FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on February 26, 2012, 04:10:37 AM

Title: பெண்களை பிடித்திருக்கும் சனி
Post by: Global Angel on February 26, 2012, 04:10:37 AM
பெண்களை பிடித்திருக்கும் சனி



இந்திய தேசத்தில் பெண்களை தெய்வம் என்று வணங்குகின்றனர், தாய்க்கென்று ஒரு தனி இடம் இந்திய தேசத்தில் இருப்பதால் 'தாய்நாடு', 'தாய்மொழி' என்று தாயின் ஸ்தானத்தை கொடுக்கின்றனர், இவ்வாறெல்லாம் போற்றப்படும் பெண்ணினத்தை இந்திய சமுதாயத்தில் மிக கேவலமான முறைகளில் குற்றம் சுமத்தப்படுவதும் மிகவும் சகஜமான ஒன்று. காலம் எத்தனைதான் மாறினாலும் அறிவியல் வளர்ச்சியும் கல்வியும் அதிகரித்தாலும் பெண்களின் மீது சுமத்தப்படுகின்ற கேவலமான நிந்தைகள் மட்டும் சமுதாயத்தில் மாறுவதாகவே தெரியவில்லை. நமது நாட்டில் மாற்றங்கள் அதிகம் ஏற்ப்பட்டுவிட்டதாக நினைப்பது வெறும் பிரம்மையே. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமம் என்று கூறுவது வெறும் பேச்சளவில் மட்டுமே. ஆண்களுடன் பெண்கள் அதிகம் பழகினால் அப்பெண்ணை நடத்தை கெட்டவள் என்று கூறுவதும் வீண் பழிகள் சுமத்துவதும் இந்திய கலாசாரத்தின் மிகவும் முக்கிய பணி.

பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகபடுவதும் அதை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ளாமலேயே அச்செய்தியை திரித்து பன்மடங்காக்கி விமரிசனம் செய்வதும் மிக சாதாரணமாக சமுதாயத்தில் காணப்படும் அவலம். தங்கள் வீடுகளில் இருக்கும் தாய், சகோதரி, அத்தை, சித்தி, மாமி என்ற பெண்களைப்பற்றிய விவரங்களை மற்றவர்களும் அவ்வாறே திரித்து பன்மடங்காக்கி வீதிகளில் விமரிசனம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தால் போதும் அவ்வாறான வதந்திகளை பரப்பும் நபர்கள் முற்றிலுமாக காணாமல் போவார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது, வேறு பெண்களைப் பற்றிய வதந்திகளை காதுகொடுத்து கேட்பதற்கும் அதை இன்னும் சில பல மாற்றங்களுடன் கேட்பவர் உள்ளத்தின் ஆவலை தூண்டுகின்ற வகையில் ஜோடித்து எல்லோரிடமும் விமரிசனம் செய்வதில் இந்திய சமுதாயத்திற்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாத அளவிற்கு கற்பனையை தங்கள் விருப்பத்திற்க்கேற்றபடி கயிறு திரிக்க வல்லவர்கள்.

எதிலெல்லாம் தங்களது திறமையை காட்ட வேண்டுமோ அவைகளில் காட்டுவதற்கு வழி அறியாத 'கண்ணிருந்தும் குருடர்களும், காதிருந்தும் செவிடர்களுமாக' வாழ்ந்து கொண்டிருக்கும் செத்த பிணங்கள். அறிவியலும் கல்வியும் வளர்ச்சியடைந்தாலும் சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் ஏற்ப்படாத வரையில் விஞ்ஞானம் வளர்ச்சியடைவதில் யாருக்கும் நன்மை இருக்கப்போவதில்லை. சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் அடைந்த நாடுகளில் மட்டுமே அறிவியல் மற்றும் கல்வி வளர்ச்சியின் முழுமையை காணமுடிகிறது. அவ்வாறு இரண்டிலும் வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமே வல்லரசுகள் என்ற மேன்மையை அடைய முடியும். இந்தியாவை வல்லரசாக்க நினைப்பவர்கள் முதலில் சமுதாயத்தில் கடைநிலையில் வாழுகின்ற பெண்ணைகூட மதிக்கின்ற தனது தாயைப்போல, தங்கையை போல ஏற்றுக்கொள்ளும் மனம் எப்போது வளர்ச்சியடைகிறதோ அன்றைக்குத்தான் சமுதாயம் முழு முன்னேற்றத்தை கிரகித்துக்கொள்ளுகின்ற தரத்தை பெறமுடியும்.

பேருந்தில் தன்னுடன் பயணிக்கின்ற சக பயணியை உரசிக்கொண்டு சுகம் காண துடிக்கும் ஓநாய்களும், அடுத்தவன் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணம், நகைகளை கொள்ளையடித்து சந்தோஷமாக தனது வாழ்நாளை அனுபவிக்க ஆசைப்படுகின்ற பிணம் தின்னி கழுகுகளும், எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்க்கையை தரம்கெட்ட விதத்தில் வாழ்ந்துவிட நினைக்கும் மாக்கள் நிறைந்த சமுதாயத்தினால் நாட்டிற்கும் கேடு சமுதாயத்திற்கும் கேடு. கேடு நிறைந்த சமுதாயத்தை உள்ளடக்கிய நாடு ஒருகாலமும் வளர்ச்சியை அடையும் வாய்ப்பே இல்லை. அடிப்படை கல்வியும் அடிப்படை தகுதிகளும் கொண்ட சமுதாயம் மட்டுமே விஞ்ஞான மற்றும் கல்வி வளர்ச்சியில் முழு பங்காற்றும் தரத்தை உடையது. அவ்வாறு இல்லாத 'ஆட்டு மந்தை' சமுதாயம் வல்லரசாகவோ முன்னேற்றப்பாதையை தொடுவதற்க்கோ கூட லாயக்கு அற்றது