FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 20, 2017, 01:12:25 PM

Title: காலத்தின் கதறல்
Post by: thamilan on April 20, 2017, 01:12:25 PM
தாங்க முடியாத
துயரங்களை கொட்டி வைத்த இடம்
இறுகிப்போய் மலை முகடுகளாக
உயர்ந்து நிற்கின்றன 

வானுக்கும் பூமிக்குமாக 
இடைவெளியில்
காற்றாக அலைந்து கொண்டிருக்கிறது
என் பெருமூச்சு

இனிமையானதொரு பறவையின் பாடலை
கேட்டுக் கொண்டிருக்கும்
காதுகளின் சவ்வை கிழிக்கின்றன
வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும்

புதிய தலைமுறைகள்
புகைபிடித்த நெருப்பின் மிச்சம்
என் உடலின் ஒரு பாகத்தை
எரித்துக் கொண்டிருக்கிறது

மனிதர்கள் அல்லாத  மனிதர்களின்
விஷமூச்சை சுவாசித்து
எவரும் பக்கம் வர தயங்கும்
துர்நாற்றத்துடன் நாட்களாய்
நிமிடங்களாய் நொடிகளாய்
சரிந்து கொண்டிருக்கிறது
எனது பிணம் 

Title: Re: காலத்தின் கதறல்
Post by: AnoTH on April 21, 2017, 12:26:03 PM
இனிய சகோதரன் தமிழன்,

காலத்தின் அவல நிலையின் வெளிப்பாடாக
தங்களுடைய வரிகள் எழுந்து நிற்கின்றன.
ஓர் விடயத்தை ஆக்குவதனை விட அழிப்பதிலேயே
மனிதனின் ஆர்வம் அதிகரிக்கும் காலம் இது.
வேடிக்கை நிறைந்த வாழ்க்கை வேடிக்கை பார்த்து நிற்க
மட்டும் முயலும் சமூகம்.

வாழ்த்துக்கள் சகோ