FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on January 01, 2017, 12:22:50 PM

Title: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: Forum on January 01, 2017, 12:22:50 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 131
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F131...jpg&hash=5ff41db8e944556bfcc240e43c614ca239902e26)
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: SarithaN on January 01, 2017, 05:32:04 PM
கடவுள் இணைத்ததை மனிதன்
பிரிக்காது இருக்கட்டும்.


இருவரும் ஒருவரை ஒருவர்
காதலிக்கையில்
சதையுள் நகத்தின் வேர்போல்
இதயத்துள் குருதிபோல்
கண்ணுள் மணிபோல்
புணர்ந்த உள்ளம் கொண்டே
வாழ்ந்தனர்

நீயில்லா உலகில் நானேதென
உயுர்மொழி பேசி
அன்பாய் மகிழ்ந்து வாழ்கையில்

ஆசைகள் ஆடம்பரமாயின.
அம்மாவும் வேலைக்கு.
அப்பாவுக்கு இப்போது வீட்டில்
அம்மாவின் கடமையில் பாதி - மீதம்!

சமத்துவ தர்மங்கள் வீட்டின்
கொலுவேற.
படுக்கைகள் பிரிந்தன
அன்பு மறைந்தது
சினமும் கோவமும்
பொங்கி வழிய

கவலைகள் தூக்கம் பறிக்க.
ஆசையால் வந்த தேவைகள்
வேலையை திணிக்க.
குடும்பத்தில் குழப்பங்கள்
புதிதாய் உதிக்க.

விட்டுக்கொடாமை வீட்டை கெடுக்க
ஆசைகள் அன்பை பறிக்க
பிடிவாதம் பிளவாய்யெள
இதயங்கள் பிணமாக
இருவர் முதுகுகள் நடுவில்
விவாகரத்தின் பின்னர் - !

யாருடன் நானெனும் பதில் சொல்ல?

பெற்றோர் அகம்பாவம்
நீயா நானா - ஆகையில்!
நிம்மதி இழந்தேன் நித்திரையும்
துறந்தேன் பிள்ளை நான்
பத்தே வயதில்!

அம்மா அப்பா வந்து பார்க்கையில்
உறங்குவது போல் இமைகளை
மூடிக் கொள்கிறேன்.

இறைவன் இரங்காதுபோனால்
உங்கள் பிரிவு உறுதியானால்
உயிரா இதயாமா தேவையெனும்
கேள்விக்கு என்னிடம் பதில் - இல்லை

பிள்ளைநான் செய்யாத பாவத்துக்கு
அம்மா அப்பா நீங்கள் பெறும் மணமுறிவு!
பிள்ளைக்கு தரும் மரண பரிசு! -
என்னை மகிழ்ச்சியாக வாழவிடுங்கள்.

கடவுள் இணைத்ததை மனிதன்
பிரிக்காது இருக்கட்டும்.



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: BreeZe on January 01, 2017, 10:18:25 PM


காதல் இருக்கும் வரை
கண்களுக்கு தெரிவதில்லை குறைகள்
மலை போன்ற குறைகளும்
கடுகாய்த்  தெரியும்

 என்ன சொன்னாலும்
அமுதமாய் இனிக்கும்
என்ன செய்தாலும்
அழகாய் தெரியும்

அழகில்லாவிட்டாலும்
தேவதையாய் தெரிவாள்
கருப்பாய் இருந்தாலும்
களையாய் தெரிவான்

அந்த காதல்
காலப்போக்கில் வாழ்க்கை சக்கரத்தில் சிக்குண்டு
சிதறும் போது
கடுகான குறைகளும்
மலையாகத் தெரியும்

அழகான மனைவியும்
அரக்கியாகத் தெரிவாள்
அன்பான கணவனும்
அரக்கனாகத் தெரிவான்

சின்னச் சின்ன செய்கைகள்
சில சில பேச்சுக்கள்
வெறுப்பை மனதினில் விதைக்கும்
தொட்டாலும் குற்றம்
பட்டாலும் குற்றம்

கணவன் மனைவியின் இடையே
கோபதாபங்களால் பாதிக்கப்படுவதென்னவோ
குழந்தைகளே
இவர்கள் பிரச்சனைகளால்
மனநிலை பாதிக்கப்படுவதென்னவோ குழந்தைகளே

பெற்றோர்களே உங்கள் கோபதாபங்களை
குழந்தைகள் முன்னே காட்டாதீர்கள்
குழந்தைகள் உங்கள் விதைகள்
நீங்கள் எதை விதைக்கிறீர்களோ
அதையே அறுவடை செய்வீர்கள்



Copyright by
BreeZe
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: AnoTH on January 02, 2017, 04:25:36 AM
இரு மனம்  ஒப்புக்கொண்ட திருமணம்....
உயிரும் உணர்வும் பகிரப்பட்ட சங்கமம்....
அதன் வழி தொப்புள்கொடி உறவான பந்தம்....
இரு துருவங்களிடையே நிலைத்த சொந்தம்....

தாயின் அன்பைப்பெற்று தந்தையின் துணிச்சல் கொண்டு
சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய் பறந்திட மறந்து.
தாயொருபுறம் தந்தையொருபுறம் தன் தனிமைக்கு
மருந்து யார் புறம்? என எண்ணித்தொடரும் அவன் இல்லறம்.

நிலவில்லா இருளாய் தன் நாட்கள் கடந்திட...
வெயில் இல்லா நிழலாய் தன் தனிமை தொடர்ந்திட...
கடலில்லா கரையில் தன் உணர்வை எழுப்பிட...
இவையாவும் தற்காலிகம் என அவன் உளம் சொல்ல.

கைகோர்த்து மாலையிட்ட வாழ்வுதனை.....
நா காக்க மறந்து எழுந்த பிரிவு அவரைதை.....
ஏற்றுக்கொண்டு இணையக் கடந்த நாட்கள் அதை....
மீண்டும் பெற துடிக்கும் பிள்ளை அவன் கதை.....

கடந்த காலம் திரும்பி வர மாட்டாது.
கடக்கும் நேரம் மீண்டும் அமையாது.
காலம் சொல்லும் ஒவ்வொரு நொடியும்,
இல்லறவாழ்வில் மன்னிப்பு எனும் சொல்லும்,

தம்பதியரிடையே இருக்க வேண்டிய வேத மந்திரம்.
காலத்தை வென்று  அன்பு நிலைக்க அதுவே தந்திரம்.
குழந்தை அவன்  பருவம் பெற்றோரின்  பொக்கிஷம்.
அதனை உணர்ந்து ஒவ்வொரு நொடியும் இரசித்து
வாழ்வதே சாமர்த்தியம்.

மனது காயப்பட்டால் மன்னிப்பு எனும் சொல் போதும்...
அதனை இருவரும் உணர்ந்தால் இன்னல்கள் தீரும்...
தாம் பெற்ற செல்வமே நமக்குப் போதும்...
இனியும் இந்த தனிமை நிலையாது உயிர் கொடுப்போம்.

மௌனித்த இந்த இல்லற வாழவைக்காப்போம்.


பின் குறிப்பு

யா காவார் ஆயினும், நா காக்க; காவாக்கால்,
சோகாப்பர், சொல் இழுக்குப் பட்டு.
-திருக்குறள்-

அடக்கிக் காக்கவேண்டிய ஐம்புலன்களுள்
எதை அடக்கிக் காக்காவிட்டாலும் நாவையாவது
அவசியம் அடக்கிக் காக்கவும். அவ்வாறு காக்காது
போய்விடின் சொற் குற்றம்பட்டுச் சிறைக் காவல்தண்டனை பெறுவர்.

இங்கு சிறைத்தண்டனையாக நான் பார்ப்பது மௌனித்த
அவர்கள் மகிழ்ச்சியான வாழ்வையிறுத்து தொடரும் தனிமை
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: thamilan on January 02, 2017, 12:04:04 PM
கணவன் மனைவி
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
திருமணங்கள் மனமொத்து ஒன்றிணைந்த
மணமக்களின் மணவாழ்க்கை

அதிலும் காதல் திருமணங்கள்
எத்தனை எதிப்புக்கள்
எத்தனை தடைகள்
தடைகளைத் தாண்டி
எதிப்புகளையும் மீறி
ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால்
ஒன்றிணையும் காதல் திருமணங்கள் பலப்பல

திருமணனமான புதிதில்
தேனானாக இனித்த மணவாழ்க்கை
காலப்போக்கில் வேம்பாக கசப்பதும் ஏன்

புரிதலின்மை எதிர்பார்ப்புகள்
விட்டுக்கொடுக்காத தன்மை இப்படி
பலப்பல இடையூறுகள் வாழ்வில் குறுக்கிடும் போது
நிழல்யுத்தம் தொடங்குகிறது வாழ்வில்

இந்த யுத்தத்தில்
இந்த சீற்ற அலைகளில்
அடிபட்டு துவண்டுபோவது என்னவோ
பெற்ற குழந்தைகளே   
இந்த யுத்தத்தினால் அகதிகளாவது
குழந்தைகளே

பெற்றோரிடம்
எதிர்பார்த்த அன்பு கிடைப்பதில்லை
அரவணைப்பும் கிடைப்பதில்லை
இருதுருவங்களாக பெற்றோர்கள்
நடுவினில் திசைதெரியாமல் குழந்தைகள்

கணவன் மனைவியின் வாழ்க்கையே
இருட்டினில் தான் இனிக்கிறது
ஏன் உங்கள் சண்டைகளையும்
இருட்டினின் மட்டும் நடத்தக் கூடாது
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: RyaN on January 02, 2017, 05:23:25 PM

தங்கள் போட்டிகளால் பாதிப்பும்
புறக்கணிப்பும் எனக்கல்லவா

சோகமும் துயரும் யாருக்கு?
நான் படும் பாடு யார் அறிவார்!

அம்மா அப்பா அன்புக்கும்
அரவணைப்புக்கும் நடுவே
யாரது பாசம் பெரிது?

அம்மாவை பெரிதாய் அப்பாவும்
அப்பாவை பெரிதாய் அம்மாவும்
சொல்லிய காலம் காவுபோய்
தாமே என்மேல் அதிக அன்பாமென
தாமே சொல்லும் தூய்மையில்லா
அன்பு வளர்ந்தாயிற்று

நமக்கு பிடித்தவர்கள் நம்மை
காயப்படுத்தும் போது தான்...

இல்லாதவற்றையும்,
இழந்தவற்றையும் - பற்றி
ஆழமாக யோசிக்க தோன்றும்...

பாசம் வைத்த இதயங்கள் - தான்
பாவப் பட்டவை போலும்...

மறக்க நினைக்கும் போதெல்லாம்..
அதிகம் நினைக்கிறது...
அதிகம் துடிக்கிறது...
அதிகம் வலிக்கிறது...

நான் விரும்பும் ஒரு உயிர் என்னை
விட்டு விலகி நிற்கும் போது தெரிகிறது
கண்ணீர்  துளிகளின் விலை என்னவென்று..

எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால்
ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது - ஆனால்
எப்படி என் எதிர்பார்ப்பை குறைப்பது
எனக்கான நியதி அல்லவா உங்கள் - ஒற்றுமை
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: ChuMMa on January 02, 2017, 06:23:49 PM
முதன் முதல் பார்த்தேன்
முதல் காதல் பூத்தது

இரு விழி பார்த்ததால்
இரு உள்ளம் சேர்ந்தது

மூன்றாம் நபர் வருகைக்காக
முதலிரவு அரங்கேறியது

நாளெல்லாம் உன் நினைவு போதும் என்று
நான்கு நாள் நினைத்திருப்பேன்

ஐந்தாம் நாள் ஏனோ உன்னை பற்றிய
ஐயம் தொற்றி கொண்டது

ஆறு படை முருகனே தப்பவில்லை
ஆறு நாள் ஆன நீயும் நானும் எம்மாத்திரம்

ஏழுலகை ஆளும் ஈசனே
ஏழாம் பொருத்தம் என் வாழ்க்கை ஆனதேனோ ?

எட்டு திக்கும் உன்னை போல் ஒருத்தி
எட்டாது எனக்கு என்றானே ?

ஓவியம் தான் என்றாலும்
உன் பிரிவு தாங்கலையே...

Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: SweeTie on January 04, 2017, 07:33:45 AM
அன்பின் கோயில் அன்னை
அறிவின் தீபம் தந்தை
இணைத்தது என் வருகை
குழந்தையும் தெய்வமும்  ஓன்று
அனாதை சிறுவன் நான் இன்று

அன்பால் இணைந்தார்கள்
காதலால் கசிந்தார்கள் 
ஊடலால்  மகிழ்ந்தார்கள்
கூடலால்   உறைந்தார்கள்
அது ஒரு கனாக் காலம் .

இரு  மனம் கலந்து
திருமணம்  புரிந்து     
பிள்ளை நான் ஒருவன்
இருப்பதையும்   மறந்து
மண முறிவு காண
கிழக்கும் மேற்குமாய்  இன்று
ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்

தாம்பத்தியத்தின் பலம்
விட்டுக்கொடுத்தல்,  புரிந்துணர்வு
பலவீனம்  சந்தேகம், ஆணவம்
தக்கவைத்துக்கொள்வது  பலவீனமானால்
கடலில் திசைமாறிய படகு போல்
தத்தளித்துவிடும்  வாழ்க்கை.

சிறுபிள்ளை நான்
செய்த பிழை ஏதுமில்லை
கொண்டு வந்த ஊழ் வினையா?
யானறியேன் பராபரமே !'
குழந்தைகளின் உலகம்
அன்பான  பெற்றோர்கள்
என்னிரன்டு  கண்களிலே
எதை வேண்டாம் என்பேன் நான்

விட்டுக்கொடுத்து வாழுங்கள்
வாழ்க்கை பிரகாசமடையும்
அன்பைப்   பரிமாறுங்கள்
வாழ்க்கை அழகுபெறும்
கோபத்தை  அடக்குங்கள் 
வாழ்க்கை இன்பமடையும்
ஆணவத்தை  களையுங்கள்
வாழ்க்கை  முழுமையடையும்.

 
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 131
Post by: BlazinG BeautY on January 05, 2017, 04:29:05 AM
நான்  அம்மா செல்லமா?
இல்லை அப்பா செல்லமா?
என்னால் இருவருக்கும் மனவருத்தம்..
யாரை நான் சமாதானம் பண்ணுவது..

இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்..
யார் இங்கு சிறியவர்கள்.. நான் அல்ல..
சின்னதாய் ஒரு புன்னகையுடன் ..
என் தாயைவிட என் அப்பா இன்னும் சிறியவர் ..
மனதில் குழந்தையாய்..

ஒரு சதுரகங்க  விளையாடத்தில்
இருவரும் தோல்வி தழுவினார் ..
அம்மா ஒரு புறம் பார்க்க
அப்பா இன்னோர் புறம்  ..

என்ன செய்வது  தெரியாமல் தத்தளிக்க
ஒரு யோசனை வந்தது சின்ன மூளையில்..
அவர்கள் கோபத்தை தணிக்க ..
பூனைபோல் மெல்லமாய் நகர்ந்து சென்று..

பெற்றோர்களுக்கு பிடித்த பனிக்கோல்
கொண்டு வந்து அவர்கள் முன் சாப்பிட
பெற்றோர்கள் கோபம் பறந்து போக
இருவர் விழிகளும் அந்த பனிக்கோல் மேல் ...

கோபம் தணிந்து, அமைதியாகினர்..
உறுதிகொண்டனர் இனி சண்டை வேண்டாம்
சின்னஞ்சிறு விளையாட்டு .. அமைதியை குழைக்க
சின்னதாய் ஒரு முத்தம் என் கன்னத்தில்..
 
நீங்கள் எனக்கு உயிராக , நான் உங்களுக்கு சுவாசமாக
என் உயிர் உள்ளவரை வாழ்வேன்..