FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on January 22, 2017, 12:17:23 AM

Title: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: MysteRy on January 22, 2017, 12:17:23 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 133
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F133.jpg&hash=d63340384068ecfe2a8e3c2c9e6ee70465edc504)
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: SarithaN on January 22, 2017, 12:39:13 AM
நிலவே உண்மை சொல்

சூரியன் கருகிய மாலையில்
சந்திர பூரணம் அது நீயோ - நிலவே!
தரைதொடும் தூரமாய் நிழலோடு
இரு உருவமாய் நீருள் ஊடுருவி ஒன்று!

நிலவே நீ என்னவளா இல்லை
அவள் போலா? இருவராய் !
என்னவள் என்னுள்ளும்
அவள் வீட்டிலும் - இதில்
எது நியம் எது நிழல் ?

நிலா நீ இரசிக்கின்றாயா பூமியை?
மனிதன் வாழ கடவுள் படைத்த பார்!
பார்க்கின்றாயே உன்னிலும் மேன்மை
தானே பூமி?

நீ பார்க்கையில் மலையும் நிலமும்
நீரும் புல்லும் புழுவும் பாம்பும்
ஆற்றோரத்தில் தெரிகிறதல்லவா - உனக்கு!
உண்மை சொல் உன்னிடம் இவைகள் உண்டா?

நீரும் பனியும் நீர்மேல் உறைந்த பனியும்
மலைமேல் படர்ந்த வெண்பனியும் கண்டாயா?
நீ தரும் ஒளியில் உலகம் இருண்டே தெரிகிறதே
உனக்கு கடவுள் தந்தது  சாபமா வரமா?

விஞ்ஞானிகள் உனைப்பற்றி எம்மிடம்
சொல்வதெல்லாம் உண்மைதானா!
உண்மை சொல் நிலா!

உலகைப் படைத்தவர் படைக்கையில்
நிலாவே உன்னக்கும் எனக்கும்
மூன்றே நாள்தான் முதுமை இளமை!
ஆதாம் செய்த பாவம் மரணமாக
களங்கமில்லா உன் ஒளி நிலையானது!

கடவுள் வாழத்தந்த பூவுலகில் கேப்பாரற்ற
ஏழைத் தேசமதை வல்லாதிக்கம் அழிக்கிறது!
உன்னையும் ஆராய வருகிறது அவதானம் - நிலா!
உன்னக்கு தோசைசுட்ட என் ஆயாவை
கண்டு பிடிக்கட்டும் நம்புகிறேன் - நிலா!

உண்ணுள் வந்து ஆராய உறவாட
திராணியில்லை வசதியும் - இல்லை
ஏழைகள் நாங்கள்!
குழுமையின் உறைவிடமே உதவி செய்
உண்மை சொல் - நிலா! உண்மையா?


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: RubeshV on January 22, 2017, 10:04:31 PM
 நிறைமதியன்பு


கரு நீல கார் மேகங்களுக்கிடையே
நிறைமதி வட்ட வடிவமாக வீற்றிருக்க
கரு நீல சிகரங்களினில்
வெண் பனி மகுடமாய் தரித்திருக்க
 
கரு நீல காடுகளுக்கிடையே சலசல வென ஓடும்
நீல நிற ஆற்றினில்

அமைதி தவழ்கிறது நிறைமதியாய்
அகத்தினில் தோன்றுவதுதான்
முகத்தினில் வெளிப்படும் என்பதினைபோல்....

அவ்வமைதி நம்
வீட்டிலும் நாட்டிலும் நாட்டிற்கிடையேயும் இருந்துவிட்டால்
சண்டை ஏது...சச்சரவு ஏது ...குழப்பமேது.... 

அமைதியே  அன்பாகும் ...அன்பே அமைதியாகும் ...
அன்பினை அறுவடை செய்வோம்
அமைதியின் மூலம் ....

பாசமும் அன்புதான்
பரிவுகளினை அறுவடை செய்வோம்
அன்பின் மூலம்....

சாதி மத இன பிரிவுகளினை வேரறுப்போம்
பரிவுகளின் மூலம் ....
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ...
ஒற்றுமையுடன் இருப்போம்..
ஓங்கி வளர்வோம் ..வளமான வாழ்வினிலே .... ....

Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: thamilan on January 23, 2017, 10:01:21 AM
கருநங்கையின் அகன்ற நெற்றியினிலே
சந்தனப்பொட்டு போன்று
இரவு வானத்தில் நிலவு
நிசப்தமான இரவு
சலனமற்ற ஆறு
வெண்பனி மூடிய மலைகள்
தன் அழகிய முகத்தை
ஆற்றினில்பார்த்து மகிழும் நிலவு
மனதைக் கொள்ளை கொள்ளும்
இயற்கையின் அழகோ பேரழகு   

இறைவனின் படைப்பினிலே
இயற்கையும் பெண்களும்  பேரழகு
கவிஞனுக்கு கவிதை வரும்
காதலனுக்கு காதலி நினைவுவரும்
ஓவியன் துரிகைக்கோ உயிர்வரும்
தண்ணி அடிப்பவனுக்கோ குடிக்காமல் போதைவரும்
அற்புதச் சூழல் இது 

இந்த அமைதி மனிதர்கள் மனதினில்
வந்து விட்டால்
உலகமே அழகாகிவிடுமே

காடுகளை அழித்து
ஆற்று மணல் அகழ்ந்து
மலைகளை வெட்டி
இயற்கையை சீரழிக்கும் மனிதா
இவை எல்லாவற்றையும் அழிப்பதனால்
அழிவது நம் தேசமும் நாமும் தான்
அதை என்று நீ உணரப்போகிறாய்

Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: ReeNa on January 23, 2017, 12:33:24 PM
வெண்மையான  நிலவே
வட்டமான  நிலவே
வானிறம் கொண்ட நிலவே
வா வா என்றே  அழைக்கிறாயா?

ஒளி  இழந்த  இரவின் அழகே..
ஓயாமல்  ஒளி  வீசும்  கதிரே
ஒற்றை   விளக்காய் ஜொலிக்கின்றவளே
ஓசை  உன்னிடம்  நான் காண  வில்லையே!!

கொட்டும்  பனியின் வர்ணம்  நீயே
கொஞ்சி  பேசி  உயிரினங்களை 
தூங்க  வைக்கும் 
தாலாட்டு  ராணியும் நீயே

விண்மீன்கள்  கூட்டம் உன்  தோழிகளா!
வீசிடும்  காற்று  உன்  தூதுவனா!
வற்றாத  நீர்  உன்  பிரதிபலிப்பா!
வானத்தில்  மேகம்   உன்  மெய்க்காவலரா!!

மாமழையின்  ராணியே
மெதுவாய்  உன்  அழகை 
நீர்  கண்ணாடியில்  பார்க்கிறாயா
நீ இல்லை  என்றால் இரவுக்கே
அழகில்லை என  சொல்கிறாயா

உன்  அழகை  காணத்தான்
உன்னை  என்  விழிக்குள்   பிடித்து  வைத்தேன்
நகரும்  நொடிகளில்
நானும்  தூங்கிவிட்டேன்
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: fayaz on January 23, 2017, 12:36:50 PM
கண் விழித்தெழுந்து விட்டத்தைப்  பார்க்கையில் 
தொடங்கியது  பௌர்ணமியை நோக்கிய
அந்த  வளர்பிறையின் அழகான  பயணம்..அடடே !
எத்துணை ஆனந்தமாய்  துள்ளி  குதித்தபடி
வானத்தை அலங்கரித்து கொண்டிக்கிருக்கின்றது 
சுதந்திரமாய் அந்த  வண்ண நிலா ..

நிலவின்  ஆனந்தத்தை  கண்டு  களித்திட
எத்துணை நட்சத்திரங்கள் தான் தவம் 
இருந்து  காத்து  கிடக்கின்றன ..
நிலா அது  வட்டமிட்டு உலாவர  நட்சத்திரங்கள்
அத்தனையும் அதன் அழகை ரசித்தபடியே
தங்களையே மறந்து  பின்  தொடர்கின்றன ..

காத்துக்கிடந்த  பௌர்ணமியும் வந்தது ..
இறைவன் அவன் எண்ணற்ற கலைஞன்
என்பதை மீண்டும்  உணர்த்துகிறான் ..
அவன்  படைத்த  அழகோவியம்
கார்மேக இருளையும் தன்  புன்னகையால்
புகைப்படம்  எடுத்து காட்டும் அத்தருணத்தில் ..

மண்ணில்  வாழும் பெண்ணுக்கு மட்டுமா
வாழ்வில் இருள் சூழும் .. விண்ணில் வாழும்     
பெண் நிலவுக்கும்  அதே அவல நிலை ..
அழையா விருந்தாளியாய் அமாவாசையின்
கரும்  இருட்டு நிலவை விழுங்கிடவே   
வெறுமையையாய் தனித்திருந்தது வானம் ..

நிலவு துள்ளி  குதித்த  போது சூழ்ந்திருந்த
நட்சத்திரங்கள் தான்  எங்கே ??
அவள் அழகை  ரசித்து ருசித்து விட்டு
இன்று அவளின் அவல நிலை கண்டு 
வேறொரு நிலவை தேடி சென்று விட்டது போலும்
நிலவின் நிலை மட்டும் விதி  விளக்கா என்ன ??

ஒளியாய் கை கொடுக்க  ஆதவன்  முன்வர  நிலவு
மீண்டும் வளர்பிறையாய் புன்னகைக்க
துவங்கியது தன் சோகங்களை புதைத்தபடி..
ஆதவன் ஒருவன்தான் துணையென அறிந்து
நட்சத்திரங்களுக்கு  வெளியிட்டது  நிலா..
நிரந்தர  முள்வேலி ..

இன்று  நிலா  காத்து  கிடக்கிறது  விடியலுக்காக ..
ஆதவன் அவன் தினம்  தன் சுமைகளை
தகர்த்திடுவான் என்ற நம்பிக்கையோடு..
மீண்டும்  புன்னகையை ஏந்தியபடி..
நிலவாக  பெண் .. நட்சத்திரமாய் ஆண்..
வானமாய் பெண்ணை சுமந்தோர் ..

இது தனிப்பட்ட இளைஞனின்  மனக்குமுறல்..
என் மனக்குமுறல் .. நிலவே பிரகாசித்திடு !!
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: ரித்திகா on January 23, 2017, 01:06:55 PM
வெண்மை நிற வெண்ணிலவே  ....
பெண்மை குண பெண்ணிலவே  ...
ஒளி வீசிடும் வட்டத்தாரகையே ....

இருளிலும் பளிச்சிடும்
உந்தன் ஒளியில் திறக்க
மறுத்திடும் விழிகளும்
 விழித்தெழுகின்றன..

உலகம் வியந்திடும் அழகியே ....
உன்னுள் மயக்கிடும் போதை
கொண்டாயோ....
ரசனையற்றவனும் உன்னில்
மயங்கி ரசிக்கக் கற்றுக்கொள்கிறான் ...

நிறை நிலவே...உன்னை தன்னுள்
ஏந்திட தினம் தினம் தவமிருந்திடும்
இருள் சூழ்ந்த வானம்...

மின் மினிகளாய் உன்னைச்
சுற்றி மின்னிட நட்சத்திரங்களும்
ஏங்கித் தவித்திடும்....

மென்மை கொண்ட வெண்ணிலவே ...
உந்தன் வலியையும் தியாகத்தையும்
யாரறிவார் ... 

சுட்டெரிக்கும் ஆதவனருகே
யாரேனும் நெருங்கியதுண்டோ ....
நிலவே ...நீயும் நெருங்கிட 
மறுத்ததுண்டோ ....

பொசிக்கிடும் ஆதவனின் அனலை
தாங்கியவள்  நீயே  ...!!!
இருள் சூழ்ந்த புவிக்கு ...
பிரகாசம் கொடுத்தவள்  நீயே ...!!

கிரகணங்கள்  சூழ்ந்தாலும் ...
வளர்ப்பிறையாய் மலர்ந்து ...
மீண்டும் ஒளித்திட வருபவள் நீயே ...!!!

அழகு ஓவியமே ...உன்னை
ரசித்திடும் விழிகளும் சலிக்கவில்லை...
வர்ணித்திட வார்த்தைகளும்  போதவில்லை ...
ஆனாலும் வர்ணனைகள் தொடரும் ....
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: SweeTie on January 24, 2017, 01:23:10 AM
ஊடலை வேண்டும் காதலர் நடுவே
காரிருள்  போர்த்து விளையாடும் இயற்கை
நிசப்தத்தின் மயக்கத்தில்  ஊடுருவிப்பாயும்
மூச்சுகளின்   சங்கமம்

கந்தர்வக்  கன்னியவள்  வான் நிலா
காதலர் உலகை வலம்வரும் தேன்னிலா
இருளை பகலாக்கும்  பேதையவள் பால்நிலா
பௌர்ணமியில் அவள்  முழுநிலா
 
கரும் மலை அழகனை மூடிக்கொண்டாள்   
பனிமலர்  -  அவள் முந்தானையால்
பௌர்ணமியும் பார்த்து நகைத்திடவே
மலை அழகன் வெட் கித்து  பனிச்சிலையானான்

காதலித்தவளை கைப்பிடித்த கனவான்கள்
 கவுரவமாய் ஓங்கி வளர்ந்த உத்தமர்கள்
குளிரிலும்  கம்பீரம் குறையாத   மரங்கள்
மலையோடு சார்ந்து நிற்கும் சைப்ரஸ்கள்

கண்ணாடி போன்ற பளிங்கு நீரோடை
அதில் முகம் பார்க்கும் கன்னியவள்  பால்நிலா
கூடவே பனிமலர் முந்தானை தள்ளிவிட்டு
எட்டி பார்க்கும்  மலையழகன்   
துல்லியமாய் தெரிகிறது சைப்ரஸ்கள்

இயற்கையின் அழகுக்கு ஈடுண்டோ
இருளில் இயற்கையை ரசிப்பவன் ஓவியன்
இருளில் தனிமையை ரசிப்பவன் காதலன்
நிலவில் இருளை  ரசிப்பவன் ஞானி
இருளின் நிசப்தத்தில் கடவுளை காண்பவன் யோகி
 
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: RyaN on January 24, 2017, 02:47:43 AM
காலும் இல்லை
கையும் இல்லை
மெல்ல தவழ்கிறாய்
மேகம் விட்டு
மேகம் மறைந்து
உன்னை தேட விடுகிறாய்
இந்த கண்ணாம்பூச்சி
விளையாட்டை
நீ எங்கு கற்றாயோ..
தோழியாய் இருந்த வரை
சூரியனாய்
சுட்டெரித்துக் கொண்டிருந்தாய்.. 
பார்வையால்
காதலித்துப்
பார்த்தால் தான்
தெரிகிறது
சுட்டெரித்தது உன்
பெண்மைதான்.. 
சில நாட்கள் தேய்ந்து
செல்கிறாய்..
பல நாட்கள்
வளர்ந்தே கொண்டிருக்கிறாய்..
நீ அழகின் பிம்பம்
மாயக் கண்கள் ஒளிந்து
கொண்டால்
நானும் மாயக் கண்ணன்
கோடிப்பெண்கள்
உன்னில் கண்டேன் மதியே!
ஊர் தூங்கும்
நேரத்தில்
நீ விழிப்பாய்
உலகம் விழிக்கையில்
நீயும்
உறங்கிடுவாய்
பனித்துளிகளில் கறையின்றி
நிலைத்திடுவாய்
கோடையில் உருகாமல்
வானவில்லின்
தோகைக்குள்
ஒளியும் வித்தை
யாரிடம் கற்றாய்
வெள்ளி நிலவே..
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 133
Post by: ChuMMa on January 24, 2017, 12:53:12 PM
என் தாய் தான் உன்னை
அறிமுகப்படுத்தினாள் என்னிடம்
சோறூட்டும் போது...

அன்று முதல் நீ ஆனாய் எனக்கு
தோழியாய்

உன் அருகில் வர வேண்டும் என்பதே
என் ஆசை லட்சியமாக கொண்டேன்

ஓர் அமாவாசை இரவு -வானில்
நீ இல்லை ...

சோகத்தில் கண் மூடி இருக்க
ஓர் கொலுசின் ஒலி என் காதில் நுழைய

கண் திறந்து பார்த்தேன்
தண்ணீரில் தெரியும் நிலவின்
பிம்பமாய் அவள் என் எதிரில்

சந்தித்து கொண்டன இரு ஜோடி கண்களும்
முடிவு கொண்டன ஓர் இதயமாய் வாழ

இதோ வான் நிலவின் பிம்பம் என்அருகில்
என்றும் என் வாழ்வில் தேயாத
நிலா என் துணையாய் ......



பி.கு: முதல் எட்டில் வர முடியவில்லை..
என் எண்ணம்
FTC ஏட்டில் வர முடிந்தமைக்கு
மகிழ்ச்சி ...


சும்மா ....