FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 05, 2016, 02:55:01 PM

Title: கொஞ்சம் பொறு
Post by: thamilan on November 05, 2016, 02:55:01 PM
  வாழ்க்கையே உனக்கு நன்றி
உன்மேல் பயணிக்கும் நான்
பலநூறு  மைல்கள் கடந்து விட்டேன்
குழந்தையாக - சிறுவனாக
வாலிபனாக - காதலனாக
கணவனாக - தந்தையாக
பலப்பல பருவங்கள் கடந்து விட்டேன்

என் பயணத்தில்
நான் அனுபவித்த
வசந்தகாலங்கள் சில
ஒவ்வொன்றும் ஒவ்வொருவித
அனுபவங்கள்
அம்மா என்று நான் கூப்பிடுவதில்
ஓர் ஆனந்தம்
அப்பா என்று எனை அழைக்கையில்
அதுவும் ஓர் ஆனந்தம்

பெற்றவர்கள் என்னை
சுமந்தார்கள்
என் பிள்ளைகளை நான்
சுமக்கிறேன்
என் பிள்ளைகள் என்னை
ஒரு நாள் சுமப்பார்கள்

வாழ்க்கையே கொஞ்சம் பொறு !!!
நான் இன்னும் சிலகாலம்
வாழவேண்டும்
எல்லாப் பருவங்களிலும் கடந்த நான்
முதுமையையும் கடக்க வேண்டும்

நெஞ்சு நிமிர்ந்து
வீர நடை போடும் நான்
தோல் சுருங்கி
நடை தளர்ந்து
வயோதிக பருவத்தையும்
வாழ்ந்து விட வேண்டும்

!!!!வாழ்க்கையே கொஞ்சம்
பொறு!!!!

Title: Re: கொஞ்சம் பொறு
Post by: BlazinG BeautY on November 05, 2016, 03:05:47 PM
வாழ்த்துக்கள் தோழா . வாழ்க்கையின் பருவ நிலை சிறு வயது குழந்தை  முதல் பெரியவர் முன்னோர் எதிர் பார்க்கும் வாழ்கை .

பெற்றவர்கள் என்னை
சுமந்தார்கள்
என் பிள்ளைகளை நான்
சுமக்கிறேன்
என் பிள்ளைகள் என்னை
ஒரு நாள் சுமப்பார்கள்

அப்போது சுமந்தார்கள்  ஆனால் இப்போது சிலர் சுமக்க மறுக்கிறார்கள், பாரம் என்றே நினைக்கிறார்கள்.என்ன சொல்வதென்று தெரிய வில்லை . மனம் இருகி போனது.  நல்ல கவிதை தமிழன்.வாழ்த்துக்கள். 
Title: Re: கொஞ்சம் பொறு
Post by: GuruTN on November 05, 2016, 03:27:27 PM
ஆணின் பருவங்கள் ஒவ்வொன்றயும் பிரித்து, அந்த பருவங்கள் ஒவ்வொன்றின் இனிமையையும் பளிச்சிட்டு காட்டுகிறது உங்கள் கவிதையின் அழகான வரிகள் தமிழன்...
பிஞ்சு பருவம் முதல் பழுத்து முதுமை தொடும் காலம் வரை, நாம் கொள்ளும் சொந்தங்களும் பந்தங்களும், அதில் நாம் கொள்ளும் கடமைகளும், காணும் இனிமைகளும் ஏராளம் ஏராளம்... அருமையான கவிதை.. அன்பு வாழ்த்துக்கள் தமிழன்.. இனிதே உங்கள் கவிப்பயணம் தொடரட்டும்...
Title: Re: கொஞ்சம் பொறு
Post by: thamilan on November 05, 2016, 04:54:58 PM
தோழி BLAZING BEAUTY
என் கவிதையில் பிள்ளைகள் என்னை சுமப்பார்கள் என்று நான் சொன்னதின் அர்த்தம் எனது மரணத்தின் பின்னர் அவர்கள் தான் என்னை சுடுகாட்டுக்கு சுமப்பார்கள் என்பதே.
உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி இனிய தோழி


நன்றி குரு நண்பா
Title: Re: கொஞ்சம் பொறு
Post by: AnoTH on November 07, 2016, 01:43:05 PM
இனிய சகோதரன் தமிழன்.

வாழ்க்கையின் அழகை
பருவத்தின் வளர்ச்சியுடன்
ஒப்பிட்டுப்பார்த்த விதம் மிக மிக
அருமை. குழந்தைப்பருவத்தில்
சிறுவனாக, வாலிப பருவத்தில்
காதலனாக கணவன் நிலையில்
தந்தையாக. ஓர் ஆணின் வாழ்க்கையை
அழகாக உணர்த்தியுள்ளீர்கள் சகோதரா.

முதுமைப்பருவத்தில் உடல் ஓய்ந்தாலும்
உங்கள் வரிகள் ஓய்ந்து விடாது என்று
வாசகனாக வாழ்த்துகிறேன்.

அருமை
Title: Re: கொஞ்சம் பொறு
Post by: SarithaN on December 11, 2016, 06:30:48 PM
வணக்கம் ஐயா தமிழன்,
உங்கள் அழகிய கவியின்
வலிகள் சுவைகள்
இன்பம் உண்மை
அனைத்தும் அனைவரும்
சொல்லிவிட்டபின் சொல்ல
எதுவும் இல்லை. வாழ்த்துக்கள்
நன்றி