FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: GuruTN on November 05, 2016, 11:15:24 AM

Title: "அவளுக்காக நான்" - குரு
Post by: GuruTN on November 05, 2016, 11:15:24 AM
"அவளுக்காக நான்"

கவிதைகள் பல மிஞ்சும் காவியமாய் வந்தவளே,
பெண்ணின் பெருமை சொல்ல இலக்கணமாய் நின்றவளே,
கண்ணிரண்டில் கதைகள் பேசி காதல் ஒன்று தந்தவளே,
புன்னகையால் வசியம் செய்து என் மனதை வென்றவளே.

மறைக்க ஒரு மனமின்றி அன்பில் நெஞ்சம் திண்டாட,
இவள்தானே இனியென்று இதயம் உன்னை கொண்டாட,
கடந்த கால கதையெல்லாம் உன்னிடத்தில் நான் உரைத்தேன்,
உனை உரிமை கொண்டாட என் மனதால் தூதுவிட்டேன்.

கசப்புகள் நிறைந்திருந்த கதைகள் யாவும் கேட்டிருந்தாய்,
இருந்தும் என்னை வெறுக்காமல், எனை ஏற்க காத்திருந்தாய்,
அன்பு செய்யும் தோழியாக எனக்கு உந்தன் தோள் கொடுத்தாய்,
அவையாவும் காற்றில் இன்று, என்று சொல்லி கை கோர்த்தாய்.

உயிரில்லா என் மனதில் உணர்வுகளை சேர்த்தவளே,
நெஞ்சில் இன்பம் நிறைந்திருக்க காரணமாய் பூத்தவளே,
பசுமை நெஞ்சில் படருதடி, காதல் என்னை கரைக்குதடி,
உள்ளம் எல்லாம் உருகிப்போக, கண்கள் நீரில் மூழ்குதடி.

விழியோடு மொழிபேசும் எனை ஆளும் தேவதையே,
மனதோடு இதம் தேக்கும் எந்தன் உயிர் காதலியே,
உனைத்தேடி தினம் வந்து என் காதல் நான் உரைப்பேன்,
கணநேரம் பிரியாமல் என் அன்பை நான் இறைப்பேன்.

தாய் போல மடி தந்து, என் தலை கோத வந்தவளே,
நான் கொண்ட பாரமெல்லாம் கரைந்தோட செய்தவளே,
இறுதி நொடி காலம் வரை உனை நானும் காதல் செய்வேன்,
உந்தன் புகழ் நான் பாடி, பெருமிதமும் நான் கொள்வேன்.

-குரு-
Title: Re: "அவளுக்காக நான்" - குரு
Post by: AnoTH on November 05, 2016, 12:41:19 PM


அன்புச்சகோதரன் GuruTN,

காதல் வயப்பட்ட ஆண்களின் கவி
அழகைத்தங்கள் படைப்பில் காண்கிறேன்.
இயற்கையையும் பெண்மையையும்
இரசிக்கும் ஓர் இளைஞனால் தான்
இப்படி ஒரு சிறப்பு மிக்க கவிதையை
படைக்க முடியும். வாசிப்பதற்கும்
உணர்வதற்கும் அட டா அழகான
வரிகள்.

வாழ்த்துக்கள் சகோதரா
Title: Re: "அவளுக்காக நான்" - குரு
Post by: இணையத்தமிழன் on November 05, 2016, 12:43:05 PM

மச்சி அருமை அருமை கவிதையை ரசித்து ருசித்து எழுதி இருக்க மச்சி
 "கவிதைகள் பல மிஞ்சும் காவியமாய் வந்தவளே,
பெண்ணின் பெருமை சொல்ல இலக்கணமாய் நின்றவளே,
கண்ணிரண்டில் கதைகள் பேசி காதல் ஒன்று தந்தவளே,
புன்னகையால் வசியம் செய்து என் மனதை வென்றவளே.
" அருமையான வரிகள் மச்சி
Title: Re: "அவளுக்காக நான்" - குரு
Post by: BlazinG BeautY on November 05, 2016, 02:49:36 PM
குரு ஜி எனக்கு என்ன வென்று சொல்ல வார்த்தை இல்லை தோழா. பிரமிச்சி போய் நிட்கிறேன், உங்கள் வரிகளில் கவர்த்திர்கள். இது உங்கள் நிஜ வாழ்க்கையா இல்லை ....  இது அல்லவா கவிதை , உங்கள் மனதில் உள்ளவளுக்கு சமர்ப்பணம் என்று நினைக்கிறன் . கவி பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்
   
Title: Re: "அவளுக்காக நான்" - குரு
Post by: thamilan on November 05, 2016, 02:52:35 PM
குரு நண்பா
அருமையான கவிதை. படித்தேன் ரசித்தேன் ருசித்தேன் .
தேன் போல சுவையாக இருந்தது 
Title: Re: "அவளுக்காக நான்" - குரு
Post by: SweeTie on November 06, 2016, 07:02:37 AM
வரிகளில்  மிளிரும் எதுகை மோனையுடன்  கூடிய கவிநயம் மேலும் கவிதைக்கு மெருகூட்டுகிறது.    காதலை  அனுபவித்து  எழுதியுள்ளீர்கள்.   வாழ்த்துக்கள்
Title: Re: "அவளுக்காக நான்" - குரு
Post by: SarithaN on January 03, 2017, 11:15:44 PM
நண்பா வணக்கம்.

அழகிய சொற்கள்
எழில்மிகு வரிகள்
தடையர ஓடும் சொற்-கூட்டம்
தடங்கல் இல்லாப் பந்திகள்


முழுமதியாய் ஒரு கவிதை
முழுநிலவு உன் அவள்-எங்கே?   நண்பா!

இதயத்துள் புதையுண்டு
அன்பினால் பொங்கி
பாய்ந்த உணர்வில்
பூத்தமலர் உன் கவிதை! வாழ்க உன் அன்பு.


நன்றி.