FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 26, 2017, 12:24:22 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: Forum on March 26, 2017, 12:24:22 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 140
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F140.jpg&hash=8a362ee4388a18523b37ce3921978870bdce9dc1)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: SarithaN on March 26, 2017, 01:24:05 AM
உலகுக்கு உணவளந்த எம் வயிறு வக்கொட்டி
கோசமிடவும் குரலின்றி நாவிறந்து - நிற்கதியாய்.....


உலகெங்கும் உயிர் வாழ உணவளந்த பூமியடா.....
நிலமுழுது விதைதூவி கார்மேகத்துக்காய் தவமிருந்து
வேள்விகள் பலசெய்து..... விதைமுழைத்து பயிர்மேவ
மனைவி பிள்ளை துணைபிரிந்து வயல்வெளியில்
அட்டாளைமேல் கண்விழித்து காவல்செய்து.....

கதிர்காத்து பருவம்வர அறுத்தெடுத்து
போரடித்து அறாவிலைக்கு ஏமாந்தும்
உலகம் உணவின்றி தவித்திடாதிருக
தன் உழைப்பை நிலத்தில் சிந்தும் குலமடா

இந்தியாவே நானும் உன் பிள்ளையா - இல்லையா?
தமிழ் நாட்டு விவசாயிகள் போரடுவது
சுயநலத்துக்காய் அல்ல தேசத்தின்
ஒற்றுமைக்காய் விடுதலைக்காய்

வெள்ளையன் தரும் உணவுக்காய்
காத்திருத்தல் கையேந்துதல் அடிமைகுணம்
விவசாயிகளை நாதியற்றவராய் நடுத்தெருவில்
நிற்கவிட்டாய் இதுதான் நின் சிறப்போ தலைநகரே.....

உலகுக்கு உணவளந்த எம் வயிறு வக்கொட்டி
கோசமிடவும் குரலின்றி நாவிறந்து -
நிற்கதியாய்..... நாங்கள் பூண்ட அரைநிர்வாணம்
நாளைய - இந்தியாவின் அடையாளமாகுமோ.....!

அனைத்துக்கும் அன்னியனிடம் கையேந்தும்
பிச்சைகார நாடாக்கி எம்குலத்தை ஏய்க்காதே
இந்தியாவை ஆழும் ஆதிக்க சக்தியே... 
உன்சதி நிறைவேறாது..... 

விவசாயிகள் வீட்டு பிள்ளைகள்... நாட்டையாளும்
அறிவும் தெளிவும் கொண்டனர்... வாங்கிய தரகர்
பணத்தை திருப்பிகொடு... எமக்கான நீதியும்
உரிமையும் எமக்கு வேண்டும் ... இன்றே வேண்டும்

கைகளிலே மண்டையோடு..... வஞ்சனையால் இறந்த
அப்பாவி விவசாயிகளின் மண்டையோடு.....
இறக்கவில்லை கொலைசெய்தீர்கள் மண்பறிக்க.....
மண்பறித்து நிலம் அகழ்ந்து வைரம் முதல்
வர்ணகற்கள் அனைத்தும் கொள்ளையிட
போட்ட திட்டம் பலிக்காது இரக்கம் வேண்டாம் - நீதிசெய்

பழம்குடியாய் ஆதிக்குடியாய் மலைகளிலும்
காடுகளிலும் வாழ்ந்த எம் முன்னோரின்
உரிமை பறிக்க... வனவாசிகளென பெயர் மாற்றினாய்... 
இன்றோ எம்மையே... தமிழரையே... பூர்வீக குடியையே... 
தலைநகரில் நிர்வாணியாக்கி நிறுத்திவிட்ட
21 ஓராம் நூற்றாண்டின் சாதனைக்கு நீயே தலைவன்...

உலகுக்கு உணவளந்த எம் வயிறு வக்கொட்டி
கோசமிடவும் குரலின்றி நாவிறந்து - நிற்கதியாய்.....
எமது தேவையை கேட்டிடவும் குரல் எழவில்லை
பசியால் தாகத்தால் குறை உயிராய் தவிக்கின்றோம்...
தமிழ் நாடும் இந்தியாவிலே என்றால் நீதிசெய்..... தலைநகரே.


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: DaffoDillieS on March 26, 2017, 03:38:14 PM
விசித்திர உலகமடா..
குடுப்பவனின் இயலாமையை..
எடுப்பவனின் அதிகாரம் பந்தாடும் அவலமடா..
நீதியும் நியாயமும் தோற்கடிக்கப்படுகின்ற காலமடா..
இது நம் ஏழை விவசாயிகளின் ..
இன்றைய மனதை உலுக்கும் கோலமடா...!

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்போம்..
விவசாயிகளுக்கோ விவசாயக் கடன் ரத்து இல்லையென்போம்..
நாற்று நடுபவர்களைக் காப்பதே தலையாயக் கடமையென்போம்..
அவர்களின் முதுகில் குத்துவதை ..
நம் அரசியலின் நுனுக்கங்களென்போம்..
உலகுக்கே தன் உழைப்பால் படியளப்பவனைக் கடவுளென்போம்..
சொற்ப கடனுக்கு அவனை வாழ்வின் விளிம்பிற்கேத் தள்ளுவோம்..

புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வக்கற்று..
பணமுதலைகள் முழுங்கிய கட்டுகளை வசூலிக்கத் திராணியற்று..
ஊழல் ராஜாக்களையும் ராணிக்களையும்..
 களைய நீதிகளற்றுக் கிடக்கும் அரசாங்கம்..
விவசாயத்தைத் தவிர ஏதுமறியா ..
விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும் ஒரு பிழைப்போ!

இன்று நாடுகடந்து உணவுப்பொறுட்களை ஏற்றுமதி செய்யும் நாடு..
நாளை உணவுக்கே கையேந்தி..
அண்டை அயலாரிடம் பிச்சையெடுத்து நிற்கப்போகும் கேடு..
காரணங்களை நாம் அறிவோம்..
சதிகளை வெல்லும் சூட்சமம் தாம் அறியோம்!

ஏர் பிடித்து.. உழுது..
சேற்றில் இறங்கி.. நாற்று நட்டு..
போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு சோறு போட்டவனை..
தெருவில் நிறுத்திய உங்கள் நன்றிக்கடன்..
என்றும் விவசாயிகள் மறவா பிறவிப்பயன்!!

உள்ளூர் கால்நடைகளைக் காக்க ஓர் பெரும் போராட்டம்..
இன்று தாய் மண்ணைக் காக்கவே ஒரு போராட்டம்..
தமிழன் சாதித்தால் அவன் இந்தியன்..
பிரச்சணைகளைச் சந்தித்தால் அவன் தமிழன்..!!
தட்டிக்கேட்கவே நினைத்தோமே..
இது முடிவல்லவே.. ஒரு தொடக்கம் மட்டுமே..!!

வறட்சிக்குத் தண்ணீர் மறுக்கப்படுவதையும்..
மத்தியில் உரிமைகள் தடுக்கப்படுவதையும்..
மீனவர்களின் உயிர் அலட்சியப்படுத்தப் படுவதையும்..
வாடிக்கையாக்கி வேடிக்கை பார்க்கும் சகுனிகளின் அழிவு..
இதோ கூப்பிடு தொலைவில்..!!

நெல்லும் பருப்பும் விளைந்த இப்பொன் பூமி..
நாளை..
நடுநடுங்க வைக்கும் சுடுகாடாக்கப்படுவதைத் தடுக்கவே இப்போராட்டம்..!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவே தொடரும் இந்நூதனப் போராட்டம்..

ஒரு நடிகனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட..
பசியாற்றுபவனுக்குக் கிடைப்பதில்லையே!!!
சிறு கச்சை காக்குமளவு மானத்தைக் கூட..
தாய் நாடு காக்க மறந்ததே!

___நன்றி____
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: VipurThi on March 26, 2017, 10:19:08 PM
வயல் வெளியிலே ஏர் பூட்டி
உழுதவர்கள்
இன்று நகர் வீதியிலே ஊர் கூடி
அழுகிறார்கள்
ஆவென வாய் பிளந்து
பார்க்கும்
அறிவில்லா சமுதாயமடா இது

கொண்ட கோலம் மாறுமென
கனவு கண்டோர்
எத்தனை பேர்
ஆனால் மாறாத கோலமிதுவென
உயிர் வெந்தவர்கள்
இத்தனை பேர்

வறட்சி வெள்ளம் தாண்டி
இவர்கள் கொண்ட வெற்றியோ
சொற்பமே
ஈவு இரக்கமின்றி அதையும்
கொள்ளை கொள்ளும்
மனித புத்தியோ
அற்பமே

சேயாய் விதைத்த நெல்லை
தாயாய் தாரைவார்த்து
பசியை கண்ணீரில்
கரைத்திடும்
எம் சொந்தங்களுக்கு
உங்கள் பதில் தான்
என்னவோ

மரணமே பதிலாயின்
நாளை நம் நிலையும்
இதுவென கண்டிடுவீர்
காட்சி
சிந்தை  உள்ளவர் வாரீர்
கொண்டிடுவீர்
மீட்சி

              **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: சக்திராகவா on March 26, 2017, 11:50:59 PM
நெடு ஏர் பூட்டி
நேர் பாத்தி கட்டி
குறு நெல் விளைய
குழைமண் பூசி

விழும் வேர்வையும் வேர் சேர விளைச்சல் தந்து பசிதீர்த்த படைப்பாளி
படுத்தேவிட்டான் பாதையில்
பார்வையில் விழுவதற்கு

ஆயிரம் கருவிகள் வந்தென
அறுவடை செய்யாமல் பயிர்வருமா
விஞ்ஞானி என்றே விண்தொட்டும்
விதைப்பவன் காலடி விதையே வாயில்!

கால மாற்றத்தில் கைவிரித்த மழையும்
கடன்பட்டு காய்ந்த கைவிதைத்த பயிரும்
அதை தாண்டி அளவெடுத்து
அரசாங்கமாம் தலையெடுத்து
கழனியாண்டவனின் கல்லறையில் காசிறைக்கும்!

இறுக்கையில் இரு கை கூப்பி
இருக்கையில் அமர்ந்தோன் முன்பு
யாசகமா கேட்கிறான்
எழுந்து வந்து பதில் சொல் போதும்

ஏர் பிடித்ததாலோ என்னவோ
ஏரோபிலேன் ஏறுபவருக்கு
கண்ணில் தெறியாத கட்டெறும்பாய்
காடளந்த விவசாயி!

மறுபடியும் பண்டமாற்று முறையென்றால்
பக்கத்து நாடும் உன் பக்கம் வராது!
பொறுத்துக்கொள் என் பச்சை கோவனமே
பசிக்கும்போதே நீ கடவுளாவாய்!

சக்தி ராகவா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: இணையத்தமிழன் on March 27, 2017, 05:17:31 PM

ஆறுகளிலோ மணல்லாரிகள் பாய்ந்தோட
ஏரிகளிலோ எட்டுமாடிகுடியிருப்பு
குளங்களிலோ குடிசைகள் எங்குமிருக்க
வான்மகளும்(மழை) பொய்த்திடவே
வறட்சியில் இங்கே வாடிடவே 

கார்மேகம் காணவில்லை
காய்ந்து வெடித்த நிலத்தினிலே
காலமெல்லாம் உழைத்தவனுக்கோ
கால்வயிற்று கஞ்சுமில்லை

உழுது முடித்த என் சனமோ
இன்று அழுதும் முடித்துவிட
தலைநகரில்
ஈரேழு நாட்கள் முடிந்தபின்னும்
எடுத்துச்சொல்ல நாதியில்லை
பிரதமருக்கோ நேரமில்லை

குறுக்கு வலிக்க உழைத்த கூட்டம்   
ஏனோ குடிசைவிட்டு உயரவில்லை
குறுக்குவழியில் பிழைத்த கூட்டம்
கோடிகள் சேர்க்க அசரவில்லை

முப்போகம் விளைந்த பூமி
இனிஎப்போது விளையும்
என்று விளைவித்தவனுக்கே
தெரியவில்லை
இவ்வாறு நாடு இருக்க
ஏட்டில்மட்டும் என் நாட்டின்
முதுகெலும்பு விவசாயம் என்றிருக்கும்

பொன்விளையும் பூமியையும் மலடாக்கி
விவசாயியை  விண்ணோடு போகவிட்டு
விவசாயத்தை மண்ணோடு போகவிட்டு
முட்டாள் சட்டங்களை நம்பி முடங்கிப்போன
சமுதாயமே இனியாவது விழித்தெழு
                                                                   - இணையத்தமிழன்
                                                                         ( மணிகண்டன் )

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: Ms.SaraN on March 28, 2017, 07:43:16 AM
கடன் என்னும் சூரிய கதிர்களை கண்டு கண் விழித்து ,
வயல்  என்னும் ஒற்றைசொல்லை  உணவாக்கி ,
வியர்வை என்னும் நீரில் நீராடி,
பசி என்னும் கனவு போர்வைக்குள் புகுந்து கொள்ளும் விவசாயியே ,
நீ கடவுளுக்கு சமம்,

காடும் மேடும் நிலமாக்கி,
வெயிலும் பசியும்  சொர்கமே என்று நினைத்து ,
ஏரும்  தன் குழந்தைகளில் ஒன்றாக நினைத்து,
நீ விதைக்கும் ஒவ்வொரு நெல் கதிரும் இறைவனுக்கே சமம்,
ஆனால் அந்த கடவுளுக்கு கூட உன் கஷ்டம் புரியவில்லை,
தண்ணீர் என்னும் பொக்கிஷத்தை உனக்கு கொடுக்காமல்,
எவன் வீட்டு குழாயிலோ  தருகிறான்,

வீடு தேடி வருபவனுக்கு பசி ஆற்றும்  உன்னை,
பசியோடு நடு வீதியில் மறியல் செய்ய வைத்தது எவனோ?
நிர்வாணம் என்னும் ஒற்றை சொல்லை கொடுமையாய் நினைக்கும் நமது
சமுதாயம்,
சோறு  போடும் கடவுளை அரைநிர்வாணமாக வீதியில்  படுக்க வைத்து
ஏனோ?

நீ நடும்  நெல் கதிர்கள் கூட வாடிவிட கூடாதென
நினைக்கும் நீ,
உன்னையே மரித்து கொள்வது ஏனோ ?
நீ தரும் அரிசியில் கூட கலப்படம் இல்லை,
ஆனால் கலப்படம்  மிஞ்சிய நஞ்சை உண்டு
உன் வாழ்க்கையை மரித்து  கொள்வது யாருக்காக?

எங்கோ நீ போடும் பிச்சையை உண்டு சோம்பல் முறித்து உன்னையே
மட்டம் தட்டுகிறான் ஒருவன்,
அதைக் கண்டு நொந்து செத்து போகிறான் இன்னொருத்தன் ,
ஆட்சி என்னும் மிருகத்தை நீ கையில் ஏந்தி நீ செய்யும் அராஜகம்,
நீ உன் அம்மாவை பிணமாக்குவதற்கு சமம்,[/color]

முட்டாள் மானிடனே மறவாதே,
நீ இப்போது விவசாயம் என்னும் சொர்க்கத்தை காக்கா விடில்,
உன் தலைமுறை குப்பையைத்தான் உணவாக்கி கொள்ளவேண்டும்,

இதை ஏற்க மறுக்கும் முட்டாள் மனிதனே ,
விழித்தெழுக ,விவசாயி என்னும் பொக்கிஷத்தை வாழவை,
விவசாயம் என்னும் கவிதையை நீ எழுதாமல் இருந்தால்,
விரைவில்  இவ்வுலகம் சுடுகாடாகி விடும்,
மறவாதே !!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: ரித்திகா on March 28, 2017, 10:05:58 AM
காலத்தின் விதியோ...
மனிதனின்  சதியோ...
இயற்கையின் பிழையோ....

உப்பிட்டவனை மறந்தது
தான் சரியோ....

மூன்று வேளை சோற்றை
உண்ண தவறவில்லை...
அச்சோற்றை விதைத்தவனை
நினைத்திட நேரமில்லை...

வாழையிலையில் வகை வகையாக
பரிமாறிட...
சோற்றில் நாம் கைவைத்திட...
ஒரு பானைக் கூழை மட்டும் குடித்துச் -
சேற்றிலே பதித்தர் தன் இரு
பாதங்களையும்

தன் பசி மறந்து - வலி
மறந்து...
ஊரார் பசி அடக்கியவர்கள்
இவர்களே...
இன்று ஒரு வேளைச் சோற்றுக்கு
திக்கற்று நிற்ப்பவர்களும்
இவர்களே....

காலம் கடக்கையில்
சேற்றில் நீரும் வறண்டது...
விதை விதைத்தவன்
வயிறும் பசியால் வாடியது...

கண்களில் கண்ணீர்
மல்க- அது கண்ணீரா
அல்லது அவர்களின் குருதியா??
கையேந்தி
 நிப்போரின்  வேதனை 
புரியவில்லையா..??

மனிதனே நன்றியுணர்வு
இல்லாவிடிலும் - மனித
நேயத்தோடு சற்று நடந்து கொள்...
இன்னும் எத்தனை உயிர்களை
பலி கொடுக்க போகிறாய்...

சுட்டெரிக்கும் வெய்யிலில்
பசி மறந்து உறக்கம் மறந்து
போராடும்  இவர்களின்
வலியை நீரறிய
மறுப்பதுதானேனோ....

புலிக் கொடி பறந்தது ..
பல புலிகளும் பிறந்தது எம் இனத்தில் ...
இன்று எலிக்கறி நிறைத்து ..
அதை சிறுகுடல் திணித்து
வாழும் காலமோ ..

விதைவிதைத்தவன் .. வீழ வேடிக்கை பார்ப்பதுவோ ..

தேசிய கொடியிலும்
இவர்களின் பச்சை கோவணம்
பறக்கிறது  ..
பார்க்க ஆள் இல்லை... இந்த தேசமே
இவர்களைப் பார்த்து கை கொட்டி சிரிக்கிறது ..

இன்னும் எத்தனை காலம்...
இந்த கொடுமைகள்...
தாங்கிட நெஞ்சில் தெம்பு
உண்டோ....
விவசாயின் இக்கதிக்கு
முடிவும் உண்டோ....


~ !! நன்றி !! ~
~ !! ரித்திகா !! ~
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 140
Post by: ChuMMa on March 28, 2017, 03:19:12 PM
ஒருகால் உன் கால் சேற்றில்  நீ வைக்கா(ம)ல் இருந்தால்
ஒரு கை என் கை சோற்றில் வைக்க முடியுமோ
என் அருமை விவசாயியே !!!


பழைய சோற்றில் பச்சை மிளகாய் கடித்து நீ உண்ண
பழைய பண்ணில் வாடிய காய்கறி வைத்து பர்கர் என நான் உண்ண

ஒட்டிய வயிறு இருந்தும் வலுவாய் நீ இருப்பாய்
வெளி தள்ளிய வயிருடுன் வலுவிழந்து  நான் இருப்பேன்

என் செயலை பீற்றி கொண்டு நான்
என் செயலால்  பீதியில் இன்று வீதியில் நீ!

நம் தலைநகரில் நீ போராடுவது உன் தலைவிதிக்காக அல்ல
நம் தலைமுறைக்காக என்று, என்று உணர்வேனோ நான்

உண்ணும் ஒவ்வோர் அரிசியிலும் உண்ணுபவர் பெயர்
இருக்குமோ இல்லையோ நிச்சயம் உன் பெயர் இருக்குமே
எனது அருமை விவசாயியே  !!

ஒவ்வொரு வேளை   உணவு உண்ணும் போதும்
இனி உன்னை நினைப்பேன்

உன்னை  புறம் தள்ளினால்  -நான்  இறக்கும் போது
வாய்க்கரிசி போட கூட அரிசி இருக்காதே எனது அருமை விவசாயியே  !!

-----சும்மா -----


பி.கு ...பிழை இருப்பின் மன்னிக்கவும்