமுகாசுரன் எனப்படுவாய், என பெயர் சூட்டி ஆசியளித்து, வரிசையாக ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கும் பெயர் வைத்தாள். மரகதர் தன் விதியை எண்ணி வருந்தி, விபுதாவை அழைத்தார். பெண்ணே! நீ ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவள் போல் பொய் சொன்னாய். இப்போது, அசுரகுலத்தினள் எனச்சொல்கிறாய். எப்படியிருப்பினும், என் தவவலிமை, காமத்தின் மிகுதியால் பறிபோனது. நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக , மீண்டும் தவம் செய்து வலிமை பெறப்போகிறேன். நீ பொய் சொன்னதால், என்னுடன் தொடர்ந்து வாழும் தகுதியை இழந்து விட்டாய். உன் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு அரண்மனைக்குப் போய் சேர், என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அவளை நடுக்காட்டிலேயே விட்டுச் சென்றார். விபுதா அதுபற்றி கவலைப்படவில்லை.வந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததும், அவள் தன் பிள்ளைகள் புடைசூழ அசுரேந்திரனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். அசுரேந்திரன் மகிழ்ந்து, அவளுக்கு புதிய மாளிகை ஒன்றையே பரிசாகக் கொடுத்தான். சுக்ராச்சாரியார், கஜமுகன் உள்ளிட்ட அரக்கர்களைக் கண்டு அதிர்ந்தே போய்விட்டார். அவரே எதிர்பார்க்காத வகையில் பலம் மிக்கவர்களாக அந்த அசுரர்கள் திகழ்ந்தனர். அவர்களை ஆசிர்வதித்து, வித்தைகள் பல கற்றுத்தந்தார். இதன்பிறகு, கஜமுகாசுரன் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றான். மனிதர்கள் மிருகங்களையெல்லாம் இஷ்டம் போல் பிடித்து தின்றான். முனிவர்கள் யாகம் நடத்தும் இடங்களுக்குச் சென்று, யாக குண்டங்களை பெயர்த்தெறிந்தான். இதனால், தேவர்கள் தங்களுக்குரிய அவிர்பாகம் கிடைக்காமல் சக்தியிழந்தனர். சுக்ராச்சாரியார் இதைக் கண்டு மகிழ்ந்தார். இருப்பினும் கஜமுகா சுரனை அழைத்து, கஜமுகா! உனது இந்த சந்தோஷம் தற்காலிகமானதே! தேவர்களை நிரந்தரமாக வெற்றி கொள்ள வேண்டுமானால், உனக்கு சிவனின் அருள் வேண்டும். நீ அவரை நினைத்து தவமிரு. அசுரகுலம் அழியாத அளவுக்கு வரங்களைக் கேட்டுப் பெறு, என்றார். கஜமுகனும், 4 ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சிவதரிசனம் பெற்று, அசுரகுலத்தின் அழியாத் தன்மைக்குரிய பல வரங்களைப் பெற்றான். இதன் பிறகு, அசுரேந்திரன் பதவி விலகி, கஜமுகாசுரனை அரக்கர்களின் தலைவனாக்கினான். இந்நேரத்தில், அதே கஜமுகத்துடன் சிவலோகத்திலும் ஒரு குழந்தை பிறப்பதற்குரிய அறிகுறி தென்பட்டது.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 09:27:32 AM
விநாயகர் புராணம் பகுதி-7

பார்வதிதேவியும் பரமேஸ்வரனும் கயிலாயத்திலுள்ள சித்திர மண்டபத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அன்று மிதமிஞ்சிய மகிழ்ச்சியுடன் இருந்தனர். அந்த மண்டபத்தில் ஒரு ஆண் யானையும், பெண் யானையும் மகிழ்ந்திருப்பது போன்ற சித்திரத்தைக் கண்ட பார்வதிதேவி, மந்திரங்களை மையமாகக் கொண்டு வரையப்பட்ட சித்திரத்தின் மத்தியில், இப்படி ஒரு சித்திரம் வரையப்பட்டிருப்பது ஏனோ? என பரமேஸ்வரனிடம் கேட்டாள். சக்தி! எல்லாம் காரணத்துடனேயே நிகழ்கிறது. கஜமுகாசுரன் என்னும் அசுரன் என் தரிசனம் வேண்டி நாலாயிரம் ஆண்டுகள் கடும் தவமிருந்தான். சற்றும் மனம் பிறழாமல் என்னையே நினைத்து செய்த அந்த தவத்தை மெச்சிய நான் அவன் முன்னால் பிரசன்னமானேன். அவன் என்னிடம், விஷ்ணு முதலான தேவர்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும், இன்ன பிற சக்திகளாலும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்றும், உமது சக்தியால் மட்டுமே இறப்பு வேண்டுமென்றும், அப்படியே இறந்தாலும், பிறவாநிலையான முக்தி வேண்டும் என்றும் கேட்டான். நானும் அவ்வரத்தைக் கொடுத்து விட்டேன். அவ்வாறு வரம் பெற்றவன், உலகமக்களுக்கு நன்மை செய்வான் என எண்ணினேன். ஏனெனில், அசுரர்களிலும் நல்லவர்கள் உண்டு. ஆனால், அவனோ எல்லா தேவர்களையும் வதைத்து, மூவுலகங்களிலும் தன் கொடியைப் பறக்க விட்டிருக்கிறான். கொடுங்கோல் ஆட்சி செய்கிறான். தேவகன்னிகள், நாக கன்னிகள், அசுர கன்னிகளில் அழகிகள் அனைவரையும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். அதைத் தட்டிக்கேட்டு சென்றவர்களை விழுங்கி விட்டான். பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்துபவன் இவ்வுலகில் வாழ தகுதியற்றவன். அவனை அழிக்க அவனைப் போன்ற யானை வடிவில், இன்னொரு வீர மகன் நமக்கு பிறக்க வேண்டும். அதன் அடையாளமே இந்த சித்திரம், என்றார்.

பார்வதிதேவி மகிழ்ச்சியுடன் அதைப் பார்த்தாள். பரமேஸ்வரனும் அதையே உற்று நோக்க, அந்த சித்திரத்தில் இருந்து யானை முகத்துடன் ஒரு சிறுவன் அவதரித்தான். அந்த பாலகனை குழந்தாய் என அழைத்து பெற்றோர் உச்சி முகர்ந்தனர். அந்தச் சிறுவன் பெற்றோரிடம் மழலை பேசி சந்தோஷத்தைக் கொடுத்தான். பரமேஸ்வரன் அக்குழந்தையிடம், குழந்தாய்! பிறந்தவுடனேயே உனக்கு வேலை வந்துவிட்டது. என்னருள் பெற்ற கஜமுகாசுரன் என்பவன், மூவுலகிலும் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறான். அவனை அடக்க வேண்டியது உன் பொறுப்பு. உன்னைத் தவிர வேறு யாராலும் அது இயலவும் செய்யாது. நீ கயிலாய மலையின் வாசலில் காவல் இரு. அனைத்துக் கணங்களுக்கும் நீயே அதிபதியாகத் திகழ்வாய். இதனால், உன்னை கணபதி என்று அனைவரும் அழைப்பர். கயிலாய வாயிலில் உன்னை வணங்காமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. நானும், <உன் தாயும் கூட இதில் அடக்கம். உனக்கு முதல் மரியாதை செய்த பிறகே, மற்றவர்களுக்கு செய்யப்படும் மரியாதை ஏற்கப்படும். உன்னை மதிக்கத்தவறியவர்களுக்கு, எங்கள் அருள் கடாட்சம் என்றும் கிடைக்காது. ஏன்... நீயாகவே இருந்தாலும் கூட, உன்னைப் போன்ற ஒரு பிம்பத்திற்கு பூஜை செய்த பிறகே எங்களை வணங்க வர வேண்டும், என்றார். (இதன் காரணமாகத்தான் சில கோயில்களில் இரட்டை விநாயகர் சன்னதி அமைக்கப்படும். விநாயகர் தனக்குத்தானே பூஜை செய்து கொள்வதென்பது இதன் தாத்பர்யம்). கணபதி மகிழ்ந்தார். தன்னை முழுமுதல் நாயகனாகவும், ஞால முதல்வனாகவும் அறிவித்த தாய் தந்தையரின் திருப்பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் கயிலாய வாயிலில் அமர்ந்து விட்டார். பார்வதியும் பரமேஸ்வரரும் நந்தவனத்திற்குச் சென்றனர். அப்போது, சகோதரியையும், சகோதரிக்கு மைந்தன் பிறந்திருக்கிறானே என்பதால் அவனையும் பார்க்க திருமால் கயிலைக்கு வந்தார். வாசலில் வீற்றிருந்த கணபதியை அள்ளி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தார். தாய்க்கு அடுத்த ஸ்தானம் தாய்மாமனுக்கு என்பதால், தன்மீது மிகுந்த பிரியம் கொண்டு வந்த தாய்மாமனுடன் மழலை பேசி மகிழ்வித்தார் கணபதி. பின்னர், திருமால் தன் சகோதரி பார்வதியைச் சந்திக்கச் சென்றார். நந்தவனத்தில் மைந்தன் பிறந்த பூரிப்பில் முகமெல்லாம் பொலிவுடன் திகழ, பார்வதி பரமேஸ்வரர் அமர்ந்திருப்பது கண்டு அவர்களிடம் நலம் விசாரித்தார். சிவபெருமான் இப்போது தான் தன் லீலையை ஆரம்பித்தார்.

பார்வதியிடம், தேவி! நாம் இருவரும் சொக்கட்டான் ஆடி பல நாட்கள் ஆகிறது. இப்போது மைத்துனரும் வந்திருக்கிறார். அவரை நடுவராக வைத்து நாம் விளையாடுவோம். நீ வெற்றி பெற்றால், என்னிடமுள்ள அனைத்து நிதியையும் <உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். நான் ஜெயித்தால், உன்னிடமுள்ள ஆபரணங்களை மட்டும் தந்தால் போதும், என்றதும், பார்வதியும் சம்மதித்தாள். ஆட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே அம்பிகையின் கையே ஓங்கியிருந்தது. கடைசியில் அவளே வெற்றியும் பெற்றாள். இந்நேரத்தில், பரமேஸ்வரன் திருமாலை நோக்கி ஜாடை செய்ய, காக்கும் கடவுளான அவர் கஜமுகாசுரனிடமிருந்து உலகைக் காப்பதற்காக தன் பெயரில் பெரிய பழியொன்றை ஏற்றுச்கொள்ளச் சித்தமானார். அடடா! பார்வதி தோற்று விட்டாயே! பார்த்தாயா! மைத்துனர் தான் எப்போதும் எதிலும் வெல்கிறார், என்றார். பார்வதிக்கு கோபம் வந்து விட்டது. அண்ணா! தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? நடுவராக இருப்பவர்கள் தராசு முள்போல் நீதி தவறாமல் இருக்க வேண்டும். நீங்கள் நீதிக்குப் புறம்பாகப் பேசுகிறீர்கள். சரியான தீர்ப்பைச் சொல்லுங்கள். வீணாக என்னைக் கோபப்படுத்தாதீர்கள், என்று ஆக்ரோஷத்தைத் பேசினாள். இந்த ஆக்ரோஷத்தைத் தான் இருபெரும் தெய்வங்களும் எதிர்பார்த்தனர். திருமாலோ தன் தீர்ப்பில் உறுதியாக இருந்தார். பார்வதியின் கண்கள் சிவந்தன. அண்ணா! பொய் சொல்பவர்களின் கண்களை நான் பறித்து விடுவேன். அத்துடன், பாம்பணையில் இதுவரை துயில் கொண்ட நீர், இனி அந்த பாம்பாகவே மாறி காட்டில் திரிவீர், என்றாள். உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், முகத்தில் அதிர்ச்சியைக் காட்டிக் கொண்ட திருமால், பாம்பாக மாறி ஊர்ந்து சென்றார்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 09:29:18 AM
விநாயகர் புராணம் பகுதி-8

சிவபெருமானிடம் சென்ற அவர், மைத்துனரே! சக்தியின் இந்த சாபம் எனக்கு எப்போது தீரும்? என்று கேட்டார். அதற்கு சிவன், விஷ்ணுவே! நீர் வடதீவு என்னுமிடத்திற்கு சென்று இதே வடிவில் வசித்து வாரும். கணபதியின் மகிமையை உலகறியச் செய்ய இந்த வடிவத்துடன் நீர் எனக்கு உதவ வேண்டும். கணபதியைக் கொண்டு கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய இருக்கிறேன். அவன் அதை முடித்து விட்டு, வெற்றித்திருமகனாக நீர் பாம்பாக கிடக்கும் பாதையில் வருவான். அவனது திருவடி அந்தத்தீவில் பட்டதுமே சுய உருவை அடைந்து விடுவீர். மேலும், இந்த சம்பவம் உலகோருக்கு ஒரு பாடமாகவும் அமையட்டும். எந்தச்சூழலிலும் தவறான தீர்ப்பு சொல்லவே கூடாது. நடுநிலை தவறக்கூடாது. தவறான தீர்ப்பு சொல்பவர்கள் விலங்காகப் பிறந்து துன்பமடைவார்கள், என்றார். உலகிற்கு ஒரு பாடத்தைக் கற்பித்த மகிழ்ச்சியுடன் விஷ்ணு வடதீவிற்குப் பாம்பு வடிவிலேயே ஊர்ந்து  சென்றார். இந்த சமயத்தில் கஜமுகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. இந்திரன் முதலான தேவர்களையும், நவக்கிரகங்களையும் அவன் ஆட்டி வைத்தான். அவர்கள் தினமும் இருட்டறையில் அடைக்கப்பட்டு தேவையில்லாமல் சித்ரவதை செய்யப்பட்டனர். ஒருமுறை அவர்கள் அனைவரையும், மொத்தமாக ஒரு மைதானத்தில் நிறுத்திய யானை முகம் கொண்ட கஜமுகாசுரன், சுக்ராச்சாரியாரையும், முன்னாள் அசுரத்தலைவனும் தற்போது தனக்கு அமைச்சராக இருப்பவனுமான அசுரேந்திரன் ஆகியோரையும், அசுரத்தளபதிகள், அசுரமக்கள் அனைவரையும் வரவழைத்தான். அசரகுல திலகங்களே! தேவர்கள் நம்மை வென்று விடலாம் எனக்கருதினார்கள். ஆனால், நான் சிவனாரிடம், அவரது சக்தியைத் தவிர வேறு எதனாலும் அழியமாட்டேன் என்ற வரம் பெற்றிருக்கிறேன். எனவே, இந்தத் தேவர்கள் என்னை எதுவும் செய்ய இயலாது. நம்மை பல சமயங்களில் இவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

நம்மை வென்று விட்டதாக மார்தட்டியுள்ளனர். இப்படிப்பட்ட கொடியவர்கள் இப்போது நம்மை வணங்கி நிற்கின்றனர். ஆனால், வணக்கத்திலும் இப்போது ஒரு வித்தியாசத்தைக் காணப்போகிறீர்கள். இதோ! இவர்கள் அனைவரும் தங்கள் காதுகளை மாறுகைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். உட்கார்ந்து உட்கார்ந்து எழ வேண்டும். தோப்புக்கர்ண வழிபாடு என்பது இதற்குப் பெயர். இப்போது தேவர்கள் என் முன்னால் தோப்புக்கர்ணம் போடப் போகிறார்கள். நீங்கள் பார்த்து ரசித்து கைத்தட்டி மகிழுங்கள், என்றான். பின்னர் தேவர்களை நோக்கி உம் என்று அதட்டினானோ இல்லையோ, நடுநடுங்கிப் போன தேவர்கள் 108 முறை தோப்புக்கர்ணம் போட்டு, கால் வலித்து மயங்கிச் சாய்ந்தனர். அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து சுக்ராச்சாரியாரும், அசுரேந்திரனும் கைகொட்டி ரசித்தனர். வேடிக்கை பார்க்க வந்த அசுரமக்கள், அவர்கள் மீது கதாயுதங்களை வீசினர். அவை அவர்கள் உடல்களைப் பதம்பார்த்து ரத்தம் கொட்டியது. இப்படி நடந்த கொடுமைக்குப் பிறகு, அவர்களை சிலகாலம் விடுவித்தான் கஜமுகாசுரன். தேவர்கள் இதுதான் சமயமென கைலாயத்தை நோக்கி விரைந்தனர். வாசலில் சின்னக்கணபதி வீற்றிருந்தான். விதிமுறைப்படி அவர்கள் கணபதியைப் பூஜித்தனர். கணபதியே! எங்கள் நிலையைப் பார்த்தீரா! பல தவங்கள் செய்தாலும், இறைவனின் சோதனைக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். கஜமுகாசுரனுக்கு தங்கள் தந்தையார் தந்த வரத்தால் நாங்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. காக்கும் கடவுளே! கணபதியே! நீர் தான் எங்களுக்கு அருள வேண்டும். சிவபெருமானை சந்திக்க அனுமதி தர வேண்டும், என்றனர். கணபதி அவர்களை நோக்கி புன்னகைத்தார். தேவர்களே! கவலை வேண்டாம். என்னைத் தஞ்சமடைந்தவர்களை கைவிட மாட்டேன். வாருங்கள், தந்தையாரைப் பார்க்கச் செல்வோம், எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றார். தேவர்களின் நிலை கண்ட சிவபெருமான் கொதித்துப் போனார்.

தேவர்களே! தேவராயினும், அசுரராயினும் நான் நீண்ட ஆயுள் என்னும் வரத்தைக் கொடுப்பது உலக மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே! கஜமுகாசுரன் நான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், அவன் சக்தி இழந்தவனாகிறான். இருப்பினும், நான் அவனுக்கு கொடுத்துள்ள வரத்தின்படி, என் சக்தியான கணபதியை அனுப்பி அவனை சம்ஹாரம் செய்கிறேன், என்றதும், ஆஹா... விமோசனம் அடைந்தோம், என்று சொன்ன தேவர்கள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கணபதியைப் புகழ்ந்து பாடினர். பின்னர், தந்தையின் கட்டளைப்படி, கணபதி அசுரர்களின் பட்டினமான மதங்கநகரத்திற்கு படைகளுடன் புறப்பட்டார். அசலன் என்ற பூதகணம் அவரை தன் தோளில் ஏற்றிக்கொண்டது. சின்னக் கணபதியின் வருகை பற்றி, மதங்கநகருக்கு தகவல் தெரிந்து விட்டதுயாரோ ஒரு சிறுவன், போருக்கு வருகிறான் என்பதைக் கேட்ட கஜமுகாசுரனும், சுக்ராச்சாரியார், அசுரேந்திரன் ஆகியோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தேவர்களுக்கு போயும் போயும் ஒரு குழந்தை தானா தலைவனாகக் கிடைத்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? என்று தங்களுக்குள் கேலி பேசிக்கொண்டனர். மதங்கநகரத்தை சின்னக்கணபதி அடையும் முன்பே, கஜமுகாசுரன் தனது படைகளுடன் போர்க்களத்தில் தயாராக நின்றான். கணபதி தேவர்கள் புடைசூழ அங்கு வந்ததும், கஜமுகாசுரன் அவரை நோக்கி, ஏ சிறுவனே! என்னைப் போலவே யானை முகத்துடன் நீ பிறந்துள்ளதால், உன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்ளாதே. நீ குழந்தை. பலகாலம் வாழ வேண்டியவன். இந்த தேவர்களின் பேச்சைக் கேட்டு உன் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என் சிறுவிரலின் பலம் கூட நீ இருக்க மாட்டாய். திரும்பிப் போய்விடு. நீ சிறுவன் என்பதால், உன் மீது கருணை கொண்டு உன்னை திரும்பிச் செல்ல அனுமதிக்கிறேன். போய்விடு, என்றான். கணபதி கலகலவெனச் சிரித்தார்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 10:03:17 AM
விநாயகர் புராணம் பகுதி-9

சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார். கஜமுகாசுரனுக்கு கோபம் அதிகமாயிற்று. கோபமாக பேசுபவர்களைப் பார்த்து சிரிப்பது என்பது ஒரு வகையான கலை. இந்த சிரிப்பு மேலும் கோபத்தைத் தூண்டும். கோபம் எங்கே அதிகமாகிறதோ, அங்கே தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது. சின்னஞ்சிறுவா! என்னையே கேலி செய்கிறாயா? நான் சிவபெருமானின் அருள் பெற்றவன். மிருகங்களோ, பறவைகளோ, தேவர்களோ என்னை ஏதும் செய்ய முடியாது. அந்தச் சிவனின் சக்தியைத் தவிர வேறு எதுவுமே என்னை அழிக்க முடியாது. என்பதை அறியாமல், இந்த தேவர்களின் ஆயுதங்களை நம்பி வந்து விட்டாய். நீ சிறுவனாய் இருப்பதால் மீண்டும் மன்னிக்கிறேன். போய்விடு, என கர்ஜித்தான். கணபதி கலங்கவில்லை. இந்த கர்ஜனைக்கும் தனது களங்கமற்ற சிரிப்பினையே பதிலாகத் தந்தார். கோபம் உச்சியைத் தொட, தன்னிடமிருந்த சில அம்புகளை கணபதியின் மீது எய்தான் கஜமுகன். கணபதி அவற்றைத் தன் கையில் இருந்த கதாயுதத்தால் தட்டியே நொறுக்கி விட்டார். உம்...உம்... சூரனாகத்தான் இருக்கிறாய். இதோ! இந்த நாகாஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த இந்திராஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த வருணாஸ்திரத்துக்குப் பதில் சொல், இந்த வாயுவாஸ்திரம், நரசிம்மாஸ்திரம், பிரம்மாஸ்திரம் ஆகியவற்றுக்கு பதில் சொல், என ஒவ்வொரு அஸ்திரமாக அனுப்பினான் கஜமுகன். அவை அனைத்துமே, சிவசொரூபரான கணபதியின் காலடியைத் தழுவி பாவ விமோசனம் அடைந்தன. கஜமுகாசுரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். வந்திருப்பவன் சிறுவன் என்றா<லும் சாதாரண மானவன் அல்ல. அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்து, சிறுவனே! இந்த மாயவித்தை கண்டெல்லாம் நான் நடுங்கி விட மாட்டேன். யார் நீ, தைரியமிருந்தால் சொல், என்றான்.

கஜமுகா! உனக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ என் தந்தையின் பக்தன் என்பதால், இவ்வளவு நேரமும் பொறுத்திருந்தேன். தேவர்களும், மனிதர்களும், பறவைகளும், மிருகங்களும், அம்பு முதலான ஆயுதங்களும் உன்னை அழிக்க முடியாது என்பது வாஸ்தவம் தான். இந்த வரத்தையே என் தந்தையிடமிருந்து நீ பெற்றிருக்கிறாய். நான் சிவபுத்திரன். அவரது சக்தி. சிவனின் அம்சத்தால் உனக்கு அழிவு என்பதை மறந்து விட்டாயே. மேலும், நானும் மிருக வடிவினனும் அல்ல. தேவனும் அல்ல, பறவையும் அல்ல, மனிதனும் அல்ல. மிருகமும், தேவவடிவும் கலந்தவன். ஒருவேளை, இந்த வடிவாலும் நீ அழிய முடியாது என்ற வரமிருந்தாலும் கூட ஆயுதங்களால் தான் நீ அழிய முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாயே ஒழிய.. இதோ... என் உறுப்பான தந்தத்தால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற வில்லையே. எனவே, உனக்கு சக்தியிருந்தால் இதைத் தடுத்துப்பார், என்ற கணபதி, ஆவேசம் பொங்கியவராக தன் வலதுபுற கொம்பை ஒடித்தார். அப்போது அண்டசராசரமும் கிடுகிடுத்தது. கஜமுகன் முதலான அசுரர்கள் நடுநடுங்கினர். அவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாத படி உலகம் அங்குமிங்கும் தள்ளாடியது. கணபதியே சாந்தம் கொள்வீர்! என தேவர்கள் வேண்டிக் கொண்டனர். ஒடித்த கொம்பை கணபதி, கஜமுகாசுரன் மீது வீசி எறிந்தார். அது அவன் உடலை இருகூறாகக் கிழித்தது. ஆனாலும், கணபதியின் தந்தம் பட்டதால் அவனுக்கு ஞானம் பிறந்தது. அது மீண்டும் அவரையே வந்து சேர்ந்து ஒடிந்த பகுதியில் ஒட்டிக் கொண்டது. என்னை மன்னிக்க வேண்டும் பெருமானே! தாங்கள் சிவாம்சம் என்பதை அறியாமல் தங்களுடன் மோதி விட்டேன். எனக்கு முக்தி தர வேண்டும், என அவரது கால்களில் வந்து விழுந்தான். தனது பாதத்தை கஜமுகன் பற்றியதும், கணபதி அமைதியானார்.

கஜமுகனே! மனதில் அசுர குணங்களுடன் இறைவனை வழிபட்டு என்ன பலன்? நீ சிறந்த பக்தன் தான், ஆனால், கெட்ட குணங்கள் உன்னை ஆக்கிரமித்திருந்தன. என் நல்லாசியால், நீ ஞானம் பெற்றாய். பிளவுபட்ட உன் யானை முக உடல், இனி மூஞ்சூறாக மாறும். நீயே எனக்கு வாகனமாக இருந்து என்னை உலகெங்கும் சுமந்து செல்வாய், என அருள்பாலித்தார். கஜமுகாசுரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். கணபதியின் வாகனமாகும் பாக்கியம் பெற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். கருணைக்கடலே! தங்களால் என் உயிரை எடுத்து நரகத்திற்கு அனுப்ப முடியும் என்றாலும் கூட, உம் அருள் எம்மைக் காத்தது. பகைவர்க்கும் அருளிய பரம்பொருளே! ஆதியந்தம் இல்லாதவரே! முதல்வரே! உம்மை வணங்குகிறேன், என அவர் முன்னால் தோப்புக்கர்ணம் போட்டான். பின்னர் அவனை மூஞ்சூறாக மாற்றிய கணபதி, அதில் ஏறி, தேவர்கள் புடைசூழ வடதீவுக்குச் சென்றார். அங்கே திருமால், பாம்பாய் மாறி கிடந்தார். கணபதியின் காலடி அங்கு பட்டதும், விமோசனம் பெற்று சுயரூபம் அடைந்தார். மருமகனின் வெற்றியைப் பாராட்டினார். வந்த வேலை சுபமாக வந்த மகிழ்ச்சியில், அவர் வைகுண்டம் திரும்பினார். கணபதியை வணங்கிய தேவர்கள், இதுவரை கஜமுகாசுரனுக்கு போட்ட தோப்புக்கர்ணத்தை தங்களுக்கு போடுகிறோம். இவ்வாறு செய்பவர்களுக்கு தாங்கள் அருள் செய்ய வேண்டும், என வேண்டிக் கொண்டனர். அப்படியே ஆகட்டும், என அருள் செய்த கணபதி, தாய், தந்தையிடம் வெற்றி செய்தியை அறிவித்தார். அவர்கள் அவரை வாழ்த்தினர். இந்நேரத்தில் காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி, விநாயகரை எண்ணி பூலோகத்தில் தவமிருந்து கொண்டிருந்தாள். விநாயகப் பெருமானே! நீர் என் வயிற்றில் பிறக்க வேண்டும், என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 10:04:43 AM
விநாயகர் புராணம் பகுதி-10

காஷ்யப முனிவருக்கு திதி, அதிதி என்ற இரண்டு பத்தினிகள். இவர்களில் திதி அசுர வம்சத்தவள். அசுரக்குழந்தைகளை அவர் மூலம் பெற்றவள். அதிதி தேவர் குலத்தினரைப் பெற்ற மகராசி. இவளது பிள்ளைகளான தேவர்களுக்கு ஒரு சமயம் பூலோகத்தில் வசித்த இரண்டு வேதியர்கள் மூலமாக கடும் பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவள் தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அங்கதேசத்தில் காத்திரம் என்ற நகரம் இருந்தது. இங்கு ரவுத்திரகேது என்பவன் தன் மனைவி சாரதாவுடன் வசித்தான். சாரதா பண்பிலும், கற்பிலும் உயர்ந்தவள். கணவனுக்கு பணிவிடை செய்வதையே தன் கடமையாகக் கொண்டவள். இந்த அன்புத்தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். முதலில் பிறந்தவனுக்கு தேவாந்தகன், அடுத்துப் பிறந்தவனுக்கு நராந்தகன் என்று பெயர் வைத்தார்கள். இருவரும் தந்தையை விட வேதக் கல்வியில் உயர்ந்து விளங்கினார்கள். பிள்ளைகள் கல்வியிலும் பிற வித்தைகளிலும் மிகச்சிறப்பாக இருப்பது கண்டு பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி! நிஜம் தானே! எந்தப் பெற்றவன் தான், தன் பிள்ளை நன்றாக படிப்பது கண்டு மகிழ மாட்டான். மாணவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பெற்றவர்களின் ஆசியைப் பெற வேண்டுமானால், நன்றாகப் படிக்க வேண்டும். பெற்றவர்களின் ஆசியைப் பெற்றவனுக்கு, வாழ்நாள் முழுவதும் சொர்க்கம் தான். இறைவனே அவர்களை நேரில் காண வருவான். தேவாந்தகன், நராந்தகன் வாழ்விலும் இப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டது. தேவாந்தகனும், நராந்தகனும், தங்கள் தந்தையிடம், தந்தையே! நாங்கள் படித்துப் பயனில்லை. கற்ற கல்வியைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்நிலையை அடைய வேண்டும். அதற்கு தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும், என்றனர். பண்டிதரான ரவுத்ரகேதுவும், பிள்ளைகளின் ஆர்வத்தைப் பார்த்து பூரித்தார்.

மக்களே! உயர்நிலை என்பது இறைவனை அடைவது தான். நீங்கள் நினைத்தால் அதைச் செய்யலாம். உங்களுக்கு சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறேன். அதை நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். உங்களுக்கு நிச்சயம் உயர்நிலை கிடைக்கும், என்றார். பின்னர் சிவாயநம என்னும் மந்திரத்தைக் கற்றுக்கொடுத்து, அதன் பெருமையைச் சொல்லி, அதையே சொல்லிவரும்படி சொன்னார். தேவாந்தக, நராந்தகர் தந்தையின் சொற்களை மதித்து, காட்டில் போய் தவமிருந்து, சூரியனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, பத்தாயிரம் ஆண்டுகள் சிவாயநம மந்திரத்தைச் சொல்லி வந்தார்கள். இந்த பத்தாயிரம் ஆண்டுகளும் அவர்கள் தண்ணீர் கூட குடிக்கவில்லை. இவர்களது தவத்தின் வலிமை, நெருப்பாக மாறி சிவலோகத்தையே தகிக்கச் செய்தது. தன் பக்தர்களின் தவவலிமை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு வந்தார். ரிஷப வாகன தரிசனம் புண்ணியம் செய்தவர்களுக்கே கிடைக்கும். பக்திக்காக எதையும் செய்யத் துணிந்த நாயன்மார்களுக்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தான் காட்சி தந்தார். ஞானசம்பந்தர் குழந்தையாக இருந்த போது, ரிஷபத்தில் வந்ததை விடையேறி வந்தார் என சம்பந்தப்பெருமானே பாடியிருப்பதைக் காண்கிறோம். உங்கள் ஊரில் சிவாலய திருவிழாக்களில், ரிஷப வாகனத்தில் சுவாமி வந்தால், அதை தவற விடாமல் பார்த்து விடுங்கள். அந்தளவுக்கு உயரிய தரிசனம் அது. அந்த மதிப்புமிக்க தரிசனம், தேவாந்தக, நராந்தகருக்கு கிடைத்தது. அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என சிவபெருமான் கேட்டார். இந்த நேரத்தில், விதிப்பயனால், அவர்களுக்கு ஆணவம் தலை தூக்கியது.

சிவபெருமானே! திருமால், பிரம்மா முதலான தேவர்களாலும், மிருகங்கள், ஆயுதங்கள், உலகத்திலுள்ள எல்லா வகையான பொருட்கள் உள்ளிட்ட எதனாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது. இந்த வரத்தை தாங்கள் தர வேண்டும், என்றனர். தன் பக்தர்கள் கேட்டதை தரும் இறைவனும் அவ்வாறே வரம் கொடுத்தார். மக்களே! உங்களுக்கு என் மகன் யானை முகனைத் தவிர வேறு யாராலும் அழிவு கிடையாது, என்று சொல்லி மறைந்தார். இந்த வரம் கிடைத்ததாலும், தங்கள் தவவலிமையாலும் ஆணவம் மேல் ஏற, வேதாந்தகனும், நராந்தகனும் தந்தையிடம் சென்றனர். அவர்களைப் பார்த்த தந்தைக்கும் ஆணவம் ஏற்பட்டு விட்டது.  இருவருக்கும் தன் இஷ்டம் போல, தங்கள் குலத்தில் இருந்து பல கன்னிகளைத் திருமணம் செய்து வைத்தார். மகன்களை அசுரலோகத்திற்கு அனுப்பி, அவர்களைத் தனது நண்பர்களாக்கிக் கொள்ளும்படி கூறினான். அவர்களும் அசுரலோகம் சென்று, அவர்களோடு பேசி, தன் நண்பர்களாக்கிக் கொண்டனர். எல்லாருமாகச் சேர்ந்து, தேவலோகத்தைப் பிடிக்க திட்டம் போட்டனர். இது கண்டு, காஷ்யபரின் மூத்த மனைவி திதி சந்தோஷப்பட்டாள். திட்டமிட்டபடி, அவர்கள் இந்திரலோகம் சென்றனர். தேவர்கள் அவர்களை எதிர்த்தனர். ஆனால், எதிர்த்தவர்களை பந்தாடி விட்டனர். தேவாந்தக, நராந்தகர். அவர்களையெல்லாம் பிடித்து, மாடுகளைக் கொட்டிலில் அடைப்பது போல அசுரலோகத்தின் சிறைகளில் அடைத்து விட்டனர். இது கண்டு மகிழ்ந்த அசுரர்கள், அவர்களுக்கு தங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்களை ஆசைநாயகிகளாக்கி வைத்தனர். அந்தப் பெண்கள் மூலமாக அசுர இனத்தை விருத்தி செய்தனர் தேவாந்தக, நராந்தகர். இப்படி பலம் பெற்று விளங்கிய அவர்களை அடக்க இந்திரனே நேரில் வந்தான். ஆனால், இந்திரன் ஏறி வந்த ஐராவத யானையை ஒரே அடியில் தரையில் சாய்த்து விட்டு, அவனைப் பிடிக்க முற்பட்டபோது, தேவேந்திரன் பயந்து போய் மேருமலையிலுள்ள குகைக்கு ஓடிவிட்டான். அவன் மனைவி பேரழகி இந்திராணியை அவர்கள் கடத்த முயன்றனர். அவள் எப்படியோ தப்பித்து, கணவன் பதுங்கியிருந்த மேருமலை குகைக்கே ஓடிவிட்டாள். இவர்களது அட்டூழியம் கண்டு வருந்திய தேவ மாதா அதிதி, தன் கணவரிடமே யோசனை கேட்டாள். உன் மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால், விநாயகரால் மட்டுமே முடியும். அவர் உன் வயிற்றில் பிறக்க வேண்டும் என தவம் செய். நன்மை நடக்கும், என்றார். இதற்காகத்தான், இப்போது அதிதி தவத்தைத் தொடங்கியிருக்கிறாள்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 01:49:28 PM
விநாயகர் புராணம் பகுதி-11

அவளது தவம் நூற்றாண்டுகளைக் கடந்தது. பெண்களின் தவத்திற்கு குறைந்த காலத்திலேயே பலன் கிடைத்து விடும். பல ஆண்கள் உயிருடன் நீண்ட காலம் பூமியில் வாழ காரணமே பெண்கள் தான். அவர்கள் தான் காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம், தெய்வங்களின் திருக்கல்யாண தினம் ஆகிய நேரங்களில் தீர்க்க சுமங்கலியாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். தங்கள் தாலிக் கயிறு என்றும் புதிதாக விளங்க, நித்ய சுமங்கலியாக இருக்க கயிறு மாற்றிக் கொள்கிறார்கள். இதனால், நாத்திகனே கணவனாக அமைந்தாலும் கூட, இந்தப் பெண்ணின் நன்மை கருதி, அவனையும் தீர்க்காயுளுடன் இந்த பூமியில் திரிய விடுகிறான் கடவுள். அதிதியின் தவத்துக்கு நூறு ஆண்டுகளில் பலன் கிடைத்து விட்டது. விநாயகப் பெருமான் அவளது தவத்தை மெச்சி அவள் முன் தோன்றினார். முனி பத்தினியே! என்ன காரணத்திற்காக நூறாண்டுகள் தவம் மேற்கொண்டாய், என்று கேட்டார். வேதாந்தக, நராந்தகர்களால் ஏற்படும் அவலம் பற்றியும், தனக்கு மகனாகப் பிறந்து, அவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும் அதிதி கேட்டுக் கொண்டாள். விநாயகரும் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து விட்டார். சில காலம் கழிந்தது. வேதாந்தக, நராந்தகர்களின் அட்டூழியம் தீவிரமானது. படைக்கும் கடவுளான பிரம்மாவே மேரு மலை குகையில் ஒளிந்து கொண்டார் என்றால் மற்றவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? இதுகண்டு பூமிமாதா கதறினாள். நல்லவர்களின் மரணம் அவனை வாட்டியது. அவள் பிரம்மா ஒளிந்திருந்த மேருமலைக்குச் சென்று அவரிடமே முறையிட்டாள். கவலைப்படாதே மகளே! உன் பாரம் வெகு விரைவில் குறையும். விநாயகப்பெருமான் அதிதியின் வயிற்றில் அவதரிக்கப் போகிறார், அவரால் நமக்கு விமோசனம் கிடைக்கும், என்றார். அந்நேரத்தில் அசரீரியும் ஒலித்தது. பூமாதேவியே கலங்காதே! நீ பொறுமையுடன் இரு. விநாயகர் இன்று அதிதியின் மகனாக அவதரிக்கப் போகிறார், என்ற குரல் கேட்டு அவள் மட்டுமல்ல, தேவர்களெல்லாம் மகிழ்ந்தார்கள். பூமாதேவி மகிழ்ச்சியுடன் சென்றாள். அன்று மாலையில் அதிதி விநாயக பூஜையைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆயிரம் தலைகளுடன், பல ஆயிரம் கைகளுடனும் இன்னும் பல்லாயிரம் உறுப்புகளுடனும் விநாயகர் அவள் முன்னால் வந்து நின்றார். அம்மா என பாசத்தோடு அழைத்தார். விநாயகரின் ஒளிமிக்க அந்த தரிசனம் கண்டு அதிதி மகிழ்ந்தாள்.

கணபதியே! வந்து விட்டீர்களா! என்ன பாக்கியம் செய்தேன், என்றவள், அவரது பாதங்களில் அடிபணிய முற்பட்டாள். விநாயகர் விலகி நின்றார். தாயே! உங்கள் பிள்ளை நான். என் காலில் நீங்கள் விழலாமா? உங்கள் காலடியில் அல்லவா நான் ஆசிபெற வேண்டும், என்றார் அடக்கத்துடன். இறைவன் இப்படித்தான்! அவனது அன்பு அளப்பரியது. யார் அவனுடைய திருவடிகளைத் தேடி ஓடுகிறார்களோ, அவர்களைத் தேடி அவன் வந்துவிடுவான். அவர்களது பாதங்களிலும் பணிய தயாராகி விடுவான். ராமாவதராத்திலும் ஸ்ரீமன் நாராயணனின் நோக்கம் அது தானே! தன்னை வணங்கும் ரிஷிகளைத் தரிசிக்கத்தானே காட்டுக்குச் செல்லும்படியான ஒரு சூழ்நிலையையே பகவான் உருவாக்கிக் கொண்டார். கிருஷ்ணாவதாரத்தில், கோபியர்களாகப் பிறந்த தனது பக்தர்களை ஆட்கொண்டார்! இப்படித்தான், இங்கே கணபதியின் பிறப்பும் அமைகிறது. அதிதி பாசத்துடன், குணாநிதியே! தாங்கள் இவ்வளவு பெரிய வடிவத்தில் இருந்தால், தங்களை எப்படி என்னால் வளர்க்க முடியம்? பெற்றவர்களுக்கு பிள்ளையை மடியில் தூங்க வைக்க வேண்டும். தாலாட்ட வேண்டும், பாலூட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசையிருக்காதா? தாங்கள் பால கணபதியாக ஒற்றை முகத்துடன் உருவெடுத்து என் மடியில் தவழ வேண்டும், என்று கேட்டாள். அந்த பக்தையின் கோரிக்கை அந்தக்கணமே நிறைவேறிவிட்டது. கையில் தாமரையுடன், விநாயகப்பெருமான் பெரிய வயிறுடன், தும்பிக்கையுடன் குழந்தையாக அவள் மடியில் தவழ்ந்தார். உலகையே உள்ளடக்கிய பெருமான் அல்லவா! அதனால் தான் பானை வயிறு அமைந்தது. அதிதி குழந்தையை எடுத்துக்கொண்டு காஷ்யபரிடம் ஓடினாள். விநாயகப்பெருமானே தங்கள் குழந்தையானது கண்டு அவர்கள் மகிழ்ந்தனர். ஊராருக்கு அவர் கணபதி என்ற கடவுள் என்றாலும், இப்போது தங்கள் பிள்ளையாகி விட்டாரே! எனவே, குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என ஆலோசித்தனர். அவரது பெரிய வயிறை மனதில் கொண்டு மகோற்கடன் என பெயர் சூட்டினர். மகோ என்றால் பெரியது. கடம் என்றால் பானை. பானை வயிற்றோன் மகோற்கடன் அவர்களது அன்புச்செல்வமாக வளர்ந்தான். அதிதிக்கு இயற்கையாகவே பால் சுரந்தது. அந்த பாலைக் குடித்து, நற்குண நற்செய்கைகளுடன் மகோற்கடன் வளர்ந்து வந்தான்.

அவனது பிறப்புக்கு பிறகு உலகின் நிலை மாறியது. தவறாமல் மழை, பயிர்களின் செழிப்பு, எல்லாவகையிலும் முன்னேற்றம், குழந்தை பெற தகுதியற்றவர்கள் என ஒதுக்கப்பட்டவர்களுக்கு கூட மகப்பேறு... இப்படி பல சுப பலன்கள் நடந்தன. தேவர்களெல்லாம், தேவாந்தக, நராந்தகர்களின் முடிவு காலத்திற்காக காத்திருந்தனர். பூலோகவாசிகளில் நல்லவர்களுக்கு நன்மை நடக்க, தீயவர்களான அசுரர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளித்த வேதாந்தக, நராந்தகர்கள் வசித்த பகுதிகளில் ரத்தமழை கொட்டியது. அவர்களது இடது கண்கள் துடித்தன. இடதுகண் துடித்தால் ஆகாது என்பார்கள். இந்த அபசகுனங்கள் கண்டு அரண்டுபோன வேதாந்தக, நராந்தகர் ஜோதிடர்களை வரவழைத்தனர். தங்களுக்கு ஏற்பட்ட அபசகுணங்கள் பற்றி கேட்ட போது, ஜோதிடர்கள், பேரரசர்களே! காஷ்யப முனிவரின் புத்திரனாக ஒரு குழந்தை தோன்றியிருக்கிறான். யானை முகம் கொண்ட அந்தச் சிறுவனால் உங்களுக்கு ஆபத்து. நீங்கள் வேண்டிய ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள், என்றனர். குழந்தையாவது கொல்வதாவது... என்ன இவர்கள் உளறுகிறார்கள்? என்று நினைத்த வேதாந்தக, நராந்தகர் எதற்கும், அந்தக் குழந்தையை அழித்து விடுவது நல்லது என்றே கருதினர். சுரசை என்ற அரக்கியை அழைத்து, இப்போதே காஷ்யபரின் ஆசிரமத்திற்கு சென்று, அங்கே பிறந்திருக்கும் யானைத்தலை குழந்தையைக் கொன்றுவிடு, என உத்தரவு பிறப்பித்தனர்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 01:50:58 PM
விநாயகர் புராணம் பகுதி-12

உடனடியாக சுரசை தன் அரக்க வடிவத்தை மாற்றினாள். காஷ்யபரின் ஆஸ்ரமத்திற்கு செல்வதனால், அந்தணப்பெண்ணின் வடிவமே ஏற்றது என முடிவெடுத்தாள். அதுபோலவே தன்னை மாற்றிக் கொண்டு, ஆஸ்ரமத்தை நெருங்கினாள். மகோற்கடன் வாசலில் சக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவரது தும்பிக்கையை பிடித்து இழுத்து, சிறுவர்கள் கலாட்டா செய்தனர். பலம் மிக்க யானையல்லவா கணபதி! அந்தச்சிறுவர்களுக்கு அதன் மூலம் அளவற்ற மகிழ்ச்சியை அவன் தந்து கொண்டிருந்தான். இந்நேரத்தில் அங்கே வந்த சுரசையை மகோற்கடன் கவனித்து விட்டான். இருப்பினும், தன் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தான். சுரசை அங்கே வந்து அவனிடம் அன்புமொழி பேசினாள். மற்ற சிறுவர்களிடமும் அவள் அன்பைப் பொழிவது போல நடித்தாள். திடீரென தன் உருவத்தை மாற்றி, குழந்தை மகோற்கடனை தன் வாய்க்குள் போட்டு விட்டாள். சக சிறுவர்கள் அலறியடித்து ஆஸ்ரமத்திற்குள் ஓடினர். குருவே! குருவே! மகோற்கடனை பூதம் விழுங்கிவிட்டது...  பூதம் விழுங்கிவிட்டது என குரல் எழுப்பி ஓடிச் சென்றனர். காஷ்யபரும், அதிதியும் வாசலுக்கு வந்தனர். தங்கள் முன்னால் மிகப்பெரிய வடிவில் ஒரு அரக்கி நிற்பதையும், அவளது முன் பல் இடுக்கில் குழந்தை சிக்கியிருப்பதையும் பார்த்தனர். பெரியவர்கள் எந்தச்சூழலிலும் பதறுவதில்லை. காஷ்யபருக்கு தெரிந்து விட்டது... எல்லாம் அந்த ஆதிமுதலானவனின் திருவிளையாட்டு தான் என்று! ஆனால், பெற்றவளுக்கு பிள்ளைக்கு ஒன்று என்றால் தவித்துப் போவாள். அதிதி அழுது அரற்றினாள். ஏ பாதகி ! நீயும் ஒரு பெண்ணா! என் குழந்தையை விட்டுவிடு. பதிலாக என்னை உன் உணவாக்கிக் கொள், எனக் கதறினாள். சுரசையோ, எதையும் கண்டுகொள்ளாமல் பயங்கர சிரிப்பு சிரித்தாள். ஒரே விழுங்கு... மகோற்கடன் அவளது வயிற்றுக்குள் போய் விட்டான். அதிதி மயக்கநிலைக்கே போய்விட்டாள். காஷ்யபர் இப்போதும் பதறவில்லை. மனைவியைத் தேற்றினார்.

அதிதி! நாம் ஏன் அழ வேண்டும்? நமக்கு பிறந்திருப்பது யார் என்பதையே மறந்து பிள்ளைப் பாசத்தில் தவிக்கிறாயே! அவன் உலகையே ஆளும் ஈசனல்லவா! அந்த ஈசனுக்கும் அவன் இறைவனல்லவா! என் ஆறுதல் மொழிகள் சொன்னார். காஷ்யபர் நினைத்தது போலவே சற்றுநேரத்தில் நிகழ்ந்தும் விட்டது. குழந்தையை விழுங்கிய மகிழ்ச்சியில் பேயாட்டம் போட்ட சுரசையின் வயிற்றுக்குள் சென்ற மகோற்கடன், தன் நெற்றிக்கண்ணைத் திறந்தான். விரசையின் வயிறு எரிந்தது. அவள் அலறித் துடித்தாள். ஏ சிறுவா! உள்ளேயிருந்து என்ன செய்கிறாய்? என் வயிறு சுடுகிறதே, என்று கதறினாள். பிறர் வயிற்றெரிச்சலை சம்பாதிப்பவர்கள், தாங்களும் அதே அவஸ்தைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதற்கு இந்த சுரசையே ஒரு உதாரணம் தான்! இந்த நேரத்தில் வயிற்றுக்குள் இருந்த மகோற்கடன் தன் கால் பெருவிரலால், அவள் வயிற்றை அமுக்கினான். அது கிழிந்து தொங்கியது. ரத்த ஆறு வெளிப்பட்டது. உள்ளிருந்து துள்ளிக் குதித்து வெளிப்பட்டான் மகோற்கடன். சுரசை வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்து மடிந்தாள். அதிதி மகிழ்ந்தாள். காஷ்யபர் தன் திருமகனின் வீரச்செய<லுக்காக பெருமிதப்பட்டார். கடவுளின் கிருபை அலாதியானது. பக்தையான நல்லவளின் வயிற்றில் நேரடியாகப் பிறக்காமல், பெரிய உருவத்துடன் வந்தார். அவளது வேண்டுகோளுக்காக உருவத்தைச் சுருக்கி, பாலலீலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், கெட்டவளான அரக்கியின் வயிற்றுக்குள் ஒரு நிமிடப்பொழுதாவது இருந்து விட்டு, அவளது வயிற்றில் இருந்து மீண்டும் மறு பிறப்பெடுக்கிறார். தவறான நோக்கத்துடன் தன்னை விழுங்கி தாங்கியிருந்தாலும், சுரசையின் வயிற்றில் கணநேரமாவது இருந்துவிட்டதால், அவளுக்கு முக்தியும் தந்தார். அவள் சொர்க்கத்தை அடைந்து பிறவாநிலை பெற்றாள். கடவுள் நல்லவர், கெட்டவர் என பார்ப்பதில்லை. அவருக்கு எல்லாரும் ஒன்றுதான். நல்லவர்களுக்கு நேரடியாக சொர்க்கத்தையும், கெட்டவர்களுக்கு சிறிது அவஸ்தையைக் கொடுத்து அவர்களையும் ஆட்கொள்ளும் தன்மையுடையவர் என்பது இதில் இருந்து தெரிகிறது அல்லவா! குழந்தையை ஆஸ்ரமத்திற்குள் எடுத்துச் சென்று அவரை பலவகை திரவியங்கள், பால், பன்னீர், புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு நீராட்டினாள் அதிதி. பின்னர் சாம்பிராணி புகையிட்டு, தலையைக் கோதி விட்டாள். இதற்குள் விரசை இறந்து போன தகவல், வேதாந்தக, நராந்தர்களை எட்டியது. ஆச்சரியப்பட்டு போனார்கள் அவர்கள். நிச்சயம் அந்தக் குழந்தை சக்தி வாய்ந்தது தான். அவனைக் கொல்ல வேண்டுமானால், பலசாலிகளை அனுப்ப வேண்டும் என முடிவு செய்து, உதத்தன், துந்துபி என்ற இரண்டு சேனாதிபதிகளை வரவழத்தனர்.

சேனாதிபதிகளே! நீங்கள் உடனடியாக காஷ்யபரின் ஆசிரமம் சென்று, அந்த சிறுவனைக் கொண்டு வாருங்கள் அல்லது கொன்று வாருங்கள், என்றனர். ஒரு சிறுவனைப் பிடிக்க இரண்டு பேரா? ஆச்சரியமாக இருக்கிறதே எனக்கருதிய அந்த அரக்கர்கள், காஷ்யபரின் இல்லத்தை கணநேரத்தில் அடைந்தனர். குழந்தையைக் கொல்வதற்காக ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தனர். தங்கள் வடிவத்தை மாற்றிக்கொண்டால் மகோற்கடனைப் பிடிப்பது எளிதெனக்கருதி, தங்களை கிளிகளாக மாற்றிக்கொண்டனர். அப்போது அதிதி, தன் பாலகனை மடியில் சுமந்து கொண்டு, வெளியே வந்தாள். கிளிகளைக் கவனித்துவிட்டான் மகோற்கடன். புன்னகை பூத்தான். கிளிகளைப் பார்த்து தன் குழந்தை சிரிப்பதைக் கண்ட அதிதி,அவற்றை வேடிக்கை காட்டியபடியே,  குழந்தைக்கு பால்சோறு ஊட்ட ஆரம்பித்தாள். குழந்தை மகோற்கடனோ, அம்மா! எனக்கு அந்தக்கிளிகள் வேண்டும், அவற்றை பிடித்து தா! அவை என் அருகில் இருந்தால் தான் நான் சாப்பிடுவேன், என சாப்பிடாமல் முரண்டு பிடித்தான். அதிதி மகனைக் கண்டித்தாள். குழந்தாய், என்ன இது சேஷ்டை! மரத்தில் இருக்கும் கிளிகளை என்னால் எப்படி பிடிக்க முடியும்? நீ சாப்பிடு! வேடர்கள் இவ்வழியாக வருவார்கள், அவர்களிடம் சொல்லி பிடித்து தருகிறேன், என்று சொல்லவும், அந்த அதிசயம் நிகழ்ந்தது.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 01:52:54 PM
விநாயகர் புராணம் பகுதி-13

அதிதியின் மடியில் படுத்திருந்த குழந்தை மகோற்கடன், ஒரு பருந்தாக வடிவெடுத்தான். மின்னல் வேகத்தில் கிளிகளை நோக்கிப் பறந்தான். அந்தக் கிளிகளை வாயால் கவ்வினான். அதன் இறக்கைகளை பிய்த்து எறிந்தான். தலையைக் குதறினான். அந்த இரண்டு கிளிகளும் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து மடிந்த போது, தங்கள் சுயரூபத்தை அடைந்து ஓவென்ற பேரிரைச்சல் கேட்டது. இதெல்லாம் அரக்கர்களின் வேலை என்பது அப்போது தான் அதிதிக்குப் புரிந்தது. அவள் காஷ்யபரிடம் ஓடிச்சென்று விஷயத்øதைச் சொல்ல, அவரும் வந்து பார்த்து குழந்தையின் வீரத்தை எண்ணி அதிசயித்தார். மேலும், பால விநாயகனின் லீலையையும் ரசித்தார். தங்களால் அனுப்பப்பட்ட அசுரர்கள் கிளிவடிவில் சென்று குழந்தையின் கையால் இறந்தார்கள் என்பதைக் கேள்விப்பட்ட தேவாந்தக, நராந்தகருக்கு கிலி பிடித்துக்கொண்டது. மேற்கொண்டு சில காலம் குழந்தை மகோற்கடனுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்து விட்டனர். அதிதியும் நிம்மதியாக குழந்தையை வளர்த்தாள். குழந்தைக்கு மூன்று வயதான போது, அவனை ஒரு முறை சோமவதி என்ற குளத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே சில முனிபத்தினிகளும், முனிவர்களும் அவரவர்க்குரிய துறைகளில் நீராடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு முதலை தண்ணீருக்குள் இருந்து வெளிப்பட்டது. குழந்தை மகோற்கடன் விளையாட்டுத்தனமாக, அதோ! பூச்சி வருகிறது. நான் அதைப் பிடிக்கப் போகிறேன் என சொல்லிவிட்டு, யார் பதிலுக்கும் காத்திராமல், தண்ணீரில் குதித்து விட்டான். அதிதி அலறினாள். குழந்தை தண்ணீரில் குதித்து விட்டானே என்று பிற துறைகளில் குளித்துக் கொண்டிருந்த முனிவர்களும் ஓடோடி வந்தனர். ஆனால், யாருக்கும் தண்ணீரில் குதிக்க தைரியமில்லை. என்னாகப் போகிறதோ என்று பதைபதைப்புடன் பேசிக் கொண்டனர். மகோற்கடன் அந்த முதலையை நிஜமாகவே பூச்சியைப் பிடிப்பது போலவே பிடித்தான். ஆனால், அந்த முதலை தன் பிறவிக்குணத்தைக் காட்டி விட்டது. குழந்தையை வாலால் சுழற்றி அடித்து அப்படியே விழுங்கிவிட்டது.  அதிதியும் முனிபத்தினிகளும் கதறி அழுதனர். முனிவர்கள் வருத்தம் தாளாமல் கண்ணீர்  வடித்தனர்.

மகோற்கடா! உன் தந்தைக்கு என்ன பதில் சொல்வேன். குளத்திற்கு குளிக்க வராதே. வீட்டிலேயே நீராடு என்று சொன்னேனே! உன்னை அங்கே பாலிலும், பன்னீரிலும் குளிக்க வைத்திருப்பேனே! இப்படி சேஷ்டை செய்து, வீணாக உயிர் துறந்தாயே! விநாயகப்பெருமானே! தவமிருந்து பெற்ற உம்மை எப்படி மீட்பேன், என புலம்பியபோது, குழந்தையை விழுங்கிய முதலையின் வாயைப் பிளந்து கொண்டு, மகோற்கடன் வெளிப்பட்டதை எல்லாரும் பார்த்தனர். அவன் முதலையின் முதுகில் ஏறி அமர்ந்தான். மகோற்கடா! முதலையைக் கொன்றுவிட்டு தப்பி வந்துவிடு. அல்லது சமயோசிதமாக கரைக்கு வந்து சேர், என அதிதி கத்தினாள்.மகோற்கடன் அந்த முதலையைப் பார்த்து, கரையை நோக்கிச் செல், என்று ஆவேசமாக சொன்னான். முதலை வேகமாக கரைக்கு வந்தது. அது கரை முகப்பைத் தொட்டதும் இறந்து விட்டது. அதன் உடலில் இருந்து அழகே வடிவான ஒரு இளைஞன் வெளிப்பட்டான். அவன் மகோற்கடனின் பாதங்களில் விழுந்து பணிந்தான். ஐயனே! நான் ஒரு கந்தர்வன். எனது பெயர் சித்திரன். எங்கள் லோகத்தில் நடந்த திருமணத்துக்கு பிருகு முனிவரை அழைத்திருந்தோம். அவரும் வந்தார். எல்லா கந்தவர்களும் அவருக்கு தகுந்த மரியாதை அளித்தனர். நான் திருமண வேலையில் மும்முரமாக இருந்தததால், அவரை வரவேற்காமல் விட்டுவிட்டேன். இதனால், கோபமடைந்த அவர் என்னை முதலையாக மாறும்படி சபித்து விட்டார். நானும் முதலையாகி இந்த தடாகத்திலே கிடந்தேன். அவரிடம் சாபவிமோசனம் கேட்ட போது, சிவமைந்தரான விநாயகர், பூமியில் மகோற்கடராக அவதரிக்கும்போது, அவரது ஸ்பரிசத்தால் சுயரூபம் பெறுவேன் என்றார். அதன்படி என் நிலை இன்று மாறியது என்றான். பின்னர் கந்தவர்கள் சிலர், புஷ்பக விமானத்தில் பூமிக்கு வந்தனர். அவர்களுடன் சித்திரனும் ஏறி தன்லோகம் சென்றான்.தங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி... அவர்களை வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி வரவேற்காதவர்கள் முதலையாகவோ இன்னும் உயிர்களைப் பறிக்கும் பூச்சிகளாகவோ பிறந்து மக்களால் வெறுக்கப்படுவார்கள். ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமையில் சொந்த பந்தமின்றி வாழ்வார்கள் என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு தத்துவத்தையும் பால விநாயகரின் லீலையில் இருந்து இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். ஏதாவது சிறப்பாக செய்து விட்டவர்களை ஆஹா...ஊஹூ என பாராட்டுவோம். இந்த ஆஹா, ஊஹூ என்ற வார்த்தைகள் எப்படி பிறந்தது தெரியுமா?

ஆஹா, ஊஹூ என்பவர்கள் கயிலாய லோகத்திற்கு சென்று அடிக்கடி சிவபெருமானை தரிசிப்பவர்கள். வழிபாடுகளிலேயே மிகவும் உயர்ந்தது இசையால் இறைவனை வழிபடுவதாகும். உள்ளம் உருகி, தாள வாத்தியங்களுடன் பாட்டுப்பாடி இறைவனை வணங்கினால் அவன் மிகவும் மகிழ்வான். இசைக்கலைஞர்கள் பாடும்போது ரசிகர்கள் பாடலில் லயித்து ஆஹா, ஊஹூ என சொல்லி பாராட்டுவதில்லையா? அதனால் அவர்கள் அந்த வார்த்தைகளையே தங்களுக்கு பெயராக சூட்டிக் கொண்டனர். இவர்களது நண்பர் தும்புரு. குதிரை முகம் கொண்ட இவரும் சிறந்த இசைஞானி. இவர்கள் மூவரும் சிவபெருமானைத் தரிசிக்க தங்கள் தாளவாத்தியங்களுடன் கயிலைமலைக்குச் சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் காஷ்யபரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். அந்த மகரிஷியைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்ரமத்திற்குள் சென்றனர். காஷ்யபரும், அதிதியும் அவர்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்று, விருந்து சாப்பிட வேண்டினர். அந்த கலைஞர்களும் தாங்கள் நீராடி விட்டு, பஞ்சமூர்த்தி பூஜை செய்த பிறகு சாப்பிடுகிறோம் என்றனர். அவர்களிடம் விநாயகர், சிவன், பார்வதி, விஷ்ணு, சூரியன் ஆகியோரின் சிலைகள் இருந்தன.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 01:54:27 PM
விநாயகர் புராணம் பகுதி-14

நீராடிவிட்டு வந்த அவர்கள் தங்களிடம் இருந்த விக்ரகங்களுக்கு பூஜை செய்ய துவங்கினர். பூஜை முடிந்ததும், அப்படியே தியானத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தபோது, தங்கள் முன்னால் இருந்த விநாயகர்,சிவன்,பார்வதி, விஷ்ணு, சூரியன் விக்ரங்களால் காணாமல் போனது கண்டு திகைத்தனர். அவர்கள் பெரும் அதிர்ச்சியுடன் காஷ்யப முனிவரிடம் சென்று, விக்ரகங்கள் காணாமல் போய்விட்டது பற்றி கண்ணீர் வடித்தனர். முனிவரே! தங்கள் ஆஸ்ரமத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததை தாங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். எங்களது விக்ரகங்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை கிடைக்காமல் போனால், நாங்கள் உயிர் தரிக்க மாட்டோம் என்பது வேறு விஷயம். ஆனால், இந்த அநியாயத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும், என முறையிட்டனர். காஷ்யபர் வருத்தமும், கோபமும் அடைந்தார். தனது சீடகோடிகளை அழைத்து, யாராவது இவர்களது சிலைகளைத் திருடியிருந்தால், உடனே கொண்டு வந்து கொடுத்துவிடுங்கள். இப்போதே கொடுத்துவிட்டால் உயிராவது மிஞ்சும். நானாக கண்டுபிடித்தால், உங்களை சாம்பலாக்கி விடுவேன், என கடுமையாக எச்சரித்தார். சீடர்கள் நடுநடுங்கி நின்றனர்.  குருவே! உங்கள் சீடர்களான எங்களுக்கு, யாரும் சொல்லிக்கொடுத்தாலும்கூட திருட்டுப்புத்தி வராது என்பதை தாங்கள் உணர்ந்திருக்கவில்லை என்பதை அறியும்போது, நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். எங்களைத் திருடர்கள் என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? துறவையே வாழ்க்கையாகக் கொண்ட நாங்கள், பிறர் பொருளுக்கு ஆசைப்படுவோமா? என வருத்தத்துடன் கூறினர். அனைவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இதைப்பார்த்த ஆஹா, ஊஹூ, தும்புரு ஆகியோர் நெகிழ்ந்து போனார்கள். காஷ்யபரிடம் சீடர்கள் பற்றி புகார் கூறியதற்காக வருந்தி நின்றார்கள். ஆயினும், விக்ரகங்களைக் காணவில்லை என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்நேரத்தில் காஷ்யபர், தனது ஞான திருஷ்டியின் மூலம் விக்ரகங்கள் எங்கிருக்கின்றன என்பதை கண்டு பிடித்து விட்டார். சீடர்களிடம், நீங்கள் உடனே சென்று என் மகன் மகோற்கடனை அழைத்து வாருங்கள் என்றார்.

விநாயகப்பெருமானாகிய மகோற்கடன் அழைத்து வரப்பட்டார். அவரது உடம்பெல்லாம் வெண்ணிற திருநீறு பளபளவென மின்னியது. அவரைப் பார்த்தவுடனேயே, கையெடுத்து வணங்க வேண்டுமென அங்கிருந்தவர்களுக்கு தோன்றியது. காஷ்யபர் மிகவும் கண்டிப்பான குரலில், மகோற்கடா! நம் இல்லத்திற்கு வந்தவர்களின் பொருளைத் திருடி எனக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே? நீதான் அவர்கள் கொண்டு வந்த சிலைகளை மறைத்து வைத்திருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொண்டேன். உடனே அதைக் கொடுத்துவிடு! இல்லாவிட்டால் பிரம்பை எடுத்து வந்து உன்னை உதைப்பேன். என்ன செய்யப்போகிறாய்? என்றார். மகோற்கடன் சிரித்தான். தந்தையே! விக்ரகங்கள் என்னிடம்தான் உள்ளன. நான் யார் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். என்னால் உங்களுக்கு பெருமைதான் வருமே ஒழிய, சிறுமை ஏற்படாது. இப்போது பாருங்கள். உங்களுக்கே நான் யார் என்பது தெரியும், என்று சொல்லியவர், தனது வாயைத் திறந்தார். அண்ட சராசரங்களும் அவரது வாய்க்குள் தெரிந்தன. அது அகலமாகிக் கொண்டே போனது. வயிற்றுக்குள் ஈரேழு லோகங்களும் அடங்கியிருந்தன. வல்லமை பொருந்திய இறைவனே, காஷ்யபருக்கு மகனாக அவதரித்துள்ளதை ஆஹா, ஊஹூவும், தும்புருவும் புரிந்து கொண்டனர். காஷ்யப முனிவர், தங்களுக்குப் பிறந்துள்ளது விநாயகப்பெருமான் என்பதை அறிந்திருந்தாலும், அவரே முழுமுதல்கடவுள் என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டார். அவர் வாயைத்திறந்தபோது, சகல உலகங்கள் மட்டுமின்றி காணாமல் போன, விக்ரகங்களும் உள்ளே இருந்ததை அனைவரும் கண்டனர். விநாயகப்பெருமான் புன்னகை செய்தபடியே, அந்த விக்ரகங்களை வாயில் இருந்து எடுத்து ஆஹா, ஊஹூவிடம் ஒப்படைத்தார். சிலைகளைக் காணாமல் செய்ததன் மூலம், தான் யார் என்பதை மகோற்கடனாகிய விநாயகர் உலகுக்கு அறிவித்துள்ளார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். பின்னர், அவர்கள் காஷ்யபரின் ஆஸ்ரமத்தில் உணவை முடித்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, மகோற்கடனுக்கு ஐந்து வயதானது. அவருக்கு பூணூல் அணிவிக்கும் சடங்கை நடத்த காஷ்யபர், ஏற்பாடு செய்தார். அந்த விழாவிற்காக பல முனிவர்களை தங்கள் ஆஸ்ரமத்திற்கு அழைத்திருந்தார். ஏராளமானோர் அங்கு வந்து சேர்ந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட நராந்தகன், மகோற்கடனைக் கொல்வதற்காக பிங்காட்சன், பிங்களன், சபலன், விகிர்தன், விசாலன் என்ற ஐந்து அசுரர்களுக்கு முனிவர் போல வேடமிட்டு அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தான். அந்த அசுரர்கள் விபூதி, ருத்ராட்சம் அணிந்து, கையில் கமண்டலத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். பூணூல் அணிவிக்கும் சடங்கு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. முனிவர்கள் எல்லாம் குழந்தை மகோற்கடனை ஆசிர்வதிப்பதற்காக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அந்த வரிசையில் ஐந்து அசுரர்களும் இணைந்து கொண்டனர். எல்லாரும், அட்சதை தூவி குழந்தையை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தனர். ஐந்து அசுரர்களும் தாங்கள் கொண்டு வந்த அஸ்திரங்களை அட்சதையாக மாற்றி தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, அட்சதையை தூவுவது போல அஸ்திரங்களை ஏவி, மகோற்கடனை கொன்றுவிட வேண்டும் என திட்டம் தீட்டியிருந்தனர். அவர்கள் மகோற்கடனை நெருங்கினர்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 01:55:57 PM
விநாயகர் புராணம் பகுதி-15

மகோற்கடனின் அருகில் வந்ததும் ஐவரும் ஒன்றிணைந்து, தங்கள் கையிலுள்ள அட்சதையை கணபதியின் மீது தூவினர். அட்சதை அரிசி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஆயுதமாக மாறி மகோற்கடனை நோக்கிப் பாய்ந்தது. மகோற்கடன் அவற்றை நோக்கிப் புன்னகைக்கவே அவை அவரது திருவடிகளில் சரணடைந்தன. ஐந்து அரிசிகள் மட்டும் மகோற்கடனின் கைகளில் விழுந்தது. அவற்றை அவர் அசுரர்களின் மீது எறியவே, அவை பாய்ந்து சென்று அவர்களை அழித்தன. முதலில் அதிர்ந்த அனைவரும், மகோற்கடனின் அற்புதச்செயல் கண்டு அவரைப் புகழ்ந்தனர். பின்னர் உபநயன சடங்கை சிறப்புற முடித்தார் காஷ்யபர்.உபநயன சடங்குக்கு வந்தால் பரிசுகள் தர வேண்டாமா? உபநயனத்திற்கு திருமால், பிரம்மா, சிவன், துர்க்கை மற்றும் பல தேவர்கள் வந்திருந்தனர். அவர்களில் சிவன் திரிசூலம், கோடரி எனப்படும் மழு, உடுக்கை, சடை, நிலா ஆகியவற்றைக் கொடுத்தார். துர்க்கை தனது சிங்க வாகனத்தைக் கொடுத்தார். பிரம்மா நவரத்தினங்களால் செய்யப்பட்ட புனிதநீர் செம்பு ஒன்றைக் கொடுத்து தாமரை மலரால் அர்ச்சித்தார். திருமால் தனது சக்ராயுதத்தைக் கொடுத்து அழகிய பட்டாடை ஒன்றையும் வழங்கினார். பிரகஸ்பதியாகிய தேவகுரு ரத்தினங்களையும், வருணன் பாசக்கயிற்றையும், கடலரசன் முத்து மாலையும், எமதர்மன் தண்டாயுதத்தையும் கொடுத்தனர். திருமாலுடன் வந்திருந்த ஆதிசேஷன் அவரது படுக்கையாக மாறி, மகோற்கடனைத் தன்னில் சயனம் செய்ய வைத்தான். ஆனால், தேவர் தலைவனான இந்திரன் மட்டும் மகோற்கடனின் அருகில் வரவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. காஷ்யபர் அவனை அழைத்தார்.

இந்திரா! இவன் சிவபெருமானின் மைந்தன் என்பதை நீ அறிவாய். எங்களது தவப்பயனால், எங்கள் இல்லத்தில் பிறந்திருக்கிறான். எனவே, இவனை மானிடன் என நினைத்து ஒதுக்கி விடாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். தெய்வம் விண்ணில் இருந்தாலும், மண்ணில் இருந்தாலும், தூணில் இருந்தாலும், துரும்பில் இருந்தாலும் அதை வணங்குவதே முறையானது. அதிலும் , விநாயகர் முழுமுதல் கடவுள் என்பதையும் மறந்து விடாதே, என்று புத்திமதி சொன்னார்.சிலருக்கு கெட்ட நேரம் வந்து விட்டால், யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. கேட்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் கருத்துக்கு எதிர்க்கருத்தைச்  சொல்வார்கள். இந்திரனும் அப்படித் தான் தேவையற்றதைப் பேசி சிக்கிக் கொண்டான். காஷ்யபரே! நீர் பெரிய மனிதர் ஆவதற்காக, சிவமைந்தனை உம் மகனாகப் பெற்றீர். எப்படியோ, அவன் மானிட வர்க்கத்தில் அவதரித்து விட்டான். ஒரு மானிடனை தேவர் தலைவனான நான் எப்படி வணங்க முடியும்? மேலும், இங்கே எல்லோரும் உம் மகனை ஆசிர்வதிக்கவே வந்துள்ளனர். அவன்  வயதில் சிறியவன். ஆனால், அவனோ பல பொருட்களை பரிசாக ஏற்றுக்கொண்டு, அதைத் தனக்கு தந்தவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறான். ஒரு சிறுவனிடம் தேவர்கள் ஆசி பெறுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. இவர்களெல்லாம், தேவலோகத்திற்கு திரும்பியதும், அவர்களை விசாரணை செய்து தக்க தண்டனை கொடுப்பேன். ஒருக்காலும், உம் மகன் மகோற்கடனின் ஆசியைப் பெற மாட்டேன், என்றான். அவன் இப்படி சொன்னதற்காக காஷ்யபர் கோபிக்கவில்லை.

இந்திரா! நீ அடிக்கடி அசுரர்களிடம் சிக்குபவன். அவர்களிடம் இருந்து மீள வேண்டுமானால், விநாயகரின் ஆசி அவசியம் வேண்டும். அவரை அலட்சியப் படுத்துவதன் மூலம், உனக்கு நீயே கேடு விளைவித்துக் கொள்கிறாய், என்று மீண்டும் புத்திமதி சொன்னார். அப்போதும் இந்திரன் கேட்ட பாடில்லை. போதாக்குறைக்கு, காஷ்யபரே! தேவாதி தேவனான நான் பெரியவனா? இந்தச் சிறுவன் உயர்ந்தவனா? என்பதை இப்போதே நிரூபித்துக் காட்டி விடுகிறேன், என்றவனாய், வாயு பகவானை அழைத்தார். ஏ வாயு! நீ போய் அந்த மகோற்கடனை எங்காவது தூக்கி வீசி விட்டு வா, என்றான். வாயுபகவானுக்கு அதிர்ச்சி. விநாயகப்பெருமானை தூக்குவதாவது, வீசுவதாவது. சூறாவளியாக மாறி வீசினாலும், அதை தன் தும்பிக்கையாலேயே உறிஞ்சி விடுபவர் அல்லவா அந்த மகாசக்தி மைந்தர்! வேறென்ன செய்வது? தலைவன் கட்டளையிட்டு நிறைவேற்றாவிட்டால், அவன் சபித்து விடுவான், என சிந்தித்தவன், விநாயகப்பெருமானே! நீரே என்னைக் காப்பாற்ற வேண்டும், என்று மனதார அவரை வணங்கி, வேகமாக வீசத்துவங்கினான். காற்றின் வேகத்தில் அண்டசராசரங்களும் கிடுகிடுத்தன. சூறாவளியால் கடல்கள் பொங்கின. பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடுவது போன்ற தோற்றம்! மலைகள் தூக்கி வீசப்பட்டன. உலகமே அசைந்தாலும், மகோற்கடன் மட்டும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைக்கண்டு சலனமடைந்த இந்திரன், ஏ அக்னி! நீ போ! தேவர்கள் பெரியவரா? இந்த சிறுவன் பெரியவனா? என்று பார்த்து விடுவோம், என்றான்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 01:57:42 PM
விநாயகர் புராணம் பகுதி-16

அக்னிக்கும் வாயுதேவனுக்கு இருந்த அதே மனநிலையே இருந்தது. இருப்பினும், அவனும் தனது கடமையைச் செவ்வனே செய்தான். எங்கும் நெருப்பு பற்றி வெப்பம் தாளாமல் அலறினர். உலகங்கள் அனைத்தும் உருகிப்போயின. ஆனால், மகோற்கடன் அக்னியை நோக்கிப் புன்னகை செய்ய அது குளிர்ந்து போனது. கோபத்தை அக்னிக்கு ஒப்பிடுவார்கள். கோபப்படுபவர்களிடம் பதிலுக்கு கோபிக்காமல், பணிவுடன் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டால், அவர்களால் மீண்டும் கோபிக்க இயலாமல் அடங்கி விடுவார்கள். அப்படித்தான் அக்னி அயர்ந்து விட்டான். இப்போது, மகோற்கடனாகிய விநாயகர் இந்திரன் அருகே நெருங்கினார். விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவருக்கு பத்தாயிரம் தலைகளும், லட்சக்கணக்கான உடலுறுப்புகளும் உருவாயின. அந்த பேருடலுக்குள் உலகமே அடங்கி நின்றதையும், தனது தேவலோகமும் அதில் ஒன்றாக இருப்பதையும் கண்ட இந்திரன் நடுங்கினான். மயக்கநிலைக்குச் சென்று விட்டான். அவன் விஸ்வரூப விநாயகரின் பாதங்களில் விழுந்தான். எம்பெருமானே! மன்னிக்க வேண்டும். நான் சின்னஞ்சிறுவன். உமக்குள் உலக உயிர்கள் அடைக்கலம் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன். ஆணவத்தால் அறிவிழந்து பேசிய என் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும், என்று சரணடைந்ததும், விநாயகரும் மனம் குளிர்ந்தார். அவருக்கு வஜ்ராயுதம், அங்குசம், கற்பகத்தரு உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக அளித்த இந்திரன், அவரது விஸ்வரூபத்தை சுருக்கி, சாந்தியடையும்படி வேண்டினான். விஸ்வரூப விநாயகரும் மீண்டும் சிறுவனாக மாறினார். இதன்பிறகு, தேவாந்தக, நராந்தகரால் தேவர் உலகத்துக்கு ஏற்பட்டுள்ள இன்னல் பற்றி மகோற்கடனிடம் இந்திரன் எடுத்துரைத்தான். மகோற்கடன் அவனை ஆசிர்வதித்து, சிவபெருமான் கருணை மிக்கவர். வரம் கேட்பவர் யாரென்று பார்ப்பதில்லை. தன்னை வணங்குவோர் அனைவருக்கும் அவர் நன்மையே செய்கிறார். அதிலும் தேவாந்தக, நராந்தகர் சூரியனை கண் மூடாமல் பார்த்து தவம் செய்து வரம் பெற்றவர்கள். அவர்களுக்கு தன் சக்தியைத் தவிர பிறரால், அழியாவரத்தை அவர் அருளியிருக்கிறார். அவ்வரத்தைப் பயன்படுத்தி பெற்ற தீர்க்காயுளை அவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தியிருந்தால், அவர்கள் மேலும் ஆயுள் பெற்றிருப்பார்கள். ஆண்டவனிடமே பெற்ற அதிகாரமாயினும், அதைத் தவறாகப் பயன்படுத்துபவன் அழிந்து போவான். இந்திரா! நீ கவலைப்படாதே.

நான் விரைவில் காசி செல்லப் போகிறேன். அப்போது, தேவாந்தக, நராந்தகர் அழிவு நிகழும், என்றார். அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே, சொல்லி வைத்தாற்போல் காசிமன்னன் அங்கு வந்து சேர்ந்தான். அவர் காஷ்யபரை வணங்கி ஆசிபெற்று, மாமுனிவரே! எனது மகனுக்கு திருமணம் நடத்த நிச்சயித்துள்ளேன். தாங்களே தலைமைப் புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டான். காசிராஜா! நான் இப்போது அங்கு வரும் நிலையில் இல்லை. சாதுர்மாஸ்ய விரதம் துவங்கி விட்டது. இந்த நேரத்தில் முனிவர்கள் தீர்த்த யாத்திரை செல்வர். நானும் கிளம்பிவிட்டேன். என் மகன் மகோற்கடன் வேதமனைத்தும் உணர்ந்த ஞானி. அவனை உன்னோடு அனுப்புகிறேன். அவன் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பான், என்றார். வயதில் சிறியவன் என்றாலும், காஷ்யபரின் பிள்ளையல்லவா! தந்தையைப் போலவே மகனும் அறிவில் சிறந்தவனாக இருப்பான் என்பதை நம்பிய காசிராஜன், அவரைத் தனது தேரில் ஏற்றிக்கொண்டு, காசி நோக்கி விரைந்தான். செல்லும் வழியில், ஓரிடத்தில் அசுரன் ஒருவன், சூரியனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான். உலகத்திலேயே சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றைப் பெற வேண்டும் என்பதே அவனது நோக்கம். அவன் தேவாந்தக, நராந்தகருக்கு சித்தப்பா முறை வேண்டும். பெயர் தூமாட்சன். தேரில் சென்ற மகோற்கடன், அவனைப் பார்த்தார். ஆயுதத்தைப் பெற்று, உலகத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்க எண்ணிய அவனது கெட்ட நோக்கத்தைப் புரிந்துகொண்டார் மகோற்கடன். அந்நேரத்தில் அவனது தவம் நிறைவேறி, சூரிய பகவான் வானில் இருந்து அவன் கேட்ட ஆயுதத்தை கீழே போட்டார். அது அவனது கைகளில் அடைக்கலமாக பாய்ந்து வந்தது. அப்போது, தேரில் இருந்து பாய்ந்து வானில் பறந்தார் மகோற்கடன். ஆயுதத்தை வழியிலேயே பிடித்து மடக்கி, அது அந்த அசுரனின் கைகளுக்கு பதிலாக மார்பில் பாயும் வகையில் அவனை நோக்கி எறிந்தார். அவனை அந்த அம்பு தாக்கி அழித்தது. காசிராஜன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் தேவாந்தக, நராந்தகருக்கு தெரிந்தால் தன் தலை போய்விடும் என பயந்தான். ஏனெனில், அவன் அவர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன், காசிராஜன் நடுங்கிய வேளையில் மகோற்கடன் அவனிடம் ஆறுதலாக, காசிராஜா கலங்காதே. காசியை நோக்கி தேரைச் செலுத்து, நான் பார்த்துக் கொள்கிறேன், என மகோற்கடன் சொல்லிவிட்டார்.

மகோற்கடன் சிறுவனாயிற்றே! அவன் விபரமறியாமல் பேசுகிறான் என்று எண்ணிய காசிராஜன், மகோற்கடரே! நீர் உடனே ஊருக்குப் போய்விடும். நான் தேவாந்தக, நராந்தகரிடம் மன்னிப்பு பெற்று உயிர் தப்பிக்கொள்கிறேன், என்றான்.  மகோற்கடன் ஆவேசமானார். காசிராஜா! என்ன இது! உன்னை நம்பியே என்னை என் தந்தை அனுப்பினார். இப்போது என்னை தனிமையில் திரும்பச் சொல்கிறாய். ஒரு வேளை அந்த தேவாந்தக, நராந்தகர் என்னை செல்லும் வழியில் தாக்கினால் என்ன செய்வாய்? என் தந்தையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை மறவாதே, என்று சத்தமாகச் சொன்னார். காசிராஜனுக்கு தர்மசங்கடமாகி விட்டது. ஒருபுறம் தேவாந்தக, நராந்தகர்... மறுபுறம் காஷ்யபர் ! என்ன செய்வது என்று திண்டாடிய காசிராஜனைத் தேற்றிய மகோற்கடன், காசி நோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டார். தேர் மீண்டும் கிளம்பியது. இதற்குள் தேவாந்தக, நராந்தகருக்கு தங்கள் சித்தப்பா, ஒரு சிறுவனால் கொல்லப்பட்டார் என்பதை அறிந்து ஆச்சரியமும், கோபமும் அடைந்து அவனை பிடிக்கவும், காசிராஜன் தங்களுக்கு துரோகம் செய்து விட்டதால் அவனைக் கொன்று விடவும் வீரர்களுக்கு உத்தரவிட்டனர். முதலில் வந்த சில அசுரர்களை மகோற்கடன் வாயால் ஊதியே சுவர்களில் மோதச்செய்து கொன்று விட்டார். இதனால் மேலும் பலரை சிங்கம், யானை போன்ற பல உருவங்களாக எடுக்கச் செய்து அனுப்பி வைத்தனர். எல்லா அசுரர்களும் கொல்லப்பட்டனர்.இதற்குள் தேர் காசியை அடைந்து விட்டது. மகோற்கடனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மகோற்கடன் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருந்தார். அப்போது, மகோற்கடனால் கொல்லப்பட்ட அசுரன் தூமாட்சனின் மனைவி சிரம்பை என்பவள், மகோற்கடனின் அறை நோக்கி மாறுவேடத்தில் சென்றாள்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:03:26 PM
விநாயகர் புராணம் பகுதி-17

சிரம்பை காசிக்கு வருவதற்கு முன்பே, மகோற்கடன் அங்கு சென்று சேர்ந்து விட்டார். அவர் காசிராஜனுடன் அரண்மனைக்குள் நுழைய முயன்ற போது, தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட கூடன் என்ற அசுரன், ஒரு பெரும்பாறையாக மாறி அரண்மனை முன் வந்து வாசலை அடைத்து விட்டான். காசிராஜனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. மகோற்கடன் இதற்கெல்லாம் அஞ்சுபவரா என்ன? காசிராஜா! இது பாறையல்ல. தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட அசுரன். பாறையாக மாறி இங்கே நம்மை வழிமறிக்கிறான். நம் பின்னால் ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்களைக் கொண்டு ஆயிரம் தேங்காய்களை இந்தப் பாறை மீது வீசச்செய், என்றார். உடனடியாக தேங்காய்களைக் கொண்டு வரச்செய்தான் காசிராஜன். எல்லா வீரரும் ஆளுக்கொன்றாக தேங்காய்களை பாறையில் வீசியெறிந்தனர். பாறை தவிடு பொடியாகி விட்டது. இதில் இருந்து தான் விநாயகருக்கு விடலை எனப்படும் சிதறுகாய் போடும் வழக்கம் உருவானது. சிதறுகாயின் நோக்கம், நாம் எடுத்துக்கொண்ட செயலைத் தங்கு தடையின்றி முடிக்கத்தான். குறிப்பாக, மாணவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் தேர்வெழுதவே, சிதறுகாய் அடிக்கிறார்கள்.பின்னர் அவர்கள் அரண்மனைக்குள் சென்றனர். அரண்மனையில் இருந்த புரோகிதரான தருமதத்தர் என்பவர் மகோற்கடனை வரவேற்றார். மகோற்கடன் எப்படி கணபதியின் அவதாரமோ, அதுபோல் தருமதத்தர் பிரம்மாவின் அவதாரமாவார். அவர், பூமியில் பிறந்திருக்கும் விநாயகரான மகோற்கடரை வணங்கும் நோக்கத்திலும், மற்றொரு முக்கிய நோக்கத்துடனும் முதல் ஆளாக வரவேற்பு கொடுத்தார். மகோற்கடன் சிறுவன் அல்லவா? அரண்மனை தோட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளின் குழந்தைகள், காசிராஜன் மகன் திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்கார குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். காசிராஜனிடம் சொல்லிவிட்டு, அவர்களோடு விளையாடும் ஆசையில் அங்கே ஓடிவிட்டார்.

தருமதத்தர் அறிவு வாய்ந்த புரோகிதர். வயதில் பெரியவர். வேதஅறிவில், அவரை மிஞ்ச யாருமில்லை என்று சொல்லுமளவு அற்புதமானவர். அப்படிப்பட்ட அறிவுஜீவி, சிறுவனான மகோற்கடரை ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்றார் என காசிராஜன் ஆச்சரியப்பட்டான். விஷயம் இதுதான். தருமதத்தருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஒருத்தி சித்தி, மற்றொருத்தி புத்தி. இந்தப் பெண்களை மகோற்கடனுக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்பது அவரது விருப்பம். இந்த விருப்பத்தை தருமத்தர் காசிராஜனிடம் தெரிவித்தார். அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். காசிராஜனின் மகன் திருமணத்துக்கு முன்னதாகவே, இவர்களது திருமணத்தை நடத்தி விட முடிவெடுத்தனர். உடனே தருமதத்தர், விளையாடிக் கொண்டிருந்த மகோற்கடனை நோக்கிச் சென்றார். மகோற்கடரே! தங்கள் தந்தை காஷ்யபரும், நானும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு சித்தி, புத்தி என்ற புத்திரிகள் உள்ளனர். தாங்கள், மிக உயர்ந்தவர் என்பதை நான் அறிவேன். தங்களுக்கே என் மகள்களை மணம் முடித்து வைக்க ஆசைப்படுகிறேன். தாங்கள் எனது ஆஸ்ரமத்திற்கு எழுந்தருள வேண்டும், என்றார். மகோற்கடரும் இதற்கு சம்மதித்து புறப்பட்டார். இந்த நேரத்தில் தான் சிரம்பை வந்து சேர்ந்தாள். அவளுக்கு தெரியும்! மகோற்கடனை அவ்வளவு எளிதில் தன்னால் ஜெயிக்க முடியாது என்று! எனவே, மணமகனுக்கு அலங்காரம் செய்யும் பணிப்பெண் போல வேஷம் தரித்து, மகோற்கடரே! தங்களுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி நீராட்ட வந்திருக்கிறேன். தாங்கள், நீராட்ட அறைக்கு வர வேண்டும், என்றாள். மகோற்கடன் அவளிடம், அம்மா! நான் சிறுவன் தான்! இதோ, இந்த இடத்திலேயே குளிக்கிறேனே, என்று ஒரு பொதுஇடத்தைக் குறிப்பிட்டார். எப்படியோ வந்த காரியம் நடந்தால் சரிதான் என எண்ணிய சிரம்பையும் அதற்கென்ன! அப்படியே ஆகட்டும், என சம்மதித்து விட்டாள்.

மகோற்கட மாப்பிள்ளை நீராடும் காட்சி காண அனைவரும் கூடியிருந்தனர். சிரம்பை மிகவும் புத்திசாலி போல, அந்த திரவியங்களுடன் விஷத்தை சிறிதளவு சேர்த்திருந்தாள். அதை முகத்தில் பூசும்போது, சிறிதளவு உதட்டில் பட்டுவிட்டால் கூட போதும்! உயிர் பிரிந்து விடும்.... அந்தளவுக்கு கொடிய விஷம் அது. மகோற்கடர் சம்மதித்தார். ஒரு தாயே தன் பிள்ளைக்கு வாசனாதி திரவியங்கள் பூசி நீராட்டுவது வழக்கம். எதிரியாயினும், தாய் ஸ்தானத்தில் இருந்து தனக்கு திரவியம் பூசவந்தவளை தடுக்காத மகோற்கடர், அவள் தன் உதட்டருகே கையைக்கொண்டு வந்ததும், அம்மா! தாங்கள் யாரோ எவரோ? இந்த அரிய வாசனாதி திரவியங்களை என் மீது பூசியுள்ளீர்கள். இதற்குரிய பலனை தாங்கள் அனுபவிப்பீர்கள், என்றார் சமயோசிதமாக. அவ்வளவு தான்! விஷம் கடகடவென சிரம்பையின் உடலில் ஏறியது. அவள் விநாயகராகிய மகோற்கடரின் உடலில் கை வைக்கும் பாக்கியம் பெற்றுவிட்டதால், நேரே சொர்க்கம் போய் விட்டாள். அவள் சொர்க்கம் போனதற்கான காரணமறிந்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், மகோற்கடர் மஞ்சள் நீரில், நீராடி, அங்கவஸ்திரங்கள் அணிந்தார். சிறுமிகளான சித்தி, புத்தியர் அழகு பொங்க அவரருகே அமர்ந்தனர். இருவருக்கும் மங்கலநாண் பூட்டி துணைவியராக ஏற்றார் மகோற்கடர். இதன்பிறகு காசிராஜனின் மகன் திருமண ஏற்பாடுகள் துவங்கின. அப்போது ஒரு அமைச்சர், மன்னரே! தங்கள் மகனின் திருமணத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுபற்றி தாங்கள் சிந்தித்தீர்களா? என்றார். காசிராஜன் கலவரத்துடன் அவரது முகத்தைப் பார்த்தான்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:04:36 PM
விநாயகர் புராணம் பகுதி-18

மாமன்னரே! நம் இல்லத்திற்கு எழுந்தருளியிருக்கும் மகோற்கடர் வேதாந்தக, நராந்தகரின் உறவுக்காரர்களை அழித்து விட்டார். இதனால். இப்போது அவர்கள் நம் மீது கோபமாக இருப்பது <உறுதி. இளவரசருக்கு திருமணம் நடக்கும் வேளையில், அவர்கள் இங்கு வந்து இடையூறு செய்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பது உறுதி. திருமணத்துக்கு வருவோர் ஒருவரைக் கூட அவர்கள் உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள். இந்த விபரீதத்தை மகோற்கடர் தடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அந்த சூரர்களின் வதம் முடிந்த பிறகு, இளவரசருக்கு திருமணம் நடத்துவதே நல்லதென நினைக்கிறேன். இதற்காக, ஏற்கனவே குறிக்கப்பட்ட முகூர்த்த நாளை சற்று தள்ளி வைத்தால், கூட தவறில்லை என்பது எனது அபிப்ராயம். தாங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். தங்கள் கட்டளைப் படியே நடக்கிறோம், என்றார் அந்த புத்திசாலி மந்திரி. காசிராஜனுக்கும் மந்திரி சொல்வது சரியென்றே பட்டது. இருப்பினும், குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற, அந்த மகோற்கடரையே சரணடைவதென முடிவெடுத்து, மகோற்கடர் தங்கியிருந்த அறைக்குச் சென்றான். அப்போது, சித்தி, புத்தியருடன் மகோற்கடர் கூடி களித்திருந்தார். சித்தி, புத்தி தேவியர் தங்கள் கணவரிடம் எங்கள் இதய தெய்வமே! தாங்கள் யானை முகத்துடனேயே எப்போதும் இருக்கிறீர்கள். இது பூலோகம். இங்கே, மனித ஜென்மமே உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. எங்கள் கணவர் மனித முகத்துடன் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். தேவையான காலங்களில் மட்டும் தாங்கள் முகத்தை மாற்றிக் கொள்வது நல்லது. யானைத் திருமுகம் உங்களுக்கு அழகூட்டுகிறது என்றாலும், மனித முகத்திலும் தங்களைக் காண வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்கத்தானே செய்யும். தாங்கள் இவ்வுலகில் யாருக்கும் இல்லாத பேரழுகுடன், மனித முகத்துடன் எங்களுக்கு காட்சியருள வேண்டும், என்றனர். மனைவியரின் நியாயமான விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை. தங்கள் கணவர் அழகாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக பெண்களின் நியாயமான விருப்பம் தானே! மகோற்கடர் மனித முகத்துக்கு மாறிவிட்டார். ஒளி வெள்ளம் பொங்கிய பேரழகுடன் அவர் மனைவியருடன் உறவாடிக் கொண்டிருந்த போது, காசிராஜன் அவரது அனுமதி பெற்று அறைக்குள் வந்தான். அவனுக்கு அதிர்ச்சி. இங்கிருந்த யானை முகச் சிறுவனை எங்கே! சித்தி, புத்தியர் ஒரு இளைஞனுடன் இருக்கின்றனரே! என்ற அவனது எண்ண ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மகோற்கடர்.

காசிராஜனுக்கு யானை முகத்துடன் காட்சி தந்தார். காசிராஜா! புதுப்பெண்களான இவர்கள் என்னை மனித முகத்துடன் காண ஆசைப்பட்டனர். அதன் படியே நான் இம்முகத்துடன் விளங்குகிறேன். அது போகட்டும்! என்ன காரணமாக என்னைக் காண வந்தாய்? என்றார்.காசிராஜன் எல்லா விபரத்தையும் எடுத்துச் சொன்னான். காசி மாமன்னனே! இதற்கெல்லாம் கலங்காதே. மகோற்கடனை நம்பியவர்கள் சிரமங்கள் தங்களுக்கு இல்லை என உறுதியாக நம்பலாம். திருமணம் குறித்த நேரத்தில் நல்லபடியாக நடக்கும். நடக்கப்போவதை அமைதியாக இருந்து வேடிக்கை பார், என்றார் மகோற்கடர். காசிராஜன் மிகுந்த மகிழ்ச்சியுடன், மகோற்கடரே! இனி எனக்கு கவலையில்லை. தாங்கள் புதுமணமகன். புது மணமக்களை விருந்துக்கு அழைப்பது எங்கள் பண்பாடு. தாங்கள், தங்கள் துணைவியருடன் இதே மனித முகத்துடன் எங்கள் இல்லத்துக்கு எழுந்தருள வேண்டும், என்றான். மகோற்கடனும் ஒப்புக்கொண்டார். மகோற்கடர் தம்பதியரை அரண்மனையின் அந்தப்புரத்துக்கே அழைத்துச் சென்றனர் காசிராஜன் தம்பதியர். அங்கே தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. தலை வாழை இலை விரித்து மணமக்களுக்கு உணவு பரிமாறினாள் பட்டத்தரசி. அப்போது, அவள் வைத்த உணவு வகைகளுக்கு நடுவே, ஒரு உருண்டை வந்து அமர்ந்தது. சிறிது நேரத்தில் கொண்டைக்கடலை, பொரி என எளியவகை உணவுகள் வந்து அமர்ந்தன. காசிராஜனும், அவன் தேவியும், சுவாமி! இதென்ன அதிசயம்! இந்த உணவுகளை நாங்கள் தயாரிக்கவே இல்லையே! இவை உங்கள் இலைக்கு வந்தது எப்படி? என்றனர். எல்லாம் அந்த புருசண்டியின் வேலை தான், என்றார் மகோற்கடர் கண்களை சிமிட்டியவராய்! சித்தி, புத்தியர் கூட இந்த அதிசயம் கண்டு, இது பற்றி அறிய ஆவல் கொண்டனர். புருசண்டியா! அப்படியென்றால்... என இழுத்த சித்தி, புத்தியரிடம்... தேவியரே! புருசண்டி என்றால் ஏதோ பொருள் அல்ல. அவர் ஒரு முனிவர். தண்டகாரண்யக் காட்டில் வசிப்பவர்.

எனது பக்தர். அவர் ஒவ்வொரு சதுர்த்தி திதியிலும், இதோ இருக்கிறதே! மோதகம் என்னும் உருண்டை... இதையும், கரும்பு, பொரி, கடலை ஆகியவற்றையும் படைத்து என்னை நினைத்து வணங்குவார். அவை என்னை வந்து சேர்ந்து விடும். காசிராஜன் பரிமாறிய ஆடம்பர உணவும் எனக்கு பிடிக்கும்! அதேநேரம், ஏழை ஒருவன் பரிமாறும் பக்தியுடன் பரிமாறும் எளிய உணவும் பிடிக்கும், என்றார். சித்தி, புத்தியரின் ஞானதிருஷ்டியில், தாங்கள் தெய்வப்பெண்கள் என்பதும், இங்கிருக்கும் மகோற்கடர் சாட்சாத் விநாயகப் பெருமான் என்பதும் விளங்கியது. அவர்கள் அவரது இலையில் இருந்த மோதகப் பிரசாதத்தை தாங்களும் பகிர்ந்து கொண்டு, காசிராஜன் தம்பதியருக்கும் கொடுத்தனர். ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று மட்டுமல்ல! எல்லா சதுர்த்தி திதிகளிலும் (அமாவாசை மற்றும் பவுர்ணமி கழிந்த நான்காம் நாள்) விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால், நமக்கு செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். விருந்துக்குப் பின் தம்பதியர் விடை பெற்றனர். அன்றிரவில் காசிநகரே அல்லோகோலப்பட்டது. காவலர்கள் ஓடோடி வந்து மன்னரிடம், மகாராஜா! மகாராஜா! யாரோ பயங்கர உருவம் கொண்ட அசுரர்கள் மூவர் நம் நகரையே சின்னா பின்னப்படுத்துகிறார்கள். ஒருவன் வாயைத் திறந்தால் நெருப்பைக் கக்குகிறான். இன்னொருவன் புயலாக மாறி கட்டடங்களைத் தகர்க்கிறான். ஒருவன் வானத்தில் ஒரு உதடும், பூமியில் ஒரு உதடுமாக வைத்து போவோர் வருவோரையெல்லாம் பிடித்து விழுங்குகிறான். அவர்களைக் கண்டாலே குலை நடுங்குகிறது. எங்களால் அவர்களுடன் போராட முடியவில்லை. தாங்களே மக்களைக் காக்க வேண்டும் என்றனர்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:05:47 PM
விநாயகர் புராணம் பகுதி-19

காசிராஜனுக்கு நிலைமை புரிந்து விட்டது. இந்நிலையில், தங்களைக் காக்க மகோற்கடரை விட்டால் ஆளில்லை என்பதால், அவர் தங்கியிருந்த அறைக்கு ஓடினான். மகோற்கடரை சித்தி, புத்தியர் மூலம் எழுப்பினான். நடந்து கொண்டிருக்கும் அபாயத்தை விளக்கினான். அப்படியா? என்று சாதாரணமாகச் சொன்ன மகோற்கடர், தன் கமண்டலத்தை எடுத்தார். தீர்த்த நீரை கையில் எடுத்து வீசினார். அந்த நீர்த்துளிகள் பறந்து சென்றது. அங்கே தீயாக மாறி எரிந்து கொண்டிருந்த ஜ்வாலாமுகன் என்ற அசுரன், அந்த நீர்பட்ட மாத்திரத்தில் அணைந்து விழுந்து உயிரை விட்டான். புயலாக மாறி வீசிய விதாரணன் என்பவனும் அந்த புனிதநீரின் வேகத்தைத் தாங்க முடியாமல் ஒடுங்கி சாய்ந்தான். பின்னர் மக்களை விழுங்கிக் கொண்டிருந்த வியாக்ரமுகன்  என்ற அசுரனைக் கொல்ல நேரில் புறப்பட்டார். தன் சக்தியால் கணநேரத்தில் அவன் முன் சென்று, திறந்த வாயை அப்படியே கிழித்து, இரு கூறாக்கி அவனைக் கொன்றார். காசிராஜன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதே நேரம், தன் மக்களில் பலர் உயிர் இழந்ததையும், ஊரின் பெரும்பகுதி தீயாலும், புயலாலும் சேதமடைந்ததையும் கண்டு வருத்தப்பட்டான். அவனது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட மகோற்கடர், உயிரிழந்த மக்களை எழச்செய்தார். நகரை தன் பார்வையாலேயே முன்பை விட அழகு பெறும்படி செய்து விட்டார்.இப்படி அற்புதம் புரிந்த மகோற்கடரைக் கொல்ல வேதாந்தக, நராந்தக அசுரர்கள் மேகன் என்ற அசுரனை அனுப்பினர். அவன் ஒரு ஜோதிடர் போல மாற்று உருவம் கொண்டு, காசி வந்து சேர்ந்தான். காசிராஜனை சந்தித்த அவன், அரசே! நான் ஒரு கந்தர்வன். கந்தவர்களே என்னிடம் தான் ஜோதிடம் பார்க்கிறார்கள் என்றால், சாதாரண மானிடர்களான உங்கள் எதிர்காலத்தை ஏடே பார்க்காமல், முகத்தைப் பார்த்தே சொல்லி விடுவேன்.

உனக்கும், உன் காசி ராஜ்யத்துக்கும் கேடு காலம் வருகிறது. உங்களோடு இருக்கிறானே... ஒரு யானை முகன். அவன் உங்களை அழித்து, நாட்டைக் கைப்பற்றவே உங்களுடன் தங்கி, நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறான். அவனை உடனே ஊரை விட்டு விரட்டி விடுங்கள். அவனைக் காட்டிற்கு அனுப்புவது மிக மிக நல்லது, என்றான். காசிராஜனுக்கு அவன் ஏதோ அசம்பாவிதம் செய்யும் நோக்கத்தில் வந்துள்ளான் என்பது புரிந்து விட்டது. இருப்பினும், அவனுக்கு சாதகமானவன் போல நடித்து, மிகவும் சமயோசிதமாக, ஜோதிடரே! அப்படியானால், ஒன்று செய்யுங்கள்! நீங்களே, அந்த யானை முகத்தானை இழுத்துக் கொண்டு போய், காட்டில் விட்டு விடுங்களேன், என்றான். மேகனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவனைக் காவலர்கள் மகோற்கடர் நிற்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் அருகே வந்த மகோற்கடர், என்ன ஜோதிடரே! நலம் தானா? என்று கேட்டதும், மேகனுக்கு தூக்கி வாரிப் போட்டது. தான் ஜோதிட வேடமிட்டு வந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது? என்று குழம்பிய அவனை மேலும் குழப்பினார் மகோற்கடர். ஜோதிடரே! காசி நகரத்துக்கு அழிவும், அபாயமும் இருப்பதாக, காசிராஜனை நீர் எச்சரிக்கை செய்தீராமே! அத்துடன் என்னாலும், இவ்வூருக்கு அபாயம் இருப்பதாகச் சொன்னீராமே! என்றதும், அவன் இன்னும் அதிர்ச்சியும் அடைந்தான். அரண்மனையில் காசிராஜனிடம் தனித்துச் சொன்ன விஷயங்கள் இவனுக்கு எப்படி தெரிந்தது? இவன் நிச்சயமாக ஒரு மாயாவி தான் என்று நினைத்தவன், நல்லவன் போல் நடித்து, மகோற்கடரே! தாங்களும் இவ்வூரில் இருப்பது ஆபத்து தான்! உமக்கு யானைகள், தண்ணீர் இவற்றால் உயிர்க் கண்டம் இருக்கிறது. இதில் தப்பினால், உம்மை விஷம் கொடுத்துக் கொன்று விடுவார்கள். இன்னும் நான்கே நாட்களில் இது நடக்கும். எனவே, நீர் காட்டிற்கு வந்து விடும், நான் அங்கு தான் போகிறேன். நீரும் என்னுடன் வந்தால், இந்த இக்கட்டில் இருந்து தப்பி விடலாம், என்றார். மகோற்கடர் நடுங்குவது போல நடித்து, ஜோதிடரே! எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், என் உயிரைக் காப்பாற்ற ஆவன செய்தீர்.

உம்முடன் நான் காட்டுக்கு வருகிறேன். என் மீது அக்கறை கொண்டு ஜோதிடம் சொன்னதற்குரிய கூலியை உமக்கு நான் கொடுக்க வேண்டாமா? என்றவர், தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி, அவன் கழுத்தில் போட்டார். அந்தக்கணமே, அந்த மாலையில் இருந்து நெருப்பு பற்றி மேகனை அழித்தது. இப்படி பலமுறை வந்த அசுரர்களும், மகோற்கடரின் தாயான அதிதியைப் போலவே மாறுவேடம் அணிந்து வந்த பிரமரை என்ற அரக்கியையும் மகோற்கடர் கொன்றார். இந்நிலையில், காசி நகர மக்கள் அனைவரும் அரண்மனைக்கு வந்து மன்னரைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். உப்பரிகையில் வந்து நின்ற மன்னனை வணங்கிய மக்கள், மாமன்னரே! நம் ஊருக்கு வந்திருக்கும் மகோற்கடர், பல அற்புதங்கள் செய்துள்ளார். மாண்டு போன எங்களைக் கூட உயிருடன் எழுப்பினார். எனவே, அவரை எங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, விருந்து படைக்க விரும்புகிறோம். தாங்கள் அனுமதியளிக்க வேண்டும், என்றனர். காசிராஜன் தயங்கினான். யாராவது ஒருவர் மகோற்கடரின் உயிருக்கு ஆபத்து விளைவித்து விட்டால், காஷ்யபருக்கு பதில் சொல்வது யார் என்ற பயத்தில், மக்களே! இதெல்லாம் சாத்தியமில்லை. ஏனெனில், மகோற்கடர் நம் ஊரிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்கு தினமும் ஒரு வீடு வீதம் வந்தால் கூட பல ஆண்டுகள் பிடிக்கும். இதெல்லாம், நடக்கிற காரியமா? என்றான். அப்போது மகோற்கடர் அங்கு வந்தார். காசிராஜா! நீ மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்து விடு. எல்லோர் வீட்டுக்கும் போக வேண்டியது என் பொறுப்பு, என்றார். காசிராஜனும் இதற்கு சம்மதிக்கவே, மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வீடுகளுக்கு திரும்பினர். தங்கள் வீட்டுக்கு வரும் மகோற்கடரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், வித்ருமை என்ற பெண் மட்டும் கவலையுடன் இருந்தாள்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:07:01 PM
விநாயகர் புராணம் பகுதி-20

வித்ருமையின் கணவர், சுக்கிலர் உஞ்சவிருத்திக்காக வெளியே சென்றிருந்தார். அக்காலத்தில் வேதியர்கள், உஞ்சவிருத்தி எனப்படும் பிøக்ஷ எடுத்து வரும் அரிசியை சமைத்து ஆண்டவனுக்கு நைவேத்யம் செய்வார்கள். அதையே சாப்பிடுவார்கள். மீதியிருந்தால் தானம் செய்து விடுவார்கள். சில சமயங்களில் ஏதும் கிடைக்காமல் போனால் பட்டினி தான். இந்நிலையில், மகோற்கடருக்கு விருந்து வைக்க வேண்டும் என்றால் நடக்கிற செயலா? ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனி போல, வித்ருமையின் வீட்டிலும் தவிடும், வெல்லமும் இருந்தது. அந்த தவிட்டில் மோதகம், அதிரசம் முதலானவை செய்தாள் வித்ருமை. அன்புத்துணைவரே! மகோற்கடர் கருணை மிக்கவர். நம் காசி தேசத்துக்கு ஒளிகாட்ட வந்துள்ள அவர், நம்மைப் போன்ற ஏழைகளைப் புறக்கணிக்க மாட்டார். மேலும், நான் செய்துள்ள இந்த மோதகத்தில் ஒரு சிறு துளி அவர் வாயில் பட்டால் போதும், நான் மகிழ்வேன், என்றாள். சுக்கிலரும் அதை ஆமோதிப்பது போல் தலையாட்டினார். அன்றைய தினம் வழக்கத்தை விட முன்னதாகவே, மகோற்கடர் சுக்கிலரின் வீட்டுக்கு எழுந்தருளினார்.  உலகைக் காக்க வந்துள்ள உத்தமரே, வரவேண்டும், வரவேண்டும், என முகமன் கூறி வரவேற்றனர் தம்பதியர். அவரது திருவடியை தாம்பாளத்தில் தாங்கி நீராட்டி, மஞ்சள், குங்குமம் முதலானவை பூசி, பாத தீர்த்தத்தை தலையில் தெளித்து, லோக நாயகரே! நாங்கள் ஏழைகள். ஏதோ எங்களால் இயன்ற பலகாரங்களைத் தவிடு கொண்டு செய்திருக்கிறோம். தாங்கள் அமுது செய்ய வேண்டும், என்று பணிவுடன் வேண்டினர். ஆஹா.... தவிட்டில் கூட பலகாரமா? காசி மக்களின் அன்பை நான் என்னவென்று புகழ்வேன்! நான் இதுவரை போன இடங்களில் எல்லாம் கற்கண்டு சாதம், பால் சாதம், தயிர்சாதம், புளியோதரை, இன்னும் கோதுமை வகைகளில் செய்த பண்டங்கள் என சாப்பிட்டு அலுத்துப் போனேன். உங்கள் வீட்டில் எனக்குப் பிடித்த உயர்ந்த வகை பலகாரத்தை தந்திருக்கிறீர்கள். வித்ருமை தாயே! எனக்கு இது போதாது. இன்னும் இருப்பதையெல்லாம் எடுத்து வாருங்கள், என்றார். வித்ருமைக்கு மகிழ்வதா அல்லது வருந்துவதா என்பதே புரியவில்லை.

ஒரு நபருக்கு தேவையான அளவுக்கே தவிடு இருந்தது. வெல்லமும் காலி. அதைக் கொண்டு பலகாரம் செய்தாயிற்று. மகோற்கடர் இன்னமும் கேட்கிறாரா? அவள் கையைப் பிசைந்தது கண்டும், சுக்கிலரின் முகத்தில் பதட்டம் தெளிவது கண்டும் மகோற்கடர் சிரித்தார்.என் அன்பு பக்தர்களே! உங்களை நான் அறிவேன்! எனக்கு ஆடம்பரமும் அளவும் பெரிதல்ல! பக்தியுடன் ஒரு சிறு உருண்டையைத் தந்திருந்தாலும் ஏற்பேன், ஒரு கைப்பிடி பொரி தந்தாலும் எனக்குப் போதும்! என்னை உங்களுக்கு தெரியவில்லையா? என்றவர் கர்ஜனையுடன் சிரித்தபடியே, விஸ்வரூபம் எடுத்தார். சிங்க வாகனத்தில்,சித்தி புத்தி இருவரும் அமர, பதினாறு கரங்களுடன் ஆயுதம் தாங்கி விநாயகப்பெருமானாக காட்சியளித்தார். காசியில் யாருக்கும் கிடைக்காத அந்த திவ்ய காட்சி, வித்ருமையின் பக்திக்கு கிடைத்தது. விஷயம் காசிராஜனுக்கு தெரிய, அவனும், நகர மக்களும் ஓடோடி வந்து அந்த திவ்ய தரிசனத்தைக் கண்டனர். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை போல, வித்ருமையின் களங்கமற்ற எளிய பக்தி, காசி நகருக்கே விநாயகரின் தரிசனத்தைக் கொடுத்தது. பின்னர் காசிராஜன், விநாயகப் பெருமானே! தாங்களே எங்கள் அருகில் இருக்கும் போது, நாங்கள் யாரைக் கண்டு கலங்க வேண்டும்? தங்களின் திருப்பாதத்தில் என்னையும் என் தேசமக்களையும் சேர்த்து முக்தியருள வேண்டும், என்றான். விநாயகர் அவர்களிடம், இந்த தேசத்தில் பிறப்பவர்களுக்கும், இங்கே வருவர்களுக்கும், தங்குபவர்களுக்கும் முக்தியருள்வேன், என அருள்பாலித்து, அனைவரும் பூலோகத்தில் இன்னும் நீண்டகாலம் செல்வச்செழிப்புடன் வாழ அருள் செய்தார். வித்ருமை - சுக்கிலர் தம்பதிக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்து, தக்கவர்களுக்கு தானம் செய்து இறுதியில் தன் திருவடிகளை அடைய வரம் கொடுத்தார்.

இந்நேரத்தில், தன்னால் அனுப்பப்பட்ட அனைத்து அசுரர்களும் அழிந்ததால் ஆத்திரமடைந்த நராந்தகன், மகோற்கடரை நேரில் சென்று அழிக்கப் புறப்பட்டான். இதையறிந்த காசிராஜன், விநாயகரே தங்களுடன் இருக்கும் தைரியத்தில், அவரைச் சென்று வணங்கி, போரில் வெற்றி பெற ஆசி வேண்டினான்.மகோற்கடர் அவனிடம், காசிராஜா! நராந்தகனுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. உன்னுடன் நானும் ஒரு போர்வீரனாக வருகிறேன், என்று சொல்லி, கவசமணிந்து வாளேந்தி புறப்பட்டார். நராந்தகனின் அசுரப்படைக்கும், காசிராஜனின் படைக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இருதரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் இறந்தனர். மகோற்கடரை நராந்தகன் கடுமையாக எச்சரித்தான். ஏ யானை முகத்தோனே! சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. சிறுவன் என்பதற்காக உன்னை விடுகிறேன். இல்லாவிட்டால், இதற்குள் உன் தலை என் கையில் இருந்திருக்கும், என்று வீரவசனம் பேசினான். மகோற்கடர் சிரித்தார். தலை தானே கையில் வேண்டும். இந்தா பிடி, என்றவர், ஒருபாணத்தை எடுத்து நராந்தகனின் தலைக்கு குறி வைத்தார். அது அவனது சிரத்தை அறுத்து தள்ளியது. காசிராஜனின் வீரர்கள், நராந்தகன் அழிந்தான் என கோஷமிட்டனர். ஆனால், என்ன ஆச்சரியம்... மற்றொரு தலை முளைத்தது. முளைத்த தலையை மீண்டும் மகோற்கடர் கொய்ய, புதிது புதிதாக தலை முளைத்தது. அப்போது சிவனிடம் பெற்ற அஸ்திரம் ஒன்றை அவன் தலையில் எய்ய, நராந்தகனின் ஆவி பறந்தது. அவனது தலை தேவலோகத்தில் ஆட்சியில் இருந்த தேவாந்தகனின் காலில் போய் விழுந்தது. ஆ சகோதரா! போய் விட்டாயா? உன்னைக் கொன்றவர்கள் யார்? தேவாந்தகன் வாளை உருவினான்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:08:19 PM
விநாயகர் புராணம் பகுதி-21

தம்பி! நீ போய்விட்ட பிறகு நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? ஆனால், உன்னைக் கொன்றவர்களை பழிவாங்காமல், நான் மடிந்தால், உன் ஆத்மா சாந்தி பெறாது. இப்போதே புறப்படுகிறேன்! உன் சிரமறுத்தவனின் சிரத்தை பதிலுக்கு அறுத்து, உனக்கு படையலிட்ட பிறகே உன்னை வந்தடைவேன், என முழங்கினான். தம்பியைக் கொன்ற மகோற்கடரை பழிக்கு பழி வாங்க பெரும்படையுடன் புறப்பட்டான். இதையெல்லாம் மகோற்கடர் அறிந்தே இருந்தார். நராந்தகனை விட பத்தாயிரம் மடங்கு பலம் வாய்ந்த தேவாந்தகனை எப்படி அழிக்கப் போகிறோம் என காசிராஜன் கவலையில் மூழ்கியிருந்தான். அவனைத் தேற்றிய அவனது மனைவி, மகோற்கடர் வந்த பிறகு, நமக்கு தோல்வி என்பதே ஏற்படவில்லை. நீங்கள் அவரையே சரணடையுங்கள், என்றாள். அதன்படி, காசிராஜனும் மகோற்கடரை வணங்கி நிற்க, சித்தி, புத்தியர் அவனை ஆசிர்வதித்து, இம்முறை எங்கள் கணவருடன் நாங்களும் போருக்குச் செல்கிறோம். பெண்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை, என்றனர். மகோற்கடர் தனக்கு வாய்த்த வீர மனைவியர் கண்டு ஆனந்தம் கொண்டார். இருப்பினும், போர்க்களத்திற்கு வரத்தேவையில்லையே என்றார். சித்தி, புத்தியரோ அவரது பாதத்தில் விழுந்து, கணவருக்கு ஒரு துன்பம் வந்தால், மனைவி அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல! இவ்வளவு நாளும் தாங்கள் போரிட்டவர்கள் எல்லாம் வலிமையற்ற கோழைகள். இப்போது வரும் தேவாந்தகனும் அப்படிப்பட்டவனே! இருப்பினும், அவனது தந்தை ரவுத்திரகேது மாயாஜாலம் தெரிந்தவன். மாயத்தை மாயத்தாலேயே வெல்ல முடியும், என்றனர். மகோற்கடரும் அவர்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். சித்திதேவி தனக்கு அடங்கிய அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அஷ்டமாசித்தியரை வரவழைத்தாள். தேவியரே! தாங்கள் எட்டுவித சக்திகளாக இருந்து மாயங்கள் புரிந்து தேவாந்தகனை வெற்றி கொள்ள வேண்டும், என்றாள். அந்த சக்திகள் ஆயுதம் தாங்கி போர்க்களத்தில் அணிவகுத்ததுடன், தங்களுக்கு கீழ் ஏராளமான வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கினர். சித்த, புத்தி புடைசூழ சிங்க வாகனத்தில் மகோற்கடரும் போர்க்களத்தில் புகுந்தார்.

தேவாந்தகனும் தனது அசுரப்படையுடன் வந்து சேர்ந்தான். பெரும் சண்டை நடந்தது. எட்டுவகை சக்திகளின் மத்தியிலும் புகுந்து போரிட்டது அசுரப்படை. தேவாந்தகனின் உக்கிரம் வாய்ந்த அம்புகளின் வலிமை தாங்காமல், மகோற்கடரின் படை சற்று பின்வாங்கத்தான் செய்தது, இந்நேரத்தில் புத்திதேவி தன் புத்தியைப் பயன்படுத்தினாள். தனது உடலில் இருந்து பவுத்தேவி என்ற பூதப்பெண்ணை உருவாக்கி, தேவாந்தகனின் படையினரை விழுங்கி விடுமாறு உத்தரவிட்டாள். பவுத்தேவி ஆக்ரோஷமாகச் சென்று, அசுரப்படையினரைப் பிடித்து குவியல் குவியலாக வாயில் போட்டு விழுங்கினாள். அவளது கையில் தேவாந்தகனும் சிக்கினான். அவனையும் பிடித்து வாயில் போட்டு விழுங்கிவிட்டாள் பவுத்தேவி. அவ்வளவு தான்! எஞ்சியிருந்தவர்கள் தப்பியோடினர். என்ன ஆச்சரியம்! தன் மாயாஜால வல்லமையால், தேவாந்தகன் அவளது காது வழியாக வெளியில் பாய்ந்து தப்பி ஓடினான். நேராக, தன் தந்தை ரவுத்திரகேதுவை சரணடைந்தான். பதறி ஓடி வந்த தந்தையிடம், தம்பி இறந்து போனதையும், அவனைக் கொன்ற மகோற்கடரை அழிக்கச் சென்று தோற்று திரும்பியதையும் சொல்லி புலம்பினான். ரவுத்திரகேது இளையமகனின் மறைவுக்காக வருந்தினார். தேவாந்தகனிடம், சரி..சரி.. நடந்ததை நினைத்து வருந்துவதில் பலனில்லை. நீ வெற்றி பெற தகுந்த உபாயத்தை நான் சொல்கிறேன். இன்றிரவு அறுகோண வடிவ குண்டம் அமைத்து யாகம் செய்.  நான் சொல்லும் மந்திரங்களைச் சொல். யாக குண்டத்தில் இருந்து ஒரு கருப்பு குதிரை வெளியே வரும். அதில், அமர்ந்து போரிட்டால் உன்னை வெல்ல யாராலும் முடியாது, என்றார். தந்தையின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக யாகம் செய்தான் தேவாந்தகன். அதிகாலை வேளையில் அந்த குதிரை வெளிப்பட்டது. அதில் ஏறியமர்ந்த தேவாந்தகன், மிகுந்த தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் போர்க்களத்தில் புகுந்தான்.

சித்தி, புத்தியரும் தங்கள் சக்தி படையையும், பவுத்தேவி தலைமையில் மற்றொரு படையையும் நிறுத்தியிருந்தனர். அந்தப் படையை அழிக்க, தேவாந்தகன் ஒரு உபாயம் செய்தான். தன் மானசீக சக்தியால், யாரும் அறியாமல் போர்க்களத்தின் ஒரு ஓரத்தில் யாக குண்டம் ஒன்றை வரவழைத்தான். மனதுக்குள் சில மந்திரங்களை ஓதினான். யாக குண்டத்தில் தானாகவே தீப்பற்றியது. அந்த வேள்வித்தீயில் இருந்து ஒரு பெண் பூதம் புறப்பட்டு வந்து, தேவாந்தகன் முன்னால் நின்றது.எஜமானரே! ஏன் அழைத்தீர்! எனக்கு பசி வாட்டுகிறது. உடனே உணவிடும், என்றது.  தேவாந்தகன் சிரித்தபடியே, பூதமே! இதோ என் எதிரே நிற்கும் மகோற்கடரின் படையிலுள்ள சக்திகளையும், அவர்களோடு நிற்கும் பெண் பூதப் படையிலுள்ள ஒருவர் விடாமல் சாப்பிட்டு உன் பசியைப் போக்கிக் கொள், என்றான். அந்த பூதம் மிகுந்த மகிழ்ச்சியுடன் களத்தில் இறங்கியது. ஆனால், புத்திதேவி உருவாக்கிய பவுத்தேவி, அந்த பெண் பூதத்தை மடக்கி விட்டாள். அதனுடன் உக்கிரமாக சண்டையிட்டு, அந்த பூதத்தை கொன்று வீசினாள். பெரும் ஆத்திரமடைந்த தேவாந்தகன், மகோற்கடரின் படையைக் கட்டிப் போடும் மோகனாஸ்திரத்தை எய்தான். அது அவனுக்கு பலன் தந்தது. மகோற்கடரின் படைகள் அந்த அஸ்திரத்துக்கு மயங்கி சாய்ந்தன. காசிராஜன் கலங்கி விட்டான். மகோற்கடரே! படைகள் எல்லாம் மயங்கி விட்டன. காசிநகரம் என்னாகுமோ? எனக் கதறினான்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:09:32 PM
விநாயகர் புராணம் பகுதி-22

கடவுளே அருகில் இருந்தாலும் கூட பயம் என்ற தொற்று வியாதி மட்டும் ஏனோ மனிதனை விட்டு மறைய மறுக்கிறது. மனித இனத்தின் ஸ்பாவம் அப்படி? என்ன நடந்தாலும் நடக்கட்டுமே! இறைவன் நம் அருகில் இருக்கிறான் என்ற எண்ணம் ஏனோ மனிதனின் மனதுக்குள் நிரந்தரமாகத் தங்கிக் கொள்ள மறுக்கிறது. காசிராஜனின் அருகில் சாட்சாத் விநாயகப்பெருமானே பூலோக அவதாரம் எடுத்து அருகில் இருந்தபோதும் கூட, அவன் கலங்கி நின்றான். மகோற்கடர் அவனைத் தேற்றினார். காசிராஜா! பைத்தியக்காரன் போல உயிர் பயத்தில் பிதற்றுகிறாயே! உன் தேச மக்கள் அழிந்து போகாத வரம் பெற்று வந்தவர்களா என்ன! ஆனால், நம் எதிரில் நிற்கும் தேவாந்தகன், ஐம்புலன்களையும் அடக்கி, சிவனை எண்ணி தவமிருந்து, அவரிடம் அழியா வரம் பெற்றிருக்கிறான். அது எப்படிப்பட்ட வரம் என்பது உனக்குத் தெரியுமா? இரவிலும், பகலிலும் நான் அழியக்கூடாது. ஆயுதங்களாலோ, விலங்குகளாலோ, பிற உயிரினங்களாலோ அழிவு வரக்கூடாது. இன்னும் பல நிபந்தனைகளின் பேரில் வரம் வாங்கியிருக்கிறான். என் தந்தை தன்னை மனதார நினைத்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்து விடுவார். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அவனை அழிக்கவும் தயங்கமாட்டார். ஒன்றைச் சொல்கிறேன் கேள்! மனிதர்கள் தங்களைப் புத்திசாலிகள் எனக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேவாந்தகனும் அப்படியே! தான் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் தனக்கு அழிவே வராது என எண்ணிக்கொண்டிருக்கிறான். ஆனால், எப்பேர்ப்பட்ட அறிவாளியும், எங்காவது இடறி விடுவான். இவன் பகலிலும், இரவிலும் சாகக் கூடாது என வரம் வாங்கினானே ஒழிய, பகலும் அல்லாத இரவும் அல்லாத இரண்டும் கலந்திருக்கும் வைகறையாகிய அதிகாலைப் பொழுதில் சாகக் கூடாது என்ற வரம் பெறவில்லையே! அந்த நேரத்திற்காக காத்திருக்கிறேன். அப்படியே அந்தப் பொழுது வந்தாலும், இவனை ஆயுதங்களால் அழிக்க முடியாதே! எனவே, ஆயுதமல்லாத ஒரு பொருளால் தான் இவனை அழிக்க முடியும், பொறுத்திரு! வேடிக்கை பார்! எனச் சொல்லி விட்டார்.

மகோற்கடர் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தாலும், காசிராஜன் மனம் பதைக்க காத்திருந்தான். அன்று விடியவிடிய போர் நடந்தது. தனது படைகளைக் காப்பாற்ற மகோற்கடர் பினாகம் என்னும் வில்லை எடுத்தார். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான அம்புகளை பல திசைகளிலும் சிதறடிக்கச் செய்யும் வகையிலான வில் இது. இதைக் கொண்டு, அசுரப் படைகளில் பெரும் பகுதியைக் கொன்று குவித்து விட்டார். மயங்கிக் கிடந்த படைகளை எழுப்ப, அதில் ஞானாஸ்திரம் ஒன்றை இணைத்து அனுப்பினார் மகோற்கடர். அந்தப் பாணம் வெளிப்பட்டதுமே படைகள் எழுந்தன. எஞ்சியிருந்த படைகளை அவர்கள் அழிக்க ஆரம்பித்து விட்டனர். மனிதர்கள் அசுர குணங்களால் சூழப்பட்டு, கடவுளை மறந்து, தங்கள் இஷ்டம் போல் உலக இன்பங்களில் மயங்கிக் கிடப்பதை தேவாந்தகன் எய்த மோகானாஸ்திரம் குறிக்கிறது. ஆசைகளில் கட்டுண்டு கிடப்பதில் இருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்ற பேரறிவாகிய ஞானத்தைக் கொடுப்பதையே, மகோற்கடர் எய்த ஞானாஸ்திரம் குறிக்கிறது. இப்படி விடிய விடிய நடந்த சண்டைக்குப் பின் விடியல் பொழுதை நெருங்கி விட, காசிராஜன் மனம் பதைத்து நின்றிருந்தான். எதற்கும் கலங்காமல் போரிட்டுக் கொண்டிருந்த தேவாந்தகனின் அருகில், மகோற்கடர் சென்றார். விநாயகப்பெருமானாக விஸ்வரூபமெடுத்தார். தன் கொம்பை ஒடித்தார். யானை தந்தத்தை ஆயுதம் எனக்கூற முடியாதே! அதை அப்படியே தேவாந்தகனின் தலையில் பாய்ச்சினார். அவனது ஆவி பிரிந்து, விநாயகரை வலம் வந்தது. ஒரு காலத்தில் சிவபெருமானை எண்ணி தவம் செய்த பெருமையுடையவன் என்பதால், அந்த பாக்கியம் தேவாந்தகனுக்கு கிடைத்தது. பின்னர் அவரது திருவடியில் சரணடைந்து அவருடனேயே ஐக்கியமாகி விட்டது. படை வீரர்கள் ஆர்ப்பரித்தனர்.

காசிராஜன் ஆனந்தக்கண்ணீர் வடித்தான். விநாயகப்பெருமானே! தாங்களே வந்து காசியைக் காத்தமைக்கு நன்றி. தாங்கள் இந்த தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும், என்று வேண்டினான். விநாயகரும் அதை ஏற்றார். பின்னர் தன்னை மகோற்கடராக சுருக்கிக் கொண்டு, அரண்மனைக்கு புறப்பட்டார். தனது மகனின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என காசிராஜன் கேட்டுக்கொள்ளவே, தந்தை காஷ்யபர் இட்ட உத்தரவுப்படி, புரோகிதராக இருந்து சிறப்புற நடத்தி வைத்தார். பின்னர், தன் இல்லத்துக்கு சித்தி, புத்தியருடன் திரும்பினார். காசிராஜனும், அவனது படைகளும் அவருடன் சென்றனர். காசிராஜன், காஷ்யபரிடமும், அதிதியிடமும் தங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பிரஸ்தாபம் செய்தான். அதைக்கேட்டு அவர்கள் மகிழ்ந்தனர். மகோற்கடரும் தனது மானிடப்பிறவி முடிந்து விட்டதாக காஷ்யபர், அதிதியிடம் விடைபெற்று விண்ணுலகம் புறப்பட்டார். மகனை ஆரத்தழுவிய பெற்றோர் தங்களையும் விநாயகரின் ஆனந்தலோகத்துக்கு அழைத்துச் செல்ல விரும்பினர். பூமியில் இன்னும் பல நற்செயல்கள் செய்து தன்னை வந்தடையும்படி விநாயகர் அருள்பாலித்து புறப்பட்டார். காசிராஜன் கண்ணீர் வடித்தார். கணங்களின் தலைவரே! தங்கள் பெற்றோருக்கு அருள் செய்த தாங்கள், என்னைப் போன்ற லோகாதயங்களை விரும்பும் ஈன ஜென்மங்களையும் உமது லோகத்துக்கு அழைத்துச் செல்லமாட்டீரா? அதற்காக, எந்த விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றதும் விநாயகர் கலகலவெனச் சிரித்தார். சித்தி புத்தியரும் சிரித்தனர். காசி மன்னா! எனது உலகத்தை அடைய விரும்பும் பக்தர்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன தெரியுமா? என்றதும், அவர் கேட்கும் விலையைத் தங்களால் கொடுக்க முடியுமா என காசிராஜனும், அவனுடன் வந்தவர்களும் ஆவலுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தனர்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:10:56 PM
விநாயகர் புராணம் பகுதி-23

பக்தர்களே! நான் சொல்லும் இந்தக் கதையைக் கேளுங்கள். இதைக் கேட்ட பின், என் லோகத்தை அடைய, இங்கே கூடியிருக்கும் அனைவரும் கொடுக்க வேண்டிய விலையைத் தெரிந்து கொள்வீர்கள், என்று சொல்லி தன்னால் சம்ஹரிக்கப்பட்ட அனலாசுரன் பற்றி சொன்னார். ஒருமுறை, எமதர்மராஜா தேவலோகப் பெண்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அந்த மோக மயக்கத்தில், அவரிடம் இருந்து அனலாசுரன் என்ற அசுரன் வெளிப்பட்டான். அவன் நின்ற இடம் தகித்தது. எமதர்மராஜா தன்னைப் பெற்றவர் என்பதால், அவரை விட்டுவிட்டு, மற்ற தேவர்களை விரட்ட ஆரம்பித்தான். அவன் அருகில் நெருங்கினாலே கடும் வெப்பம் ஏற்பட்டதால் அவர்கள் தீயில் நிற்பதைப் போல உணர்ந்தனர். தங்களுக்கு புகலிடம் தேடி அவர்கள் திருமாலிடம் சென்றனர். திருமால் அவர்களைச் சமாதானம் செய்து, இந்த அசுரனை அழிக்கும் சக்தி என் மருமகன் கணபதிக்கு மட்டுமே உண்டு. எல்லோரும் கணபதியைத் தியானியுங்கள், எனசொல்லிவிட்டார். அனைத்து தேவர்களும் மானசீகமாக தங்கள் மனதில் விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபட்டனர். அப்போது விநாயகர், மனித முகத்துடன் ஒரு பிரம்மச்சாரி இளைஞனாக அவர்கள் முன் வந்து நின்றார். தேவர்களே! நீங்கள் ஏன் கலங்க வேண்டும்? அந்த அசுரனை என்னால் கொல்ல முடியும்? என்றதும், நீயோ சிறுவன், அவனோ அசுரன். உன்னால் எப்படி அவ்வளவு பெரிய அசுரனைக் கொல்ல முடியும்? என்று ஆதங்கத்துடன் கேட்டனர். அந்த இளைஞன் சிரித்தான். அந்நேரத்தில், தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி நின்று, ஒரு பிரம்மச்சாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் அனலாசுரனுக்கு கிடைக்கவே, அவன் வேகமாக அங்கே வந்தான். தேவர்கள் வெம்மை தாங்காமல் அங்குமிங்கும் சிதறி ஓடினர். அந்த இளைஞனோ எதையும் கண்டு கொள்ளாமல் நின்றான். தேவர்கள் ஆச்சரியப்பட்டனர். அனலாசுரன் இளைஞனின் அருகில் வந்து, வெப்பத்தால் உலகத்தையே அழிக்கும் சக்தி என்னிடம் உண்டு. நீயோ அப்படியே நிற்கிறாய். யார் நீ? என் உடலில் இன்னும் சூடேற்றினால் நீ உருகிப்போவாய், என எச்சரித்து கடைவாய் கோரைப் பற்கள் வெளிப்படும்படியாக சிரித்தான்.

அப்போது அவனது வாயில் இருந்து தீ வெளிப்பட்டது. விநாயகர் அதை ஊதி அணைத்தார். அவன் வெம்மையைக் கடுமையாக்கி பூலோகத்தில் பாய்ந்தான். அங்கிருந்த உயிர்களை அழிக்க முயன்ற போது, இளைஞனான கணபதி பூமியை விழுங்கி வயிற்றுக்குள் தள்ளிவிட்டார். இவ்வாறாக ஏழு லோகங்களையும் அவன் தீ வைக்க முயன்ற போது, எல்லா உலகங்களையும் தன்னுள் அடக்கினார் கணபதி. அவரது வயிறு பானை போல் ஆனது. பின்னர் அந்த இளைஞனிடம், சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. மாயவேலைகளை எல்லாம் என்னிடம் காட்டாதே. ஏழு லோகங்களையும் விழுங்கி வேடிக்கை காட்டும் உன்னை அந்த லோகங்களுடன் விழுங்கி விடுவேன், என எச்சரித்தான். உடனே இளைஞனாக வந்த கணபதி சுயவடிவம் கொண்டு, தன் தும்பிக்கையால் அவனை வளைத்து இறுக்கி அந்தரத்தில் தூக்கினார். அவன் தும்பிக்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே குதித்தான். கணபதி அவனிடம், அனலாசுரா! உனக்கு கொடிய பசி போலும். என் வயிற்றுக்குள் போ. அங்கே ஏழு உலகங்கள் இருக்கின்றன. அத்தனையையும் எடுத்துக் கொள், என்றார். அவனும், நல்லது, நல்லது என்றபடியே வயிற்றுக்குள் சென்றான். அவன் உள்ளே சென்றானோ இல்லையோ, மூடிய வாயைக் கணபதி திறக்கவில்லை. தப்ப வழியின்றி அவன் தவித்தான். விநாயகரோ அவனை உள்ளடக்கிக் கொண்டு வெப்பம் தாளாமல் தவித்தார். தேவர்கள் அவருக்கு கொடுத்த இளநீர், பால் எதுவும் சூட்டைத் தணிக்கவில்லை. சித்தி, புத்தியர் தங்கள் அங்கங்களால் அவரது வெப்பத்தைத் தணிக்க முயன்று தோற்றனர். என்ன தான் செய்வது! அவர்கள் விநாயகரையே சரணடைந்தனர். விநாயகர் அவர்களிடம், நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் என்னை திருப்திப்படுத்தாது.

எனக்குத் தேவை அருகம்புல். அதை உங்களால் முடிந்த அளவு கொண்டு வந்து குவியுங்கள். வெப்பம் தணிந்து விடும், என்றார். தேவர்கள் அருகம்புல்லைக் கொண்டு வந்து குவித்தனர். அவரது உடலையே அருகம்புல்லால் மூடுமளவு கொட்டினர். விநாயகரின் வெப்பம் தணிந்தது. அனலாசுரனும் உள்ளுக்குள்ளேயே ஜீரணமாகி விட்டான். இந்த வரலாற்றை பக்தர்களிடம் சொன்ன கணபதி, இப்போது சொல்லுங்கள், என் லோகத்தை அடைய நீங்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதை! என சொல்லவே, ஆஹா... கருணைக் கடலே! பல்வகை நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க மாலைகளும், ஏராளமான பிரசாத வகைகளும் தங்களுக்கு தரப்பட வேண்டுமோ என நாங்கள் அறியாமையால் ஆளுக்கொரு வகையில் கற்பனை செய்தோம். எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் சாதாரண அருகம்புல்லால் உங்களை அடைந்து விடலாம் என்றால் நாங்கள் செய்த பாக்கியம் தான் என்னே! என்றனர். அன்றுமுதல், விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அருகம்புல் தவிர தங்களுக்கு பிடித்தமான பூக்களையும் நாங்கள் அணிந்து மகிழ ஆசைப்படுகிறோம். அதையும் சொல்லுங்கள், என்றனர் பக்தர்கள். ரோஜா, மல்லிகை, முல்லை, சம்பங்கி இன்னும் பல்வேறு வாசனையுள்ள மலர்களை இங்கே கூடியிருக்கும் பெண்களே வைத்துக் கொள்ளுங்கள். ஆடவர்கள் தங்கள் மார்புகளில் மாலையாகத் தரித்துக் கொள்ளுங்கள். எனக்கு அவை தேவையில்லை. உங்களுக்கு எது தேவையில்லை எனக் கருதுகிறீர்களோ, அதை எனக்கு மாலையாக அணிவித்தால் போதும், என விநாயகர் கருணை உள்ளத்துடன் சொன்னார். அது என்ன வகை பூ? என்று மக்கள் கேட்டதும், இதோ! இந்த பூவை யாராவது சூடுவீர்களா? என்று அங்கு நின்ற செடி ஒன்றைச் சுட்டிக்காட்டினார் விநாயகர். மக்கள் அதிசயித்துப் போயினர்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:12:05 PM
விநாயகர் புராணம் பகுதி-24

அது ஒரு எருக்கஞ்செடி. அந்தச் செடியிலுள்ள பூக்களை எனக்கு அணிவித்தால் போதும் என்றார் விநாயகர். இறைவன் நம்மிடம், எதிர்பார்ப்பது பக்தியை மட்டும் தான். அன்புடன் அவனது பாதத்தில் ஒரே ஒரு பூவை வைத்து, அவனது திருநாமத்தை சொன்னால் போதும்! ஓம் கணபதியே நம என தினமும் 108 முறை யார் பக்திப்பூர்வமாக சொல்கிறார்களோ, அவர்களுக்கு விநாயகரின் ஆனந்தலோகம் நிச்சயம் கிடைக்கும். விநாயகப்பெருமானின் எளிய தன்மை பற்றியும், அவர் எதிர்பார்க்கும் எளிய பக்தி பற்றியும் மற்றொரு கதை ஒன்றையும் கேளுங்கள். மிதிலாபுரி மன்னர் ஜனகர் நற்பண்புகளைப் பெற்றவர். ஏராளமான கல்வியறிவுடன் திகழ்ந்தவர். ஆனாலும், தான் என்ற கர்வம் அவரை ஆட்டிப்படைத்தது. மக்களைக் காப்பாற்றும் அவர் தானே தெய்வம் என்று நினைத்துக் கொண்டார். ஒருமுறை நாரத மகரிஷி அவரைக் காண வந்தார். நாரம் என்றால் தண்ணீர். நாரதர் பிதுர் தேவதைகளை அளவுக்கதிகமாக பூஜிப்பவர். அவர்களுக்கு தீர்த்தம் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருப்பார். இதன் காரணமாகவே நாரதர் என்ற பெயர் அவருக்கு அமைந்தது. நாரதர் எந்த இடத்திலாவது கண நேரம் தங்கிவிட்டால்கூட, அவ்விடத்தில் உள்ளோர் மோட்சத்தை அடைந்து விடுவார்கள். அப்படிப்பட்ட மகான் ஜனகரைக் காண வந்தால் அவருக்கு மோட்சம் உறுதிதானே! ஜனகர், நாரதரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்தார். நாரதர் அவரிடம், ஜனகரே! உமது ஆட்சியில் பகவான் கிருபையால் மக்கள் செழிப்புடன் வாழ்கின்றனர். உம்மை வாழ்த்துகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணமான அந்த பகவானுக்கு இங்கு என்ன வேலை? என்றார். நாரதர், ஜனகருக்கு புத்திமதி சொன்னார்.

ஜனகரே! நீர் அறியாமல் பேசுகிறீர். எல்லாவற்றுக்கும் காரணம் பகவான்தான். பகவானை தூஷிக்கும் இடத்தில் நான் அமர மாட்டேன், என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் நேராக கவுண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றார். அந்த முனிவர் கணபதியை உபாசிப்பவர். அவரிடம் நாரதர், முனிவரே! விநாயகப்பெருமானிடம் சொல்லி ஜனகருக்கு நற்புத்தியை தரச் செய்ய வேண்டும். அவர் தானே பரம்பொருள் என்ற சிந்தனையுடன் இருக்கிறார். அந்த சிந்தனையை அகற்றி அவர் சாதாரண மானிட ஜென்மம் என்பதை உணரும் வகையிலான ஏற்பாட்டைச் செய்யுங்கள், என சொல்லிவிட்டு வைகுண்டம் புறப்பட்டார். கவுண்டின்ய முனிவரும் கணபதியிடம் இதைச் சொல்லி பூஜித்தார். கணபதி அவரது கோரிக்கையை ஏற்று குஷ்ட நோயுள்ள ஒரு அந்தணராக வடிவெடுத்து ஜனகரின் அரண்மனைக்குச் சென்றார். வாசலில் நின்றபடி, தனக்கு பிøக்ஷ இடுமாறு கேட்டார். மிக ஆச்சரியமாக பிராமணர் ஒருவர் அரண்மனை வாசலில் பசியுடன் வந்து நிற்கிறார் என்றால் யாருக்குத்தான் வியப்பிருக்காது! அவர்கள் அவசர, அவசரமாக ஜனக மகாராஜாவிடம் சென்று, பிராமணர் ஒருவர் பிøக்ஷ கேட்டு வந்திருப்பதை அறிவித்தார்கள். ஜனகர் அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். வேதியர் அருவருப்பான தோற்றத்துடன் உள்ளே வந்து நின்றார். பிராமணரே! எனது ஆட்சியில் இப்படி ஒரு நிலைமை தங்களுக்கு எப்படி ஏற்பட்டது? இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? எனக்கேட்டார்.

முதியவர் வடிவில் வந்த கணபதி, எனக்கு பசி தாளவில்லை. முதலில் உணவு கொடு! அதன் பிறகு பேசலாம், என்றார். ஜனகர் தன் மகனிடம், வேதியரை உணவறைக்கு அழைத்து செல்லும்படி கூறினார். அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. கணபதி சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அவரது தொந்தி வயிறை அவ்வப்போது தடவிக்கொள்வார். சமையல்காரர்கள் இருந்ததையெல்லாம் அவருக்கு வைத்து விட்டனர். அவரோ இலையை விட்டு எழுந்திருப்பது போல் தெரியவில்லை. பின்னர், நூறு சமையற்காரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போதே கணபதி பசி தாளாதவர் போல அரற்றினார். இலை முன்பு உட்கார வைத்துவிட்டு, இப்படி என்னை பட்டினி போட்டு துன்புறுத்துகிறீர்களே! என கத்தினார். இளவரசனுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது. அத்துடன் பயமும் வந்துவிட்டது. அவனது உடல் நடுங்கியது. ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் அவனது அறிவுக்கு புலனாகிவிட்டது. பாதி வெந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. இருக்கிற உணவையெல்லாம் அப்படியே எடுத்து வாருங்கள் என கணபதி சத்தம் போட்டார். சமையல்காரர்களும் அவ்வாறே செய்தனர். அதன் பின்பும் அவர் இலையை விட்டு எழவில்லை. உடனே இளவரசன் அவரிடம், வேதியரே! உம் பசி தீர எங்களது தானியக்களஞ்சியத்தை திறந்து விடுகிறோம். உமது இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளும், எனச் சொல்லி களஞ்சியத்தை திறந்து விட்டான். கண நேரத்தில் களஞ்சியத்தைக் காலி செய்து விட்டார் கணபதி.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:13:45 PM
விநாயகர் புராணம் பகுதி-25

ராஜகுமாரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இவர் நிச்சயமாக மனிதர் இல்லை. தேவராகவோ, பூதமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையில் இனி சாப்பிடுவதற்கென எந்தப் பொருளும் இல்லை. காவலர்கள் மூலமாக ஊரிலுள்ள எல்லார் வீட்டிலும் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டான் ராஜகுமாரன். விஷயம் ஜனகருக்கும் பறந்தது. அவர் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஊரார் வரிசையாக உணவுப்பண்டங்களை அடுக்கினர். அந்தணர் வடிவில் இருந்த கணபதிக்கோ அது ஒரு கைப்பிடி அளவே இருந்தது. அதையும் காலி செய்துவிட்டு, பாவிகளே! பெரும் பசியுடன் வந்த எனக்கு கடுகளவு சாப்பாடு போட்டு, மேலும் என் பசியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே! உம்... போடுங்க சாப்பாட்டை, என்று கத்தினார். ஜனகர் அவர் அருகே வந்து, வேதியரே! உமக்கு கொடுக்க எங்கள் நாட்டிலேயே இப்போது ஏதுமில்லை. என்னை மன்னிக்க வேண்டும். உமது பசியைப் போக்கக்கூடியவர் என நீர் யாரை நினைக்கிறீரோ அங்கேயே போய் நீர் பசியாறிக் கொள்ளலாம், என்றார். மன்னனே! நீ தானே பரப்பிரம்மம். அப்படித் தானே ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிகிறாய். கடவுளுக்கு சமமான உனக்கு யாசகம் கேட்டு வந்த அந்தணனின் பசியைத் தீர்க்க முடியவில்லையே. ஒரு சிறு பகுதியை ஆளத்தெரியாத நீ, கடவுளாக இருந்து இந்த பிரபஞ்சத்தையே எப்படி காக்கப் போகிறாய்? என் பசியைத் தீர்ப்பதாக வாக்குறுதி தந்து விட்டு, அதைக்கூட காப்பாற்றாத நீயெல்லாம் தெய்வம் என்று சொல்லிக்கொள்கிறாயே, என்று அவருக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவிட்டு கோபப்படுவது போல் நடித்து வெளியேறி விட்டார். அவர் சென்ற பிறகு ஜனகர், தன்னைப் பரப்பிரம்மமாக நினைத்து கர்வத்துடன் நடந்து கொண்டதையும், யாசகம் கேட்டவருக்கு கூட உணவிட முடியாத தனது இயலாமையையும் எண்ணி வருந்தினார். அரண்மனையில் இருந்து புறப்பட்ட அந்தணராகிய கணபதி, திரிசுரன் என்ற தன் பக்தனின் வீட்டிற்குச் சென்றார்.

திரிசுரனும் ஒரு அந்தணர். அவரது மனைவி விரோசனை. கணவர் யாசகமாகக் கொண்டு வரும் அரிசியை சமைத்து விநாயகருக்கு படைத்து விட்டு சாப்பிடும் பழக்கமுடையவள். கணவருக்கு பூஜை வேளையில் பணிவிடை செய்பவள். அவர்களின் வீட்டுக்குச் சென்றதும், திரிசுரன் வெளியே வந்து அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றார். திரிசுரனே! நான் தீர்த்தயாத்திரை செல்கிறேன். வழியில் பசிக்கிறதே என்பதற்காக இந்த நாட்டு மன்னன் ஜனகரிடம் உணவு கேட்டேன். அவர்களோ குறைந்த அளவு தந்து, என் பசியை மேலும் தூண்டி விட்டார்கள். பசியடங்காத நான், உங்களிடம் உணவு கேட்டு வந்துள்ளேன். ஏதாவது கொடுங்களேன், என்றார். விரோசனைக்கு கண்ணீர் முட்டியது. சுவாமி! மற்ற நாட்களில் கூட நெல்லோ, அரிசியோ பிøக்ஷயாக ஏற்று வருவார் என் பர்த்தா. இன்றோ, அவர் ஏதுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பி விட்டார். விநாயகருக்கு அர்ச்சனை செய்த அருகம்புல் மட்டுமே இங்குள்ளது. வேறு ஏதுமில்லை. நான் என்ன செய்வேன்? பசித்து வந்த தங்களுக்கு ஏதும் தர முடியாமல் தவிக்கிறேனே! என்று தங்கள் நிலைமையை வெளிப்படுத்தினாள். பெண்ணே! இதுபற்றி கவலை வேண்டாம். உன்னிடம் இருப்பதாகச் சொல்கிறாயே, அருகம்புல், அதில் ஒன்றிரண்டைக் கொடுத்தாலே போதும். என் பசி தீர்ந்து போகும், என்றார் சுவாமி. விரோசனையும் அவ்வாறே அவருக்கு இரண்டு அருகம்புல்லைக் கொடுத்தாள். கணபதி அதை வாயில் போட்டாரோ இல்லையோ, அந்த வீடு பொன்மயமாக ஜொலித்தது. அவ்வூரிலுள்ள குடிசைகளெல்லாம் மாளிகைகளாகி விட்டன. ஜனகரின் அரண்மனையில் முன்பையும் விட செல்வம் கொழித்துக் கொட்டிக் கிடந்தது. அவருக்கு பேராச்சரியம். அரண்மனைக்கு வந்த வேதியரே இதற்குக் காரணம் என்பதை அவர் புரிந்து கொண்டார். திரிசுரனின் இல்லத்திற்கு அவர் விரைந்தார்.

அப்போது விரோசனை, சுவாமி! தாங்கள் யார்? எங்கள் வீட்டின் நிலையையே மாற்றி விட்டீர்களே. பசும்புல்லுக்கு பசும்பொன் கொடுத்த புண்ணியரே! தங்களைப் பற்றிச் சொல்லுங்களேன், என்றதும் விநாயகர் தன் சுயரூபத்தை அவளுக்கு காட்டினார். திரிசுரன் அவரிடம், சுவாமி! இந்த ஏழையின் வீட்டுக்கா எழுந்தருளினீர்கள்! நான் அருகம்புல் தவிர தங்களுக்கு ஏதும் தந்ததில்லையே! இனிக்கின்ற மோதகமும், சித்ரான்னங்களும் படைத்து உம்மை வழிபடும் இடங்களுக்கெல்லாம் செல்லாமல், எங்கள் மகாராஜா தங்களுக்கு ஏராளமான உணவிட்டும் அவர் வீட்டில் காட்சி கொடுக்காமல் இங்கு வந்து காட்சி தந்தமைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள அடியேன் விரும்புகிறேன், என்றார். இதற்குள் ஜனகரும் அங்கே வந்து விட, அவர் பரவசம் மேலிட கணபதியை வணங்கி, விநாயகரே! நானே பரம்பொருள் என இறுமாந்திருந்தேன். என் மாயையை தீர்த்த வல்லவரே! உம்மை மதிக்கத்தவறிய எனக்கு இனியும் இவ்வுடலில் உயிர் வேண்டாம். நான் உமது திருவடியை அடைந்து பாக்கியத்தை அருள்வீரா? நான் செய்த தவறுக்குரிய தண்டனை எதுவாயிருந்தாலும் கொடும்! ஆனால், என்னை மீண்டும் பிறவியெடுக்கச் செய்யாமல் தடுக்க வேண்டும், என்றார். கருணைக்கடலான விநாயகர் அவருக்கும் திரிசுரன் தம்பதிக்கும் அருள்செய்து, என்னைத் திருப்திப்படுத்த ஆடம்பரம் ஏதும் தேவையில்லை. ஒரு பூவையையோ,  இலையையோ எனக்கு அர்ப்பணித்தாலே போதும். அதுவும் இல்லாதவர், எனக்கு மந்திரங்கள் கூறியும், என் திருநாமங்களைக் கூறியும் இதயத்தில் இருந்து அருகம்புல்லையும், அதற்கிணையான வன்னி இலைகளையும் தந்தாலே போதும், என்றார். சுவாமி! தங்களுக்கு வன்னி இலை தூவி வழிபடுவதால், நாங்கள் அடையும் நன்மை என்ன என்பதை விளக்க வேண்டும்? என்று கேட்டாள் விரோசனை. விநாயகரும் அதுகுறித்த தனது பிரஸ்தாபத்தை ஆரம்பித்தார்.
Title: Re: விநாயகர் புராணம்
Post by: Anu on March 20, 2012, 02:15:10 PM
விநாயகர் புராணம் பகுதி-26

விரோசனா! வன்னி இலையின் முக்கியத்துவத்தைக் கேள்.அருகம்புல்லை மாலையாகவும், வன்னியை எனக்கு அர்ச்சனை செய்வதற்காகவும் நீ பயன்படுத்தலாம். ஒரு காலத்தில், விதர்ப்ப தேசத்தை புண்ணிய கீர்த்தி என்பவன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை இல்லை. எனவே, அவனது காலத்துக்குப் பின் மந்திரிகள் ஒன்று கூடி, மன்னனின் உறவுக்காரனான சாம்பன் என்பவனை அரசனாக்கினர். ஆனால், அவன் எதிர்பார்த்ததைப் போல் நல்லாட்சி தராமல் கொடுமைகள் பலவற்றை அரங்கேற்றினான். பெண் பித்தனான அவன், பிறர் மனைவியரைக் கூட விட்டு வைக்கவில்லை. இவனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம், தனக்கு பதவியளித்த மந்திரிகளையே நீக்கி விட்டு, துர்மதி என்பவனை மந்திரியாக்கிக் கொண்டான். அவன் அரசனுக்கு எல்லா வகைகளிலும் உதவியதுடன், தானும் அவனைப் போலவே லீலைகளில் ஈடுபட்டான். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க பாவங்களையே சேர்த்துக் கொண்டிருக்க, ஒருமுறை காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார்கள். வரும் வழியில், எனது கோயில் ஒன்றைக் கண்டனர். அங்கு பக்தர்கள் ஒன்றுகூடி பூஜை செய்து கொண்டிருந்தனர். அங்கே வந்த ஒரு பக்தையிடமிருந்த மாங்கனிகளைப் பிடுங்கி, என் முன்னால் வைத்து, பிள்ளையாரே! இவங்க கொடுக்கறதையெல்லாம் நீ ஏத்துக்கிறே இல்லே! இதோ! நாங்க கொடுக்கிற இந்த கனிகளையும் ஏத்துக்கோ! என விளையாட்டாகச் சொன்னார்கள். பின்னர் அங்கிருந்து போய்விட்டார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகும், அவர்கள் கொடிய பல பாவங்களைச் செய்து இறந்தும் போனார்கள். எமதூதர்கள் அவர்களைக் கொடிய சாட்டைகளால் அடித்து இழுத்துச் சென்றனர். இங்கே, அனுபவித்த இன்பத்திற்கு பல மடங்கு ஈடான துன்பத்தை அவர்கள் அனுபவித்தனர். நரக <உலகத்தில் வாட்டி வதைபட்ட அவர்கள் பூச்சி, புழு, கரப்பான், நண்டு என பல இழிபிறவிகளை எடுத்தனர். மீண்டும் ஒரு பிறவியில் சாம்பன் மானிடனாகவும், துர்மதி அசுரனாகவும் பிறந்தனர்.

மானிடனாகப் பிறந்த சாம்பனுக்கு அப்பிறவியில் வீமன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. வீமன் அப்பிறவியிலும் திருடனாகவே இருந்தான். ஒரு முறை, பல பிராமணர்கள் யாகம் முடித்து விட்டு, அதற்குரிய தட்சணையாக தங்கம், பசுக்கள் முதலானவற்றை பெற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கொள்ளையனான வீமன், அவர்களை வழிமறித்தான். தங்கத்தையும், பசுக்களையும் தன்னிடம் தந்து விடும்படி மிரட்டினான். அந்தணர்கள் அவனுக்கு நற்புத்தி சொல்லவே, ஆத்திரமடைந்த அவன், அவர்களைக் கொலை செய்து அத்தனைப் பொருளையும் அபகரித்துக் கொண்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. செய்த பாவத்திற்கு பலன் கிடைக்க வேண்டாமா? சாம்பனின் மந்திரியாக இருந்த துர்மதி, அந்தப் பிறவியில் ராட்சதனாகப் பிறந்திருந்தான். அவன், பசுக்களையும், பெரும் செல்வத்தையும் திருடிக் கொண்டு வந்த வீமன் முன்னால் வந்து நின்றான். பசுக்களைப் பிடித்துத் தின்றான். வீமனையும் விழுங்க எண்ணம் கொண்டு அவனைப் பிடிக்க கையை நீட்டவும், வீமன் அலறியடித்து ஓடினான். அசுரனும் விடவில்லை. வீமன் பயந்து போய் ஒரு மரத்தில் ஏறினான். அப்போது அதில் இருந்த இலைகள் உதிர்ந்தன. அந்த மரத்தின் கீழே யாரோ சிலர் எனது சிலையை பிரதிஷ்டை செய்திருந்தனர். அந்த சிலையின் மீது அந்த இலைகள் உதிர்ந்தன. அசுரன் மரத்தருகே வந்து, வீமனைக் கீழே விழச் செய்வதற்காக மரத்தை உலுக்கினான். அப்போதும், என் சிலை மீது இலைகள் உதிர்ந்தன. ஒரு வழியாக அசுரன் வீமனைப் பிடிக்க, வீமன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தாக்கி சண்டை போட்டான். ஒரு கட்டத்தில் அசுரனை ஒரு பாதாளத்தருகே சமயோசிதமாக வரச்செய்த வீமன், அவனை உள்ளே விழும்படிச் செய்து விட்டான். அவன் உள்ளே விழுந்ததும், மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பிய அவன் நின்ற பாறையில் திடீரென கால் வழுக்கவே, அவனும் அதே பாதாளத்தில் விழுந்து இறந்தான். இவர்கள் இருவரும் மீண்டும் எமலோகம் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் கொடிய தண்டனை கிடைத்தது. இருப்பினும், அந்தப்பிறவியில் இவர்கள் தங்களை அறியாமலே என்னை வன்னி இலை கொண்டு அர்ச்சித்த பலன் கிடைத்தது. தண்டனை காலம் முடிந்ததும், புண்ணியத்தை அனுபவிக்கும் பாக்கியகாலம் வரவே, அவர்கள் தங்க விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு எனது லோகத்தை வந்தடைந்தனர். பாவிகளுக்கும் கூட மங்களத்தை அருளும் சக்தி வன்னி இலைக்கு உண்டு, என்றார். விரோசனை இந்த சம்பவம் கேட்டு உளம் மகிழ்ந்து, அங்கு நின்ற விநாயகருக்கு அர்ச்சனை செய்து கணவருடன் ஆனந்தலோகம் அடைந்தாள்.

விநாயகப்பெருமானை சதுர்த்தி நாளில் அவதரித்ததாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். இந்நாளில் சந்திர தரிசனம் கூடாது. இது ஏன் தெரியுமா? யாராவது ஒருவர் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டால், அவரை ஏளனம் செய்யக்கூடாது என்பது நியதி. பிரம்மதேவன் இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டார். நாரதர் மூவுலகும் சஞ்சரிப்பவர். தினமும் சிவலோகம் வந்து ஒரு மாங்கனியை காணிக்கையாக வைத்து இசை பாடி சிவசக்தியைப் பரவசப்படுத்துவார். ஒருநாள், காணிக்கையாக கொடுத்த மாங்கனியை யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் கேட்டார். வழக்கமாக அப்பழம், விநாயகருக்கே கிடைக்கும். இப்போது முருகனுக்கு அப்பழத்தைக் கொடுக்கலாமே என பிரம்மா கூற, கணபதிக்கு கோபம் வந்து விட்டது. அவரது கோபத்துக்கு ஆளானால், பெரும் தண்டனைக்கு ஆளோவேமே என நடுங்கிய பிரம்மா அவரருகே சென்றார். கணேசரும் அவரை மன்னிக்க முடிவு செய்த வேளையில், பிரம்மாவின் நடுக்கத்தைப் பார்த்து சந்திரன் சிரித்தான். விநாயகரின் கோபம் சந்திரன் மீது திரும்பி விட்டது. ஒருவன் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவனைக் காப்பாற்ற முயல வேண்டுமே தவிர, அவனது வேதனையை எண்ணி சந்தோஷப்படக்கூடாது, என சந்திரனைக் கடிந்து கொண்டதுடன், இப்படிப்பட்ட உனக்கு உலகுக்கு ஒளி கொடுக்க தகுதியில்லை, என சபித்து விட்டார். சந்திரன் ஒளியிழந்ததால் தேவர்களுக்கு அமுத கிரணம் கிடைக்கவில்லை. அவர்கள் வாடி வதங்கினர். சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் சந்திரனுக்கு சாபவிமோசனம் தந்து ஒருநாள் தவிர மற்ற நாட்கள் சந்திரன் வளர்ந்து தேய்ந்து கிரணங்களைப் பொழிவான், என்றார். அதனால் தான் அமாவாசையன்று தேவர்கள் உபவாசம் இருப்பது போல, நாமும் உபவாசம் இருப்பது நல்லது. கணபதியின் பேரருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.